பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, February 20, 2026

இமாம் அபூபக்ர் அல்-பஸ்ஸார்.


பொதுவாக முஸ்னத் வகை நூல்கள் என்றால் என்ன? அபூபக்கர் (ரலி) அறிவித்தவை, உமர் (ரலி) அறிவித்தவை என்று நபித்தோழர்களின் பெயர்களின் கீழ் ஹதீஸ்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் பெரும்பாலும் சரி, தவறு பற்றிய விமர்சனங்கள் இருக்காது. ஒரு தகவல் களஞ்சியம் போல இருக்கும். ஆனால், ஒரு இமாம் வந்தார். நான் ஹதீஸ்களை அடுக்கி மட்டும் வைக்கமாட்டேன். ஒவ்வொரு ஹதீஸையும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் போல வெட்டி ஆராய்ச்சி செய்வேன் என்றார்.

அவர்தான் இமாம் அபூபக்ர் அல்-பஸ்ஸார்.
1. யார் இந்த பஸ்ஸார்?

பெயர்: அஹ்மத் பின் அம்ர் பின் அப்துல் காலிக் அல்-பஸ்ஸார்.
ஊர்: ஈராக்கின் புகழ்பெற்ற 'பஸ்ரா' நகரத்தைச் சேர்ந்தவர்.
காலம்: ஹிஜ்ரி 3-ம் நூற்றாண்டு (இறப்பு: ஹிஜ்ரி 292). இவர் இமாம் நஸாயீ, இமாம் அபூயஃலா ஆகியோரின் சமகாலத்தவர்.
பயணப் பிரியர்: ஹதீஸ் கலைக்காகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்தவர். ஈராக், ஈரான் (இஸ்ஃபஹான்), சிரியா, எகிப்து, ஹிஜாஸ் (மக்கா-மதீனா) என உலகைச் சுற்றிவிட்டு, இறுதியில் பாலஸ்தீனத்தில் வந்து தங்கினார்.

இவருடைய நூல் முஸ்னத் அல்-பஸ்ஸார் என்று அழைக்கப்பட்டாலும், அறிஞர்கள் இதற்கு வைத்த செல்லப்பெயர் "அல்-பஹ்ருஸ்-ஸக்கார்" (நிரம்பி வழியும் கடல்). ஏன் இந்தப் பெயர்? இது ஒரு சாதாரண முஸ்னத் நூலல்ல. ஒரு ஹதீஸைக் கொண்டு வருவார். கொண்டு வந்துவிட்டு சும்மா இருக்க மாட்டார். இந்த ஹதீஸ் இந்த நபித்தோழர் வழியாக இந்த ஒரு பாதையில் மட்டும்தான் வந்துள்ளது" என்று அதன் தனித்துவத்தைச் சொல்வார். அல்லது, இந்த அறிவிப்பாளர் தொடரில் இவர் இருக்கிறார். அவரைப் பற்றி அறிஞர்களின் கருத்து இது..." என்று விமர்சிப்பார். சில நேரங்களில் அந்த ஹதீஸில் உள்ள மறைமுகமான குறைகளை சுட்டிக்காட்டுவார். சுருக்கமாகச் சொன்னால், இது ஹதீஸ் தொகுப்பு நூல் மட்டுமல்ல; ஒரு ஹதீஸ் ஆய்வுக் கூடம் என்றும் சொல்லலாம். 

இமாம் பஸ்ஸாரின் சிறப்பு இதுதான். அவர் ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "லா நஃலமுஹு இல்லா மின் ஹாதல் வஜ்ஹ்" (இந்தப் பாதையைத் தவிர வேறு வழியில் இந்த ஹதீஸ் வந்ததாக நமக்குத் தெரியவில்லை). இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் எவ்வளவு அரியது (ஃஙரீப்) என்பதை உலகுக்கு உணர்த்தினார். ஹதீஸ் கலையில் "இலல்" (நுண்ணிய குறைகள்) பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவரது நூல் ஒரு தங்கச் சுரங்கம். இமாம் பஸ்ஸார் ஒரு மிகப்பெரிய ஹதீஸ் حافظ (நினைவாற்றல் மிக்கவர்). நேர்மையானவர்.
இருப்பினும், அவர் மீது ஒரு சிறிய விமர்சனமும் உண்டு. அவர் தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் நிறையப் பயணம் செய்தார். பயணங்களின்போது கையில் புத்தகங்கள் இல்லாமல், தனது நினைவாற்றலை மட்டுமே நம்பி ஹதீஸ்களை அறிவித்தார். இதனால், முதுமை மற்றும் பயணக் களைப்பு காரணமாக, சில ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் அவருக்குச் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டன.

