ஒரு மனிதரை எவ்வளவு ஆழமாக நேசிக்க முடியும்? அவர் உடுத்திய ஆடை போல உடுத்தலாம், அவர் பேசியதைப் போலப் பேசலாம். ஆனால், அவர் நடந்து சென்ற பாதையில், அவர் எந்த இடத்தில் தன் வாகனத்தைத் திருப்பினாரோ, அதே இடத்தில் தன் வாகனத்தையும் திருப்பி, அவர் எந்த மரத்தடியில் இளைப்பாறினாரோ, அதே மரத்தடியில் தானும் இளைப்பாறும் அளவுக்கு ஒருவரால் காதலிக்க முடியுமா?
வரலாற்றில் அப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார்! அவர் தான் இஸ்லாமிய உம்மத்தின் ஈடு இணையற்ற அறிஞர், அண்ணலாரின் அச்சுப் பிசகாத பிரதிபலிப்பு... அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
கம்பீரத்தின் மறுஉருவமான உமர் (ரலி) அவர்களின் அருமைப் புதல்வர் இவர். ஆனால், தந்தையின் நிழலில் ஒண்டிக் கொள்ளாமல், தன் அறிவாலும், சுன்னாவின் மீதான வெறித்தனமான காதலாலும் வரலாற்றில் தனக்கென ஒரு தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களைப் பற்றிப் பேசினாலே, சுன்னாவைப் பின்பற்றுவதில் அவருக்கு இருந்த அசாத்திய உறுதிதான் முதலில் நினைவுக்கு வரும். ஒருமுறை அவர் பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். திடீரென ஒரு இடத்தில் தன் ஒட்டகத்தை வட்டமடிக்கச் செய்தார். எந்தக் காரணமும் இல்லாமல் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பல வருடங்களுக்கு முன் இதே இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகம் இப்படி வட்டமடித்ததை நான் பார்த்தேன். அது ஏன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நபிகளார் செய்ததை நானும் செய்கிறேன் என்றார். பயணத்தின் நடுவே ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்தால், அதன் கீழே சென்று சிறிது நேரம் தூங்குவார். ஏன் இங்கே படுக்கிறீர்கள்? என்றால், ஒருமுறை நபிகளார் இங்கே தூங்கினார்கள் என்பார். அந்த மரம் பட்டுப்போகாமல் இருக்க, தன் கையாலேயே அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். நபிகளார் மக்காவில் எந்த இடத்தில் தொழுதார்களோ, அதே இடத்தில் ஒரு சென்டிமீட்டர் கூட மாறாமல் தன் பாதங்களை வைத்துத் தொழுவார்.
இன்று நாம் அறிவியலையும் லாஜிக்குகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்னு உமரின் லாஜிக் ஒன்றே ஒன்றுதான் என் உயிரினும் மேலானவர் இதைச் செய்தார், அதனால் நான் செய்கிறேன்!
சுன்னாவின் மீது காதல் இருந்தால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் ஞானமும் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பிறகு அதிக ஹதீஸ்களை (2,630) அறிவித்த இரண்டாவது மாபெரும் அறிஞர். இவ்வளவு பெரிய மேதையாக இருந்தும், ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுப்பதில் அவர் காட்டிய எச்சரிக்கை சிலிர்க்க வைக்கும். ஒருமுறை அவரிடம் ஒருவர் வந்து ஒரு மார்க்கக் கேள்வியைக் கேட்டார். இப்னு உமர் (ரலி) சாதாரணமாக, எனக்குத் தெரியாது (அல்லாஹு அஃலம்) என்று சொல்லிவிட்டார். வந்தவர் ஆச்சரியத்துடன், நீங்கள் உமரின் மகன்! மிகப் பெரிய அறிஞர்! உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர், ஆம், எனக்குத் தெரியாது என்று சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. என் முதுகை நரகத்திற்கான பாலமாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை! என்றார்.
அரை மணி நேர யூடியூப் வீடியோவைப் பார்த்துவிட்டு, இணையத்தில் முஃப்திகளாக மாறி ஃபத்வா கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு இதைவிடப் பெரிய செருப்படி இருக்க முடியாது!
உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹீதான மரணத்திற்குப் பிறகு, இஸ்லாமிய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிளந்தது. அலி (ரலி) ஒரு பக்கமும், முஆவியா (ரலி) மறுபக்கமும் நின்றார்கள் (சிஃப்பீன், ஜமல் போர்கள்). பலர் அவரிடம் வந்து, நீங்கள் உமரின் வாரிசு, உங்களிடம் எல்லாத் தகுதியும் இருக்கிறது. நீங்களே அடுத்த கலீஃபாவாக (ஜனாதிபதியாக) வந்துவிடுங்கள்" என்று கெஞ்சினார்கள். ஆனால் அவர் அத்தனை அதிகாரங்களையும் தூக்கி எறிந்தார். என் காரணத்தால் ஒரு முஸ்லிமின் மூக்கில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதை விட, இந்த ஒட்டுமொத்த உலகமும் அழிந்து போவது எனக்கு மேல்!" என்று கூறி, எந்தப் பக்கமும் சாராமல், அதிகாரத்தை விடத் தன் மார்க்கமே பெரிது என்று நடுநிலை வகித்தார். தான் கொல்லப்படும் வரை (ஆம் இப்னு உமர் இயற்கை மரணமடையவில்லை. ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப்பின் கட்டளையின் பேரில் விஷம் தோய்ந்த ஈட்டி அவரின் கால்களில் குத்தப்பட்டது. இதனால் நோய்வாய்ப்பட்டே இப்னு உமர் இறந்தார்.)
இந்த கொள்கையில் உறுதியாகவே இருந்தார்.
எண்பத்து நான்கு (84) ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்தார். அவர் பார்த்த சாம்ராஜ்யங்கள் பல. அவர் காலடியில் கொட்டப்பட்ட செல்வங்கள் பல. ஆனால், அவர் இறந்தபோது ஒரு சாதாரண மனிதராக, நபிகளார் எப்படி வாழ்ந்து காட்டினாரோ, அதே எளிமையோடு விடைபெற்றார். இன்றைய காலத்தில் சுன்னா என்றால் வெறும் தாடி வைப்பதும், ஆடையைக் கரண்டைக்கு மேல் உடுத்துவதும் மட்டும்தான் என்று நாம் சுருக்கிவிட்டோம். ஆனால், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப் படித்தால் புரியும்... சுன்னா என்பது வெறும் தோற்றத்தில் மட்டும் இருப்பதில்லை. அது ரத்தத்தில் கலக்க வேண்டிய ஒரு வாழ்க்கை முறை! அந்த நடமாடும் சுன்னாவோடு, நம்மையும் இறைவன் சுவர்க்கத்தில் ஒன்றிணைப்பானாக! ஆமீன்.
- ✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbdullahIbnUmar #Sunnah #Sacrifice #AbdullahIbnuNaseerWriteups