பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, August 26, 2010

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்

சாப்பிடுவதின் ஒழுக்கங்கள்

தூய்மையான உணவுப் பொருட்களைத் தான் சாப்பிட வேண்டும்


நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
(அல் குர்ஆன் 2:172)

சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 256

பிஸ்மில்லாஹ் என்று கூறி, அருகில் இருப்பதிலிருந்து சாப்பிட வேண்டும்

உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது "நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல்: புகாரி 5376

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிஸ்மில்லாஹ்'' கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம்4105

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி'' என்று கூறட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 1781

பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்.

இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்''

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4108

உணவுப் பொருள் கீழே விழுந்தால் பேணவேண்டிய முறை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவருக்கு கவள வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்''

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்4138

சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்

நபி (ஸல்) அவர்கள், "(ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்: புகாரி 5398, முஸ்லிம் 4122

நின்று கொண்டு  குடிப்பது கூடாது

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4115

நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்

நபி (ஸல்) அவர்கள "ஸம் ஸம்'' தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5617

அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: "மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்''
நூல்: புகாரி 5615

பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்''

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்: புகாரி 153

சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவதும் அனைத்தையும் சாப்பிடுவதும்

(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை சூப்புமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4136

பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்

நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு "அதிலே கொழுப்பு இருக்கிறது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 211

குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3320

சாப்பிட்டு முடித்த பின் ஓத வேண்டிய துஆ

நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) உணவு விரிப்பை எடுக்கும் போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' (அதிகமான தூய்மையான வளமிக்க எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்) என்ற துஆவைக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: புகாரி 5458

உணவோ குடிபானமோ பரிமாறும் போது முதலில் வலது புறம் உள்ளவருக்குத் தான் கொடுக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு "வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5612

வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்

நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் "(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்'' என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரி 5620

ஒருவரது உணவு இருவருக்குப் போதும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்''

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4182

கூட்டாகச் சாப்பிட அனுமதிக்கப்பட்டவர்களும் இடங்களும்

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
 அல்குர்ஆன் 24:61

அடுத்தவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது

(தன்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தனது சகோதரரிடம் அனுமதி பெற்றாரே தவிர, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2455

சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்''

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5460

பசிக்கும் போது உணவுக்கே முன்னுரிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்''

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 671

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது''

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 969

உணவைக் குறை கூறுதல் கூடாது

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.

நூல்: புகாரி 3563

உணவை வீண் விரையம் செய்வது கூடாது

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 7:31

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 17:27

பொறுப்பாளி இறுதியில் தான் சாப்பிட வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்''

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1213, திர்மிதி 1816

மதுபானங்கள் மற்றும் போதைப் தரக்கூடிய பொருட்களை சாப்பிடுவது கூடாது

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல் குர்ஆன் 5:90, 91

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "போதை தரக்கூடிய ஒவ்வொரு பொருளும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்''

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி 6124


பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா?

? அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா?

அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன் 6:121)

"அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது'' என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் அவற்றை உண்ணக் கூடாது.

அதே சமயம் மாற்று மதத்தினர் நடத்தும் ஹோட்டல்கள் சிலவற்றில் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்கி அதைச் சமைக்கின்றனர். அல்லது முஸ்லிம்களை அழைத்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்குமாறு கூறி அவற்றிலிருந்து உணவு தயாரிக்கின்றனர். எனவே இவ்வாறு முஸ்லிம்கள் மூலம் அறுப்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஹோட்டல்களில் இறைச்சி உண்பது தடையில்லை. அவ்வாறு உறுதியாகத் தெரியாத பட்சத்தில், சந்தேகத்திற்கு இடமானதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு இறைச்சி உண்ணக் கூடாது.

பிஸ்மில்லாஹ் கூறி அறுக்க வேண்டும் என்று சொல்லும் போது, பிஸ்மில்லாஹ் சொல்லி யார் அறுத்தாலும் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

பிஸ்மில்லாஹ் என்பதை வெறும் சடங்குக்காக, மந்திரச் சொல்லாகக் கூறக் கூடாது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை எந்தச் செயலாக இருந்தாலும் அது உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் என்றால் யார்? அவனது ஆற்றல் என்ன? என்பதையெல்லாம் விளங்கியவர்கள் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி அறுப்பதையே இது எடுத்துக் கொள்ளும்.

உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை இல்லாமல் வெறும் மந்திர வார்த்தையாக பிஸ்மில்லாஹ் கூறி அறுத்தால் அதையும் சாப்பிடக் கூடாது.

பித்அத்தான விருந்துணவு வீட்டிற்கு வந்தால் சாப்பிடலாமா?

? வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்று எழுதி இருந்தீர்கள். இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்?

ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
 நூல்: இப்னுமாஜா (3360)

தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.

ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப் படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.

அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.

"பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்' என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும் "தபர்ருக்' (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.

பிற மதத்தவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாமா?

? நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா?

வேதக்காரர்களுடனோ, அல்லது மற்ற மதத்தினருடனோ ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தடை செய்யும் எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸில் இல்லை.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப் பெற்ற ஒரு சமுதாயத்தவரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும் வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் இருக்கிறோம். நான் எனது வில்லிலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயையும் ஏவி வேட்டையாடுவேன். (இவற்றில்) எது எனக்கு ஆகுமானதாகும்?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேதக்காரர்களின் விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரம் அல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவி விட்டு அவர்களின் பாத்திரத்தில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை நீங்கள் அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் சாப்பிடுங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா அல்ஹுசனிய்யி (ர-)
நூல்: புகாரி 5478, 5488

இந்த ஹதீஸில் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுவதை வைத்து, "மாற்று மதத்தவர்களுடன் சாப்பிடக்கூடாது' என்று உங்கள் நண்பர்கள் கூறியிருக்கலாம். ஆனால் இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைக் கூறவில்லை.

"வேறு பாத்திரம் இருந்தால் வேதக்காரர்களின் பாத்திரங்களில் சாப்பிட வேண்டாம்' என்று இந்த ஹதீஸ் பொதுவாகக் கூறினாலும், அபூதாவூதில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் இடம் பெற்றுள்ளது.

"நாங்கள் வேதக்காரர்களைக் கடந்து செல்கிறோம். அவர்கள் தங்களுடைய பாத்திரத்தில் பன்றி இறைச்சியைச் சமைக்கிறார்கள். தங்களது பாத்திரத்தில் மதுவையும் குடிக்கிறார்கள்'' என்று அபூஸஃலபா அல் ஹுஸனிய்யி (ரலி) கேட்டார். "அதுவல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அதிலேயே நீங்கள் சாப்பிடுங்கள்; குடியுங்கள். வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதை நீங்கள் தண்ணீரால் கழுவி அதில் சாப்பிடுங்கள்; குடியுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா (ர-)
நூல்: அபூதாவூத் 3342

முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களான பன்றி இறைச்சியையும், மதுவையும் வேதக்காரர்கள் சாப்பிடுவதைக் குறிப்பிட்டு நபித்தோழர் கேட்கும் போது தான் நபி (ஸல்) அவர்கள் இந்தப் பதிலை அளிக்கிறார்கள். எனவே இது பொதுவான தடை அல்ல என்பதை விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டால் அந்தப் பாத்திரத்தை நாம் பயன்படுத்தக் கூடாது; வேறு பாத்திரம் இல்லாவிட்டால் அதைக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்குத் தடையேதும் இல்லை.

அஜினா மோட்டா கலந்த உணவை சாப்பிடலாமா?

? அஜினா மோட்டா என்ற ஒரு பொருள் குழம்பின் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன?

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில், மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள் என்று நிரூபணமானால் அதை உண்ணக் கூடாது. அஜினாமோட்டா உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதால் கண்டிப்பாக அதை உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

இறந்தவர் வீட்டில் விருந்து வைக்கலாமா?

? ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டதாக எந்த ஹதீசும் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவுக்குச் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் கப்ருக்கருகில் இருந்து கொண்டு, "இறந்தவரின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் விசாலமாக்கிக் கொள்'' என்று தோண்டக் கூடியவரிடம் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பும் பொழுது ஒரு பெண்ணின் அழைப்பாளர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை அதில் வைத்தார்கள். மக்களும் வைத்தார்கள்; சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கவள உணவைத் தமது வாயில் மெல்லுவதை எங்களுடைய பெற்றோர் பார்த்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், "உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை நான் சாப்பிடுகிறேன்'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! எனக்காக ஓர் ஆடு வாங்கி வரும்படி பகீஃ (சந்தை)க்கு ஆளனுப்பினேன். எனக்கு ஆடு கிடைக்கவில்லை. எனது அண்டை வீட்டுக்காரர் ஓர் ஆடு வாங்கியிருந்தார். அதன் கிரையத்தைப் பெற்று ஆட்டைத் தாருங்கள் என்று அவரிடம் ஆளனுப்பினேன். அவர் (வீட்டில்) இல்லை. அதனால் அவரது மனைவியிடம் கேட்டு ஆளனுப்பினேன். அவர் அந்த ஆட்டை அனுப்பி வைத்தார்'' என்று அந்தப் பெண் பதில் சொல்லி அனுப்பினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதை கைதிகளுக்குச் சாப்பிடக் கொடு'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்சாரியைச் சேர்ந்த ஒரு மனிதர்
நூல்: அபூதாவூத் 2899, அஹ்மத் 21471, பைஹகீ, தாரகுத்னீ

இந்த ஹதீஸில் ஒரு பெண் உணவு கொடுத்து அனுப்பினாள் என்று கூறப்படுகின்றது. அந்தப் பெண் இறந்தவரின் மனைவி தான் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இறந்த வீட்டில் சாப்பிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்பிய பெண், இறந்தவரின் மனைவி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, இறந்தவரின் வீட்டில் போய் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் என்று கூறுவது அபாண்டமாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் 3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்று ஓதுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? இது போன்று சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் கூறுவதிலிருந்தே இவை பித்அத் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பூஜை செய்தவற்றை சாப்பிடலாமா?

