"ஹதீஸ்கள் எல்லாம் நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து 200 வருடங்களுக்குப் பிறகுதான் எழுதப்பட்டன; அதனால் அதில் பல இடைச்செருகல்கள் உள்ளன" என்று மேலைநாட்டு ஓரியண்டலிஸ்டுகளும் , மார்க்கத்தை விமர்சிக்கும் சில நவீன அறிவாளிகளும் கூறுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இந்த ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பொய்க்கு, தன் ஒரே ஒரு ஏட்டின் மூலம் மரண அடி கொடுத்த ஒரு மாபெரும் தாபியீ அறிஞரைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இஸ்லாமிய வரலாற்றில், நபிகளார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு மிக நெருக்கமாக, ஸஹாபாக்கள் வாழும் காலத்திலேயே ஹதீஸ்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஆகப்பெரிய, வாழும் சான்று இமாம் ஹம்மாம் இப்னு முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் எழுதிவைத்த ஒரு ஏடு உள்ளது.
முழுப் பெயர்: ஹம்மாம் இப்னு முனப்பிஹ் இப்னு காமில்.
காலம்: தோராயமாக ஹிஜ்ரி 40-களில் பிறந்து, ஹிஜ்ரி 131 (அல்லது 132)-ல் மரணமடைந்தார்.
ஊர்: யமன் தேசத்தின் ஸன்ஆ நகரம்.
பின்னணி: இவர் பாரசீகப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை முனப்பிஹ், இஸ்லாத்தைத் தழுவிய ஒரு மாபெரும் அறிஞர். பிரபலமான வரலாற்று அறிஞர் வஹ்ப் இப்னு முனப்பிஹ் இவருடைய சொந்த சகோதரர் ஆவார்.
ஹம்மாம் அவர்கள் மதீனாவிற்குப் பயணம் செய்து, இஸ்லாத்தில் அதிக ஹதீஸ்களை அறிவித்த மாபெரும் ஸஹாபியான அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மாணவராக இணைந்தார். அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்லச் சொல்ல, ஹம்மாம் அவர்கள் தன் கைகளாலேயே ஒரு ஏட்டில் ஹதீஸ்களை எழுதினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏடுதான் 'ஸஹீஃபா அஸ்-ஸஹீஹா' (The Authentic Script) அல்லது 'ஸஹீஃபா ஹம்மாம் இப்னு முனப்பிஹ்' என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 138 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
ஹதீஸ்கள் எல்லாம் வாய்மொழியாகவே பரவின, 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டபோது பல பொய்கள் கலந்துவிட்டன என்று 'கோல்ட்ஸிஹர்' (Ignác Goldziher) போன்ற மேற்கத்திய அறிஞர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் மாபெரும் இஸ்லாமிய அறிஞரான டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ் அவர்கள் ஜெர்மனியின் பெர்லின் மற்றும் சிரியாவின் டமாஸ்கஸ் நூலகங்களில் பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக்கொண்டிருந்த 'ஸஹீஃபா ஹம்மாம் இப்னு முனப்பிஹ்' ஏட்டின் கையெழுத்துப் பிரதிகளைக் கண்டுபிடித்தார்!
அதை எடுத்து, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் 'முஸ்னத் அஹ்மத்' நூலோடு ஒப்பிட்டுப் பார்த்தால்... ஆச்சரியம்! 'முஸ்னத் அஹ்மத்'தில் உள்ள அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸ்களும், இந்த 1-ஆம் நூற்றாண்டு ஏட்டில் உள்ள ஹதீஸ்களும் ஒரு எழுத்து, ஒரு புள்ளி கூட மாறாமல் அப்படியே துல்லியமாகப் பொருந்தின! ஹதீஸ் கலையின் நம்பகத்தன்மையை உலகிற்கு நிரூபித்த மாபெரும் தருணம் அது.
இந்த 138 ஹதீஸ்களும் எப்படிப் பாதுகாக்கப்பட்டன தெரியுமா?
அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல ஹம்மாம் இப்னு முனப்பிஹ் எழுதினார்.
ஹம்மாம் அவர்கள் அந்த ஏட்டைத் தன் மாணவரான மஃமர் பின் ராஷித் (இவரை பற்றி பார்த்துவிட்டோம்) அவர்களிடம் ஒப்படைத்தார்.
மஃமர் அவர்கள் அதைத் தன் மாணவரான அப்துர் ரஸ்ஸாக் (இவரை பற்றியும் பார்த்துவிட்டோம்) அவர்களிடம் கொடுத்தார்.
அப்துர் ரஸ்ஸாக் வழியாக அது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (இவரை பற்றியும் பார்த்துவிட்டோம்) அவர்களைச் சென்றடைந்து அவருடைய 'முஸ்னத்' நூலில் அப்படியே பதியப்பட்டது. என்ன ஒரு பிரம்மாண்டமான அறிவுச் சங்கிலி இது!
ஹதீஸ்கள் ஏதோ நேற்றோ இன்றோ கற்பனையாக எழுதப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. அவை, ஸஹாபாக்களின் காலத்திலேயே, அவர்களின் நேரடிப் பார்வையில், வியர்வையும் உழைப்பும் சிந்தப்பட்டு காகிதங்களில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள். அறிவே இல்லாத சில நவீனக் கோமாளிகள் யூடியூபிலும் சமூக வலைத்தளங்களிலும் "ஹதீஸ்கள் எல்லாம் லேட்டா எழுதப்பட்டது" என்று உளறுவதைக் கேட்கும்போது, ஹம்மாம் இப்னு முனப்பிஹ் அவர்களின் இந்த 138 ஹதீஸ்கள் கொண்ட ஏட்டை எடுத்து அவர்கள் முகத்தில் வீச வேண்டும் போலத் தோன்றுகிறது! முஸ்லிம் உம்மாவுக்கு இத்தகைய தூய பொக்கிஷத்தை விட்டுச் சென்ற அந்த யமன் தேசத்து அறிஞருக்கு அல்லாஹ் மாபெரும் கூலியை வழங்குவானாக.
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #HammamIbnMunabbih #Sahifah #Yemen #HadithScholar #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups