பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, April 21, 2026

அப்துல்லாஹ் பின் அப்பாஸ்


💞 அல்குர்ஆன் விரிவுரையாளர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் மற்றும் உம்முல் ஃபள்ல் லுபாபா என்பவர்களுக்கு மகனாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்காவில் பிறந்தார்கள். இவர் நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். மேலும், உம்மு ஃபஸல் பின்த் லுபாபா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய மனைவியான மைமூனா (ரழி) அவர்களின் சகோதரியாவார்.

• அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் மனைவியின் பெயர் ஜுஹ்ரா பின்த் அலி. இவருக்கு அலி, அப்பாஸ், முஹம்மது, ஃபள்ல், அப்துல்லாஹ் எனும் மகன்களும், அஸ்மா எனும் மகளும் இருந்தனர்.

• ஆரம்ப காலத்தில் மக்கா காஃபிர்கள், மக்காவில் இருந்த முஸ்லீம்களை அனைவரும் ஒரு பள்ளதாக்கில் ஒதுக்கி வைத்தார்கள். அவர்களுக்கு உணவு, பொருளாதாரம், வியாபாரம் எதுவும் செய்ய கூடாது என்று கட்டளையிட்டார்கள். அந்த சமயத்தில் தான் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் பிறந்தார்கள். 

• இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தான் பெயர் வைத்தார்கள் மேலும் தன்னுடைய உமிழ் நீரிலிருந்து ஒரு சிறிதை எடுத்து கை குழந்தையாக இருந்த அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் நாவில் தடவினார்கள். இவரை தவிர வேறு யாருக்கும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்தது கிடையாது என்று இமாம் முஜாஹித் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

• ஹிஜ்ரத்திற்கு பின்பு, அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) மற்றும் உம்முல் ஃபள்ல் லுபாபா (ரழி) ஆகியோர் குடும்பத்துடன் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அப்துல்லாஹ் (ரழி) எப்போதும் நபி (ஸல்) அவர்களுடன் அதிகம் நேரம் செலவழிப்பார்கள். மேலும் சிற்றன்னை மைமுனா (ரழி) அவர்கள் வீட்டில் அதிகம் தங்கி இருந்து இஸ்லாம் பற்றி கற்றுக்கொள்வார்கள்.

• நபி (ஸல்) அவர்கள் இரவுப் பொழுதுகளில் செய்கின்ற திக்ரு, அத்கார், துஆக்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றை செவிமடுப்பார்கள். இமாமிற்குப் பின்னால் நின்று எப்படி தொழ வேண்டும்? எங்கு நிற்க வேண்டும்? போன்ற சிறுசிறு விஷயங்களை எல்லாம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நேரடியாக கற்றார்கள்.

• நபி (ஸல்) அவர்களுடன் இரவு நேரத்தை கழிப்பார்கள் இதனால் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள், என்ன திக்ர்கள் ஓதுவார்கள், என்று நன்கு கவனித்து அதை அறிந்து வைத்திருந்தார்கள்.

• நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்வார்கள். இவ்வாறு ஒரு முறை இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் சுய தேவை பூர்த்தி செய்து விட்டு வரும் பொழுது அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தண்ணீர் எடுத்து வைத்திருந்தார்கள். இதனை கண்ட நபி (ஸல்) அவர்கள், அவருக்கு கீழ் கண்டவாறு துஆ செய்தார்கள்.
 
இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்! மற்றொரு இடத்தில் இவருக்கு அல்குர்ஆன் ஞானத்தை வழங்குவாயாக என்று பிராத்தனை செய்தார்கள்.

(நூல் : ஸஹீஹ் புகாரி : 75, 143)

• நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாகவே இவர்கள் பிற்காலத்தில் சிறந்த அறிஞர் ஆகவும், அல்குர்ஆன் விரிவுரையாளராகவும் விளங்கினார்கள்!

• ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை சந்திக்க, அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். இதனால் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள். பின்னர் வந்து நபி (ஸல்) அவர்களை சந்தித்து வந்த போன செய்தி சொல்ல, நீங்கள் என்னுடன் பேசிககொண்டிருந்த ஸஹாபியை கண்ணால் கண்டிர்களா என்று கேட்க அவர் ஆம் என்றார்.

• அப்போது தான் நபி (ஸல்) அவர்கள், வந்த நபர் ஜிப்ரயில் (அலை) ஆவார். மேலும் அல்லாஹ் உங்களுக்கு மார்க்க கல்வி ஞானத்தை வழங்குவான் என்ற நற்செய்தியை கூறினார்கள்.

(நூல் : அல் முஸ்தத்ரக் ஹாகிம்)

• இதற்கு ஏற்றால் போல், அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் நபிமொழிகளை யார் யார் எல்லாம் அறிந்து வைத்துள்ளார்கள் என்று விசாரித்து அவர்களிடம் சென்று அதை கற்றுக்கொள்வார்கள்! சில சமயங்களில் ஒரே ஒரு விஷயம் குறித்து முப்பதிற்கும் மேற்பட்ட ஸஹாபாக்களிடம் விசாரித்து அறிவைப் பெறுவார்கள். இதன் காரணமாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுடைய அறிவுக்கூர்மை மிக நுட்பகமாக இருந்தது.

• இதன் விளைவாக முஃபஸ்ஸிருல் குர்ஆன்- குர்ஆன் விரிவுரை யாளராகவும், தர்ஜுமானுல் குர்ஆன்- குர்ஆனின் உரையாசிரியராகவும், ஹப்ருல் உம்மா: இவர் இந்த உம்மத்தின் பெரும் அறிஞராகவும் மாறினார்கள்.

• மார்க்க கல்வியை கற்க எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதே சமயம் போர்களிலும் பங்கேற்றார்கள்! மக்கா வெற்றியின் போது சிறுவனாக இருந்தாலும் தனது தந்தையுடன் இணைந்து இஸ்லாமியப் படையில் பங்கேற்றார். ஹுனைன் போரில் முஸ்லிம்கள் இக்கட்டான நிலையைச் சந்தித்த போது, நபியவர்களுடன் உறுதியாக நின்ற வீரர்களில் இவரும் ஒருவர்.

•  ஆப்பிரிக்க வெற்றிகள்: உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் வட ஆப்பிரிக்காவின் சுபைதுலா போரில் கலந்துகொண்டார். மேலும் பாரசீகத்தின் தபரிஸ்தான் மற்றும் குர்ஜான் வெற்றிகளிலும் பங்கேற்றார்.

• அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கல்வியை கற்று கொள்ளவே தங்கள் வாழ்வில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார்கள் இதனாலயே சிரியா , எகிப்த், இராக் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து நபிமொழிகளை ஆய்ந்தறியும் கலையைக்கற்றார்கள். குர்ஆனை எப்படி அணுக வேண்டும் குர்ஆனுக்கு எப்படி உரை எழுத வேண்டும் போன்றவற்றை எல்லாம் நன்கு கற்றுக் கொண்டார்கள்.

• உமர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்திலும், அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் சிறிய வயதினராக இருந்தாலும் அவரை எப்போதும் தம்முடன் சபையில் வைத்து கொள்வார்கள். மேலும் கருத்து வேறுபாடு உள்ளவற்றை அல்லது மார்க்க ஆலோசனைகளை அவர்களிடம் கேட்டுக்கொள்வார்கள். காரணம் பல மூத்த ஸஹாபாக்கள், தாபியின்கள் அறியாத விஷயங்களை பற்றி எல்லாம் இவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

• உஸ்மான் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்திலும் ஆலோசனை சபையில் அப்துல்லாஹ் (ரழி) அவர்களை உடன் வைத்திருப்பார்கள்! 