? எங்கள் (அரசு) அலுவலகத்தில் மாதந்தோறும் ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாமி போட்டோ வைத்து, பூஜை என்ற பெயரில் பொரி கடலை தருவார்கள். இதைச் சாப்பிடலாமா? வேண்டாம் என்று கூறினால், "நீங்கள் தான் இந்தச் சாமிகளை நம்பவில்லையே! அப்படியானால் வெறும் பொரி கடலை என்று நினைத்துச் சாப்பிட வேண்டியது தானே!' என்று கேட்கிறார்கள். நம்மைப் பொறுத்த வரை வெறும் சடங்கு தானே! இதைச் சாப்பிடுவதில் என்ன தவறு? மேலும் இதற்காகப் பத்து ரூபாய் வழங்குவதில் தவறுண்டா?

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் "அறுக்கப் பட்டவை' என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் தான் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

சாமியை நம்பவில்லை என்பதால் அந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று கூற முடியாது. நாம் நம்பா விட்டாலும் அதை வணங்குபவர்கள் அந்த உணவில் புனிதம் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

இந்த உணவை இஸ்லாம் தடுத்துள்ளது என்ற அடிப்படையில் தான் உண்ணக் கூடாது என்று கூறுகிறோமே தவிர, அதில் புனிதம் இருப்பதால் சாப்பிடக் கூடாது என்று நாம் கூறவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற பூஜைகள் இறைவனுக்கு இணை கற்பித்தல் என்ற மிகப் பெரும் பாவச் செயலாகும். எனவே இதற்காகப் பணம் கொடுப்பதும் கூடாது. அரசு அலுவலகம் என்பதால் அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவது அரசியல் சட்ட அடிப்படையிலும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பூஜை செய்தவைகளும் மவ்லிது பாத்திஹா சாப்பாடும் ஓன்றா?

? ஆகஸ்ட் 2004 இதழில், தீபாவளியன்று பூஜை செய்யாத பொருட்களை மாற்று மதத்தினர் தந்தால் சாப்பிடலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் மவ்லிது, ஃபாத்திஹா, கந்தூரி போன்றவற்றில் வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிடலாமா? இரண்டு தரப்பினரின் நோக்கமும் ஒன்று தானே? என்று என் நண்பர் வினவுகின்றார். விளக்கவும்.

மாற்று மதத்தினர் பண்டிகையின் போது படைப்பதற்கும், நம்மவர்கள் மவ்லிதுக்குப் படைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மாற்று மதத்தினர் உணவைத் தயாரிக்கும் போதே சாமிக்குப் படைக்கும் நோக்கத்தில் மட்டும் தயாரிப்பதில்லை. இதில் படைக்காமல் தனியாக எடுத்து முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றார்கள். அந்த நோக்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தவும் செய்கின்றார்கள்.

ஆனால் மவ்லிது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்லிது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். இரண்டு தரப்பினரின் நோக்கத்திற்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. எனவே முழு உணவையும் எடுத்து வைத்து மவ்லிது ஓதாவிட்டாலும் அது நேர்ச்சையாக எண்ணியே தயாரிக்கப்படுவதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஹராமான உணவுகள் எவை?

? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி?
சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும்.



விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன. புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா(ரலி), நூல்: புகாரி 5781, 5530.

மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும். மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப் பல் இருக்கிறது. மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்றபற்களை விட நீளம் அதிகமாக இருக்கும்.

இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். பூனை, நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்தவரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூஅலீ இப்னு ஸீனா அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலைத் தருகிறார். கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது என்பது அவரது ஆய்வு.

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம். எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப் பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம்.

கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான். கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை, மத்ஹபுகளில் சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 5:96)

புத்தம் புதிய மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 16:14)

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல் வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் ஹராம் என அறிவிக்கவில்லை.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்(அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்(அல்குர்ஆன்4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

டால்பின் என்பது பன்றி வகையைச் சேர்ந்தது அல்ல. அதுவும் மீன் வகையைச் சேர்ந்தது தான். குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ளது பன்றி என்ற விலங்கின் இறைச்சி தானே தவிர பார்ப்பதற்கு பன்றியின் தோற்றத்தில் உள்ளது எல்லாம் ஹராம் என்று கூறப்படவில்லை.


நின்று கொண்டு குடிக்கலாமா?

? நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாம் என்பதற்கு ஆதாரப் பூர்வமான செய்திகள் உண்டா?

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால் (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நஸ்ஸால்
நூல்: புகாரீ (5615)

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு "ஸம்ஸம்' கிணற்றிலிருந்து (நீர்) பருகினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ (5617)

இதே கருத்தில் பல ஹதீஸ்கள் இருந்தாலும் இதற்கு மாற்றமாக, நின்று கொண்டு அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்றும் ஹதீஸ்கள் வந்துள்ளன.

