பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 18, 2026

இமாம் தாரகுத்னீ


ஒரு வைர வியாபாரிக்குத்தான் தெரியும் வைரத்தில் எங்கே கீறல் விழுந்திருக்கிறது என்று. பாமர மக்களுக்கு அது ஜொலிக்கும் கல்லாகத் தெரியும். ஆனால் நிபுணர்களுக்குத்தான் தெரியும் அது போலியா அல்லது உண்மையானதா என்று. ஹதீஸ் உலகில் அப்படிப்பட்ட ஒரு "வைர வியாபாரி" தான் இமாம் தாரகுத்னீ. மற்ற இமாம்கள் "இது ஸஹீஹான ஹதீஸ்" என்று சேகரித்தார்கள்.
ஆனால் இமாம் தாரகுத்னீ, "இந்த ஹதீஸ் பார்ப்பதற்கு ஸஹீஹ் போலத் தெரியும். ஆனால் இதன் மூன்றாவது அறிவிப்பாளருக்கு நினைவாற்றல் குறைவு. எனவே இது பலவீனம்" என்று ஹதீஸை 'எக்ஸ்-ரே' (X-Ray) எடுத்துப் பார்ப்பார்.

இவரைத் தாண்டி எந்த ஹதீஸும் தப்பிக்க முடியாது! யார் இந்த தாரகுத்னீ?

பெயர்: அபுல் ஹஸன் அலீ பின் உமர்.
ஊர்: ஈராக்கின் பக்தாத் நகரில் உள்ள 'தார் அல்-குத்ன்'  என்ற பகுதிக் குடியிருப்பு. (அதனால் தான் தாரகுத்னீ என்று அழைக்கப்படுகிறார்).
காலம்: ஹிஜ்ரி 306 - 385.
சிறப்பு: இவர் ஒரு நடமாடும் நூலகம். சிறுவயதிலேயே ஈராக், ஷாம் (சிரியா), எகிப்து எனப் பயணம் செய்து ஹதீஸ்களை அள்ளி வந்தார்.

இவரின் நினைவாற்றலைக் கண்டு உலகமே மிரண்டது. எகிப்தில் ஒருமுறை ஒரு ஷேக் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். தாரகுத்னீ அதை எழுதிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒருவர், "ஏன் எழுதவில்லை?" என்று கேட்டார். அதற்கு தாரகுத்னீ, "நீங்கள் எழுதியதை விட என் நெஞ்சில் பதிந்தது அதிகம்" என்று சொல்லி, அந்த ஷேக் நடத்திய அத்தனை ஹதீஸ்களையும் வரி பிசகாமல் ஒப்பித்தார்!

இமாம் தாரகுத்னீ எழுதிய நூற்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது இதுதான். ஏன் இது ஸ்பெஷல்?
பொதுவாக 'சுனன்' நூற்களில் (அபூதாவூத், நஸாயீ போன்றவை) சட்டத்திற்குத் தேவையான ஹதீஸ்கள் இருக்கும். ஆனால் தாரகுத்னீயின் பாணி வேறு.
மக்கள் மத்தியில் ஆதாரமாகச் சொல்லப்படும் ஹதீஸ்களை எடுத்து வருவார். பிறகு, "இந்த ஹதீஸ் பலவீனமானது. இதைக் கொண்டு சட்டம் வகுக்கக் கூடாது" என்று அதன் குறைகளைத் தோலுரித்துக் காட்டுவார். இதன் நோக்கம். பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு ஃபத்வா கொடுப்பவர்களை எச்சரிப்பது. ஒவ்வொரு ஹதீஸின் கீழும், அந்த அறிவிப்பாளர் தொடரில் உள்ள சிக்கல்களை ஒரு வக்கீல் போல அலசுவார். இன்று ஹதீஸ் ஆய்வாளர்கள் ஒரு ஹதீஸை ஆய்வு செய்ய வேண்டுமென்றால், முதலில் புரட்டும் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

ஹதீஸ் கலையிலேயே மிகவும் கடினமான துறை 'இலல்' (நுண்ணிய குறைகள்). தாரகுத்னீ எழுதிய "அல்-இலல் அல்-வாரிதா" என்ற நூல், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனை. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நூல் முழுவதையும் அவர் மனப்பாடமாகவே டிக்டேட் செய்தார்! மாணவர்கள் கேட்பார்கள் இமாமே! இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறீர்கள்? தாரகுத்னீ புத்தகத்தைப் பார்க்காமலே சொல்வார். "இந்த ஹதீஸை இன்னார் அறிவித்தார். ஆனால் அதில் இன்னார் தவறு செய்தார். சரியான அறிவிப்பு இதுதான்... இப்படி ஆயிரக்கணக்கான ஹதீஸ்களின் நுணுக்கங்களை நினைலிலிருந்தே கொட்டிய அந்த அறிவைக் கண்டு இமாம் தஹபி போன்றவர்களே சிலிர்த்துப் போனார்கள்.