இமாம் தாரகுத்னீ கூறுகிறார்: பஸ்ஸார் நேர்மையானவர், நம்பகமானவர். ஆனால் பயணங்களில் புத்தகங்கள் இல்லாததால் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டன. இருப்பினும், அவர் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை என்பதால், அறிஞர்கள் அவரை ஒரு முக்கிய ஆதாரமாகவே கருதுகிறார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும் ஹதீஸ் தேடி அலைந்த அந்த ஞானி, இறுதியாக பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் வந்து தங்கினார். அங்கேயே ஹிஜ்ரி 292-ம் ஆண்டு மரணமடைந்தார்.

இமாம் அஹ்மத், இமாம் அபூயஃலா போன்றோர் ஹதீஸ்களைப் பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்குகளை கட்டினார்கள். ஆனால் இமாம் பஸ்ஸார், அந்தச் சேமிப்புக் கிடங்கில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தரச்சான்றிதழ் வழங்கும் அதிகாரியாகச் செயல்பட்டார். 

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamBazzar #MusnadBazzar #Basra #HadithCritic #Ilal #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

Wednesday, February 18, 2026

இமாம் தாரகுத்னீ


ஒரு வைர வியாபாரிக்குத்தான் தெரியும் வைரத்தில் எங்கே கீறல் விழுந்திருக்கிறது என்று. பாமர மக்களுக்கு அது ஜொலிக்கும் கல்லாகத் தெரியும். ஆனால் நிபுணர்களுக்குத்தான் தெரியும் அது போலியா அல்லது உண்மையானதா என்று. ஹதீஸ் உலகில் அப்படிப்பட்ட ஒரு "வைர வியாபாரி" தான் இமாம் தாரகுத்னீ. மற்ற இமாம்கள் "இது ஸஹீஹான ஹதீஸ்" என்று சேகரித்தார்கள்.
ஆனால் இமாம் தாரகுத்னீ, "இந்த ஹதீஸ் பார்ப்பதற்கு ஸஹீஹ் போலத் தெரியும். ஆனால் இதன் மூன்றாவது அறிவிப்பாளருக்கு நினைவாற்றல் குறைவு. எனவே இது பலவீனம்" என்று ஹதீஸை 'எக்ஸ்-ரே' (X-Ray) எடுத்துப் பார்ப்பார்.

இவரைத் தாண்டி எந்த ஹதீஸும் தப்பிக்க முடியாது! யார் இந்த தாரகுத்னீ?

பெயர்: அபுல் ஹஸன் அலீ பின் உமர்.
ஊர்: ஈராக்கின் பக்தாத் நகரில் உள்ள 'தார் அல்-குத்ன்'  என்ற பகுதிக் குடியிருப்பு. (அதனால் தான் தாரகுத்னீ என்று அழைக்கப்படுகிறார்).
காலம்: ஹிஜ்ரி 306 - 385.
சிறப்பு: இவர் ஒரு நடமாடும் நூலகம். சிறுவயதிலேயே ஈராக், ஷாம் (சிரியா), எகிப்து எனப் பயணம் செய்து ஹதீஸ்களை அள்ளி வந்தார்.

இவரின் நினைவாற்றலைக் கண்டு உலகமே மிரண்டது. எகிப்தில் ஒருமுறை ஒரு ஷேக் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். தாரகுத்னீ அதை எழுதிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒருவர், "ஏன் எழுதவில்லை?" என்று கேட்டார். அதற்கு தாரகுத்னீ, "நீங்கள் எழுதியதை விட என் நெஞ்சில் பதிந்தது அதிகம்" என்று சொல்லி, அந்த ஷேக் நடத்திய அத்தனை ஹதீஸ்களையும் வரி பிசகாமல் ஒப்பித்தார்!

இமாம் தாரகுத்னீ எழுதிய நூற்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது இதுதான். ஏன் இது ஸ்பெஷல்?
பொதுவாக 'சுனன்' நூற்களில் (அபூதாவூத், நஸாயீ போன்றவை) சட்டத்திற்குத் தேவையான ஹதீஸ்கள் இருக்கும். ஆனால் தாரகுத்னீயின் பாணி வேறு.
மக்கள் மத்தியில் ஆதாரமாகச் சொல்லப்படும் ஹதீஸ்களை எடுத்து வருவார். பிறகு, "இந்த ஹதீஸ் பலவீனமானது. இதைக் கொண்டு சட்டம் வகுக்கக் கூடாது" என்று அதன் குறைகளைத் தோலுரித்துக் காட்டுவார். இதன் நோக்கம். பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு ஃபத்வா கொடுப்பவர்களை எச்சரிப்பது. ஒவ்வொரு ஹதீஸின் கீழும், அந்த அறிவிப்பாளர் தொடரில் உள்ள சிக்கல்களை ஒரு வக்கீல் போல அலசுவார். இன்று ஹதீஸ் ஆய்வாளர்கள் ஒரு ஹதீஸை ஆய்வு செய்ய வேண்டுமென்றால், முதலில் புரட்டும் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

ஹதீஸ் கலையிலேயே மிகவும் கடினமான துறை 'இலல்' (நுண்ணிய குறைகள்). தாரகுத்னீ எழுதிய "அல்-இலல் அல்-வாரிதா" என்ற நூல், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனை. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நூல் முழுவதையும் அவர் மனப்பாடமாகவே டிக்டேட் செய்தார்! மாணவர்கள் கேட்பார்கள் இமாமே! இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறீர்கள்? தாரகுத்னீ புத்தகத்தைப் பார்க்காமலே சொல்வார். "இந்த ஹதீஸை இன்னார் அறிவித்தார். ஆனால் அதில் இன்னார் தவறு செய்தார். சரியான அறிவிப்பு இதுதான்... இப்படி ஆயிரக்கணக்கான ஹதீஸ்களின் நுணுக்கங்களை நினைலிலிருந்தே கொட்டிய அந்த அறிவைக் கண்டு இமாம் தஹபி போன்றவர்களே சிலிர்த்துப் போனார்கள்.

இமாம் புகாரியும், முஸ்லிமும் ஹதீஸ் உலகின் இரு கண்கள். ஆனால், அவர்கள் மனிதர்கள் தானே? அவர்களும் தவறு செய்திருக்கலாம் அல்லவா? என்ற துணிச்சலான கேள்வியை முன்வைத்தவர் தாரகுத்னீ. அவர் "அல்-இஸ்தித்ராக் வத்-ததப்பஃ என்றொரு நூல் எழுதினார். அதில், புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் உள்ள சுமார் 200 ஹதீஸ்களை எடுத்து, "இவற்றில் இந்த இந்தக் குறைகள் உள்ளன" என்று விமர்சித்தார். (பிற்கால அறிஞர்கள் இவரின் விமர்சனங்களில் பலவற்றுக்குப் பதில் அளித்துவிட்டாலும், இவரின் அந்தத் துணிச்சல் ஹதீஸ் கலைக்குக் கிடைத்த ஆரோக்கியமான வளர்ச்சி).

சென்ற பதிவில் பார்த்த இமாம் ஹாகிம் (முஸ்தத்ரக் எழுதியவர்), இவரின் மாணவர்.
ஹாகிம் கூறுகிறார் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாரகுத்னீயைப் போன்று இன்னொருவரை என் கண்கள் பார்த்ததே இல்லை. அவருக்குப் பிறகு அவருக்கு நிகரானவர் யாருமில்லை.

ஹிஜ்ரி 385-ம் ஆண்டு, பக்தாத் நகரில் அந்த அறிவுச் சூரியன் மறைந்தது. இமாம் தாரகுத்னீ மட்டும் இல்லையென்றால், பலவீனமான செய்திகள் எல்லாம் "வஹீ" (இறைச்செய்தி) என்ற பெயரில் மார்க்கத்திற்குள் நுழைந்திருக்கும். அவர் ஒரு பாதுகாவலர் என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

நாம் இன்று நிம்மதியாக "இது ஸஹீஹ், இது ளயீஃப்" என்று பேசுகிறோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால், இமாம் தாரகுத்னீ போன்றவர்கள் தங்கள் வாழ்நாளையே கரைத்து உருவாக்கிய உழைப்பு இருக்கிறது. கட்டிடம் அழகாக இருக்கிறது என்று ரசிக்கிறோம்; ஆனால் அதன் அஸ்திவாரத்தில் உள்ள விரிசல்களைக் கண்டுபிடித்துச் சொன்ன இன்ஜினியர் இவர்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDaraqutni #SunanDaraqutni #HadithCritic #Ilal #Baghdad #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups