பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, February 26, 2026

ஸயீத் இப்னு ஸைத் (ரலி).


வரலாற்றுப் பக்கங்களில் சிலருடைய தியாகங்கள் பெரும் சப்தத்தோடு முழங்கும்.சிலருடைய தியாகங்களோ சப்தமில்லாமல், ஆனால் ஆழமாகப் பதிந்திருக்கும். பதவியும் அதிகாரமும் தேடி வரும்போது, அதைத் துச்சமென மதித்து உதறித் தள்ளிய ஒரு மாவீரரை இஸ்லாமிய வரலாறு சந்தித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் உயிருடன் இருக்கும்போதே சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்ட பத்து பேரில் (அஷரத்துல் முபஷ்ஷரா) ஒருவர்... அவர்தான் ஸயீத் இப்னு ஸைத் (ரலி).

இவருடைய தந்தை ஸைத் இப்னு அம்ர், இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்காவின் அறியாமைக் காலத்துச் சிலைகளை வணங்க மறுத்து, இப்ராஹீம் (அலை) அவர்களின் உண்மையான மார்க்கத்தைத் தேடி அலைந்தவர். தன் தந்தை விட்டுச் சென்ற அந்தச் சத்தியத் தேடலின் பக்குவம் ஸயீத் (ரலி) அவர்களின் ரத்தத்திலேயே ஊறியிருந்தது. இஸ்லாம் என்ற அழைப்பு வந்த மறுகணமே, எவ்விதத் தயக்கமுமின்றித் தன்னை இறைவனிடம் ஒப்படைத்தார்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலம் அது. உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு சிங்கம் போல் சீறித் திரிந்த நேரம். உமரின் சொந்தத் தங்கையான ஃபாத்திமா பின்த் கத்தாப் அவர்களைத்தான் ஸயீத் (ரலி) மணந்திருந்தார். இவர்கள் இருவரும் ரகசியமாக இஸ்லாத்தை ஏற்று, குர்ஆனை ஓதி வந்தனர். இந்தச் செய்தியறிந்த உமர் (ரலி) கோபத்தின் உச்சியில் வாளோடு வந்து இவர்களின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.
தங்கையையும், மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்களையும் உமர் கடுமையாகத் தாக்கினார். இருவருக்கும் ரத்தம் வழிந்தது. அந்த இக்கட்டான தருவாயிலும், ஸயீத் (ரலி) அவர்கள் பயந்து பின்வாங்கவில்லை. ரத்தம் வழிய வழிய நெஞ்சை நிமிர்த்தி நின்றவாறு உமரைப் பார்த்துக் கூறினார்கள். உமரே! நீங்கள் என்ன செய்தாலும் சரி, சத்தியம் உங்கள் மார்க்கத்தில் இல்லை. நாங்கள் இஸ்லாத்தை விடமாட்டோம்! அந்த ரத்தமும், அந்த அசையாத உறுதியும்தான் உமரின் இரும்பு உள்ளத்தை முதல்முறையாக உலுக்கியது. "என்னை விட வலிமை குறைந்தவர்கள், என் வாளுக்கு முன்னால் கொள்கைக்காக இப்படி நிற்கிறார்களே!" என்ற அந்தச் சிந்தனைதான் உமரை குர்ஆனை வாசிக்கத் தூண்டியது. 

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய உமர் (ரலி) என்ற மாபெரும் தலைவரை, இஸ்லாத்திற்குள் கொண்டுவர முதல் தியாகம் செய்தவர் ஸயீத் இப்னு ஸைத் (ரலி) தான்! உமர் (ரலி) கலீஃபாவாக ஆனபோது, உலகின் பெரும் பகுதிகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. உமரின் மைத்துனர் என்ற முறையில் ஸயீத் (ரலி) நினைத்திருந்தால் எந்த ஒரு பெரிய பதவியையும், சலுகையையும் பெற்றிருக்க முடியும். ஆனால், அதிகாரத்தின் வாடை கூட அவர் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.

ஷாம் தேசத்துப் போர்களில் (குறிப்பாக யர்மூக் போர்க்களத்தில்) தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய இந்த சப்தமில்லாத மாவீரர், தமாஸ்கஸ் வெற்றி கொள்ளப்பட்டபோது, இஸ்லாமியப் படையின் தளபதி அபூ உபைதா (ரலி) அவர்களால் டமாஸ்கஸின் பொறுப்பாளராக (கவர்னராக) நியமிக்கப்பட்டார். ஆனால், சொகுசான அந்தப் பதவி அவருக்குப் பிடிக்கவில்லை. உடனே தளபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்யும் பாக்கியத்தை விட்டுவிட்டு, நான் மட்டும் பதவியில் அமர்ந்திருக்க விரும்பவில்லை. இந்தப் பதவிக்கு வேறு யாரையாவது நியமியுங்கள். நான் ஒரு சாதாரணப் படைவீரனாகவே களத்திற்கு வருகிறேன்!" என்று கூறி, உலகமே ஆசைப்படும் கவர்னர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, சாதாரண போர்வீரராகப் படையில் வந்து இணைந்துகொண்டார் அந்தத் தியாகி. (அதன் பிறகு தான் யஸீத் இப்னு அபூ ஸுப்யான் (ரலி) அவரின் மரணத்தின் பின் முஆவியா இப்னு அபூ ஸுப்யான் (ரலி) சிரியாவின் கவர்னர் ஆனார்கள்)

சுபஹானல்லாஹ்! இன்று ஒரு சிறு பதவிக்காகவும், தலைமைக்காகவும் கொள்கையை விற்கக் காத்துக்கிடக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பதவிகள் தேடி வந்தும் அதை உதறித் தள்ளிவிட்டு, இறைவனின் திருப்தியை மட்டுமே தேடிய ஸயீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்கு எவ்வளவு பெரிய பாடம்! இஸ்லாத்திற்காக நாம் எதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்? பதவியும் புகழும் வரும்போது, நம் ஈமான் ஆட்டம் காண்கிறதா? எந்தப் பதவியும், புகழும் இல்லாத சாதாரண வரிசையில் நின்று இறைவனுக்காக உழைக்க நம் மனம் தயாராக இருக்கிறதா?
விளம்பரங்கள் இல்லாத தியாகங்களை இறைவன் தன் அரியணையில் வைத்துப் போற்றுகிறான் என்பதற்கு ஸயீத் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் வரலாறே சாட்சி. 

சுவர்க்கத்தின் நற்செய்தி பெற்ற அந்த மாவீரரின் போல், புகழுக்காக அல்லாமல் இறைவனுக்காக மட்டுமே மார்க்கப் பணிகளைச் செய்யும் பாக்கியத்தை நமக்கும் இறைவன் வழங்குவானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #SaidIbnZayd #AsharaMubashara #SilentWarrior #Sacrifice #AbdullahIbnuNaseerWriteups

ஸஹீஹ் முஸ்லிம்


ஸிஹாஹ் ஸித்தாவில் எனக்கு விருப்பமான கிதாபை பற்றி தான் இன்று நாம் பார்க்க மோஙிறோம. ஹதீஸ் உலகின் அசைக்க முடியாத இரண்டு தூண்களில் ஒன்றான ஸஹீஹ் முஸ்லிம் நூல் வரலாற்றையும், மார்க்கச் சட்டங்களையும் எந்தவித சமரசமுமின்றி துல்லியமாக அணுக நினைக்கும் எந்தவொரு ஆய்வாளனுக்கும் புகாரிக்கு அடுத்து (சில நுட்பங்களில் புகாரியையே மிஞ்சும்) ஒரு மாபெரும் வழிகாட்டி இந்த நூல்தான். ஹதீஸ் கலை வரலாற்றில் இதன் கட்டமைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இன்று சற்று மிக விரிவாகவே அலசுவோம். வாருங்கள்!

இமாம் அபுல் ஹுஸைன் முஸ்லிம் இப்னு அல்-ஹஜ்ஜாஜ் அந்-நைஸாபூரி (ரஹ்). ஹிஜ்ரி 204 அல்லது 206-ல் குராசான் மாகாணத்தின் புகழ்பெற்ற கல்வி மையமான நைஸாபூர் - தற்போதைய ஈரான்) நகரில் பிறந்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் புகாரி போன்ற மாமேதைகளிடம் நேரடியாகக் கல்வி பயின்றவர். குறிப்பாக, இமாம் புகாரியைத் தனது ஆசானாக ஏற்று, அவரிடம் ஹதீஸ் கலையின் நுட்பங்களைக் கற்றுக் குடித்தவர் இமாம் முஸ்லிம்.

இந்த நூல் ஒரே இரவில் தொகுக்கப்பட்டதல்ல. இமாம் முஸ்லிம் அவர்கள் தான் திரட்டிய சுமார் 3,00,000 (மூன்று லட்சம்) ஹதீஸ்களைத் தன் வாழ்நாளில் தொடர்ச்சியாக 15 வருடங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, அதிலிருந்து மிகவும் ஆதாரப்பூர்வமான சுமார் 4,000 ஹதீஸ்களை (மீண்டும் மீண்டும் வந்தவற்றைத் தவிர்த்து) மட்டுமே தேர்ந்தெடுத்து இந்த அல்-முஸ்னத் அஸ்-ஸஹீஹ் என்ற நூலை உருவாக்கினார்.

(ஸஹீஹ் முஸ்லிம் நூலில் எத்தனை ஹதீஸ்கள் எழுதப்பட்டுள்ளன என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உள்ளது. சிலர் 7275 என்றும் சிலர் 3000 என்றும் சிலர் 5731 என்றும் கூறுகின்றனர். ஏனெனில் ஹதீஸ்களை எண்ணுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்கு காரணம்! இன்ஷா அல்லாஹ் இது பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்)

இமாம் புகாரியின் நூலுக்கும் இமாம் முஸ்லிமின் நூலுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டால்தான், இந்த நூலின் மகத்துவத்தை நாம் முழுமையாக உணர முடியும்.

1. ஹதீஸ்களைத் தேடும் ஆய்வாளர்களுக்கான சொர்க்கம். இமாம் புகாரி அவர்கள் ஒரு ஹதீஸை அதன் சட்டங்களுக்கு (ஃபிக்ஹ்) ஏற்ப பல்வேறு அத்தியாயங்களில் பிரித்துப் பதிவு செய்வார். ஒரு ஹதீஸின் ஒரு பகுதியைத் தொழுகை அத்தியாயத்திலும், மறு பகுதியை வியாபார அத்தியாயத்திலும் வைத்திருப்பார். ஆனால் இமாம் முஸ்லிம் அப்படிச் செய்ய மாட்டார். ஒரு ஹதீஸை எடுத்தால், அந்த ஹதீஸ் எத்தனை அறிவிப்பாளர் தொடர்களின் (இஸ்னாத்) மூலமாக வந்திருக்கிறது, அதன் வார்த்தைகளில் (மத்ன்) என்னென்ன மாற்றங்கள் உள்ளன என்பதை ஒரே இடத்தில் மொத்தமாகக் கொண்டு வந்து நிறுத்திவிடுவார். இதனால், ஒரு ஹதீஸின் முழுப் பின்னணியையும், வார்த்தை வித்தியாசங்களையும் ஒரே பார்வையில் ஒப்பிட்டுப் பார்க்க ஆய்வாளர்களுக்கு இது மிகப்பெரிய வசதி!

2. தலைப்புகளைக் கொடுக்காத இமாம். ஸஹீஹ் முஸ்லிமில் இன்று நாம் காணும் அத்தியாயத் தலைப்புகள் இமாம் முஸ்லிம் அவர்களால் வைக்கப்பட்டவை அல்ல! இமாம் முஸ்லிம் அவர்கள் ஹதீஸ்களை மட்டுமே தொகுத்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த புகழ்பெற்ற அறிஞர் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்தான் அந்த ஹதீஸ்களின் மையக்கருத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மிகச் சிறந்த தலைப்புகளைச் சூட்டினார்.

3. வரலாற்றுச் சிறப்புமிக்க முகவுரை. குதூபுஸ் சித்தா நூல்களில் இமாம் முஸ்லிம் செய்த மிகச்சிறந்த காரியம், தனது நூலுக்கு அவர் எழுதிய மிக நீண்ட முகவுரையாகும். ஒரு ஹதீஸை எப்படி அணுக வேண்டும், அறிவிப்பாளர்களின் தரத்தை எப்படி எடைபோட வேண்டும், தான் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த நூலைத் தொகுத்தேன் என்ற ஹதீஸ் கலையின் விதிகளை (உஸுலுல் ஹதீஸ்) அதில் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

4. அன்அனா அறிவிப்புகளின் நிபந்தனை. இது ஒரு மிக நுட்பமான ஹதீஸ் கலை விதி. இரு அறிவிப்பாளர்கள் (உதாரணமாக A என்பவரும் B என்பவரும்) ஒருவரையொருவர் சந்தித்து ஹதீஸைக் கேட்டதாகத் தெளிவாகக் கூறாமல், அவர் கூற நான் கேட்டேன் என்பதற்குப் பதிலாக அவர் மூலமாக (அன்) என்று அறிவிக்கும்போது,

இமாம் புகாரியின் நிபந்தனை: அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்திருக்க வேண்டும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட வேண்டும்.

இமாம் முஸ்லிமின் நிபந்தனை: அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று உறுதியானாலே போதும். அவர்கள் சந்தித்தது நிரூபிக்கப்படாவிட்டாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என வாதிடுகிறார். இந்த நுட்பமான விதியைத் தனது முகவுரையில் இமாம் முஸ்லிம் மிகக் கடுமையாக வாதிட்டு நிறுவியுள்ளார்.

இமாம் முஸ்லிம் அவர்களின் மரணம் கூட அவரது ஆழமான தேடலில்தான் நிகழ்ந்தது. ஒருமுறை ஒரு ஹதீஸைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, அந்த ஹதீஸ் தனது சேகரிப்பில் இருப்பதை உணர்ந்த அவர், இரவு முழுவதும் ஒரு பேரீச்சம்பழக் கூடையை அருகில் வைத்துக்கொண்டு, அந்த ஹதீஸைத் தேடிக் கொண்டே பழங்களைச் சாப்பிட்டிருக்கிறார். விடியும் போது கூடை காலியாகி, அந்த அதிகப்படியான உணவின் தாக்கத்தாலேயே அவர் மரணமடைந்தார் (ஹிஜ்ரி 261) என்று வரலாறு கூறுகிறது. அறிவிற்காகத் தன்னை அர்ப்பணித்த மாபெரும் தியாகம் இது.

ஸஹீஹ் முஸ்லிம் அது மனித மூளையின் நேர்த்தியான கட்டமைப்புக்கும், அறிவுப்பூர்வமான ஆவணப்படுத்தலுக்கும் மிகச்சிறந்த உதாரணம். இஸ்லாமியத் தத்துவங்களையும், நபி வரலாற்றையும் ஆழமாகப் படிக்க நினைக்கும் நமக்கு, இமாம் முஸ்லிமின் இந்த அறிவுப் பெட்டகம் ஒரு வரப்பிரசாதம். தொடர்ச்சியான இந்த நூலறிமுகங்கள் உங்கள் சிந்தனைக்குத் தீனியிட்டிருக்கும் என நம்புகிறேன். ஸஹீஹ் முஸ்லிமின் இந்தத் தொகுப்பு முறை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
அன்புடன்,

- Abdullah Ibnu Naseer