பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, February 15, 2026

அபூ உர்வா மஃமர் பின் ராஷித் அல்-அஸ்தி


நாம் சில நேரங்களில் எதேச்சையாக பயணங்களுக்கு செல்வோம். ஆனால் அந்த சில பயணம் ஒரு வரலாற்றையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு பயணம்தான் இமாம் மஃமர் பின் ராஷித் மேற்கொண்டது.

பெயர்: அபூ உர்வா மஃமர் பின் ராஷித் அல்-அஸ்தி
பிறப்பு: ஹிஜ்ரி 95 (பஸ்ரா, ஈராக்).
இறப்பு: ஹிஜ்ரி 153 (ரமலான் மாதம்).
ஆசிரியர்கள்: கதாதா, இமாம் ஸுஹ்ரி, அய்யூப் சிக்தியானி.
மாணவர்கள்: அப்துர் ரஸ்ஸாக் (மிக முக்கியமானவர்), சுப்யான் அஸ்-ஸவ்ரி.

அவர் பிறந்தது ஈராக்கில் உள்ள 'பஸ்ரா' நகரில். ஆனால் இன்று அவர் அறியப்படுவது "யமனின் இமாம்" என்று. இது எப்படி நடந்தது?

மஃமர் பின் ராஷித் இளமையில் துணிகளை விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்தார். வியாபார விஷயாக அவர் யமன் நாட்டின் 'ஸன்ஆ' நகருக்குச் சென்றார். அங்கே தனது வேலையை முடித்துவிட்டுத் திரும்பத் தயாரானார்.
ஆனால், யேமன் மக்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தார்கள். இந்த வியாபாரியிடம் இருக்கும் சரக்குகளை விட, இவரின் நெஞ்சில் இருக்கும் ஹதீஸ்கள் அதிக மதிப்பு வாய்ந்தவை! அவரிடம் இருக்கும் அபாரமான கல்வி ஞானத்தைக் கண்டு வியந்த யேமன் மக்கள், "இவரைத் திரும்ப ஈராக்கிற்கு அனுப்பக் கூடாது" என்று முடிவு செய்தனர்.

அவர் ஊருக்குப் போக விடாமல் தடுக்க யமன் மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
அவரை மிரட்டவில்லை, சிறையில் அடைக்கவில்லை. மாறாக, அந்த ஊரிலேயே மிகச்சிறந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!
இங்கேயே தங்கிவிடுங்கள், எங்களுக்கு மார்க்கம் சொல்லிக்கொடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார்கள். அன்று யமன் மக்கள் செய்த அந்தச் செயல் இல்லையென்றால், இன்று முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலே நமக்குக் கிடைத்திருக்காது.

ஹதீஸ் கலையில் மிகப் பெரிய இமாம் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி (ரஹ்). மஃமர் அவர்கள், இமாம் ஜுஹ்ரியிடம் மிக நீண்ட காலம் தங்கியிருந்து பாடம் படித்தவர். ஒருமுறை ஒரு மாணவர் நீங்கள் ஏன் மஃமர் அறிவிக்கும் ஹதீஸுக்கே முன்னுரிமை கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அறிஞர்கள் சொன்னார்கள்: "ஜுஹ்ரியிடம் பாடம் படித்தவர்களிலேயே மிகத் துல்லியமானவர், நம்பகமானவர் மஃமர்தான்."
மதீனாவின் கல்வியை (ஸுஹ்ரியின் வழியாக) யமனுக்குக் கடத்தி வந்த தபால்காரர் இவர்தான்.

நாம் முந்தைய பதிவில் இமாம் அப்துர் ரஸ்ஸாக் எழுதிய 'முஸன்னஃப்' பற்றிப் பார்த்தோம்.
உண்மையில், அந்த நூலுக்கு அடிப்படையே மஃமர் எழுதிய அல்-ஜாமிஃ என்ற நூல்தான். இதுதான் இஸ்லாமிய வரலாற்றில் தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட முதல் சில நூற்களில் ஒன்று. இன்றும் 'முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்' நூலின் கடைசிப் பகுதியாக இந்த 'ஜாமிஃ' இணைக்கப்பட்டுள்ளது.

