ஹதீஸ் கிரந்தங்களிலே எனக்கு மிக மிக விருப்பமான ஒரு கிதாப் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். அது தான் ஜாமிஉத் திர்மிதீ. சிலர் இதனை சுனன் (மார்க்க சட்டங்களை உள்ளடக்கிய தொகுப்பு) என்பர். ஆனால் இது ஜாமிஉ (பல்துறை செய்திகளை கொண்ட தொகுப்பு) என்பதே சரி.
சுனன் அபூதாவூத் நூலைச் சட்டவியலின் திறவுகோல் என்று பார்த்தோம். ஆனால், திர்மிதீ நூலோ முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சுவாரஸ்யமான ஒரு பரிமாணத்தைக் கொண்டது. ஹதீஸ் கலையையும், ஒப்பீட்டுச் சட்டவியலையும் (Comparative Fiqh) ஒரே நேர்கோட்டில் இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான பாலம்தான் இந்த நூல். வாருங்கள், இதன் ஆழத்தை சற்றே சுவைப்போம்.
இமாம் முஹம்மது இப்னு ஈஸா அத்-திர்மிதீ (ரஹ்). ஹிஜ்ரி 209-ல் உஸ்பெகிஸ்தானில் உள்ள 'திர்மித்' (Termez) என்ற ஊரில் பிறந்த இவர்கள், ஹதீஸ் கலையின் சக்கரவர்த்தியான இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் மிகச் சிறந்த மாணவர். தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் பார்வையை இழந்த இந்த மாமேதை, தனது அறிவுக் கூர்மையால் உலகிற்கே ஒளியூட்டினார்.
பொதுவாக ஹதீஸ் நூல்களை பல வகைகளாகப் பிரிப்பார்கள். சட்டங்களை மட்டும் பேசினால் அது 'சுனன்'. ஆனால், அகீதா (நம்பிக்கை), சட்டங்கள், வரலாறு, தப்ஸீர், நற்பண்புகள், மறுமை என அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கிய நூல்களுக்கே 'ஜாமிஉ' என்று பெயர். அந்த வகையில் இது ஒரு முழுமையான தொகுப்பு.
ஹதீஸ் கலை மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் திர்மிதீ ஏன் ஒரு வழிகாட்டி என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். 3891 ஹதீஸ்களை (சில பதிப்புகளில் எண் எண்ணிக்கை மாறலாம்) பல விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
ஹதீஸின் தரத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தல். ஒரு ஹதீஸைப் பதிவு செய்தவுடன் இமாம் திர்மிதீ அவர்கள் சும்மா கடந்து சென்றுவிட மாட்டார்கள். உடனே, "இந்த ஹதீஸ் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது), ஹஸன் (அழகானது), அல்லது ளயீஃப் (பலவீனமானது)" என்று அதன் தரத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துவிடுவார்கள். 'ஹஸன்' என்ற சொற்பிரயோகத்தை ஹதீஸ் கலையில் பிரபலப்படுத்தியதே இவர்தான்.
இதே தலைப்பில் வேறு யார் பேசியுள்ளார்கள்? (வாஃபில் பாப்).ஒரு தலைப்பில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்த பின்பு, இதே கருத்தில் உமர், அலி, ஆயிஷா (ரழி) போன்ற பிற நபித்தோழர்களிடமிருந்தும் ஹதீஸ்கள் வந்துள்ளன" என சுருக்கமாகப் பட்டியலிடுவார். விரிவான ஆய்வுக்கு இது மிகப்பெரிய திறவுகோல்!
சட்டமேதைகளின் கருத்து வேறுபாடுகள். இதுதான் இந்நூலின் மாபெரும் உச்சம். ஒரு ஹதீஸைக் கூறிவிட்டு, இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத், இமாம் இஸ்ஹாக் ஆகியோர் என்ன சட்டம் வகுத்தார்கள்? ஸஹாபாக்களின் நிலைப்பாடு என்ன? என்பதை ஒப்பீட்டு ஆய்வாக (Comparative Fiqh) அழகாகப் பதிவு செய்திருப்பார்.
தனது நூலின் சிறப்பைப் பற்றி இமாம் திர்மிதீ அவர்களே கூறும் ஒரு புகழ்பெற்ற வார்த்தை உண்டு:
யார் வீட்டில் இந்த நூல் இருக்கிறதோ, அவர் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போன்றது.
வரலாற்றையும், மார்க்கச் சட்டங்களையும், அவை தோற்றம் பெற்ற பின்னணியையும் ஆழமாக அறிய முற்படும் ஒவ்வொரு அறிவார்ந்த சமூகமும் படிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு ஜாமிஉத் திர்மிதீ. சமூக விமர்சனங்களுக்கும், சிந்தனைத் தெளிவுக்கும் இந்த மூல ஆதாரங்களை நோக்கி நாம் திரும்புவது காலத்தின் கட்டாயம். இந்த வரலாற்றுச் சுவடுகள் உங்கள் சிந்தனைக்குத் தீனியிட்டிருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். இன்ஷா அல்லாஹ், அறிவார்ந்த தேடல் தொடரும்.
அன்புடன்,
- Abdullah Ibnu Naseer