எனவே முடிந்த அளவு அமர்ந்து அருந்த வேண்டும் என்றும், முடியாத போது நின்று கொண்டு அருந்தலாம் என்றும் இரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்து அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

பிற மதத்தவர் பன்றியை அன்பளிப்பு செய்தால் சாப்பிடலாமா?

? "இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது'' என்ற வசனத்தின் படி வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துக் கொடுத்தாலும் நாம் சாப்பிடலாமா?

முதலில் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அஹ்லுல் கிதாப் என்ற வாசகம் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக எல்லா யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார் களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப் பட்டன.

(பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6)

"இஸ்ரவேலர்களுக்குத் தான் நான் அனுப்பப்பட்டேன்'' என்று ஈஸா நபி கூறியதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 3:49, 5:72, 43:59, 61:6)

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ மாறியிருந்தால் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் தவ்ராத், இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டார்கள். மற்ற நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண இவ்வசனம் (5:5) அனுமதிக்கிறது என்பது தவறாகும் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, பன்றியை அவர்கள் அறுத்துக் கொடுத்தால் உண்ணலாமா? என்றால் கூடாது என்றே கூறவேண்டும். ஏனெனில் திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றவர்கள் இதை அறுத்துக் கொடுத்தாலே உண்ணக் கூடாது என்று கூறும் போது, இரண்டாம் நிலையில் உள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்கள் கொடுத்ததை எவ்வாறு உண்ணமுடியும்?

மேலும் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் வாழ்கிறோம். அவர்கள் பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்; மதுவை அருந்துகிறார்கள்; அவர்களுடைய பாத்திரத்தை (நாங்கள் பயன்படுத்தும் போது) என்ன செய்வது?'' என்று கேட்ட போது, "வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையானால் அதை (நன்றாக) கழுவிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அஹ்மத் (17071) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை சிந்தித்தால் வேதம் கொடுக்கப் பட்டவர்கள் பன்றியை அறுத்துத் தந்தாலும் ஹராம் என்பதை விளங்கலாம்.

எனவே வேதக்காரர்கள் நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களைத் தந்தால் அதை நாம் உண்ணலாம் என்றே இந்த வசனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, August 25, 2010

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்

இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.


ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன

குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.

ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விஷயத்திலும் கூற இயலும். இக்கட்டுரைத் தொடரின் இடையே நாம் விரிவாக அதை விளக்கவுள்ளோம்.

குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப் பட்ட வஹி - இறைச் செய்தி. ஹதீஸ்கள் என்பது வஹி அல்ல. உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின் பற்றுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே இறைவனிடமிருந்து அருளப் பட்ட குர்ஆனை மட்டுமே மூல ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இது தான் இந்தக் கருத்துடையவர்களின் வாதத்தில் உள்ள சாராம்சம்.

இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டதைத் தான் பின் பற்ற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. நிச்சயமாக இறைவன் புறத்திலிருந்து வஹியாக அருளப்பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றே நாமும் கூறி வருகிறோம்.

ஆனால் இறைவனிடமிருந்து வஹியாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும் தான். குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹியாக அருளப் படவில்லை என்று திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்று குர்ஆன் கூறுகிறதே தவிர, குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைச் செய்தி இல்லை என்று திருக்குர்ஆனில் கிடையாது.

திருக்குர்ஆனை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு குர்ஆன் ஆதாரமில்லாத வாதத்தையே இவர்கள் எழுப்புகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னும் தெளிவாக சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து அருளப் பட்டுள்ளதோ - குர்ஆன் எப்படி வஹியாக அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹியும் உள்ளது என்று திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல - ஏராளமான இடங்களில் தெளிவாக பிரகடனம் செய்கிறது.

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى(2)وَمَا يَنْطِقُ عَنْ الْهَوَى(3)إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى(4) سورة النجم

உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தனது) மனோ இச்சைப் படி பேசுவதில்லை. அது வஹியாக அறிவிக்கப் படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை. அல்குர்ஆன் (53 : 2, 3, 4)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப் படி பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது. குர்ஆன் வஹி என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர். குர்ஆன் வஹியாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை. "இவர் மனோ இச்சைப் படி பேச மாட்டார்'' என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும். மனோ இச்சைப் படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் - முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் - விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப் பட்டவையல்ல. மாறாக அது இறைவனால் அறிவிக்கப் பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் - அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுகின்ற அந்தக் கும்பல் மேற்கண்ட வசனத்திற்கு இவர்களாக சுய விளக்கம் அளிப்பது தான் விந்தையானது வேடிக்கையானது. நபிகள் நாயகத்தின் விளக்கமே தேவையில்லை என்றால் இவர்களும் விளக்கம் என்ற பெயரில் எதையும் திணிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற வேண்டும். அப்படி கூறினால் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் முழுவதும் வஹிதான் இறைச் செய்திதான் என்பது சந்தேகமற நிரூபணமாகி விடும். குர்ஆன் தவிர வேறு வஹி இல்லை என்பது குர்ஆனுக்கே முரணான வாதம் என்பதும் நிரூபணமாகி விடும்.