இமாம் அப்துர் ரஸ்ஸாக் (யமனின் ஷைக்) உருவானதற்கு முழுக் காரணமே மஃமர் தான்.
அப்துர் ரஸ்ஸாக் கூறுகிறார்: நான் மஃமர் அவர்களிடம் பாடம் படிப்பதற்காக எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் இறுதியில், அவரிடம் கற்ற கல்வியால் என் கவலைகள் எல்லாம் பறந்து போய்விட்டன. அப்துர் ரஸ்ஸாக்கின் மாணவர்களில் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹி) முக்கியமானவர் என்பதை கடந்த பதிவுகளில் பார்த்தோமல்லவா!

மஃமர் அவர்கள் யமனிலேயே தங்கிவிட்டாலும், தனது கடைசி காலத்தில் தாய் மண்ணான ஈராக்கிற்கு (பஸ்ரா) செல்ல ஆசைப்பட்டார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு பஸ்ரா திரும்பினார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது.
அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே, அங்கே மரணமடைந்தார்.
பிறந்தது பஸ்ரா... வாழ்ந்தது யமன்... மீண்டும் மரணித்தது பஸ்ரா!

ஒரு மனிதர் தனது சுகபோகங்களை, சொந்த ஊரைத் துறந்து எங்கையோ ஒரு தேசத்தில் (யமன்) சென்று அறிவைப் பரப்பினார். இன்று நாம் படிக்கும் ஒவ்வொரு ஹதீஸிலும், அந்தத் தியாகத்தின் வாசனை வீசுகிறது. அவர் அன்று யமனில் தங்கவில்லை என்றால், ஹதீஸ் கலையின் ஒரு சங்கிலி அறுந்து போயிருக்கும்!

அஹ்மத் பின் அல்-ஹுசைன் அல்-பைஹகீ.


ஃபிக்ஹ் (சட்டம்) வேறு, ஹதீஸ் வேறு என்று மக்கள் பிரித்து வைத்திருந்த காலம் அது. சட்டங்கள் என்றால் அது இமாம்களின் ராய் (சுய கருத்து)" என்றும், ஹதீஸ் என்றால் அது அறிவிப்பாளர் தொடர் என்றும் ஒரு மாயை இருந்தது.
அந்த மாயையை உடைத்தெறிந்தவர் இமாம் பைஹகீ (ரஹ்). எந்தவொரு சட்டமாக இருந்தாலும், அதற்கு அடிப்படையாக ஒரு 'நபிமொழி' (ஆதாரம்) இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் இவர்.

பெயர்: அஹ்மத் பின் அல்-ஹுசைன் அல்-பைஹகீ.
பிறப்பு: ஹிஜ்ரி 384-ம் ஆண்டு, பாரசீகத்தின் 'பைஹக்' மாவட்டத்தில் உள்ள குஸ்ராபாத் என்ற ஊரில் பிறந்தார்.
கல்வி தாகம்: இவர் ஒரு இடத்தோடு முடங்கிவிடவில்லை. குராஸான், பக்தாத், கூஃபா, மக்கா, மதீனா என அலைந்து திரிந்து, சுமார் 100-க்கும் மேற்பட்ட ஹதீஸ் கலை வல்லுநர்களிடம் பாடம் பயின்றார். இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்களின் தலைசிறந்த மாணவர் இவர்தான்.

இமாம் பைஹகீயின் வாழ்நாள் சாதனை அஸ்-சுனன் அல்-குப்ரா என்ற நூலாகும். மற்ற ஹதீஸ் நூற்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
புகாரி, முஸ்லிம் போன்ற நூற்கள் "ஸஹீஹான ஹதீஸ்களை" மட்டும் தொகுத்தன. ஆனால் இமாம் பைஹகீயின் நோக்கம், "சட்டங்களுக்கான ஆதாரங்களைத் தொகுப்பது". தொழுகையில் கையை உயர்த்த வேண்டுமா? பாங்கு சொல்லும்போது விரலை எங்கே வைக்க வேண்டும்?இப்படி ஒவ்வொரு செயலுக்கும் நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? சஹாபாக்கள் என்ன செய்தார்கள்? என்பதைத் தேடித் தேடித் தொகுத்தார்.
சுமார் 22,000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களைக் கொண்ட பிரம்மாண்டமான தொகுப்பு இது. இமாம் இப்னு ஸலாஹ் கூறுகிறார்: எமக்குத் தெரிந்த வரையில், சட்டதிட்டங்களுக்கு ஆதாரம் காட்டுவதில் பைஹகீயின் இந்த நூலுக்கு நிகரான ஒரு நூல் உலகில் இல்லை."

பலரும் இவரை ஷாஃபி மத்ஹபின் தீவிர ஆதரவாளர் என்று நினைப்பதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அவர் இமாம் ஷாஃபியின் சட்ட தீர்ப்புக்களை ஏற்க காரணம், "இமாம் ஷாஃபியின் சட்டங்கள் பெரும்பாலும் ஹதீஸை ஒட்டியே இருந்தன" என்பதுதானே தவிர, கண்மூடித்தனமான பற்று (தக்லீத்) அல்ல. சில இடங்களில் இமாம் ஷாஃபியின் கூற்றுக்கு மாற்றமான ஹதீஸ் கிடைத்தால், "ஹதீஸ் தான் எனக்கு முக்கியம்" என்று துணிச்சலாக மாற்றுக் கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதனால்தான் இமாம் தஹபி, "பைஹகீ நினைத்திருந்தால் தனக்கென ஒரு தனி வழிமுறையை (இஜ்திஹாக்) உருவாக்கியிருப்பார்" என்று புகழ்கிறார்.

இவர் ஹதீஸ் கலையின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்: தலாஇல் அந்-நுபுவ்வா. நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களை, கட்டுக்கதைகள் இல்லாமல் ஆதாரப்பூர்வமான செய்திகளாகத் தொகுத்த நூல் இது. சீறா (வரலாறு) எழுதுபவர்களுக்கு இதுவே அடிப்படை.

ஷுஅபுல் ஈமான் : ஈமான் என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது என்ற ஹதீஸின் அடிப்படையில், ஒவ்வொரு கிளையையும் விரிவாக விளக்கிய நூல்.

இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு ஹதீஸைப் பதிவு செய்தால் மட்டும் போதாது. அதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? அறிவிப்பாளர் யாராவது பலவீனமானவரா? என்பதையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுவார். ஹதீஸ் இல்லாத சட்டங்களை மக்கள் பின்பற்றக்கூடாது என்பதில் இவர் குறியாக இருந்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..." என்ற வார்த்தையைச் சுமந்து திரிந்த அந்த மகான், ஹிஜ்ரி 458-ம் ஆண்டு மரணமடைந்தார்.

சட்டங்கள் என்பது மனிதர்களின் மூளையில் உதிப்பவையல்ல மாறாக அவை வஹீ ( இறைச்செய்தி) எனும் கடலிலிருந்து எடுக்கப்பட வேண்டிய முத்துக்கள் என்பதை இமாம் பைஹகீ தனது 'சுனன்' நூல் மூலம் நிரூபித்தார்.

நபிமொழியின் பாதுகாவலர் இமாம் பைஹகீ! 

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamBayhaqi #SunanAlKubra #HadithScholar #SunnahDefender #DalailAlNubuwwah #IslamicHistory #AbdullahIbnuNaseerWriteups