பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, February 21, 2026

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).


ஒரு மனிதரை எவ்வளவு ஆழமாக நேசிக்க முடியும்? அவர் உடுத்திய ஆடை போல உடுத்தலாம், அவர் பேசியதைப் போலப் பேசலாம். ஆனால், அவர் நடந்து சென்ற பாதையில், அவர் எந்த இடத்தில் தன் வாகனத்தைத் திருப்பினாரோ, அதே இடத்தில் தன் வாகனத்தையும் திருப்பி, அவர் எந்த மரத்தடியில் இளைப்பாறினாரோ, அதே மரத்தடியில் தானும் இளைப்பாறும் அளவுக்கு ஒருவரால் காதலிக்க முடியுமா?

வரலாற்றில் அப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார்! அவர் தான் இஸ்லாமிய உம்மத்தின் ஈடு இணையற்ற அறிஞர், அண்ணலாரின் அச்சுப் பிசகாத பிரதிபலிப்பு... அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
கம்பீரத்தின் மறுஉருவமான உமர் (ரலி) அவர்களின் அருமைப் புதல்வர் இவர். ஆனால், தந்தையின் நிழலில் ஒண்டிக் கொள்ளாமல், தன் அறிவாலும், சுன்னாவின் மீதான வெறித்தனமான காதலாலும் வரலாற்றில் தனக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினாலே, சுன்னாவைப் பின்பற்றுவதில் அவருக்கு இருந்த அசாத்திய உறுதிதான் முதலில் நினைவுக்கு வரும். ஒருமுறை அவர் பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். திடீரென ஒரு இடத்தில் தன் ஒட்டகத்தை வட்டமடிக்கச் செய்தார். எந்தக் காரணமும் இல்லாமல் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பல வருடங்களுக்கு முன் இதே இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகம் இப்படி வட்டமடித்ததை நான் பார்த்தேன். அது ஏன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நபிகளார் செய்ததை நானும் செய்கிறேன் என்றார். பயணத்தின் நடுவே ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்தால், அதன் கீழே சென்று சிறிது நேரம் தூங்குவார். ஏன் இங்கே படுக்கிறீர்கள்? என்றால், ஒருமுறை நபிகளார் இங்கே தூங்கினார்கள் என்பார். அந்த மரம் பட்டுப்போகாமல் இருக்க, தன் கையாலேயே அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். நபிகளார் மக்காவில் எந்த இடத்தில் தொழுதார்களோ, அதே இடத்தில் ஒரு சென்டிமீட்டர் கூட மாறாமல் தன் பாதங்களை வைத்துத் தொழுவார்.

இன்று நாம் அறிவியலையும் லாஜிக்குகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்னு உமரின் லாஜிக் ஒன்றே ஒன்றுதான் என் உயிரினும் மேலானவர் இதைச் செய்தார், அதனால் நான் செய்கிறேன்!

சுன்னாவின் மீது காதல் இருந்தால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஞானமும் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பிறகு அதிக ஹதீஸ்களை (2,630) அறிவித்த இரண்டாவது மாபெரும் அறிஞர். இவ்வளவு பெரிய மேதையாக இருந்தும், ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுப்பதில் அவர் காட்டிய எச்சரிக்கை சிலிர்க்க வைக்கும். ஒருமுறை அவரிடம் ஒருவர் வந்து ஒரு மார்க்கக் கேள்வியைக் கேட்டார். இப்னு உமர் (ரலி) சாதாரணமாக, எனக்குத் தெரியாது (அல்லாஹு அஃலம்) என்று சொல்லிவிட்டார். வந்தவர் ஆச்சரியத்துடன், நீங்கள் உமரின் மகன்! மிகப் பெரிய அறிஞர்! உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர், ஆம், எனக்குத் தெரியாது என்று சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. என் முதுகை நரகத்திற்கான பாலமாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை! என்றார்.

அரை மணி நேர யூடியூப் வீடியோவைப் பார்த்துவிட்டு, இணையத்தில் முஃப்திகளாக மாறி ஃபத்வா கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு இதைவிடப் பெரிய செருப்படி இருக்க முடியாது!

உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹீதான மரணத்திற்குப் பிறகு, இஸ்லாமிய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிளந்தது. அலி (ரலி) ஒரு பக்கமும், முஆவியா (ரலி) மறுபக்கமும் நின்றார்கள் (சிஃப்பீன், ஜமல் போர்கள்).  பலர் அவரிடம் வந்து, நீங்கள் உமரின் வாரிசு, உங்களிடம் எல்லாத் தகுதியும் இருக்கிறது. நீங்களே அடுத்த கலீஃபாவாக (ஜனாதிபதியாக) வந்துவிடுங்கள்" என்று கெஞ்சினார்கள். ஆனால் அவர் அத்தனை அதிகாரங்களையும் தூக்கி எறிந்தார். என் காரணத்தால் ஒரு முஸ்லிமின் மூக்கில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதை விட, இந்த ஒட்டுமொத்த உலகமும் அழிந்து போவது எனக்கு மேல்!" என்று கூறி, எந்தப் பக்கமும் சாராமல், அதிகாரத்தை விடத் தன் மார்க்கமே பெரிது என்று நடுநிலை வகித்தார். தான் கொல்லப்படும் வரை (ஆம் இப்னு உமர் இயற்கை மரணமடையவில்லை. ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப்பின் கட்டளையின் பேரில் விஷம் தோய்ந்த ஈட்டி அவரின் கால்களில் குத்தப்பட்டது. இதனால் நோய்வாய்ப்பட்டே இப்னு உமர் இறந்தார்.) 
இந்த கொள்கையில் உறுதியாகவே இருந்தார். 

எண்பத்து நான்கு (84) ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்தார். அவர் பார்த்த சாம்ராஜ்யங்கள் பல. அவர் காலடியில் கொட்டப்பட்ட செல்வங்கள் பல. ஆனால், அவர் இறந்தபோது ஒரு சாதாரண மனிதராக, நபிகளார் எப்படி வாழ்ந்து காட்டினாரோ, அதே எளிமையோடு விடைபெற்றார். இன்றைய காலத்தில் சுன்னா என்றால் வெறும் தாடி வைப்பதும், ஆடையைக் கரண்டைக்கு மேல் உடுத்துவதும் மட்டும்தான் என்று நாம் சுருக்கிவிட்டோம். ஆனால், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப் படித்தால் புரியும்... சுன்னா என்பது வெறும் தோற்றத்தில் மட்டும் இருப்பதில்லை. அது ரத்தத்தில் கலக்க வேண்டிய ஒரு வாழ்க்கை முறை! அந்த நடமாடும் சுன்னாவோடு, நம்மையும் இறைவன் சுவர்க்கத்தில் ஒன்றிணைப்பானாக! ஆமீன்.

- ✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbdullahIbnUmar #Sunnah #Sacrifice #AbdullahIbnuNaseerWriteups

இமாம் தஹபி


தஹப் என்றால் அரபு மொழியில் தங்கம் என்று பொருள். இமாம் தஹபியின் தந்தை ஒரு பொற்கொல்லர். அவர் தங்கத்தை உரசிப் பார்த்து தரம் பிரிப்பார். ஆனால், அவரது மகனோ ஹதீஸ் அறிவிப்பாளர்களை உரசிப் பார்த்து, "இவர் தங்கம் போன்றவர், இவர் தகரம் போன்றவர்" என்று தரம் பிரித்தார்! அவரின் சிறப்பே பெயரிலும் தங்கம்; அவரின் எழுத்துக்களும் தங்கம்!

1. பிறப்பும் கல்வியும் (டமாஸ்கஸின் மாணிக்கம்)
பெயர்: முஹம்மது பின் அஹ்மத் பின் உஸ்மான்.
சிறப்புப் பெயர்: ஷம்ஸுத்தீன் (மார்க்கத்தின் சூரியன்), அத்-தஹபீ
பிறப்பு: ஹிஜ்ரி 673-ம் ஆண்டு, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பிறந்தார்.
கல்வி: தனது 18-வது வயதிலேயே ஹதீஸ் கலையில் ஆழமாகக் காலடி வைத்தார். சிரியா, எகிப்து, ஹிஜாஸ் எனப் பயணம் செய்து சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் கல்வி பயின்றார்.

இமாம் தஹபி வாழ்ந்த காலம் இஸ்லாமிய அறிவுலகின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. அப்போது டமாஸ்கஸில் மூன்று மாபெரும் தூண்கள் இருந்தார்கள்.

இமாம் இப்னு தைமியா (மாபெரும் சிந்தனையாளர், மார்க்க அறிஞர்).
இமாம் அல்-மிஸ்ஸி (ஹதீஸ் கலை மாமேதை).
இமாம் தஹபி (ஹதீஸ் மற்றும் வரலாற்றுத் துறை நாயகன்).

இந்த மூவரும் சமகாலத்தவர்கள், நெருங்கிய நண்பர்கள். இப்னு தைமியாவின் சிந்தனைத் தாக்கமும், அல்-மிஸ்ஸியின் ஹதீஸ் ஆய்வுத் தாக்கமும் தஹபியிடம் பெருமளவு காணப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இமாம் தஹபி ஒரு நடமாடும் நூலகம் என்று கூறலாம். அவர் எழுதிய நூற்களின் பட்டியலைப் பார்த்தாலே தலைசுற்றும். ஹதீஸ் மற்றும் வரலாற்றுத் துறையில் அவர் படைத்த முக்கிய நூற்கள்:

தாரீக் அல்-இஸ்லாம் (இஸ்லாமிய வரலாறு):
இது இவரின் பிரம்மாண்டமான படைப்பு. இஸ்லாமிய வரலாற்றை நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல், தன் காலம் (ஹிஜ்ரி 700-கள்) வரை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். சுமார் 50-க்கும் மேற்பட்ட பாகங்களைக் கொண்ட மாபெரும் கலைக்களஞ்சியம் இது.