குர்ஆன் அல்லாத வஹி உண்டு என்று அந்த ஒரு வசனம் மட்டும் தான் கூறுகிறதா? இல்லை. ஏராளமான வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.

இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது.

وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ إِنَّهُ عَلِيٌّ حَكِيمٌ(51) سورة الشورى

வஹீயாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. தனது அனுமதியுடன் தான் நாடியதை அவன் அறிவிக்கின்றான். நிச்சயமாக அவன் உயர்ந்தவன். நுண்ணறிவாளன். (அல்குர்ஆன் 42 : 51)

மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது. ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல்லி அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.

மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

إِذْ رَأَى نَارًا فَقَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ عَلَى النَّارِ هُدًى(10)فَلَمَّا أَتَاهَا نُودِي يَامُوسَى(11)إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِي الْمُقَدَّسِ طُوًى(12)وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى(13)إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي(14) سورة طه

அங்கே அவர் வந்த போது மூஸாவே என்று அழைக்கப்பட்டார். "நிச்சயமாக நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக. நிச்சயமாக நீர் பரிசுத்தமான இடத்தில் இருக்கிறீர்கள். மேலும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, (வஹீயாக) அறிவிக்கப் படுவதை செவிமடுப்பீராக. நிச்சயமாக நானே அல்லாஹ்! என்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக.(அல்குர்ஆன் 20 : 11 - 14).

இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பல கட்டளைகள் அப்போது பிறப்பிக்கப் பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல் நேரடியாகவே பிறப்பிக்கப் பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக் காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் "திரைக்கு அப்பால் இருந்து'' என்று இறைவன் கூறுகிறான்.

இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக - வஹீ மூலம் - என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் வஹீ என்கிறான்.

இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீதான். இறைச் செய்திதான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.

திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை இப்படித்தான் செயல் படுத்த வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது அவர்கள் இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனே ஒப்புக் கொள்ளக் கூடிய - வலியுறுத்தக் கூடிய மூன்று வகையான வஹீகளில் ஒன்றை யாரேனும் மறுத்தால் அவர்கள் திருக்குர்ஆனைத்தான் மறுக்கிறார்கள். திருக்குர்ஆன் தான் மூன்றாவது வஹீ இருப்பதாக சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் கூறுகிறது.

இந்த இடத்தில் சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இந்த வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு மூன்று வகையான வஹீ அருளப் பட்டதாகக் கூறவில்லை. அல்லது நபிமார்களுடன் மூன்று வகைகளில் இறைவன் பேசுவதாகவும் கூறவில்லை. பொதுவாக மனிதர்களிடம் பேசுவதாகத்தான் கூறப்பட்டுள்ளது.

மரியம் (அலை), மூஸா நபியின் தாயார் போன்றவர்களிடம் இறைவன் பேசியுள்ளான். எனவே நபிமார்கள் அல்லாதவர்களுடன் இறைவன் பேசுவதைத் தான் மூன்றாவது வஹீ குறிப்பிடுகின்றது என்று கருதலாம் அல்லவா? என்பதே அந்தச் சந்தேகம்.

மனிதர்களுடன் பேசுவதாக இந்த வசனம் கூறினாலும் மற்ற இரண்டு அம்சங்கள் எப்படி மனிதர்களில் உள்ள இறைத்தூதர்களிடம் பேசுவதைக் குறிப்பிடுகின்றதோ அப்படித் தான் மூன்றாவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது வஹீ என்பதை முதல் இரண்டு வஹீயிலிருந்து வேறுபடுத்திக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் இந்த வாதம் அர்த்தமற்றது தவறானது என்பதை இதற்கு அடுத்த வசனம் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்து விடுகின்றது.

وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(52) سورة الشورى

இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை வஹீ மூலமாக உமக்கு அறிவித்து இருக்கிறோம். (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி நம் அடியார்களில் நாம் விரும்புவோர்க்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம். நிச்சயமாக நீர் நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர். (அல்குர்ஆன் 42: 52)

"இவ்வாறு தான் உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம்'' என்று இவ்வசனம் குறிப்பிடுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற்கண்ட மூன்று வஹீயும் வந்துள்ளன என்பதை இவ்விரு வசனங்களும் மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

அதாவது நபிகள் நாயகத்துடன்....

திரைக்கப்பாலிருந்தும் அல்லாஹ் பேசியிருக்கின்றான்.

ஜிப்ரீலை அனுப்பி குர்ஆன் மூலமும் பேசியுள்ளான்.

ஏனைய வானவர்களை அனுப்பி குர்ஆன் அல்லாத பல செய்திகளையும் சொல்லி அனுப்பியுள்ளான்.

இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்திலும் இறைவன் தனது கட்டளைகளைப் பதியச் செய்துள்ளான்

என்பது திட்டவட்டமாக நிரூபணமாகின்றது.

திருக்குர்ஆன் மட்டும் போதும் என்று யாரேனும் கூறினால் இறைவன் திரைக்கப்பாலிருந்து பேசினானே அந்தப் பேச்சுக்கள் எங்கே? இதயத்தில் போட்ட வழிகாட்டுதல் எங்கே? அவையும் இறைவனின் கட்டளைகள் எனும்போது அவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா! அவற்றை மறுப்பது மேற்கண்ட இரு வசனங்களையும் மறுத்ததாக ஆகாதா?

குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.

கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம்.

அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.

وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِنْ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(231) سورة البقرة

அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய கிதாபையும் ஹிக்மத்தையும் நீங்கள் நினைவு கூருங்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களுக்குப் போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்தவன் எனபதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 231)

وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا(113) سورة النساء

மேலும் அல்லாஹ் உம்மீது கிதாபையும் ஹிக்மத்தையும் இறக்கியுள்ளான். மேலும் நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான். உமக்கு அல்லாஹ் செய்திருக்கும் அருள் மகத்தானதாக உள்ளது. (அல்குர்ஆன் 4 : 113)

இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது. அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை உம்மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும். ஆனால் கிதாபையும் ஹிக்மத்தையும் உம்மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக் கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்துடையவர்கள் இதற்குப் பதிலளிக்கும் போது எள்ளி நகைக்கும் விதமாக உளற ஆரம்பித்து விடுகின்றனர்.

"ஹிக்மத் என்பதன் பொருள் ஞானம். பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ் ஞானத்தைக் கொடுக்கிறான். அதைத் தான் இங்கே குறிப்பிடுகிறான்'' என்பது இவர்களது விளக்கம்.

ஹிக்மத் என்ற வார்த்தையின் நேரடிப் பொருள் ஞானம், அறிவு என்பது தான். இதில் சந்தேகம் இல்லை. ஹிக்மத் என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள் கொண்டவர்கள் கிதாப் என்ற வார்த்தைக்கும் நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும். கிதாப் என்ற வார்த்தைக்கு எழுதப்பட்டது - தபால் என்பது பொருள். அகராதியில் வேதம் என்று பொருள் கிடையாது.

யாரோ எழுதிய துண்டுச் சீட்டைக் கூட கிதாப் எனலாம். ஒரே வசனத்தில் இடம் பெற்ற இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு மட்டும் அகராதியில் உள்ள பொருளைக் கொடுத்து விட்டு மற்றொரு வார்த்தைக்கு வேறு பொருள் கொடுக்க எந்த நியாயமும் இல்லை.

கிதாப் என்ற வார்த்தையின் பொருள் எழுதப்பட்டது என்று இருந்தாலும் அல்லாஹ் இறக்கியருளியதாகக் கூறும் போது அதன் பொருள் வேதம் என்று ஆகி விடுகிறது. அது போலவே ஹிக்மத் என்பதன் நேரடிப் பொருள் ஞானம் என்றாலும், இங்கே ஹிக்மத்தை இறக்கியருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அதாவது கிதாபை எவ்வாறு இறக்கியருளி இருக்கிறானோ அது போலவே ஹிக்மத்தையும் இறக்கியருளியிருக்கிறான்.

பொதுவாக மனிதர்களுக்கு ஞானம் வழங்கியது பற்றிக் குறிப்பிடும் போது ஞானத்தைக் கொடுத்ததாகவும், நபிகள் நாயத்துக்கு ஞானத்தை வழங்கியது பற்றிக் கூறும் போது ஞானத்தை இறக்கியருளியதாகவும் அல்லாஹ் கூறுகிறான். எனவே குர்ஆன் போன்ற மற்றொரு வஹீயை அல்லாஹ் இறக்கியுள்ளான் என்பதே இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்ளும் போது ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டிய இருவசனங்களுடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

மிகத்தெளிவான இவ்விரு வசனங்களுக்கும் முன்னால் இவர்களின் புரட்டு வாதம் நொறுங்கிப் போவதைக் கண்டவுடன் வேறு விதமாகவும் சமாளிப்பார்கள், சமாளிக்கிறார்கள். அதாவது கிதாப் தான் ஹிக்மத், ஹிக்மத் தான் கிதாப். இரண்டும் ஒன்று தான். கிதாபு என்றும் ஹிக்மத் என்றும் குர்ஆனையே இங்கே குறிப்பிடுகிறான் என்று பிதற்றுகிறார்கள்.

அல்லாஹ்வின் வசனங்களை எப்படியெல்லாம் கேலிக் கூத்தாக்குகிறார்கள் என்பதற்கு இந்த உளறல் சரியான ஆதாரமாகவுள்ளது.

அதுவும் இதுவும், அவனும் இவனும் என்று "உம்''மைப் பயன்படுத்தினால் இரண்டு தனித்தனி பொருட்களுக்கிடையே தான் பயன்படுத்த முடியும்.

அல்லாஹ்வையும் ரசூலையும் நம்புங்கள் என்று கூறினால் அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ் என்று வியாக்கியானம் அளிப்பது போன்ற பைத்தியக்காரத்தனமாக இவர்களது கூற்று அமைந்துள்ளது.

சோறும் குழம்பும் தந்தான் என்றால் இரண்டு பொருட்கள் தரப்பட்டதாகத்தான் பொருள்.

