பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, March 26, 2026

மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்....


*மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்* 

*திருமணச் சட்டங்கள் மற்றும் விதிகள் - 2026*

*குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்,* மிகக் குறைந்த செலவில் நடைபெறும் திருமணமே அதிக பரக்கத் (அருள்) நிறைந்தது. தேவையற்ற சடங்குகள் மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து, சுன்னத்தான முறையில் திருமணங்களை நடத்த வேண்டும். ஜமாஅத்தின் நிர்வாகக் குழு 28 டிசம்பர் 2025 அன்று கூடி, ஏற்கனவே 2002-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளை சில மாற்றங்களுடன் 21.03.2026 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

விதிமுறைகள்:
*1.நிச்சயதார்த்தம்:* மார்க்க ரீதியாக இது ஒரு வாக்குறுதி மட்டுமே. எனவே, மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் நெருங்கிய 50 நபர்களுக்கு மிகாமல், பெண்ணின் வீட்டு மஹல்லா பள்ளியிலோ அல்லது பெண் வீட்டிலோ ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் எளிமையாகத் திருமணத் தேதியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

*2.ஷுக்ரானா விருந்து:* இதற்கு அழைப்பு விடுக்கக் கூடாது.

*3.திருமண மண்டபம்:* ஷுக்ரானா விருந்தை திருமண மண்டபத்தில் நடத்தக்கூடாது.

*4.பெண் வீட்டார் மீது சுமை:* ஷுக்ரானா விருந்து என்ற பெயரில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் திணிக்கக்கூடாது.

*5.நண்பர்களுக்கு விருந்து:* திருமணத்திற்குப் பிறகு மணமகன் தன் நண்பர்களுக்கோ அல்லது மணமகள் தன் தோழிகளுக்கோ விருந்து அளிக்கக்கூடாது.

*6.ஹல்தி (மஞ்சள்) சடங்கு:* நிகாஹ்விற்கு முன் ஹல்தி போன்ற சடங்குகளைச் செய்யக்கூடாது. வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் உணவு வழங்கலாம்.

*7.தேவையற்ற சடங்குகள்:*  சோர் ஹல்தி, கட்டு-கல்தி, மரு (Maru), பெண்ணின் வீட்டிற்குப் பலகாரங்கள் கொண்டு செல்லுதல், ஸலாமி போன்ற சடங்குகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*8.மஹர்:* மஹர் என்பது பெண்ணின் உரிமை. மணமகன் தன் வசதிக்கேற்ப எளிதாக வழங்கக்கூடிய தொகையை நிர்ணயிக்க வேண்டும். கௌரவத்திற்காக அளவுக்கு அதிகமாகவோ அல்லது பெண்ணின் அந்தஸ்துக்குக் குறைவாகவோ இருக்கக்கூடாது. குறைந்தபட்ச மஹர் 2 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பு.

*9.பூ மாலை:* நிகாஹ் சபையில் மணமகனுக்குப் பூ மாலை அணிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

*10.புகைப்படம் மற்றும் வீடியோ:* நிகாஹ் சபையில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டுள்ளது.

*11.எளிமை:* திருமணத்தை மிகக் குறைந்த நபர்களுடன் சுன்னத்தான முறையில் நடத்த வேண்டும்.

*12.விருந்தினர்கள்:* நிகாஹ் அன்று பெண் வீட்டார் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் விருந்து அளிக்கலாம்.

*13.உணவு வகை:* விருந்தில் ஒரு சாதம், ஒரு குழம்பு மற்றும் ஒரு இனிப்பு மட்டுமே இருக்க வேண்டும். இறைச்சியில் ஆடு, மாடு அல்லது கோழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

*14.பரிசுப் பொருட்கள்:* விருந்தின் போது கிப்ட் பாக்ஸ், கூல் டிரிங்க்ஸ் (Cool Drinks) போன்றவற்றை விநியோகிக்கக் கூடாது.

*15. காலை உணவு:* மணமகன் வீட்டார் வெளியூராக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெண் வீட்டில் காலை உணவு ஏற்பாடு செய்யலாம்.

*16.பெண் அழைப்பு (ருக்ஸதி):* பெண்ணை அனுப்பும்போது மணமகன் வீட்டாருக்குத் தேநீர் மற்றும் பிஸ்கட் மூலம் மட்டும் உபசரிக்கலாம்.

*17.அலங்காரங்கள்:* திருமண மண்டபத்தையோ அல்லது வீடுகளையோ தேவையின்றி அதிகப்படியான விளக்குகள், மேடை அலங்காரங்கள் மற்றும் ஆடம்பரமான பந்தல்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

18.(பட்டியலில் விடுபட்டுள்ளது)

*19.வெயில் பாதுகாப்பு:* வெயிலில் இருந்து தப்பிக்க சாதாரணப் பந்தல் அமைக்கலாம், ஆனால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கக் கூடாது.

*20.ஆடைகள்:* நிகாஹ்விற்காக மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் தலா இரண்டு ஜோடி ஆடைகளுக்கு மேல் எடுக்கக் கூடாது.

