பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, July 7, 2026

பார்வையைப் பாதுகாப்போம்"


"பார்வையைப் பாதுகாப்போம்"

இன்றைய பொழுதுபோக்கு உலகில் திரைப்படங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. 

ஆனால் பெரும்பாலான திரைப்படங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கவர்ச்சியையும், உடல் அழகையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

 குறிப்பாக, அழகுபடுத்தப்பட்ட அந்நியப் பெண்களின் தோற்றங்களும் காட்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து காட்டப்படுகின்றன.

ஒரு முஸ்லிம் இத்தகைய காட்சிகளைப் பார்ப்பது மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள, பார்வையைப் பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதலில் வழங்கும் கட்டளை பார்வையைக் கட்டுப்படுத்துவது பற்றியதாகும்.

✍️✍️ இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 24 : 30)

✍️✍️ இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன் 24 : 31)

இந்த இரண்டு வசனங்களும் கற்பைப் பாதுகாப்பதற்கான முதல் படியாக பார்வையைக் கட்டுப்படுத்துவதை முன்வைக்கின்றன. 

கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய, அதற்கு வழிவகுக்கும் பார்வைகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இவ்வசனங்களின் தெளிவான போதனையாகும்.

நபியவர்கள் (ஸல்) அவர்கள் பொதுவழிகளில் அமர்ந்திருப்பவர்களுக்குக் கூட பார்வையைத் தாழ்த்துவது ஒரு கடமையாகும் என்று போதித்துள்ளார்கள்.

✍️✍️ “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் உரையாடுகின்ற எங்கள் அவை” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் அந்த அவைக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), 
நூல்கள்: புகாரி(2465), முஸ்லிம்(4305)

பொதுவழிகளில் இயல்பாக மக்களைக் காணும் சூழ்நிலையில்கூட பார்வையைக் கட்டுப்படுத்துமாறு கட்டளையிடப்பட்டிருக்கும்போது, திரையில் தொடர்ந்து அந்நியப் பெண்களின் உருவங்களை ரசித்து பார்ப்பது இந்தக் கட்டளையின் நோக்கத்திற்கு எதிரானதாகும்.

சில நேரங்களில் எதிர்பாராத விதமாக பார்வை விழுந்துவிடலாம். அதற்கும் நபியவர்கள் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

✍️✍️ நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இயல்பாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென எனக்கு ஆணையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி), 
நூல்கள்: முஸ்லிம் (4363), திர்மிதீ (2700), அபூதாவுத் (1836), அஹ்மத் (18369)

எதிர்பாராமல் ஒரு முறை பார்வை விழுந்தாலும் அதைத் தொடராமல் உடனடியாகத் திருப்பிக் கொள்ள வேண்டும் என்பதே நபிவழியாக இருக்கும்போது, திரைப்படங்களில் திட்டமிட்டு பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் அந்நியப் பெண்களைப் பார்ப்பது இந்த வழிகாட்டுதலுக்கு முற்றிலும் முரணானதாகும்.

அடுத்தவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அளவுக்கு இஸ்லாம் பார்வை விஷயத்தில் கடுமையான ஒழுங்குகளை வகுத்துள்ளது.

✍️✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப் பார்க்கும் போது, அவர் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
 நூல்: புகாரி 6902

✍️✍️ ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்த போது "என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே "அனுமதி கேட்க வேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6901

இந்த ஹதீஸ்கள் பார்வை என்பது சாதாரண விஷயமல்ல என்பதையும், அது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதோடு நேரடியாக தொடர்புடையது என்பதையும் உணர்த்துகின்றன.

மேலும், ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் ஏற்படக்கூடிய சோதனையை நபியவர்கள் (ﷺ) நேரடியாகக் கவனத்தில் கொண்டுள்ளனர்.