• அலி (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் பஸாரா நகரத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நீதிபதியாகவும் அந்தப் பகுதியை வழிநடத்தினார்கள்.  ஆளுநராக இருந்த போதும் மஸ்ஜித்களில் அமர்ந்து மக்களுக்குக் கல்வி போதிப்பதை நிறுத்தவில்லை. பஸாரா வாசிகள் இவரிடம் குர்ஆன், ஹதீஸ் மற்றும் இலக்கியங்களைக் கற்க அலைகடலெனத் திரண்டனர்.

• பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும், பைத்துல் மால் (பொது நிதி) விவகாரங்களிலும் மிகவும் பேணுதலாக இருந்தார். ஏழை எளியவர்களுக்கு அரசு நிதியிலிருந்து உரிய உதவிகள் சென்றடைவதை உறுதி செய்தார்.

• அப்துல்லாஹ் (ரழி) இவர்களின் அறிவுரை, ஆலோசனை கேட்க பல மூத்த ஸஹாபாக்கள் வருவார்கள். இவர்கள் விளக்கமும் எளிய மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது. எல்லோரிடமும் சகஜமாக பழகினார்கள் இதனாலயே இவரை பற்றி அறிந்து பல நாடுகளில் இருந்தும் வந்து இவரிடம் கல்வி பயின்றார்கள்.

• அல்குர்ஆன் வசனங்களை பற்றி எந்த அளவிற்கு இவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்றால், அல்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனமும் எங்கு, யாருக்காக இறக்கப்பட்டது? இந்த வசனத்தின் பொருள் என்ன? என்பதை பற்றி மிக நன்காவே அறிந்து வைத்திருந்தார்கள்!

• அல்குர்ஆன் விரிவுரையாளராகவும் மட்டும் இல்லாமல் ஹதீஸ்களை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். இவர்கள் மட்டும் சுமார் 1600 ஹதீஸ்களை அறிவித்து உள்ளார்கள் இதில் சில ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்களிடமே நேரடியாக கேட்டு அறிவித்துள்ளார்கள்.

• கடைசி காலத்தில் இவர்களின் கண்ணில் ஒரு நோய் ஏற்பட்டது. அதற்கு ஏதேனும் மருத்துவம் செய்தால் குணமாக வாய்ப்பு உள்ளது என்று வைத்தியர் கூறினார்கள். ஆனால் தொழுகையின் போது ஸஜ்தாவை நேரடியாக செய்யாமல் ஏதேனும் இடையில் தடுப்பு வைத்து செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். இதை கேட்ட அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் இந்த சிகிச்சைக்கு மறுத்து விட்டார்கள்.

(நூல் : தப்ரானி)

• நீண்ட காலம் வாழ்ந்த அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தங்கள் 72 வது வயதில் மரணித்தார்கள்! இவர்களின் மரண செய்தியை பல மூத்த ஸஹாபாக்கள் இன்று நம்மை விட்டு மிக சிறந்த கல்வியாளர் மரணித்து விட்டார்கள் என்று கவலையுடன் தெரிவித்தார்கள்!

• அறிவு என்பது வயது சார்ந்தது அல்ல, அது அல்லாஹ்வின் அருளாலும் தேடுதலாலும் கிடைப்பது என்பதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

@அல்லாஹ் போதுமானவன் 💞


Thursday, March 26, 2026

மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்....


*மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லாபாபீன் ஜமாஅத்தின்* 

*திருமணச் சட்டங்கள் மற்றும் விதிகள் - 2026*

*குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்,* மிகக் குறைந்த செலவில் நடைபெறும் திருமணமே அதிக பரக்கத் (அருள்) நிறைந்தது. தேவையற்ற சடங்குகள் மற்றும் வீண் செலவுகளைத் தவிர்த்து, சுன்னத்தான முறையில் திருமணங்களை நடத்த வேண்டும். ஜமாஅத்தின் நிர்வாகக் குழு 28 டிசம்பர் 2025 அன்று கூடி, ஏற்கனவே 2002-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளை சில மாற்றங்களுடன் 21.03.2026 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

விதிமுறைகள்:
*1.நிச்சயதார்த்தம்:* மார்க்க ரீதியாக இது ஒரு வாக்குறுதி மட்டுமே. எனவே, மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் நெருங்கிய 50 நபர்களுக்கு மிகாமல், பெண்ணின் வீட்டு மஹல்லா பள்ளியிலோ அல்லது பெண் வீட்டிலோ ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் எளிமையாகத் திருமணத் தேதியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

*2.ஷுக்ரானா விருந்து:* இதற்கு அழைப்பு விடுக்கக் கூடாது.

*3.திருமண மண்டபம்:* ஷுக்ரானா விருந்தை திருமண மண்டபத்தில் நடத்தக்கூடாது.

*4.பெண் வீட்டார் மீது சுமை:* ஷுக்ரானா விருந்து என்ற பெயரில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் திணிக்கக்கூடாது.

*5.நண்பர்களுக்கு விருந்து:* திருமணத்திற்குப் பிறகு மணமகன் தன் நண்பர்களுக்கோ அல்லது மணமகள் தன் தோழிகளுக்கோ விருந்து அளிக்கக்கூடாது.

*6.ஹல்தி (மஞ்சள்) சடங்கு:* நிகாஹ்விற்கு முன் ஹல்தி போன்ற சடங்குகளைச் செய்யக்கூடாது. வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் உணவு வழங்கலாம்.

*7.தேவையற்ற சடங்குகள்:*  சோர் ஹல்தி, கட்டு-கல்தி, மரு (Maru), பெண்ணின் வீட்டிற்குப் பலகாரங்கள் கொண்டு செல்லுதல், ஸலாமி போன்ற சடங்குகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*8.மஹர்:* மஹர் என்பது பெண்ணின் உரிமை. மணமகன் தன் வசதிக்கேற்ப எளிதாக வழங்கக்கூடிய தொகையை நிர்ணயிக்க வேண்டும். கௌரவத்திற்காக அளவுக்கு அதிகமாகவோ அல்லது பெண்ணின் அந்தஸ்துக்குக் குறைவாகவோ இருக்கக்கூடாது. குறைந்தபட்ச மஹர் 2 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பு.

*9.பூ மாலை:* நிகாஹ் சபையில் மணமகனுக்குப் பூ மாலை அணிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

*10.புகைப்படம் மற்றும் வீடியோ:* நிகாஹ் சபையில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டுள்ளது.

*11.எளிமை:* திருமணத்தை மிகக் குறைந்த நபர்களுடன் சுன்னத்தான முறையில் நடத்த வேண்டும்.

*12.விருந்தினர்கள்:* நிகாஹ் அன்று பெண் வீட்டார் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் வெளியூர் விருந்தினர்களுக்கு மட்டும் விருந்து அளிக்கலாம்.

*13.உணவு வகை:* விருந்தில் ஒரு சாதம், ஒரு குழம்பு மற்றும் ஒரு இனிப்பு மட்டுமே இருக்க வேண்டும். இறைச்சியில் ஆடு, மாடு அல்லது கோழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

*14.பரிசுப் பொருட்கள்:* விருந்தின் போது கிப்ட் பாக்ஸ், கூல் டிரிங்க்ஸ் (Cool Drinks) போன்றவற்றை விநியோகிக்கக் கூடாது.

*15. காலை உணவு:* மணமகன் வீட்டார் வெளியூராக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பெண் வீட்டில் காலை உணவு ஏற்பாடு செய்யலாம்.

*16.பெண் அழைப்பு (ருக்ஸதி):* பெண்ணை அனுப்பும்போது மணமகன் வீட்டாருக்குத் தேநீர் மற்றும் பிஸ்கட் மூலம் மட்டும் உபசரிக்கலாம்.

*17.அலங்காரங்கள்:* திருமண மண்டபத்தையோ அல்லது வீடுகளையோ தேவையின்றி அதிகப்படியான விளக்குகள், மேடை அலங்காரங்கள் மற்றும் ஆடம்பரமான பந்தல்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

18.(பட்டியலில் விடுபட்டுள்ளது)

*19.வெயில் பாதுகாப்பு:* வெயிலில் இருந்து தப்பிக்க சாதாரணப் பந்தல் அமைக்கலாம், ஆனால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கக் கூடாது.