*21.இதர பொருட்கள்:* மணமகன் வீட்டார் தரப்பிலிருந்து குடை, காலணி (Shoe) போன்றவற்றை அனுப்பக்கூடாது.

*22.தங்கம்:*
 குறிப்பு :- 22வது எண்ணில் இருந்த பிழையான பதிவு சரி செய்யப்பட்டுள்ளது. 

22.தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக இருப்பதால், பெரும்பாலான பெண்களின் திருமணத்தை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. 

"விலைவாசி ஏற்றத்தினால் திருமணங்கள் தடைபடுவது, பெற்றோர்களுக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியைத் தருகிறது. இதனால் இளம் பெண்கள் இல்லற வாழ்க்கையில் நுழையும் வாய்ப்பை இழந்து, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் இருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்."
எனவே, வசதியுள்ளவர்கள் கூட ஒரு நெக்லஸ், இரண்டு வளையல்கள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரத்திற்கு மேல் நகைகளை அணிவிக்க வேண்டாம். இருப்பினும், மணமகன் வீட்டார் தங்களின் வசதிக்கேற்ப மணப்பெண்ணுக்கு நகைகளை வழங்கலாம்.

*23.விருந்தினர் நகை:* திருமணத்திற்கு வரும் பெண்கள் அதிகப்படியான நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும். இது பெண் வீட்டாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

*24.ஆடை கட்டுப்பாடு:* மணமக்கள் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மார்க்கத்திற்குப் புறம்பான ஆடைகளை அணியக்கூடாது.

*25.வலிமா விருந்து:* மணமகன் தன் வசதிக்கேற்ப வலிமா விருந்து அளிக்க வேண்டும். கௌரவத்திற்காகவும் புகழுக்காகவும் கடன் வாங்கிச் செய்யக்கூடாது.

*26.பெண் வீட்டார் பங்களிப்பு:* வலிமா விருந்திற்காகப் பெண் வீட்டாரிடம் பணம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

*27.வலிமா நேரம்:* நிகாஹ் மற்றும் தாம்பத்தியத்திற்குப் பிறகு வலிமா நடத்தப்பட வேண்டும். அதிகபட்சம் 200 கிலோ அரிசி வரை மட்டுமே சமைக்க அனுமதிக்கப்படுகிறது.

*28.பெண் வீட்டிற்குச் செல்லுதல்:* வலிமா அன்று மணமகன் பெண் வீட்டிற்குச் செல்லும்போது நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ அழைத்துச் செல்லக்கூடாது.

*29.சீதனம் (Dowry):* தந்தை தன் மகளுக்குத் தன் வசதிக்கேற்ப வழங்கும் பொருட்கள் அன்பளிப்பாகக் கருதப்படும். ஆனால், மணமகன் வீட்டாரோ அல்லது மணமகனோ நகை, பணம், வாகனம் என எதையும் சீதனமாகக் கேட்பது மார்க்கப்படி ஹராம் (தடுக்கப்பட்டது).

*30.பெண்ணின் சொத்து:* மணமகள் கொண்டு வரும் சீதனப் பொருட்களுக்கு அவரே முழு உரிமையாளர்.

*31.இதர சடங்குகள்:* சில்லா, குல் போஷி, ஈதி விருந்து, கத்னா (சுன்னத்) விருந்து, பெயரிடும் விழா மற்றும் வளைகாப்பு போன்ற சடங்குகளைச் செய்வதும் அதற்கு அழைப்பு விடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

*குறிப்பு: மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபீன் ஜமாஅத் மூலம் திருமணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட அனைத்து விதிகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஜமாஅத் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.*

*அமலுக்கு வரும் தேதி: 21.03.2026*

Wednesday, March 25, 2026

பொருந்தா வாதம் அறிதல்


பொருந்தா வாதம் அறிதல்

விவாதம், தர்க்கம் என்றவுடன் ஓர் அமைப்பு மற்றோர் அமைப்புடன் ஒப்பந்தம் செய்து, நாள் குறித்து, மண்டபம் பிடித்து, பெல் அடிக்கும் நடுவர்களை நியமித்து, இருபிரிவாக அமர்ந்து பேசுதல் என்று புரிந்துவிட வேண்டாம். இங்கு அதைப் பற்றி பேசுவது நோக்கமுமல்ல. 

மாறாக நமது அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்களில் வைக்கப்படும் கருத்துக்களில் உண்மைகளை கண்டறிவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பொருந்தா வாதங்கள் பற்றிய அறிவை பெற்றிருப்பது அவசியமாகும். 

உணவு விரும்பிகளின் முன்னிலையில் எந்த உணவு உடலுக்கு ஏற்றது என்ற விவாதம் நடைபெற்றால் ஒரு சிறந்த சமையல்காரர், உணவியல் நிபுணரை வென்றுவிட முடியும். 

சாதரண பெரியவர்கள் முன்னிலையில் நாட்டைக் காப்பது எப்படி என்ற விவாதம் ஒரு இராணுவ அதிகாரிக்கும், பேச்சுத் திறனும், மனப்பாடத் திறனும் கொண்ட ஒரு அரசியல் வாதிக்கும் இடையே நடைபெற்றால் அந்த அரசியல் வாதி இராணுவ வீரரை வென்றுவிடுவார். திறமைமிக்க அந்த அரசியல் வாதியே மக்களை வென்றெடுப்பார்.

ஏனெனில் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின் ஆசைகளைத் தொடுவது அறிவை அடிப்படையாகக் கொண்ட வாதங்களை விட அதிக வலிமையானதாக பெரும்பான்மையினரிடம் கருதப்படுகிறது. 

“பீரங்கி வண்டிகள் எங்கள் உடல் மீது ஏறினாலும் பாபர் மசூதி இடத்தில் ஒரு செங்கல் கூட வைப்பதற்கு விடமாட்டோம்” என பாபர் மசூதி இடிப்பு கண்டண ஆர்ப்பாட்டங்களில் பல தலைவர்கள் பேசியதை நான் செவியுற்றுள்ளேன். அதைக் கேட்டதும் நானும் கூடியிருப்போருடன் சேர்ந்து “அல்லாஹு அக்பர்” என்று கூறியுள்ளேன்.. 

ஆனால் வீட்டிற்கு வந்து அந்த தலைவர்கள் பேசியதை மனக்கண் முன் கொண்டு வந்தால் அவை கூடியிருப்போரின் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் என்பதைத்  தவிர நடைமுறையில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்ற உண்மைதான் விளங்கும். 

உண்மைகள் ஒரு விசயத்தை முறையான ஆதாரங்களுடன் ஆழ்ந்து சிந்திப்பதில்தான் வெளிப்படும். 
இன்றைய உலகில் எங்கு நோக்கினும் முறையற்ற வாதங்கள்தான் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அறிவு ஜீவிகள் என்று தம்மை கருதிக் கொள்வோரும் அந்த முறையற்ற வாதங்களில் மூழ்கியிருப்பதுதான் உண்மைகள் உணரப்படாமல் போவதற்கும், தவறை உண்மை என பெரும்பான்மையினர் சரிகாண்பதற்கும் அடிப்படையாக விளங்குகிறது. 

“தமிழர்கள் அனைவரும் எனது நண்பர்கள், தமிழ்நாட்டில் எனக்கு யாரும் எதிரியல்ல” என ஒரு அரசியல் தலைவர் நல்லிணக்கம் கருதி பேசினார்.

 அதற்குப் பதிலளித்த மற்றொரு அரசியல் தலைவர் 
“அனைவரும் நண்பர்கள் என்றால் கரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நாற்பது பேர் மரணித்ததற்கு காரணம் நான்தான் என என்மீது ஏன் பழிபோட்டீர்கள்?” எனக் கேட்டார். 

அந்த தலைவரின் ரசிகர்கள் ஆஹோ, ஓஹோ என்றனர். இதில் உள்ள முறையற்ற வாதத்தைக் கூட அவர்கள் அறிய முற்படவில்லை. 

இன்றொரு செய்தி படித்தேன். ஒரு மாணவன் தேர்வுத் தாளில் வினாக்களுக்கு உரிய விடை எழுதாமல் ஆசிரியரின் காலில் தான் விழுந்து கெஞ்சுவதைப் போன்று படம் வரைந்து “ஆசிரியரே! என்னை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. நான் ஒரு ஏழை. எப்படியாவது என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்!” கோரிக்கை வைத்துள்ளார். 

இதைக் கண்டு அந்த மாணவன் மீது பலரும் தமது பரிதாபங்களை வெளிப்படுத்தி அவரை பாஸ் ஆக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

ஒரு ஆசிரியரின் கடமை கல்வி வழங்குவதுதான். ஏழை மாணவனுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது அல்ல. சரியான பதில் எழுதாமல் மதிப் பெண் தருமாறு கேட்பதும், அதற்கு கருணையை நாடுவதும் முறையற்ற வாதமாகும். 

சரியான வாதங்கள் போல் தோன்றும். ஆனால் சிந்தித்தால் அவை தவறான வாதங்கள் என்பது வெளிப்படும். இதுதான் பொருந்தா  வாதம் ஆகும். 

இதன் காரணமாகத்தான் அதிகமான மதரஸாக்களில் “மன்த்திக்” என்ற தலைப்பில் ஒரு தர்க்கவியல் பாடமே கற்பிக்கப்படுகிறது. ஆனால் அதைக் கற்போரில் 90 சதவிகிதம் பேருக்கு அது என்ன வென்றே தெரியாது. 

அதிகமான முஸ்லிம்கள் இணைவைப்புக் காரிங்களில் மூழ்கியிருப்பதற்கும் வழிகெட்ட  ஆலிம்களின் பொருந்தா வாதங்கள் பற்றிய அறியாமையே காரணமாக உள்ளது. 

 தவறான வாதங்களில் சிக்காமல் இருக்கவும், ஒரு கருத்தில் உள்ள தவறைக் கண்டறியவும், அறிவுப் பூர்வமாக உண்மையைக் கண்டறிவதற்கும் பொருந்தா வாதம் எனும் முறையற்ற வாதங்களைப் பற்றி அறிவது மிகவும் அவசியமானதாகும்.

Abdun Nasir M.I.Sc.,