ஒரு மாபெரும் அறிவுப் பயணம் இனிதே நிறைவுற்றது! அல்ஹம்துலில்லாஹ்! ஹதீஸ் கலைச் சிற்பிகள் - நிறைவுப் பகுதி
இரண்டு மாதங்கள்... 60 ஆளுமைகள்... எண்ணற்ற தூக்கமில்லா இரவுகள்... ஆயிரக்கணக்கான தேடல்கள்... இன்று, 'ஹதீஸ் கலைச் சிற்பிகள்' என்ற இந்த நீண்ட, நெடிய வரலாற்றுப் பயணம் அதன் இலக்கை அடைந்து, நிறைவுப் பகுதியில் வந்து நிற்கிறது. என் நாவில் முதலில் வரும் வார்த்தை, 'அல்ஹம்துலில்லாஹ்'! எல்லாப் புகழும் அந்த அல்லாஹ்வுக்கே!
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தத் தொடரை நான் ஆரம்பிக்கும்போது, இதற்கு இவ்வளவு அதீத வரவேற்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஹதீஸ் கலை என்பது சற்று கடினமான, நுணுக்கமான துறை. அதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஆனால், முதல் பதிவிலிருந்தே நீங்கள் கொடுத்த ஆதரவு என்னை பிரமிக்க வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பல மதிப்பிற்குரிய ஆலிம் பெருந்தகைகள் இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்து, பாராட்டியது மட்டுமல்லாமல், பல மேலதிகக் குறிப்புகளையும், நுணுக்கமான தகவல்களையும் தந்து உதவினார்கள். சில இடங்களில் இது பிழை என்று அவர்கள் சுட்டிக்காட்டியபோது, அதைத் திருத்திக்கொள்ள நான் ஒருபோதும் தயங்கியதில்லை.
ஆச்சரியம் என்னவென்றால், அப்படிச் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் பெரும்பாலும் 'எழுத்துப் பிழைகளே' தவிர, 'கருத்துப் பிழைகள்' அல்ல என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. அவர்களின் அந்த அன்பான வழிகாட்டுதலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தத் தொடரை எழுத எனக்குத் தூண்டுதலாக இருந்த ஒரு சுவாரஸ்யமான கதையை இன்று உங்களுடன் பகிர்கிறேன். 2023-ல், ஹதீஸ் கலையின் மாமேதை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) பற்றி மிக விரிவாக இந்த முகநூலில் எழுதியிருந்தேன். அதே பதிவை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பகிர்ந்தபோது, என் அன்பு நண்பர்கள் சிலர், "இவரைப் போலவே மற்ற ஹதீஸ் அறிஞர்களின் வரலாற்றையும் தொடராக எழுதுங்களேன்" என்று கேட்டுக்கொண்டனர். அந்த ஒரு சிறு பொறிதான், இன்று 60 அறிஞர்களின் வரலாறாகப் பூத்துக் குலுங்குகிறது!
"60 பேரைப் பற்றி எழுதியது, சந்தோஷம்" என்று சொல்வது எளிது. ஆனால், இதற்கான ஆதாரங்களைத் திரட்ட நான் பட்ட கஷ்டங்கள்... அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது! சில அறிஞர்களைப் பற்றிய தகவல்கள் அரபு மூல நூல்களில் மட்டுமே இருக்கும். அவற்றைத் தேடி, படித்து, மொழிபெயர்த்து, சரிபார்த்து, மீண்டும் என் பாணியில் மாற்றுவதற்குள்... சில நேரங்களில், ஒரு சிறு தகவலுக்காக மணிக்கணக்கில் மொபைலில் தேட வேண்டியிருக்கும். அந்த உழைப்பு, அந்தத் தேடல்... அது ஒரு தனி அனுபவம். இன்று தொடர் முடிந்துவிட்டாலும், அந்தத் தேடலின் நினைவுகள் என் மனதில் பசுமையாக இருக்கும்.
"இதில் ஹதீஸ் கலை ஜாம்பவான்கள் அனைவரையும் எழுதிவிட்டீர்களா?" என்று கேட்டால், "இல்லை" என்பதுதான் என் கறாரான பதில். இன்னும் எத்தனையோ மாமேதைகள் இருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமான, தவிர்க்க முடியாத ஜாம்பவான்கள் எவரையும் நான் விட்டுவிடவில்லை. இந்தத் தொடரில் ஒரு ஒழுங்குமுறை (Chronological Order) இருக்கவில்லை என்பதை நீங்களே கவனித்திருக்கலாம். ஒருநாள் மத்திய கால அறிஞரின் வரலாறு வரும், திடீரென்று அடுத்த நாள் ஆரம்ப கால அறிஞரின் வரலாறு வரும், பிறகு மீண்டும் மத்திய காலம், பிறகு ஒரேயடியாகப் பெரிய ஜம்ப் செய்து நவீன கால அறிஞரின் வரலாறு வரும்! ஒரு ஒழுங்கும் இல்லாமல், அன்றைய தினத்திற்கு யாரைப் பற்றி எழுதலாம் என்று யோசனை வரும்போது எழுதினேன், அவ்வளவுதான்!
உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம்... "இமாம் ஷாபி, இமாம் முஜாஹித் போன்ற மாபெரும் இமாம்கள் இந்தத் தொடரில் வரவில்லையே, ஏன்?" என்று.
இன்ஷா அல்லாஹ், என் அடுத்த தொடர் 'முபஸ்ஸிரீன்கள்' (குர்ஆன் விரிவுரையாளர்கள்) மற்றும் 'புகாஹாக்கள்' (சட்டமேதைகள்) பற்றித்தான் இருக்கப் போகிறது. ஆகையால், இந்த ஹதீஸ் அறிஞர்கள் தொடரில் வராதவர்கள் அந்தத் தொடரில் வருவார்கள். கூடவே, இந்தத் தொடரில் வந்த பல இமாம்களும் (உதாரணமாக, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்) அந்தத் தொடரிலும் வருவார்கள், இன்ஷா அல்லாஹ்!
இந்த புனித நோன்பு மாதத்தை பயன்மிக்கதாக ஆக்க வேண்டும், நம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து, அவர்களைப் போல நாமும் இந்த மார்க்கத்திற்குச் சேவையாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத்தான் இந்தத் தொடர் எழுதப்பட்டது. அதற்குரிய கூலியை வழங்க அல்லாஹ் போதுமானவன்.
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடினால், இந்த 60 பதிவுகளையும் ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட நிய்யத் வைத்திருக்கிறேன். அது நிறைவேற அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக, உங்களின் துஆக்களை வேண்டியவனாக, இந்தத் தொடரை இனிதே நிறைவு செய்கிறேன்.
ஹதீஸ் கலை அறிஞர்கள் வரலாறு தொடர் நிறைவுற்றது.
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #HadithScholars #Conclusion #SeriesComplete #Alhamdulillah #IslamicHistory #Legacy #AbdullahIbnuNaseerWriteups