✍️. கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் நபி (ﷺ) அவர்களிடம் ஒரு மார்க்கத் தீர்ப்பைக் கேட்டு வந்தார். அப்பெண் "என் தந்தை மிகவும் வயோதிகரானவர். அல்லாஹ் விதித்த ஹஜ் கடமை அவரை அடைந்துள்ளது. ஆனால் அவரால் ஹஜ் செய்ய இயலாது. அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்தால் அது அவருக்குப் போதுமானதா?" அதற்கு நபியவர்கள் "உன் தந்தைக்காக நீ ஹஜ் செய்." என்று கூறினார்கள். அப்போது நபியவர்களின் பின்னால் அமர்ந்திருந்த ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் கழுத்தை நபி (ﷺ) அவர்கள் திருப்பிவிட்டார்கள். இதைக் கண்ட அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தந்தையின் சகோதரரின் மகனின் (ஃபழ்லின்) கழுத்தைத் ஏன் திருப்பினீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ﷺ) அவர்கள் "ஒரு இளைஞனையும் ஒரு இளம்பெண்ணையும் நான் கண்டேன். அவர்கள் இருவரின் மீது ஷைத்தானின் சோதனை ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்." என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதி (885), அஹ்மத் (562)

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அந்தப் பெண் ஒரு மார்க்கக் கேள்வியைக் கேட்க வந்திருந்தார். அதாவது முற்றிலும் அனுமதிக்கப்பட்ட மற்றும் நன்மையான ஒரு சூழ்நிலை. இருந்தபோதும், ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது ஷைத்தானின் சோதனைக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தில் நபியவர்கள் (ﷺ) உடனடியாகத் தலையிட்டு பார்வையை மாற்றினார்கள்.

எனவே, அந்நிய ஆண்களும் பெண்களும் கவர்ச்சிகரமாகக் காட்டப்படும் திரைப்படங்களை ரசித்து பார்ப்பது, குர்ஆன் வலியுறுத்தும் பார்வைத் தாழ்த்தல் என்ற கட்டளைக்கும், நபிவழி போதனைகளின் நோக்கத்திற்கும் முரணானதாகும்.

 பார்வையைப் பாதுகாப்பது கற்பைப் பாதுகாப்பதற்கான வாசலாகவும், இதயத்தின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழியாகவும் இஸ்லாம் கற்பிக்கிறது. 

அதனால் ஒரு முஸ்லிம் தனது கண்களையும், இதயத்தையும், சிந்தனைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய காட்சிகளிலிருந்து விலகி இருப்பதே இறையச்சத்தின் அடையாளமாகும்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான்.
 கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும்.

 நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். 
மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

நூல் : புகாரி (6612)

- Abdun Nasir M.I.Sc.,

Monday, July 6, 2026

மனித ஆசைக்கு முடிவு எங்கே?

மனித ஆசைக்கு முடிவு எங்கே?

கிடைத்தவற்றில் திருப்தி அடைவதை விட, கிடைக்காதவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை  மனிதனை தொடர்ந்து ஓட வைக்கிறது.

✍️✍️நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

"ஆதமின் மகனுக்கு ஒரு பள்ளத்தாக்கு அளவு தங்கம் இருந்தாலும், அவன் இன்னொரு பள்ளத்தாக்கு (தங்கம்) தனக்கு வேண்டும் என்று விரும்புவான். அவனுடைய வாயை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. மேலும் தவ்பா செய்பவரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்." 

(ஸஹீஹ் புகாரி 6439)

மனிதன் செல்வத்தைத் தேடுகிறான்…

பதவியைத் தேடுகிறான்…

 புகழைத் தேடுகிறான்…

 உலக இன்பங்களைத் தேடுகிறான்…

ஆனால் ஆசைக்கு ஒரு எல்லை வைக்கவில்லை என்றால், அவன் கையில் எவ்வளவு இருந்தாலும் அவன் மனம் ஏழையாகவே இருக்கும்.

உண்மையான செல்வம் பொருட்களின் அதிகரிப்பு அல்ல; மனதின் திருப்தியே ஆகும்.

