பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, February 22, 2026

ஜாமிஉத் திர்மிதீ


ஹதீஸ் கிரந்தங்களிலே எனக்கு மிக மிக விருப்பமான ஒரு கிதாப் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். அது தான் ஜாமிஉத் திர்மிதீ. சிலர் இதனை சுனன் (மார்க்க சட்டங்களை உள்ளடக்கிய தொகுப்பு) என்பர். ஆனால் இது ஜாமிஉ (பல்துறை செய்திகளை கொண்ட தொகுப்பு) என்பதே சரி.

சுனன் அபூதாவூத் நூலைச் சட்டவியலின் திறவுகோல் என்று பார்த்தோம். ஆனால், திர்மிதீ நூலோ முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சுவாரஸ்யமான ஒரு பரிமாணத்தைக் கொண்டது. ஹதீஸ் கலையையும், ஒப்பீட்டுச் சட்டவியலையும் (Comparative Fiqh) ஒரே நேர்கோட்டில் இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான பாலம்தான் இந்த நூல். வாருங்கள், இதன் ஆழத்தை சற்றே சுவைப்போம்.

இமாம் முஹம்மது இப்னு ஈஸா அத்-திர்மிதீ (ரஹ்). ஹிஜ்ரி 209-ல் உஸ்பெகிஸ்தானில் உள்ள 'திர்மித்' (Termez) என்ற ஊரில் பிறந்த இவர்கள், ஹதீஸ் கலையின் சக்கரவர்த்தியான இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் மிகச் சிறந்த மாணவர். தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் பார்வையை இழந்த இந்த மாமேதை, தனது அறிவுக் கூர்மையால் உலகிற்கே ஒளியூட்டினார்.

பொதுவாக ஹதீஸ் நூல்களை பல வகைகளாகப் பிரிப்பார்கள். சட்டங்களை மட்டும் பேசினால் அது 'சுனன்'. ஆனால், அகீதா (நம்பிக்கை), சட்டங்கள், வரலாறு, தப்ஸீர், நற்பண்புகள், மறுமை என அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கிய நூல்களுக்கே 'ஜாமிஉ' என்று பெயர். அந்த வகையில் இது ஒரு முழுமையான தொகுப்பு.

ஹதீஸ் கலை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் திர்மிதீ ஏன் ஒரு வழிகாட்டி என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். 3891 ஹதீஸ்களை (சில பதிப்புகளில் எண் எண்ணிக்கை மாறலாம்) பல விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

ஹதீஸின் தரத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தல். ஒரு ஹதீஸைப் பதிவு செய்தவுடன் இமாம் திர்மிதீ அவர்கள் சும்மா கடந்து சென்றுவிட மாட்டார்கள். உடனே, "இந்த ஹதீஸ் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது), ஹஸன் (அழகானது), அல்லது ளயீஃப் (பலவீனமானது)" என்று அதன் தரத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துவிடுவார்கள். 'ஹஸன்' என்ற சொற்பிரயோகத்தை ஹதீஸ் கலையில் பிரபலப்படுத்தியதே இவர்தான்.
 
இதே தலைப்பில் வேறு யார் பேசியுள்ளார்கள்? (வாஃபில் பாப்).ஒரு தலைப்பில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்த பின்பு, இதே கருத்தில் உமர், அலி, ஆயிஷா (ரழி) போன்ற பிற நபித்தோழர்களிடமிருந்தும் ஹதீஸ்கள் வந்துள்ளன" என சுருக்கமாகப் பட்டியலிடுவார். விரிவான ஆய்வுக்கு இது மிகப்பெரிய திறவுகோல்!

சட்டமேதைகளின் கருத்து வேறுபாடுகள். இதுதான் இந்நூலின் மாபெரும் உச்சம். ஒரு ஹதீஸைக் கூறிவிட்டு, இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத், இமாம் இஸ்ஹாக் ஆகியோர் என்ன சட்டம் வகுத்தார்கள்? ஸஹாபாக்களின் நிலைப்பாடு என்ன? என்பதை ஒப்பீட்டு ஆய்வாக (Comparative Fiqh) அழகாகப் பதிவு செய்திருப்பார்.