*20.ஆடைகள்:* நிகாஹ்விற்காக மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் தலா இரண்டு ஜோடி ஆடைகளுக்கு மேல் எடுக்கக் கூடாது.

*21.இதர பொருட்கள்:* மணமகன் வீட்டார் தரப்பிலிருந்து குடை, காலணி (Shoe) போன்றவற்றை அனுப்பக்கூடாது.

*22.தங்கம்:*
 குறிப்பு :- 22வது எண்ணில் இருந்த பிழையான பதிவு சரி செய்யப்பட்டுள்ளது. 

22.தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக இருப்பதால், பெரும்பாலான பெண்களின் திருமணத்தை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. 

"விலைவாசி ஏற்றத்தினால் திருமணங்கள் தடைபடுவது, பெற்றோர்களுக்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியைத் தருகிறது. இதனால் இளம் பெண்கள் இல்லற வாழ்க்கையில் நுழையும் வாய்ப்பை இழந்து, வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் இருந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்."
எனவே, வசதியுள்ளவர்கள் கூட ஒரு நெக்லஸ், இரண்டு வளையல்கள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரத்திற்கு மேல் நகைகளை அணிவிக்க வேண்டாம். இருப்பினும், மணமகன் வீட்டார் தங்களின் வசதிக்கேற்ப மணப்பெண்ணுக்கு நகைகளை வழங்கலாம்.

*23.விருந்தினர் நகை:* திருமணத்திற்கு வரும் பெண்கள் அதிகப்படியான நகைகளை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும். இது பெண் வீட்டாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

*24.ஆடை கட்டுப்பாடு:* மணமக்கள் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மார்க்கத்திற்குப் புறம்பான ஆடைகளை அணியக்கூடாது.

*25.வலிமா விருந்து:* மணமகன் தன் வசதிக்கேற்ப வலிமா விருந்து அளிக்க வேண்டும். கௌரவத்திற்காகவும் புகழுக்காகவும் கடன் வாங்கிச் செய்யக்கூடாது.

*26.பெண் வீட்டார் பங்களிப்பு:* வலிமா விருந்திற்காகப் பெண் வீட்டாரிடம் பணம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

*27.வலிமா நேரம்:* நிகாஹ் மற்றும் தாம்பத்தியத்திற்குப் பிறகு வலிமா நடத்தப்பட வேண்டும். அதிகபட்சம் 200 கிலோ அரிசி வரை மட்டுமே சமைக்க அனுமதிக்கப்படுகிறது.

*28.பெண் வீட்டிற்குச் செல்லுதல்:* வலிமா அன்று மணமகன் பெண் வீட்டிற்குச் செல்லும்போது நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ அழைத்துச் செல்லக்கூடாது.

*29.சீதனம் (Dowry):* தந்தை தன் மகளுக்குத் தன் வசதிக்கேற்ப வழங்கும் பொருட்கள் அன்பளிப்பாகக் கருதப்படும். ஆனால், மணமகன் வீட்டாரோ அல்லது மணமகனோ நகை, பணம், வாகனம் என எதையும் சீதனமாகக் கேட்பது மார்க்கப்படி ஹராம் (தடுக்கப்பட்டது).

*30.பெண்ணின் சொத்து:* மணமகள் கொண்டு வரும் சீதனப் பொருட்களுக்கு அவரே முழு உரிமையாளர்.

*31.இதர சடங்குகள்:* சில்லா, குல் போஷி, ஈதி விருந்து, கத்னா (சுன்னத்) விருந்து, பெயரிடும் விழா மற்றும் வளைகாப்பு போன்ற சடங்குகளைச் செய்வதும் அதற்கு அழைப்பு விடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

*குறிப்பு: மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபீன் ஜமாஅத் மூலம் திருமணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட அனைத்து விதிகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஜமாஅத் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.*

*அமலுக்கு வரும் தேதி: 21.03.2026*