நாம் சில நேரங்களில் எதேச்சையாக பயணங்களுக்கு செல்வோம். ஆனால் அந்த சில பயணம் ஒரு வரலாற்றையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு பயணம்தான் இமாம் மஃமர் பின் ராஷித் மேற்கொண்டது.
பெயர்: அபூ உர்வா மஃமர் பின் ராஷித் அல்-அஸ்தி
பிறப்பு: ஹிஜ்ரி 95 (பஸ்ரா, ஈராக்).
இறப்பு: ஹிஜ்ரி 153 (ரமலான் மாதம்).
ஆசிரியர்கள்: கதாதா, இமாம் ஸுஹ்ரி, அய்யூப் சிக்தியானி.
மாணவர்கள்: அப்துர் ரஸ்ஸாக் (மிக முக்கியமானவர்), சுப்யான் அஸ்-ஸவ்ரி.
அவர் பிறந்தது ஈராக்கில் உள்ள 'பஸ்ரா' நகரில். ஆனால் இன்று அவர் அறியப்படுவது "யமனின் இமாம்" என்று. இது எப்படி நடந்தது?
மஃமர் பின் ராஷித் இளமையில் துணிகளை விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்தார். வியாபார விஷயாக அவர் யமன் நாட்டின் 'ஸன்ஆ' நகருக்குச் சென்றார். அங்கே தனது வேலையை முடித்துவிட்டுத் திரும்பத் தயாரானார்.
ஆனால், யேமன் மக்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தார்கள். இந்த வியாபாரியிடம் இருக்கும் சரக்குகளை விட, இவரின் நெஞ்சில் இருக்கும் ஹதீஸ்கள் அதிக மதிப்பு வாய்ந்தவை! அவரிடம் இருக்கும் அபாரமான கல்வி ஞானத்தைக் கண்டு வியந்த யேமன் மக்கள், "இவரைத் திரும்ப ஈராக்கிற்கு அனுப்பக் கூடாது" என்று முடிவு செய்தனர்.
அவர் ஊருக்குப் போக விடாமல் தடுக்க யமன் மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
அவரை மிரட்டவில்லை, சிறையில் அடைக்கவில்லை. மாறாக, அந்த ஊரிலேயே மிகச்சிறந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!
இங்கேயே தங்கிவிடுங்கள், எங்களுக்கு மார்க்கம் சொல்லிக்கொடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார்கள். அன்று யமன் மக்கள் செய்த அந்தச் செயல் இல்லையென்றால், இன்று முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலே நமக்குக் கிடைத்திருக்காது.
ஹதீஸ் கலையில் மிகப் பெரிய இமாம் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி (ரஹ்). மஃமர் அவர்கள், இமாம் ஜுஹ்ரியிடம் மிக நீண்ட காலம் தங்கியிருந்து பாடம் படித்தவர். ஒருமுறை ஒரு மாணவர் நீங்கள் ஏன் மஃமர் அறிவிக்கும் ஹதீஸுக்கே முன்னுரிமை கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அறிஞர்கள் சொன்னார்கள்: "ஜுஹ்ரியிடம் பாடம் படித்தவர்களிலேயே மிகத் துல்லியமானவர், நம்பகமானவர் மஃமர்தான்."
மதீனாவின் கல்வியை (ஸுஹ்ரியின் வழியாக) யமனுக்குக் கடத்தி வந்த தபால்காரர் இவர்தான்.
நாம் முந்தைய பதிவில் இமாம் அப்துர் ரஸ்ஸாக் எழுதிய 'முஸன்னஃப்' பற்றிப் பார்த்தோம்.
உண்மையில், அந்த நூலுக்கு அடிப்படையே மஃமர் எழுதிய அல்-ஜாமிஃ என்ற நூல்தான். இதுதான் இஸ்லாமிய வரலாற்றில் தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட முதல் சில நூற்களில் ஒன்று. இன்றும் 'முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்' நூலின் கடைசிப் பகுதியாக இந்த 'ஜாமிஃ' இணைக்கப்பட்டுள்ளது.
இமாம் அப்துர் ரஸ்ஸாக் (யமனின் ஷைக்) உருவானதற்கு முழுக் காரணமே மஃமர் தான்.
அப்துர் ரஸ்ஸாக் கூறுகிறார்: நான் மஃமர் அவர்களிடம் பாடம் படிப்பதற்காக எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் இறுதியில், அவரிடம் கற்ற கல்வியால் என் கவலைகள் எல்லாம் பறந்து போய்விட்டன. அப்துர் ரஸ்ஸாக்கின் மாணவர்களில் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹி) முக்கியமானவர் என்பதை கடந்த பதிவுகளில் பார்த்தோமல்லவா!
மஃமர் அவர்கள் யமனிலேயே தங்கிவிட்டாலும், தனது கடைசி காலத்தில் தாய் மண்ணான ஈராக்கிற்கு (பஸ்ரா) செல்ல ஆசைப்பட்டார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு பஸ்ரா திரும்பினார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது.
அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே, அங்கே மரணமடைந்தார்.
பிறந்தது பஸ்ரா... வாழ்ந்தது யமன்... மீண்டும் மரணித்தது பஸ்ரா!
ஒரு மனிதர் தனது சுகபோகங்களை, சொந்த ஊரைத் துறந்து எங்கையோ ஒரு தேசத்தில் (யமன்) சென்று அறிவைப் பரப்பினார். இன்று நாம் படிக்கும் ஒவ்வொரு ஹதீஸிலும், அந்தத் தியாகத்தின் வாசனை வீசுகிறது. அவர் அன்று யமனில் தங்கவில்லை என்றால், ஹதீஸ் கலையின் ஒரு சங்கிலி அறுந்து போயிருக்கும்!