இமாம் புகாரியும், முஸ்லிமும் ஹதீஸ் உலகின் இரு கண்கள். ஆனால், அவர்கள் மனிதர்கள் தானே? அவர்களும் தவறு செய்திருக்கலாம் அல்லவா? என்ற துணிச்சலான கேள்வியை முன்வைத்தவர் தாரகுத்னீ. அவர் "அல்-இஸ்தித்ராக் வத்-ததப்பஃ என்றொரு நூல் எழுதினார். அதில், புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் உள்ள சுமார் 200 ஹதீஸ்களை எடுத்து, "இவற்றில் இந்த இந்தக் குறைகள் உள்ளன" என்று விமர்சித்தார். (பிற்கால அறிஞர்கள் இவரின் விமர்சனங்களில் பலவற்றுக்குப் பதில் அளித்துவிட்டாலும், இவரின் அந்தத் துணிச்சல் ஹதீஸ் கலைக்குக் கிடைத்த ஆரோக்கியமான வளர்ச்சி).

சென்ற பதிவில் பார்த்த இமாம் ஹாகிம் (முஸ்தத்ரக் எழுதியவர்), இவரின் மாணவர்.
ஹாகிம் கூறுகிறார் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாரகுத்னீயைப் போன்று இன்னொருவரை என் கண்கள் பார்த்ததே இல்லை. அவருக்குப் பிறகு அவருக்கு நிகரானவர் யாருமில்லை.

ஹிஜ்ரி 385-ம் ஆண்டு, பக்தாத் நகரில் அந்த அறிவுச் சூரியன் மறைந்தது. இமாம் தாரகுத்னீ மட்டும் இல்லையென்றால், பலவீனமான செய்திகள் எல்லாம் "வஹீ" (இறைச்செய்தி) என்ற பெயரில் மார்க்கத்திற்குள் நுழைந்திருக்கும். அவர் ஒரு பாதுகாவலர் என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

நாம் இன்று நிம்மதியாக "இது ஸஹீஹ், இது ளயீஃப்" என்று பேசுகிறோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால், இமாம் தாரகுத்னீ போன்றவர்கள் தங்கள் வாழ்நாளையே கரைத்து உருவாக்கிய உழைப்பு இருக்கிறது. கட்டிடம் அழகாக இருக்கிறது என்று ரசிக்கிறோம்; ஆனால் அதன் அஸ்திவாரத்தில் உள்ள விரிசல்களைக் கண்டுபிடித்துச் சொன்ன இன்ஜினியர் இவர்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDaraqutni #SunanDaraqutni #HadithCritic #Ilal #Baghdad #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups

அஸ்-சுனனுல் குப்ரா


நம்மில் அநேகம் பேருக்கு நஸாயீ என்றதுமே நினைவுக்கு வருவது, குதுபுஸ் ஸித்தாவில் (ஆறு கிரந்தங்களில்) ஒன்றாக இருக்கும் சுனன் நஸாயீ நூல் தான். ஆனால், உண்மையில் நாம் படித்துக் கொண்டிருப்பது இமாம் நஸாயீயின் அறிவுக் கடலின் ஒரு சுருக்கம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இன்று இந்த நூலின் பின்னணியையும், இந்த 'ஸவாயிது' தொகுப்பின் அவசியத்தையும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் முதலில் தொகுத்தது 'அஸ்-சுனனுல் குப்ரா' (பெரிய சுனன்) எனும் பிரம்மாண்டமான நூலைத்தான். இதில் ஸஹீஹான (ஆதாரப்பூர்வமான), ஹஸனான, மற்றும் பலவீனமான (ஆனால் சான்றுக்குரிய) ஹதீஸ்கள், நுணுக்கமான இலல் விளக்கங்களுடன் இடம்பெற்றிருந்தன சுமார் 11,000 இற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். வரலாற்றுக் குறிப்புகளின்படி, இமாம் அவர்கள் இந்த நூலை ஒரு ஆளுநரிடம் சமர்ப்பித்தபோது, "இதிலுள்ள அனைத்தும் ஸஹீஹானவையா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாம், "இல்லை" என்று பதிலளித்தார். அப்போது அந்த ஆளுநர், "எனக்கு ஸஹீஹானதை மட்டும் தனியாகப் பிரித்துத் தாருங்கள்" என்று கேட்க, இமாம் நஸாயீ அவர்கள் அந்தப் பெரிய நூலிலிருந்து வடிகட்டித் தொகுத்த சுருக்கம்தான் அஸ்-சுனனுஸ் ஸுக்ரா (சிறிய சுனன்). இதற்கு அல்-முஜ்தபா (தேர்ந்தெடுக்கப்பட்டது) என்றும் பெயர் உண்டு. இன்று மத்ரஸாக்களிலும், பொதுவாசிப்பிலும் இருப்பது இந்த 'சிறிய' நூல்தான். ஆனால், ஆய்வாளர்களுக்குத் தீனி போடும் உண்மையான கடல் அந்த 'பெரிய' (குப்ரா) நூலில்தான் இருக்கிறது.

ஹதீஸ் கலையில் இமாம் நஸாயீ ஒரு புலி. அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் இமாம் முஸ்லிமை விடவும், ஏன் சில இடங்களில் இமாம் புஹாரியை விடவும் கூட கடுமையான நிபந்தனைகளைக் கொண்டவர். அவரது 'குப்ரா' நூலில், ஒரு ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள நுட்பமான தவறுகளை சுட்டிக்காட்டும் இடங்கள் பிரமிக்க வைக்கும். அத்தகைய அரிய குறிப்புகள் பலவும் சுருக்கப்பட்ட 'முஜ்தபா'வில் விடுபட்டிருக்கலாம்.

இப்போது என் கையில் இருக்கும் இந்த நூல் 'ஸவாயிது சுனனுல் குப்ரா'. ஆய்வுக்களத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நடைமுறைச் சிக்கல் உண்டு. நம்மிடம் ஏற்கனவே 'சுனன் நஸாயீ' (சிறியது) இருக்கும். இப்போது ஆய்வுக்காகப் பெரிய குப்ராவை வாங்கினால், அதில் பெரும்பகுதி ஏற்கனவே நம்மிடம் உள்ள சிறிய நூலில் உள்ள செய்திகளாகவே இருக்கும். இங்குதான் இந்த ஸவாயிது கைகொடுக்கிறது. இது என்ன செய்கிறது என்றால், நம்மில் பரவலாக இருக்கும் சிறிய நஸாயீ - முஜ்தபா மற்றும் மற்ற 10 நூற்களில் உள்ள ஹதீஸ்களை விட்டுவிடும். ஆனால் அவற்றில் இல்லாத பெரிய நஸாயீ மற்றும் மற்ற நூற்களில் இடம்பெற்றுள்ள தனித்துவமான ஹதீஸ்களை மட்டும் பிரித்தெடுத்துத் தருகிறது. இதனால், ஒரே நேரத்தில் இமாம் நஸாயீயின் முழுமையான இல்மை (அறிவை) அடைந்த திருப்தியும் கிடைக்கிறது. அதே சமயம் நேரமும் மிச்சமாகிறது.

என்னைப் பொறுத்தவரை, ஒரு ஆய்வாளனுக்கு மூல நூல்கள் தான் ஆக்ஸிஜன். அதிலும் குறிப்பாக, ஃபிக்ஹ் சட்டங்களை ஆய்வு செய்பவர்களுக்கு, இமாம் நஸாயீயின் பாடத் தலைப்புகளும், அவர் ஹதீஸ்களைக் கொண்டுவரும் விதமும் ஒரு தனிப் பல்கலைக்கழகம். அல்லாஹ் இந்த அறிவைத் தேடுவதையும், அதைப் பாதுகாப்பதையும் நமக்கு எளிதாக்குவானாக! இன்னும் தேடுவோம்...
இவன்,

- Abdullah Ibnu Naseer 

(நிறுவனர் - பைத்துல் ஹிக்மா )