தனது நூலின் சிறப்பைப் பற்றி இமாம் திர்மிதீ அவர்களே கூறும் ஒரு புகழ்பெற்ற வார்த்தை உண்டு:
யார் வீட்டில் இந்த நூல் இருக்கிறதோ, அவர் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போன்றது.

வரலாற்றையும், மார்க்கச் சட்டங்களையும், அவை தோற்றம் பெற்ற பின்னணியையும் ஆழமாக அறிய முற்படும் ஒவ்வொரு அறிவார்ந்த சமூகமும் படிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு ஜாமிஉத் திர்மிதீ. சமூக விமர்சனங்களுக்கும், சிந்தனைத் தெளிவுக்கும் இந்த மூல ஆதாரங்களை நோக்கி நாம் திரும்புவது காலத்தின் கட்டாயம். இந்த வரலாற்றுச் சுவடுகள் உங்கள் சிந்தனைக்குத் தீனியிட்டிருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். இன்ஷா அல்லாஹ், அறிவார்ந்த தேடல் தொடரும்.
அன்புடன்,

- Abdullah Ibnu Naseer

Saturday, February 21, 2026

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


ஒரு மனிதரை எவ்வளவு ஆழமாக நேசிக்க முடியும்? அவர் உடுத்திய ஆடை போல உடுத்தலாம், அவர் பேசியதைப் போலப் பேசலாம். ஆனால், அவர் நடந்து சென்ற பாதையில், அவர் எந்த இடத்தில் தன் வாகனத்தைத் திருப்பினாரோ, அதே இடத்தில் தன் வாகனத்தையும் திருப்பி, அவர் எந்த மரத்தடியில் இளைப்பாறினாரோ, அதே மரத்தடியில் தானும் இளைப்பாறும் அளவுக்கு ஒருவரால் காதலிக்க முடியுமா?

வரலாற்றில் அப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார்! அவர் தான் இஸ்லாமிய உம்மத்தின் ஈடு இணையற்ற அறிஞர், அண்ணலாரின் அச்சுப் பிசகாத பிரதிபலிப்பு... அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
கம்பீரத்தின் மறுஉருவமான உமர் (ரலி) அவர்களின் அருமைப் புதல்வர் இவர். ஆனால், தந்தையின் நிழலில் ஒண்டிக் கொள்ளாமல், தன் அறிவாலும், சுன்னாவின் மீதான வெறித்தனமான காதலாலும் வரலாற்றில் தனக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினாலே, சுன்னாவைப் பின்பற்றுவதில் அவருக்கு இருந்த அசாத்திய உறுதிதான் முதலில் நினைவுக்கு வரும். ஒருமுறை அவர் பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். திடீரென ஒரு இடத்தில் தன் ஒட்டகத்தை வட்டமடிக்கச் செய்தார். எந்தக் காரணமும் இல்லாமல் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பல வருடங்களுக்கு முன் இதே இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகம் இப்படி வட்டமடித்ததை நான் பார்த்தேன். அது ஏன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நபிகளார் செய்ததை நானும் செய்கிறேன் என்றார். பயணத்தின் நடுவே ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்தால், அதன் கீழே சென்று சிறிது நேரம் தூங்குவார். ஏன் இங்கே படுக்கிறீர்கள்? என்றால், ஒருமுறை நபிகளார் இங்கே தூங்கினார்கள் என்பார். அந்த மரம் பட்டுப்போகாமல் இருக்க, தன் கையாலேயே அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். நபிகளார் மக்காவில் எந்த இடத்தில் தொழுதார்களோ, அதே இடத்தில் ஒரு சென்டிமீட்டர் கூட மாறாமல் தன் பாதங்களை வைத்துத் தொழுவார்.

இன்று நாம் அறிவியலையும் லாஜிக்குகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்னு உமரின் லாஜிக் ஒன்றே ஒன்றுதான் என் உயிரினும் மேலானவர் இதைச் செய்தார், அதனால் நான் செய்கிறேன்!