சியர் அஃலாமின் நுபுலா: அறிஞர்கள், ஆட்சியாளர்கள், இமாம்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அற்புத நூல். மொத்தம் 20-க்கும் மேற்பட்ட பாகங்கள். இன்று நாம் இமாம்களைப் பற்றிப் பேசும் பெரும்பாலான தகவல்கள் இந்த நூலிலிருந்து பெறப்பட்டவைதான். ஒருவரைப் பற்றி விவரிக்கும்போது அவரது நிறைகுறைகளை மிக அழகாக அலசுவார்.

மீஸானுல் இஃதிதால் (நீதத்தின் தராசு): ஹதீஸ் கலையில் இது ஒரு அணு ஆயுதம்! ஹதீஸ்களை அறிவித்த பலவீனமான" அறிவிப்பாளர்களைப் பற்றி மட்டும் அலசும் நூல் இது. சுமார் 9,000-க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்களை இதில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இல்லாமல் ஹதீஸ் விமர்சனக் கலையை எவரும் முழுமையாகப் படிக்க முடியாது.

தத்கிரத் அல்-ஹுஃப்பாத்: ஹதீஸ்களை மனனம் செய்த மாபெரும் இமாம்களின் (ஹாபிழ்கள்) வாழ்க்கை வரலாற்றை மட்டும் குறிக்கும் தனித்துவமான நூல்.

அல்-கபாயிர் (பெரும் பாவங்கள்): இது பாமர மக்களுக்காக அவர் எழுதிய நூல். இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பெரும் பாவங்கள் என்னென்ன என்பதை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் மிக எளிமையாக விளக்கியுள்ளார். இன்றும் உலகெங்கும் அதிகம் வாசிக்கப்படும் நூல் இது.

4. முஸ்தத்ரக்கின் அறுவை சிகிச்சை (தல்ஹீஸுல் முஸ்தத்ரக்) சென்ற பதிவுகளில் ஒன்றில் இமாம் ஹாகிம் எழுதிய 'முஸ்தத்ரக்' நூலைப் பற்றிப் பார்த்தோம். அதில் அவர் பலவீனமான ஹதீஸ்களை எல்லாம் 'ஸஹீஹ்' என்று தவறாகக் கூறியிருந்தார்.
அந்த நூலை முழுமையாக 'எக்ஸ்-ரே' எடுத்து, "இது ஸஹீஹ் அல்ல, இது இட்டுக்கட்டப்பட்டது (மவ்ளூ)" என்று இமாம் ஹாகிமின் தவறுகளைத் திருத்தி எழுதியவர்தான் இமாம் தஹபி. தஹபியின் இந்தச் சுருக்கம் இல்லையென்றால், இன்று முஸ்தத்ரக் நூல் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இமாம் தஹபியின் ஆகச்சிறந்த பண்பு அவரது நேர்மை. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்தவர்களைப் புகழ்வார்கள், பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவார்கள். ஆனால் தஹபி ஒரு உண்மையான தராசு போன்றவர். தனக்குக் கொள்கை ரீதியாக முரண்பட்ட அறிஞர்களைப் பற்றி எழுதும்போது கூட, அவர்களின் கல்வி ஞானத்தைப் பாராட்டுவார். அதேசமயம், தனது சொந்த ஆசிரியராகவே (உ-ம்: இப்னு தைமியா) இருந்தாலும், அவரிடம் உள்ள சில கடுமைகளை விமர்சிக்கவும் அவர் தயங்கியதில்லை. சத்தியம் மட்டுமே அவருக்கு முக்கியமாக இருந்தது.

தனது வாழ்நாள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து, எழுதிய அந்த மாமேதையின் கண்கள், அவரின் இறுதிக்காலத்தில் (ஹிஜ்ரி 741-ல்) பார்வையை இழந்தன. அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகள் பார்வையற்ற நிலையிலேயே மாணவர்களுக்குப் பாடம் போதித்தார்.
இறுதியாக, ஹிஜ்ரி 748-ம் ஆண்டு டமாஸ்கஸ் மண்ணில் அந்தப் பொன்மகன் மரணமடைந்தார்.

ஹதீஸ் கலை என்பது வெறும் செய்திகளைச் சுமப்பதல்ல. அச்செய்திகளைச் சுமந்த மனிதர்களின் நாடித் துடிப்பை அறிவது. அந்த மனிதர்களின் நாடித் துடிப்பை மிகத் துல்லியமாக அளந்து சொன்ன 'ஸ்கேனிங் மெஷின்' தான் இமாம் தஹபி! அவர் விட்டுச்சென்ற அந்த 'தராசு' இன்றும் நீதத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDhahabi #SiyarAalamAlNubala #MizanAlItidal #HadithCritic #Damascus #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups