பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 9, 2019

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து அவற்றிற்குத் தேவையான வசதிகளையும் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். இதன் அடிப்படையில் அவன் மற்ற உயிரியினங்களைக் காட்டிலும் மனிதனுக்கு ஏராளமான பாக்கியங் களை கூடுதலாக வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அந்தப் பாக்கியங்களில் ஒன்றான செல்வம் மக்களால் அதிகம் நேசிக்கப்படுகிறது. பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கேற்ப, நீதியைக் காக்க வேண்டிய நீதித் துறையும், நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் செய்ய வேண்டிய காவல் துறையும் தாங்கள் வீற்றிருக்கும் உயர்ந்த பணியின் மகத்துவத்தை மறந்து அற்ப பணத்திற்காக விலை போய் விடுகிறார்கள்.

50 ரூபாய் மதிப்புள்ள ஒரு வெள்ளி மோதிரத்திற்காக ஒருவன் மூன்று நபர்களைக் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நடந்தேறியுள்ளது. கொலை, கொள்ளை, லஞ்சம், வரதட்சனை போன்ற அனைத்து குற்றங்களும் செல்வத்தை மையமாக வைத்தே ஏற்படுகிறது.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

இந்நிகழ்வுகள் பணம் என்றால் பிணம் கூட வாயைத் பிளக்கும் என்ற பழமொழியை மெய்ப்படுத்துகிறது. மாபெரும் அளவில் விரும்பப்படக் கூடிய இந்தப் பொருளை விட முக்கியமானது ஆரோக்கியமாகும். பல வருடங்கள் வியர்வை சிந்தி பெற்ற ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான பணங்களை, நமக்கு வந்த பிணி நீங்க வேண்டும் என்பதற்காக செலவு செய்து விடுகிறோம். நமது உடல் நலம் என்று வரும் போது செல்வத்தை நாம் பெரிது படுத்துவதில்லை. ஐந்து பைசா செலவு செய்யாத கஞ்சன் கூட தனக்கு நோய் வந்தவுடன் அதை அகற்றுவதற்காக பணத்தை வாரி இறைக்கிறான். இப்போது தான் அவன் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்கின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஆரோக்கியம் மாபெரும் பாக்கியம் என்று கூறியுள்ளார்கள்.
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். அவை 1. ஆரோக்கியம் 2. ஓய்வு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 6412

இந்த ஆரோக்கியத்தைப் பெறுவதற்குச் சுத்தம் மிகவும் அவசியம். சுத்தம் சோறு போடும் என்று சொல்வார்கள்.சுத்தமாக இருந்தால் வீட்டின் கூரையைப் பிரித்துக் கொண்டு உணவு வந்து விழும் என்று இதை விளங்கக் கூடாது. சுத்தமாக இருந்தால் நோய்கள் வராது. ஆரோக்கியமாக இருக்கலாம். ஆரோக்கியமாக இருந்தால் உழைப்போம். இதன் மூலம் நம்முடைய வருவாய் பெருகும் என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது.இன்று பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் சுத்தமின்மை தான். நமக்கு நோய்கள் வரும் போது அந்த நோயை அகற்றுவதற்கான மருந்துகளைச் சாப்பிடுகிறோம். ஆனால் அந்த நோயை உண்டாக்கும் காரணியைக் கண்டறிந்து அது தோன்றுவதற்கான அடிப்படையை அகற்ற நாம் நினைப்பதில்லை.

மூலக் காரணத்தை கண்டறிந்து அதைச் சரி செய்யாத வரை நாம் எவ்வளவு தான் மருந்துகளை உட்கொண்டாலும் அதில் எள்ளளவும் பயனில்லை. எரியக் கூடியவனின் அம்புகளைத் தடுப்பதைக் காட்டிலும் அம்பெய்பவனைத் தடுத்து நிறுத்தினால் தான் எதிர்ப்புகள் முற்றிலும் இல்லாது போகும். நாம் வருகின்ற அம்புகளைத் தடுக்கிறோமே தவிர அதை எய்பவனைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.எனவே ஆரோக்கியத்திற்கு முதல் அடிப்படை தூய்மை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம் இந்த உலகத்தில் சிறப்போடு வாழ்வதற்கு வழிவகை செய்வதோடு மறுமையில் அதிக சிறப்பைப் பெறுவதற்கும் முக்கியக் காரணமாக அமைகிறது. ஏனென்றால் உடல் நலத்துடன் இருக்கும் போது அதிகமாக நாம் நல்ல அமல்களை செய்வோம். நலக் குறைவு ஏற்படும் போது இவைகள் அனைத்தும் தடை பட்டுவிடும். பயிர் நிலமாக விளங்கும் இந்த உலகத்தில் நன்மைகளை நம்மால் பயிரிட முடியாமல் போய் விடுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டே நம் மார்க்கம் தூய்மையை மிகவும் வலியுறுத்திக் கூறுகிறது. தூய்மையை ஈமானில் பாதி என்று குறிப்பிட்டு ஒவ்வொரு முஸ்லிமும் தூய்மையை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தூய்மை ஈமானில் பாதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 381

தூய்மையற்றவன் தூயவனை நெருங்க முடியுமா?

இறைவனுடைய நேசர்கள், ஞானிகள், பக்கீர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களிடத்தில் துர்நாற்றத்தைத் தவிர தூய்மையின் வாடையை நம்மால் நுகர இயலாது. ஒரு மீட்டருக்கு நகத்தை வளர்த்திருப்பார்கள். அதனுள் ஒன்றரைப் படி அழுக்கு திரண்டிருக்கும். குளித்து பல மாதங்கள் ஆனதால் சடை விழுந்திருக்கும். முடிகளைக் களைய வேண்டிய இடங்களில் களைந்திருக்க மாட்டார்கள். இத்தகைய நிலையில் இருப்பவர்கள் இறைவனிடத்தில் நமக்கு வேண்டியதை பெற்றுத் தருவார்கள் என்று நம்புவது எவ்வளவு மடமை. ஈமானில் பாதியாக விளங்குகின்ற சுத்தம் இவர்களிடத்தில் இல்லையென்றால் பாதி ஈமான் இல்லை என்று அர்த்தம்.

அரைகுறையாக நம்பிக்கை கொண்டவன் எப்படி இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத் தர முடியும்? முதலில் அவனே இறைவனை நெருங்க முடியாது. ஐந்து நேரம் தொழுது தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் ஒரு சாதாரண மனிதன், இறைவனை நெருங்குகின்ற அளவில் கூட இவர்களால் நெருங்க இயலாது.அதிகப்பட்சமாக 40 நாட்களுக்கு மேலாக நகம், அக்குள் முடி, மர்மஸ்தானத்தில் உள்ள முடி, மீசையின் முடி ஆகியவற்றை வெட்டாமல் இருக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இந்நிலையில் தூய்மையின் மறு வடிவாய் திகழ்ந்த பெருமானார் (ஸல்) அவர்களுக்கே கொடுக்காத மரியாதையை இந்த அழுக்கு உருண்டைகளுக்குக் கொடுப்பது மிகவும் விசித்திரமானது)

மீசை, நகங்களை வெட்டுவதிலும் அக்குள் மற்றும் மர்மஸ்தானத்தில் உள்ள முடிகளைக் களைவதிலும் எங்களுக்கு நேரம் குறிக்கப்பட்டது. (இவற்றை அதிகபட்சமாக) 40 நாட்களுக்கு மேலாக நாங்கள் விட்டு விடக் கூடாது (என்று வலியுறுத்தப் பட்டது.)
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: முஸ்லிம் 431

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சுத்தத்தை ஈமானில் பாதி என்று கூறுவதற்குக் காரணம் அல்லாஹ் அதை விரும்புகிறான் என்பதே ஆகும். அல்லாஹ் விரும்பக் கூடிய எல்லாக் காரியங்களும் ஈமானுடைய வட்டத்திற்குள் வந்து விடும். தூய்மையை நாம் விரும்பினால் அல்லாஹ் நம்மை விரும்புகிறான் என்று பின்வரும் வசனம் உணர்த்துகிறது.

அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:48)

அழகானவன் அழகையே விரும்புகிறான்

படைத்தவனை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்கு வரும் போது அலங்கரித்து வர வேண்டும் எனவும் அவன் கட்டளையிடுகின்றான். அல்லாஹ் தூய்மையாளனாகவும் அழகனாகவும் இருப்பதால் இதை நம்மிடமும் அவன் எதிர்பார்க்கிறான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங் காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் (7:31)

அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 147

அதிகமான முடிகளை வைத்து இருப்பவர்கள் அதைக் கையாள வேண்டிய முறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. ஆண்களானாலும் பெண்களானாலும் சிலர் தலைமுடியை பரட்டையாக விட்டு விடுகிறார்கள். ஒரு ஆடையைப் பல நாட்களுக்கு உபயோகிக்கிறார்கள். அழுக்குப் படிந்த ஆடையை மாற்றுவதில்லை. இவ்வாறு இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது தலைமுடி பிரிந்தவாறு பரட்டைத் தலையில் ஒரு மனிதரைக் கண்டார்கள். ‘இவர் தனது முடியை சரி செய்யக் கூடியதை (எண்ணெயை) பெற்றிருக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். இன்னொரு மனிதரையும் பார்த்தார்கள். அவர் மேல் அழுக்கு ஆடை இருந்தது. (அவரை நோக்கி) ‘இவர் தன்னுடைய ஆடையைக் கழுவுவதற்கான நீர் இவரிடம் இல்லையா?’ என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: அபூதாவூத் 3540

அகத்தூய்மையும் புறத்தூய்மையும்

பெருமானார் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் குறைவான ஆடையை வைத்திருந்தார்கள். நாம் வைத்திருப்பது போன்று டஜன் கணக்கில் அவர்களிடம் ஆடைகள் இருக்கவில்லை. அதிகமான ஆடைகளை வைத்திருக்கின்ற நாம் ஆடைத் தூய்மையில் தாழ்ந்த நிலையிலே இருக்கிறோம். நபி (ஸல்) அவர்களிடம் ஓரிரு ஆடைகள் மட்டுமே இருந்தன.
தமிழில் ‘கந்தலானாலும் கசக்கிக் கட்டு, கூலானாலும் குளித்துக் குடி’ என்று கூறுவார்கள். அது போன்று குறைவான ஆடை இருந்தாலும் தூய்மை செய்தே அணிய வேண்டும் என்று அல்லாஹ் பெருமானாருக்குக் கட்டளை பிறப்பிக்கிறான்.

உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக! (அல்குர்ஆன் 74:4)

உடலும், ஆடைகளும் தூய்மையாக இருப்பதுடன் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. பெரும்பாலான வழிபாட்டுத் தலங்களில் தூய்மை பேணப்படுவது கிடையாது.மாற்றார்களின் வழிபாட்டுத் தலங்களுடன் ஒப்பிடுகையில் நமது பள்ளிவாசல் அவற்றை விடப் பன்மடங்கு தூய்மையாக உள்ளது. லட்சக் கணக்கான மக்கள் கஅபாவில் கூடினாலும் ஒரு குப்பையையோ அல்லது துர்நாற்றத்தையோ அங்கு காண முடியாது. தொழுமிடம் அவசியம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தந்ததே இதற்கு காரணம். பலர் கூடும் இடங்களில் எச்சிலைத் துப்பி அசுத்தம் செய்வது குற்றம் என்று கூறுகிறது இஸ்லாம். அசுத்தம் செய்து விட்டால் அசுத்தத்தை நீக்குவதே அதற்கான பரிகாரம் என்று கூறி அசுத்தத்தை ஒழிக்கிறது.

பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: புகாரீ 415

பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவை அல்ல. ஆனால் அவற்றை உண்டால் நீண்ட நேரத்திற்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். தொழுகைக்காகப் பள்ளிக்கு வரும் போது, இது போன்ற நாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்களைப் பயன் படுத்தக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. அதை உண்டவர் அங்கு வரக் கூடாது எனத் தடையும் விதிக்கிறது.
‘வெள்ளைப் பூண்டோ, வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும். அல்லது நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 5452

முஸ்லிம்களின் பெருநாளான வெள்ளிக் கிழமையன்று மிகத் தூய்மையாகப் பள்ளிக்கு வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள். வணக்கத்திற்கு உள்ளத் தூய்மை இருந்தால் மட்டும் போதாது. உடல் தூய்மையும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து இயன்ற வரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து, நறுமணம் பூசி புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக் காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: சல்மான் அல்ஃபார்ஸி (ரலி)
நூல்: புகாரீ 910

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் குளிப்பதைக் கடமையாக்கி தூய்மையின் அவசியத்தை உணர்த்துகிறது.

ஜும்ஆ நாளன்று குளிப்பது பருவ வயதை அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 811

ஒவ்வொரு தொழுகையின் போதும் உளுச் செய்து கொள்வதை மார்க்கம் கடமையாக்கியுள்ளது. சுத்தமின்றி நிறைவேற்றப்படும் தொழுகை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்துகிறது.

‘தூய்மையின்றி தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்று உள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 381

நமக்குத் தெரியாமல் நம்மேல் அசுத்தம் பட்டிருக்கும் நிலையில் தொழுகையில் ஈடுபட்ட பிறகு நம் கவனத்திற்கு அது வந்தால் முதலில் அந்த அசுத்தத்தைத் தூய்மை செய்ய வேண்டும். இது போன்ற நிலை நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட போது அல்லாஹ் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடவில்லை. அதை ஒரு அற்ப விஷயமாகவும் கணக்கிடவில்லை. அது சம்பந்தமாக வஹீயை அறிவித்து, தூய்மையின் முக்கியத்துவத்தை நமக்குப் புரிய வைத்துள்ளான்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழ வைத்துக் கொண்டிருந்த போது தன்னுடைய செருப்புகளைக் கழற்றி இடது புறத்தில் வைத்தார்கள். இதை (தொழுது கொண்டிருந்த) அக்கூட்டம் பார்த்த போது அவர்களும் தங்களது காலணிகளை எடுத்து வைத்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்பு, ‘உங்களுடைய காலணிகளை கழற்றி வைக்க உங்களை எது தூண்டியது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களது காலணிகளைக் கழற்றி வைப்பதை நாங்கள் பார்த்தோம். ஆகையால் எங்களது காலணிகளை நாங்கள் கழற்றி விட்டோம்’ என்று கூறினார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து எனது காலணிகளில் அசுத்தம் அல்லது நோவினை இருப்பதாகச் சொன்னார்கள்’ என்று கூறி விட்டு, ‘உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் (தன் காலணிகளை) அவர் உற்று நோக்கட்டும். தன்னுடைய காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினை தரக் கூடியதையோ அவர் பார்த்தால் அதைத் துடைத்து விட்டு அத்துடன் தொழுது கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: அபூதாவூத் 555

ஒவ்வொரு செயலிலும் தூய்மை

ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தூய்மையைப் பேண வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த வழிமுறைகளை கற்றுத் தந்துள்ளார்கள். விஞ்ஞானம் வளர்ந்த இக்கால கட்டத்தில் கூட இவ்வழிமுறைகள் பேணப்படுவதில்லை. இன்று தூங்கி எழுந்த உடன் கை கழுவாமல் பல் துலக்காமல் பெட் காஃபி என்று சொல்லிக் கொண்டு அதைப் பருகுகின்றார்கள். இந்த (நாகரீக மேதைகளுக்கு) நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்ற சுத்தத்தைப் பாருங்கள்.

‘உங்களில் ஒருவர் தன் உறக்கத்திலிருந்து விழித்துவிட்டால் அவர் தன்னுடைய கையை மூன்று முறை கழுவும் வரை பாத்திரத்தில் அதை விட வேண்டாம். ஏனென்றால் அவருடைய கை இரவில் எங்கு இருந்தது என்பதை அவர் அறிய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 467

நாம் உறங்கும் போது சுய நினைவையே இழந்து விடுகிறோம். எனவே நம்மையறியாமல் கொசுக்கள் நம் மூக்கிற்குள் நுழைந்து விடுகின்றது. சில நேரங்களில் தூங்கி விட்டு சளியைச் சிந்தும் போது இதை நம்மால் உணர முடியும். அசுத்தங்களில் உழலக் கூடிய, பல வகையான இரத்தங்களை உறிஞ்சி வாழும் கொசு நம் மூக்கிற்குள் இருப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி அழுக்குகள் அங்கு திரண்டு இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டித் தருகின்ற வழி இதோ:

நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளு செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருந்தான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 3295

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிடுவது இப்லீஸை அல்ல. மாறாக தீங்கு தரக் கூடிய அசுத்தங்களாகும். ஷைத்தான் தீங்கு தருவதைப் போன்று இவைகளும் தீங்கு தருவதினால் பெருமானார் (ஸல்) அவர்கள் இதை ஷைத்தானுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள். தூங்கி எழுந்தவுடன் முகத்தைக் கழுவுவதும் பல்லைத் துலக்குவதும் தான் நம் வழக்கில் உள்ளது. ஆனால் மூக்கிற்குள் நீர் செலுத்திக் கழுவ வேண்டும் என்பதை பெருமானார் கூறியதின் மூலமே அறிந்து கொண்டோம். இல்லையென்றால் அழகான இந்த நடைமுறையை இழந்திருப்போம். பெரும்பாலும் இந்த சுன்னத்தை யாரும் கடைப்பிடிப்பதில்லை. நாம் இதை அவசியம் கடைப்பிடித்து நம்மைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இன்றைய விஞ்ஞானம் பல் துலக்குவதை அதிகம் வலியுறுத்துகிறது. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் உறங்கச் செல்வதற்கு முன்னும் பின்னும் துலக்க வேண்டும் என்று கூறுகிறது. இக்கருத்தை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அற்புதமாகச் சொன்னார்கள் என்பதைப் பாருங்கள்.

என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளை இட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 887

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்புளித்து விட்டு, அதில் கொழுப்பு உள்ளது என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 211

தன்னுடைய உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமில்லாமல் இறைவனுடைய பொருத்தத்தைப் பெறுவதற்காகவும் பல் துலக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. தூய்மை இறைவனது திருப்திக்கும் தூய்மையின்மை அவனது அதிருப்திக்கும் காரணம் என பின்வரும் ஹதீஸ் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பல் துலக்குவது வாயைத் தூய்மைப்படுத்தும். இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 5

சூடான பானம் ஏதும் அருந்தும் போது அதை நாம் ஊதிப் பருகுகிறோம். தண்ணீர் குடிக்கும் போது பாத்திரத்திற்குள்ளே மூச்சை விடுகிறோம். இது தவிர்க்க வேண்டிய செயலாகும். ஏனென்றால் நாம் சுவாசிக்கும் போது பல வகையான காற்றுக்கள் உள்ளே செல்கிறது. நுரையீரல் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கரியமில வாயுக்களை வெளியே அனுப்புகிறது. இப்படி வெளிவரும் காற்று கழிவுக் காற்றாகும். இதனால் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை நாம் பானத்தில் செலுத்தினால் பானம் அசுத்தமாகும் நிலை ஏற்படும்.அது மட்டுமல்லாமல் நாம் உள்ளிழுத்தக் காற்று வெளியேறக் கூடிய பாதையான மூக்கும் அசுத்தமானதாகும். இதன் வழியே கடந்து வந்த காற்றை பானத்தில் விடுவது அருவருக்கத்தக்க செயலாகும். இது போன்ற காரணங்களால் மார்க்கம் பாத்திரத்தில் மூச்சு விடுவதைத் தடை செய்கிறது.

உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண் குறியை தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப்படுத்தவோ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலி)
நூல்: புகாரீ 153

நாகரீக நாற்றங்கள்

பெரும்பாலும் மேலைநாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக நாய் இருக்கும். குழந்தையைக் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பது போன்று நாயைக் கட்டியணைக்கிறார்கள். இரவில் அதனுடன் சேர்ந்து உறங்குகிறார்கள்.நாய்க்கு சுத்தம், அசுத்தம் என்று பிரிக்கத் தெரியாது. அசுத்தமான இடங்களில் எல்லாம் அமரும். அதனுடைய வயிற்றில் உள்ள கிருமிகள் பின்புறத்தின் வழியாக மலம் வரும் போது அதனுடன் சேர்ந்து வருகிறது. நாய் தன் பின்புறத்தை நாவால் நக்கும் போது அங்குள்ள கிருமிகள் முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. நாயைத் தூக்கி கொஞ்சும் போது அதிலுள்ள கிருமிகள் அவருடைய முகத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.

நாயுடைய எச்சிலின் விளைவை நன்கு விளங்கியும் இருக்கிறார்கள். நாயின் எச்சிலின் மூலம் ரேபிஸ் என்ற நோய் பரவுவதாகச் செய்திகள், எச்சரிக்கை நோட்டீஸ்கள் எல்லா மருத்துவமனையிலும் ஒட்டப்பட்டுள்ளன. யாரையாவது நாய் கடித்து விட்டால் பத்து, பதினாறு ஊசிகள் போடப்படுகின்றன. எந்த மிருகம் கடித்தாலும் இத்தனை ஊசி போடப்படுவது கிடையாது. நாயின் எச்சில் மாபெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்று அறிந்தும் அதனுடன் அதிகத் தொடர்பு வைத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நாயினால் ஏற்படும் விபரீதத்தைப் பயந்து, எந்த மிருகத்திற்கும் சொல்லாத ஒரு எச்சரிக்கையை நாய் விஷயத்தில் விடுத்துள்ளார்கள்.

உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதைத் தூய்மை செய்யும் முறையானது, ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 471

இன்று நோய்கள் பெரும்பாலும் நீரினாலேயே பரவுகின்றன. அதனால் தான் நீரை நன்கு கொதிக்க வைத்துப் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். நீர் மாசுபட்டுப் போவதற்கு முக்கியக் காரணம் மக்கள் தான்.குடிநீர் குளங்களில் ஆடு மாடுகளையும், வண்டிகளையும் குளிப்பாட்டுகிறார்கள். அதிலே மலம், ஜலங்களை கழிக்கவும் செய்கிறார்கள். பின்பு அதில் அவர்களும் குளிக்கிறார்கள். இப்படி நீரை அசுத்தப் படுத்துவதால் நோய்கள் நம்மை நோக்கிப் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. நீர் நிலைகளில் தூய்மையைப் பேண வேண்டும் என

நபி (ஸல்) அவர்கள் கூறி, தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதைப் பாருங்கள்.
‘உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு அதில் குளிக்க வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 475

சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குகள் பலருக்குத் தெரிவதில்லை. ஆடு மாடுகள் நின்று கொண்டு கழிப்பதைப் போன்று இவர்களும் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கிறார்கள். கால்நடைகள் குறைந்த அறிவை பெற்றிருப்பதால் அவற்றுக்குச் சுத்தத்தைப் பற்றியும் தெரியாது. அசுத்தத்தைப் பற்றியும் தெரியாது. ஆனால் சிந்திக்கின்ற அறிவை வழங்கப்பட்ட மனிதன் தனக்கு எது உகந்தது என்று சிந்தித்துச் செயல்படாமல் அவைகளைப் போன்றே செயல்படுகிறான்.நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது அவனுடைய மேனியில் சிறுநீர் தெறித்து விடுகிறது. சாதாரண இந்த அறிவைக் கூட மனிதன் பெறாமல் இருப்பது தான் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உலகத்தாருக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24604

ஆனால் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள். சிறுநீர் கழிக்கக் கூடிய இடம் அசுத்தமாக இருக்குமானால் நாம் உட்கார வேண்டியதில்லை. உட்கார்ந்து இருப்பதன் நோக்கமே அசுத்தம் படக் கூடாது என்பது தான். உட்கார்ந்தால் அசுத்தம் பட்டுவிடும் என்று இருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதே சிறந்தது. மொத்தத்தில் தூய்மை அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளுச் செய்தார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 224

அசுத்தம் தரும் அசுர வேதனை

சுத்தம் ஈமானில் பாதி என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் சுத்தத்தைக் கடைப்பிடிக்காதவருக்குத் தண்டனையும் இருப்பதாக இஸ்லாம் எச்சரிக்கிறது.பொதுவாக மலம் கழித்து விட்டால் அனைவரும் கழுவி விடுவோம். ஆனால் சிறுநீர் கழித்தால் அதைப் பெரும்பாலானோர் தூய்மை செய்வதில்லை. அதை ஒரு அசுத்தமாகக் கணக்கிடுவதே இல்லை. ஆங்காங்கே சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாமல் இருந்து விடுகிறார்கள். இப்படி செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் உள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். (அப்போது) கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவரின் சப்தத்தைச் செவியுற்றார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்லித் திரிபவனாக இருந்தான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: நஸயீ 2041

மக்கள் கூடக் கூடிய இடங்களான இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் அசுத்தப்படுத்தி மக்களை ஏராளமானோர் துன்புறுத்து கிறார்கள். அவ்விடங்களுக்கருகில் நடந்து செல்வது மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இங்கு அசுத்தம் செய்யாதீர்கள் என்று அறிவிப்புப் பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தாலும் அதைப் பொருட் படுத்தாமல் செத்தவன் காதில் சங்கு ஊதுவதைப் போன்று நடந்து கொள்கிறார்கள். இந்தத் தீய செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவன். அல்லது அவர்கள் நிழலாரக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுபவன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 448

அதே நேரத்தில் இக்கொடிய செயலில் ஈடுபடாமல் பாதையில் கிடக்கின்ற அசுத்தங்களை அ
கற்றினால் இது ஈமானில் ஒரு பகுதியாக ஆகி விடுகின்றது.

‘இறை நம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 58

நம்மையும் நமது சுற்றத்தையும் தூய்மையாக வைத்து அல்லாஹ்வின் நேசத்தைப் பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அவன் வழங்குவானாக!

No comments:

Post a Comment