✍️✍️நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்
 (ஸஹீஹ் புகாரி 6446,)

இந்த உலகில் நாம் சேர்ப்பது அனைத்தும் ஒருநாள் நம்மை விட்டு பிரியும். 
ஆனால் அல்லாஹ்விடம் நாம் அனுப்பி வைக்கும் நற்காரியங்களே நிரந்தரமாக இருக்கும்.
எனவே…
கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதற்கு முன், அல்லாஹ் கொடுத்திருக்கும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.
ஏனெனில்…
ஆசைக்கு முடிவு இல்லை; ஆனால் வாழ்க்கைக்கு முடிவு உண்டு. உலகம் தற்காலிகமே!மறுமையே நிலையானது.
மறுமைக்கு முடற்சிப்போம்🤲
- Abdun Nasir M.I.Sc.,

Sunday, July 5, 2026

அல்லாஹ்வின் கருணையை

ஒரு தாய் தனது குழந்தையை எவ்வளவு நேசிப்பாள்?

அந்த அன்பை விட பல மடங்கு அதிகமாக
அல்லாஹ் தனது அடியார்களை நேசிக்கிறான். 🤍

நாம் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும்,
உண்மையாக அவனை நோக்கித் திரும்பினால்,
அவனுடைய கருணையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

🤲 அல்லாஹ்வின் கருணையை ஒருபோதும் இழந்து விடாதீர்கள்.

💭 "அடியார்களின் மீது அல்லாஹ்வின் அன்பும் கருணையும் எல்லையற்றது."
#Allah #MercyOfAllah #IslamicReminder #Hadith #Islam #TamilIslamicPost #DeenReminder #IslamicQuotes #Muslim #Bukhari #IslamicStatus #Reminder #Forgiveness #HopeInAllah #HasbiHorizon

மனிதனின் கண்ணீரைத் துடைப்பது, ஒரு துயரத்தை நீக்குவது.....


🌿 ஒரு மனிதனின் கண்ணீரைத் துடைப்பது, ஒரு துயரத்தை நீக்குவது, ஒரு சிரமத்தில் உதவுவது — இவை அனைத்தும் அல்லாஹ்விடம் மிகப் பெரிய நற்செயல்களாகும்.

இன்று யாரோ ஒருவர் உங்கள் உதவிக்காக காத்திருக்கலாம். ஒரு நல்ல வார்த்தை, ஒரு துஆ, ஒரு சிறிய உதவி கூட அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நாம் பிறரின் துன்பங்களை இலகுவாக்க முயற்சித்தால், நமது துன்பங்களை அல்லாஹ் இலகுவாக்குவான்.

🤲 யா அல்லாஹ்! துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மனதையும், பிறருக்கு நன்மை செய்யும் குணத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக. எங்கள் உலக மற்றும் மறுமைத் துன்பங்களை நீக்குவாயாக.

آمين 🤍
#IslamicReminder #Hadith #IslamicQuotes #MuslimUmmah #Deen #Islam #Sunnah #Allah #Reminder #HelpingOthers #Sadaqah #TamilIslamicPost #HasbiHorizon #Jannah #Faith

அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதை.....


அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான்
என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு தண்டனையை தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான்.

[#அல்குர்ஆன் 14:42]

#நபி_ﷺ அவர்கள் கூறினார்கள்:  

" அநீதி இழைக்கப்பட்டால், அநீதி இழைக்கப்பட்டவரின் #துஆவுக்கும் #அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத்
திரையும் இல்லை." 

[புகாரி 2448]

கர்வமல்ல, தாழ்மையே.

- நாம் நடக்கும் இந்த பூமி நமக்குச் சொந்தமல்ல; அல்லாஹ் தற்காலிகமாக வழங்கிய அமானிதம். 

- இன்று *செல்வம், பதவி, அழகு, அறிவு* என்று எதைப் பெற்றிருந்தாலும், ஒரு கணத்தில் அனைத்தையும் இழக்க நேரிடலாம். ஆகவே மனிதனை உயர்த்துவது கர்வமல்ல, தாழ்மையே.

- கர்வம் மனிதனை இறைவனிடமிருந்தும், மக்களிடமிருந்தும் தூரப்படுத்துகிறது. 

- ஆனால் தாழ்மை அல்லாஹ்வின் நேசத்தையும், மக்களின் மரியாதையையும் பெற்றுத் தருகிறது. நம் ஒவ்வொரு அடியும் பணிவோடும், நன்றியோடும், இறையச்சத்தோடும் அமையட்டும்.

“*தாழ்மையாக வாழ்பவனை அல்லாஹ் உயர்த்துவான்; கர்வம் கொண்டவனை அவனே தாழ்த்துவான்*"

வெட்கம்


🌻திருமணங்களில் மலர வேண்டிய வெட்கம் 🌻

மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மத்யன் நாட்டில் ஒரு நல்ல மனிதரின் இரண்டு மகள்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். 

திருமணம் செய்வதற்காக அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்ற ஒப்புக்கொண்டார்கள்; பத்து ஆண்டுகள் நிறைவு செய்தால் அது அவர்களின் விருப்பம் என்று உடன்படிக்கை செய்தார்கள். 

திருமண உடன்படிக்கையின் ஒருபகுதியாக பத்தாண்டுகள் பணிசெய்வதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முன்வரும் அளவிற்கு அப்பெண்ணிடம் அப்படி என்னதான் இருந்தது?

இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி.

மத்யன் நகர முதியவரின் இரு மகள்களைப் பற்றியும் அவர்களிடம்  இருந்த சிறப்புகளை குர்ஆன் நேரடியாக விரிவாகப் பட்டியலிடவில்லை. 

ஆனால் இறைவசனங்களைப் படித்தால் அவ்விரு இளம் பெண்களிடமும் இருந்த  உயர்ந்த குணத்தை நாம் அறிந்து கொள்ளலாம். 

இரு சகோதரிகளில் ஒருவர் மூஸா எனும் அழகிய வாலிபனிடம் பேசவந்த அப்பொழுதை அல்குர்ஆன் பின்வருமாறு வர்ணிக்கிறது. 

✍️“அவ்விருவரில் ஒரு பெண் அவரிடம் வெட்கத்துடன் நடந்து வந்து கூறினாள்.....“

 (அல்குர்ஆன் 28:25)

கவனித்துப் பாருங்கள்!
இறைவன் அவளுடைய அழகையோ, செல்வத்தையோ, உடலமைப்பையோ குறிப்பிடவில்லை. மாறாக அவளுடைய வெட்கத்தையே குறிப்பிடுகிறான். 

ஒரு பெண்ணின் உயர்ந்த ஆபரணம் என்ன என்பதை இந்த ஒரு வசனமே நமக்கு உணர்த்துகிறது.

மற்றொரு சகோதரி தனது தந்தையிடம் மூஸா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறினாள்: 

✍️✍️“என் தந்தையே! இவரைப் பணியமர்த்திக் கொள்வீராக! நீர் பணியமர்த்துபவரில் சிறந்தவர் யாரெனில் வலிமையானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பவர்தான்” 

 (அல்குர்ஆன் 28:26)

இது மூஸா (அலை) அவர்களின் பண்பை குறிப்பிட்டாலும், 

ஒரே ஒரு நிகழ்வில் மூஸா (அலை) அவர்களின் வலிமையையும் நம்பகத்தன்மையையும் புரிந்து கொள்ளும் மதிநுட்பம் அந்தப் பெண்ணிடம் இருந்தது. மேலும் நற்பண்புகளை மதிக்கும் குடும்பச் சூழலில் அவள் வளர்க்கப்பட்டிருந்தாள் என்பதையும் இந்த வசனம் உணர்த்துகிறது.

ஒருத்தியிடம் வெட்கம் இருந்தது.

மற்றொருத்தியிடம் நற்பண்பை அறியும் மதிநுட்பம் இருந்தது.

மூஸா (அலை) அவர்கள் வெட்கம் என்ற உயர் பண்பிற்காக, அல்லது ஒரு நிகழ்விலேயே தன்னை மதிப்பீடு செய்தவள் தன்னுடைய வாழ்வின் எல்லா நிலையிலும் தன் எண்ணமறிந்து நடந்து கொள்வாள் என்ற மதிநுட்பத்திற்காக இருவரில் ஒருவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கலாம். 

(இது இறைவசனங்களிலிருந்து அறிஞர்கள் எடுத்துரைப்பது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.)

 எந்தப் பண்பை எடுத்துக் கொண்டாலும் இரண்டுமே உயர்ந்த பண்புகள்தான். 

 ஒரு வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் செல்வம், அழகு, அந்தஸ்து போன்றவற்றை விட மார்க்கப்பற்று, நற்பண்பு, வெட்கம், நம்பகத்தன்மை, மதிநுட்பம், போன்ற குணங்களே முதன்மை பெற வேண்டும் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாறு,  நமக்கு உணர்த்துகிறது.

ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் வெளிப்புற அழகோ அலங்காரமோ அல்ல; மாறாக வெட்கம், நம்பகத்தன்மை, நல்லொழுக்கம், மதிநுட்பம் போன்ற உயர்ந்த பண்புகள்தான். 

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது அழகு மட்டும் அல்ல; பொறுப்பேற்கும் திறன், நம்பகத் தன்மை , குணநலன்கள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டும் என்பதையும் மூஸா (அலை) அவர்களின் திருமண நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. 

ஆனால் இன்று நமது திருமண நிகழ்வுகள் எந்தத் திசையில் பயணிக்கின்றன?

நபிமார்களின் வரலாற்றில் வெட்கம் உயர்வாகப் போற்றப்பட்ட நிலையில்,

 இன்றைய நமது இஸ்லாமிய சமூகத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமகளை பொதுமக்களின் பார்வைக்கு முன்னிறுத்துவதும்,  

மாப்பிள்ளை தனது பைக்கின் பின்னால் பெண்ணை வைத்து பவனி வர
 மாப்பிள்ளைத் தோழர்கள் ஊர்வலமாகப் பின்தொடர்வதும்,

 புகைப்படங்களையும் காணொளிகளையும் பரவலாகப் பகிர்வதும் இஸ்லாமியர்களின் திருமணங்களில் சாதாரணமாகிவிட்டன.

அல்லாஹ் கூறுகிறான் : 
 ✍️✍️ “உங்கள் வீடுகளில் தங்கியிருங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் அலங்காரத்தை வெளிக்காட்டியது போல் வெளிக்காட்டித் திரியாதீர்கள்!“

(அல்குர்ஆன் 33 : 33)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் : 

 ✍️✍️ “இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.“

(அல்குர்ஆன் 24 : 30)

இஸ்லாம் வலியுறுத்தும் வெட்கம், மறைவு, கண்ணியம் ஆகிய பண்புகளுடன் இந்த ஊர்வல நிகழ்வு எவ்வாறு பொருந்துகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

மார்க்க முரண் காரியங்களை செய்வதற்கு வெட்கப்படுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும். 

✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
 நூல் : புகாரி (9)

✍️✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் ."

அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி), நூல் : புகாரி (3484)

இன்று திருமண ஏற்பாடுகளில் நாம் முதலில் விசாரிப்பது என்ன?

அழகையா?
வருமானத்தையா?

அல்லது வெட்கம், இறையச்சம், நற்பண்பு ஆகியவற்றையா?

மூஸா (அலை) அவர்களின் வரலாறு, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பது வெளிப்புற அலங்காரம் அல்ல; உயர்ந்த குணநலன்கள்தான் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அழகு காலத்தால் மாறலாம்.
செல்வம் வரலாம், போகலாம்.
ஆனால் வெட்கம், நற்பண்பு, இறையச்சம் ஆகியவை நிலையான செல்வங்களாகும்.

- Abdun Nasir M.I.Sc.,

விரல் ரேகைகள் (Fingerprints)

உங்கள் விரல் நுனிகள்… அல்லாஹ்வின் வல்லமையின் ஓர் அத்தாட்சி

உங்கள் விரல் ரேகைகள் (Fingerprints) இந்த உலகில் வேறு யாருடையதையும் ஒத்ததல்ல.

உங்கள் பெற்றோருடையதும் அல்ல...

உங்கள் பிள்ளைகளுடையதும் அல்ல...

இதுவரை வாழ்ந்த எந்த மனிதருடையதும் அல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும், அல்லாஹ் தனித்துவமான விரல் ரேகையை வழங்கியிருக்கிறான்.

இன்று, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை அடையாளம் காண விரல் ரேகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே, உயிர்த்தெழுதல் பற்றி பேசும்போது, அல்லாஹ் குர்ஆனில் ஒரு வியப்பூட்டும் உண்மையைக் கூறினான்:

«﴿بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ﴾»

«"ஆம்! அவனுடைய விரல் நுனிகளைக்கூட முன்புபோல் துல்லியமாக அமைக்க நாம் வல்லவர்களாக இருக்கிறோம்."
(ஸூரத்துல் கியாமா 75:4)»

இது, அல்லாஹ்வின் எல்லையற்ற ஆற்றலையும் முழுமையான அறிவையும் நினைவூட்டுகிறது.

உங்களை இவ்வளவு நுணுக்கமாகப் படைத்தவன், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் நன்கு அறிந்திருக்கிறான்.

எனவே, உங்களுடைய எந்தக் கண்ணீரும், எந்தத் துஆவும், எந்த நற்செயலும் அல்லாஹ்விடம் மறைந்ததல்ல.

ஸுப்ஹானல்லாஹ்!

அல்-ஹாகிம் அந்-நைஸாபூரி


ஹதீஸ் கலை வரலாற்றில் 'அல்-ஹாகிம் அந்-நைஸாபூரி' என்று சொன்னவுடன், உலகப் புகழ்பெற்ற 'அல்-முஸ்தத்ரக்' நூலை எழுதிய அபூ அப்துல்லாஹ் அல்-ஹாகிம் (ரஹ்) தான் பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவார். ஆனால், அவருக்கே உஸ்தாதாக இருந்து, ஹதீஸ் கலையில் ஒரு மாபெரும் அறிவுச் சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்த மற்றொரு 'ஹாகிம்' இருக்கிறார்.

அவர்தான் அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அந்-நைஸாபூரி! ஹதீஸ் துறை அறிஞர்கள் அவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, மரியாதையுடன் 'அல்-ஹாகிம் அல்-கபீர்' (பெரிய ஹாகிம்) என்று அழைப்பார்கள்.

முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னு அஹ்மத் என்ற இயற்பெயர் கொண்ட இந்த மாமேதையின் வியக்க வைக்கும் ஹதீஸ் கலைப் பயணத்தையும், அவரது அசாத்தியமான அறிவுத் திறனையும் பார்ப்போம்.

ஹிஜ்ரி 285-ஆம் ஆண்டு, அன்றைய இஸ்லாமிய அறிவுலகின் தலைநகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்த குராசான் மாகாணத்தின் ' நைஸாபூர் நகரில் இவர் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே கல்வியின் மீது தீராத தாகம் கொண்ட இவர், ஹதீஸ்களைத் தேடி பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

ஈராக், ஹிஜாஸ் (மக்கா, மதீனா), குராசான், மாவர அந்-நஹ்ர் என இஸ்லாமிய உலகின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து, அக்காலத்தில் வாழ்ந்த பல நூறு முஹத்திஸ்களைச் சந்தித்து, லட்சக்கணக்கான ஹதீஸ்களைக் கேட்டறிந்து நெட்டுருவாக்கினார்.

அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அவர்கள் வெறும் ஹதீஸ்களை மனனம் செய்து ஒப்புவிக்கும் 'ஹாஃபிழ்' மட்டுமல்ல; அவர் ஹதீஸ் கலையின் அறுவை சிகிச்சை நிபுணரைப் போன்றவர்.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் பார்ப்பதற்கு மிகச் சரியானது போலத் தோன்றும். ஆனால், அதனுள் மிக நுண்ணிய வரலாற்று முரண்பாடோ அல்லது அறிவிப்பாளர் பிழையோ மறைந்திருக்கும். அதைக் கண்டுபிடிக்கும் 'இலல்' கலையில் இவர் ஒரு மாபெரும் சிகரமாகத் திகழ்ந்தார்.

நைஸாபூர் நகரில் இவர் ஹதீஸ் விரிவுரை நடத்த அமர்ந்தால், பல திசைகளிலிருந்தும் மாணவர்கள் திரள்வார்கள். 'அல்-முஸ்தத்ரக்' நூலை எழுதிய புகழ்பெற்ற அபூ அப்துல்லாஹ் அல்-ஹாகிம் இவருடைய முதன்மை மாணவராவார்!

இவரது நூற்களில் முத்தாய்ப்பாகத் திகழ்வது, ஹதீஸ் கலைக்கு இவர் வழங்கிய மாபெரும் பொக்கிஷமான "அல்-அஸாமி வல்-குனா" (الأسامي والكنى - பெயர்களும் சிறப்புப் பெயர்களும்) என்ற பிரம்மாண்டமான நூலாகும். இந்த நூல் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?

ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பல நேரங்களில் தங்களது இயற்பெயரால் (உதாரணமாக: முஹம்மத், அலி) அழைக்கப்படுவார்கள். சில நேரங்களில் தங்களது குன்யா எனப்படும் சிறப்புப் பெயரால் (உதாரணமாக: அபூ அப்துல்லாஹ், அபூ அலி) அழைக்கப்படுவார்கள். இதனால் ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் பெரும் குழப்பம் ஏற்படும். "இங்கே சொல்லப்படும் அபூ அலி யார்? அவர் நம்பகமானவரா அல்லது பலவீனமானவரா?" என்று முஹத்திஸ்கள் குழம்புவார்கள்.

இந்தக் குழப்பத்தை நிரந்தரமாகத் தீர்ப்பதற்காகவே, எந்தெந்த அறிவிப்பாளர்களுக்கு என்னென்ன பெயர்கள், என்னென்ன குன்யாக்கள் உள்ளன என்பதை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து பல பாகங்களாக இந்த நூலை அவர் எழுதினார். இன்றும் ஹதீஸ் அறிவிப்பாளர்களைக் கண்டறியும் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஒரு அத்தியாவசியக் கையேடாகும்.

இவரது மற்ற நூல்களில் "அவாலீ மாலிக் பின் அனஸ்" குறிப்பிடத்தக்கது. இதில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட 236 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஸஹீஹ் மற்றும் பலவீனமான ஹதீஸ்கள் இரண்டும் உள்ளன.

அதேபோல்,

"ஷிஆர் அஸ்ஹாபுல் ஹதீஸ்" என்ற நூலில் 78 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் ஸஹீஹ் மற்றும் பலவீனமான ஹதீஸ்கள் இரண்டும் காணப்படுகின்றன.

ஒரு ஹதீஸ் அறிவிப்பாளர் நேர்மையானவரா அல்லது பலவீனமானவரா, நினைவாற்றல் குறைந்தவரா என்பதை எடைபோடுவதில் அபூ அஹ்மத் அல்-ஹாகிம் ஒரு 'தராசு' போலச் செயல்பட்டார்.

அவர் அறிவிப்பாளர்களை மதிப்பிடும்போது, எந்தவிதப் பாரபட்சமும் காட்டமாட்டார். ஒருவரின் தனிப்பட்ட பக்திக்கும், ஹதீஸை மனனம் செய்யும் திறனுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் மிகத் துல்லியமாகப் பிரித்துப் பார்த்தார். "இவர் மிகவும் நல்ல மனிதர், இரவு முழுவதும் தொழுபவர், ஆனால் ஹதீஸ்களை மனனம் செய்வதில் அவருக்குக் கோளாறு உள்ளது, எனவே அவர் பலவீனமானவர்" என்று மிகத் தைரியமாகத் தீர்ப்பளிப்பார்.

அவரது மதிப்பீட்டு வார்த்தைகள் பிற்கால அறிஞர்களான இமாம் தஹபீ, இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி போன்றோரால் தங்களின் நூல்களில் இறுதித் தீர்ப்பாக எடுத்தாளப்பட்டன. அந்தளவுக்கு அவருடைய 'ஜர்ஹ் வத்-தஃதீல்' நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தது.

இவரது அசாத்தியமான அறிவுத்திறனைப் பற்றி இவரது சமகால மற்றும் பிற்கால அறிஞர்கள் பிரமித்துப் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்:

அபூ அப்துல்லாஹ் அல்-ஹாகிம் (இவரது மாணவர்): "எனது ஆசிரியர் 'பெரிய ஹாகிம்' அவர்கள் தனது காலத்தில் ஹதீஸ் கலையின் இணையற்ற இமாமாகத் திகழ்ந்தார். அறிவிப்பாளர்களை அறிவதிலும், ஹதீஸ்களைப் பகுப்பாய்வு செய்வதிலும் அவரை மிஞ்சிய ஒருவரை குராசான் மாகாணம் கண்டதில்லை."

இமாம் தஹபீ (வரலாற்று ஆசிரியர்): தனது 'ஸியர் அஃலாம் அன்-நுபலா' எனும் வரலாற்றுப் பேரேட்டில் இவரைப் பற்றிப் பதிவு செய்யும்போது, "அல்-இமாம், அல்-ஹாஃபிழ், அல்-அல்லாமா (மாபெரும் இமாம், ஹதீஸ் மனனத்தின் சிகரம், மாபெரும் அறிஞர்)" என்று பட்டங்களை அடுக்கிச் சிறப்பிக்கிறார். மேலும், "ஹதீஸ்களில் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பதிலும், அறிவிப்பாளர்களின் பெயர்களை அறிவதிலும் அவர் ஒரு கடலாக இருந்தார்" என்று புகழாரம் சூட்டுகிறார்.

அபூ பக்ர் அல்-கத்தீப் அல்-பக்தாதி: "அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அவர்கள் ஹதீஸ் கலையின் மூத்த அறிஞர்களில் ஒருவராவார். அவரது நூல்கள் ஹதீஸ் துறையின் அடிப்படைகளை வலுப்படுத்தின" என்று குறிப்பிடுகிறார்.

தனது வாழ்நாள் முழுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும், அதில் கலப்படங்கள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காகவும் அர்ப்பணித்த இந்த 'பெரிய ஹாகிம்' அவர்கள், ஹிஜ்ரி 378-ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் நைஸாபூரில் காலமானார்.

வரலாற்றில் சில ஆசிரியர்கள் தங்களின் புகழ்பெற்ற மாணவர்களால் அறியப்படுவார்கள். ஆனால், அபூ அஹ்மத் அல்-ஹாகிம் அவர்கள், ஒரு புகழ்பெற்ற மாணவனை உருவாக்கியதோடு மட்டுமின்றி, ஹதீஸ் கலையின் ஆணிவேரைக் காத்த ஒரு மாபெரும் அறிவுப் பேரரசராக இஸ்லாமிய வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கிறார்!

- Abdullah Ibnu Naseer