சுன்னாவின் மீது காதல் இருந்தால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஞானமும் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பிறகு அதிக ஹதீஸ்களை (2,630) அறிவித்த இரண்டாவது மாபெரும் அறிஞர். இவ்வளவு பெரிய மேதையாக இருந்தும், ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுப்பதில் அவர் காட்டிய எச்சரிக்கை சிலிர்க்க வைக்கும். ஒருமுறை அவரிடம் ஒருவர் வந்து ஒரு மார்க்கக் கேள்வியைக் கேட்டார். இப்னு உமர் (ரலி) சாதாரணமாக, எனக்குத் தெரியாது (அல்லாஹு அஃலம்) என்று சொல்லிவிட்டார். வந்தவர் ஆச்சரியத்துடன், நீங்கள் உமரின் மகன்! மிகப் பெரிய அறிஞர்! உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர், ஆம், எனக்குத் தெரியாது என்று சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. என் முதுகை நரகத்திற்கான பாலமாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை! என்றார்.

அரை மணி நேர யூடியூப் வீடியோவைப் பார்த்துவிட்டு, இணையத்தில் முஃப்திகளாக மாறி ஃபத்வா கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு இதைவிடப் பெரிய செருப்படி இருக்க முடியாது!

உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹீதான மரணத்திற்குப் பிறகு, இஸ்லாமிய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிளந்தது. அலி (ரலி) ஒரு பக்கமும், முஆவியா (ரலி) மறுபக்கமும் நின்றார்கள் (சிஃப்பீன், ஜமல் போர்கள்).  பலர் அவரிடம் வந்து, நீங்கள் உமரின் வாரிசு, உங்களிடம் எல்லாத் தகுதியும் இருக்கிறது. நீங்களே அடுத்த கலீஃபாவாக (ஜனாதிபதியாக) வந்துவிடுங்கள்" என்று கெஞ்சினார்கள். ஆனால் அவர் அத்தனை அதிகாரங்களையும் தூக்கி எறிந்தார். என் காரணத்தால் ஒரு முஸ்லிமின் மூக்கில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதை விட, இந்த ஒட்டுமொத்த உலகமும் அழிந்து போவது எனக்கு மேல்!" என்று கூறி, எந்தப் பக்கமும் சாராமல், அதிகாரத்தை விடத் தன் மார்க்கமே பெரிது என்று நடுநிலை வகித்தார். தான் கொல்லப்படும் வரை (ஆம் இப்னு உமர் இயற்கை மரணமடையவில்லை. ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப்பின் கட்டளையின் பேரில் விஷம் தோய்ந்த ஈட்டி அவரின் கால்களில் குத்தப்பட்டது. இதனால் நோய்வாய்ப்பட்டே இப்னு உமர் இறந்தார்.) 
இந்த கொள்கையில் உறுதியாகவே இருந்தார். 

எண்பத்து நான்கு (84) ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்தார். அவர் பார்த்த சாம்ராஜ்யங்கள் பல. அவர் காலடியில் கொட்டப்பட்ட செல்வங்கள் பல. ஆனால், அவர் இறந்தபோது ஒரு சாதாரண மனிதராக, நபிகளார் எப்படி வாழ்ந்து காட்டினாரோ, அதே எளிமையோடு விடைபெற்றார். இன்றைய காலத்தில் சுன்னா என்றால் வெறும் தாடி வைப்பதும், ஆடையைக் கரண்டைக்கு மேல் உடுத்துவதும் மட்டும்தான் என்று நாம் சுருக்கிவிட்டோம். ஆனால், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப் படித்தால் புரியும்... சுன்னா என்பது வெறும் தோற்றத்தில் மட்டும் இருப்பதில்லை. அது ரத்தத்தில் கலக்க வேண்டிய ஒரு வாழ்க்கை முறை! அந்த நடமாடும் சுன்னாவோடு, நம்மையும் இறைவன் சுவர்க்கத்தில் ஒன்றிணைப்பானாக! ஆமீன்.

- ✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbdullahIbnUmar #Sunnah #Sacrifice #AbdullahIbnuNaseerWriteups