இன்னும் தங்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மேலும் உளறுகிறார்கள்.

குர்ஆனில் ஹிக்மத் (ஞானம்) இல்லையா? ஹிக்மத்துடைய குர்ஆன் என்று யாசீன் அத்தியாயத்தின் துவக்கத்தில் கூறப்படவில்லையா என்று கேட்டு இரண்டையும் ஒன்றாக்க முயல்கின்றனர்.

இவர்களின் வாதம் உண்மையாக இருந்தால் யாசீன் அத்தியாயத்தில் கூறியது போல் ஏன் இங்கே கூறவில்லை. ஹிக்மத்தான கிதாப் என்று கூறாமல் ஹிக்மத்தையும் கிதாபையும் என்று ஏன் கூற வேண்டும்? யாசீன் அத்தியாயத்தில் பயன் படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு அவ்வார்த்தையின் அமைப்பை வைத்துப் பொருள் கொள்வது போல் இங்கே பயன் படுத்தப் பட்ட வார்த்தைக்கு பொருள் கொள்ளும் போது இங்கே பயன்படுத்தப்பட்ட வாசக அமைப்பை வைத்துத் தான் பொருள் கொள்ள வேண்டும். இங்கே கிதாப் என்ற ஒரு பொருளும் ஹிக்மத் என்ற இன்னொரு பொருளும் வழங்கியதாகத் தெளிவாகக் கூறப்படுகின்றது.

இவர்களது அறியாமையைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

பொறுமை மிகுந்த சுலைமான் என்று ஒரு நாள் நான் கூறுவதாக வைத்துக் கொள்வோம். மறுநாள் மக்களிடம் "பொறுமையைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம்.

பொறுமை மிகுந்த சுலைமான் என்று நீங்கள் தானே கூறினீர்கள். எனவே சுலைமானை நான் பிடிக்கப் போகிறேன். சுலைமானிடமும் பொறுமை இருக்கத் தானே செய்கிறது என்று ஒருவன் வாதிட்டால் அவனை நாம் என்ன வென்போம்? அவனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சுலைமானிடம் பொறுமை இருப்பது தனி விஷயம். இந்த இடத்தில் பொறுமை எந்தக் கருத்தில் பயன் படுத்தப் பட்டது என்பது தனி விஷயம்.

எனவே அல்லாஹ் வேதத்தை எவ்வாறு தன் புறத்திலிருந்து அருளினானோ அவ்வாறே ஹிக்மத்தையும் தன் புறத்திலிருந்து வஹியாக அருளியிருக்கிறான். அதை நாம் ஹதீஸ்கள் என்கிறோம்.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் அல்லாஹ் இறக்கியருளிய ஹிக்மத் எது என்பதை குர்ஆனிலிருந்து கண்டு பிடித்துக் காட்டட்டும்!

ஹிக்மத் என்பதற்கு இவர்கள் கூறுகின்ற விளக்கம் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனே சான்று கூறுகிறது.

وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا(34) سورة الأحزاب

(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில் ஓதிக் காட்டப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத்தையும் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 33 : 34)

ஹிக்மத் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட ஞானம் தான் என்பது முற்றிலும் தவறானது என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக் காட்டப்படுகிறதோ அதுபோலவே ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான். நபியின் மனைவியர் வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களையும் ஓதிக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிக்மத்தையும் ஓதிக் காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

திலாவத் - "ஓதிக் காட்டுதல்' என்பது பிறரது வார்த்தையை ஒருவர் எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும். எனவே அல்லாஹ்வின் வசனங்கள் எப்படி நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது சொந்தக் கருத்தல்ல. இரண்டுமே அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான் இரண்டையும் நபி (ஸல்) ஓதிக் காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

குர்ஆன் அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை மேலும் பார்ப்போம்.

அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப்புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும் மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை.

மாறாக வேதத்தில் எழுகின்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும், கூடுதல் விளக்கம் தேவைப்படும் இடங்களில் அதை அளிக்கவும் தேவையான ஞானத்தையும் சேர்த்தே கொடுத்து அனுப்பியுள்ளான்.

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنْ الشَّاهِدِينَ(81) سورة آل عمران

உங்களுக்கு கிதாபையும் ஹிக்மத்தையும் நான் வழங்கியபின் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ் நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 3 : 81)

எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவு படுத்துகிறான். (நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் யாரும் வரமுடியுமா? என்பதைக் கூறும் இவ்வசனத்துக்குத் தலைகீழாக விளக்கம் கூறி நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் வர முடியும் என்று ஒரு மன நோயாளி உளறியிருப்பதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது "நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும் ஹிக்மத்தையும் நான் வழங்கிய பின்'' என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஹிக்மத்தும் வழங்கப்பட்டது. இரண்டுமே இறைவனால் தான் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(84)وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنْ الصَّالِحِينَ(85)وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ(86)وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(87) ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ(88)أُوْلَئِكَ الَّذِينَ آتَيْنَاهُمْ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَإِنْ يَكْفُرْ بِهَا هَؤُلَاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَيْسُوا بِهَا بِكَافِرِينَ(89) سورة الأنعام

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர் வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம். இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழி சார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியகும். தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான் (பின்னர்) அவர்கள் இணை வைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்து விடும்.

இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம். (அல்குர்ஆன் 6 : 84 - 89)

இவ்வசனங்களில் 1. இப்றாஹீம் 2. இஸ்ஹாக் 3. யஃகூப் 4. நூஹ் 5. தாவூத் 6. சுலைமான் 7. அய்யூப் 8. யூசுப் 9. மூஸா 10. ஹாரூன் 11. ஸக்கரிய்யா 12. யஹ்யா 13. ஈஸா 14. இல்யாஸ் 15. இஸ்மாயீல் 16. அல்யஸவு 17. யூனுஸ் 18. லூத் ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம் வசனத்தில் இவர்களது முன்னோர்கள், இவர்களின் சந்ததிகள் இவர்களது சகோதரர்களில் தோன்றிய நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான்.

அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும் சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு "இவர்களுக்கு கிதாபையும் வழங்கினோம். ஹுக்மையும் வழங்கினோம். நுவுவ்வத்தையும் வழங்கினோம்'' என்று அல்லாஹ் 89வது வசனத்தில் கூறுகிறான்.

கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. நுபுவ்வத் என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது. இவ்விரண்டை மட்டுமின்றி மூன்றாவதாக "ஹுக்மை' வழங்கியதாகக் கூறுகிறானே அது என்ன?

ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள். இவர்களில் தாவூத், சுலைமான், யூசுப், மூஸா போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக மார்க்க ரீதியிலான சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள். அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப் படவில்லை என்றிருந்தால் வேதத்தையும் நுவுவ்வத்தையும் ஹுக்மையும் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியதாகும். "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத - காஃபிர்களாக இல்லாத - ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்'' என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ தமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

"இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத (காபிராக இல்லாத) வேறு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்பேன்'' என்று அல்லாஹ் கூறுவது மூன்றுமே சமமானவை என்பதற்கும் மூன்றில் எதையும் நபிமார்களே மறுக்கக் கூடாது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக உள்ளது.

மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது. குர்ஆன் மட்டும் போதும் என்போர் காபிர்கள் தான் என்று திட்டவட்டமாக குர்ஆனே அறிவிக்கிறது.

أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمْ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا(54) سورة النساء

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கொடுத்தோம். அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (அல்குர்ஆன் 4 : 54)

இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் கிதாபையும் ஹிக்மத்தையும் வழங்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

பொதுவாக எல்லா நபிமார்களுக்கும் குர்ஆனுடன் ஹிக்மத்தும் அருளப்பட்டதாகக் கூறும் இறைவன் இதே முறையில் தான் இதே மாதிரியாகத் தான் நபிகள் நாயகத்துக்கும் வஹீ அருளியிருப்பதாகக் கூறுகிறான்.

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا(163) سورة النساء

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன் 4 : 163)

இந்த நபிமார்களுக்கு எவ்வாறு வஹீ அருளப்பட்டதோ அந்த வழி முறைக்கு மாற்றமாக புது முறையில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக குர்ஆனுடன் ஹிக்மத்தும் சேர்த்தே அருளப்பட்டது என்பதை இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எனவே நபிமார்கள் புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரர் போல் அனுப்பப் படவே இல்லை. மாறாக அதற்கு விளக்கம் சொல்லி, செய்து காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர். அதே அதிகாரத்துடன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்.

குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் அவர்கள் மறுப்பது மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களையும் கடந்த மூன்று தொடர்களாகச் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களையும் தான் மறுக்கிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூலஆதாரமே என்பதற்கான சான்றுகள் இவ்வளவு தானா! இன்னும் உள்ளன.

எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.

இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித் தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ(129) سورة البقرة

எங்கள் இறைவா! இவர்களுக்கு உன் வசனங்களை ஓதிக் காட்டி இவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து இவர்களைத் தூய்மை படுத்தக் கூடியவராக இவர்களுக்கு இவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்புவாயாக! நிச்சயமாக நீ மிகைத்தவன். ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 2 : 129)

இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.

"உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்''

"அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்''

என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் - வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் - இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.

உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள் அல்லது வேதத்தை அவர்களுக்கு கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள். இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு. ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை எப்படி ஆதாரமாகக் கொள்ள முடியும்? அல்லாஹ் இவ்வாறு கூறவில்லையே என்று யாரும் நினைத்து விடக்கூடாது. ஏனெனில் அல்லாஹ்வும் இப்படித் தான் கூறியுள்ளான்.

كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ(151) سورة البقرة

உங்களுக்கு உங்களிலிருந்தே ஒரு தூதரை நாம் அனுப்பினோம். அவர் உங்களுக்கு நமது வசனங்களை ஓதிக் காட்டுவார். மேலும் உங்களைத் தூய்மை படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருவார். மேலும் நீங்கள் அறியாதிருந்தவற்றையும் உங்களுக்குக் கற்றுத் தருவார். (அல்குர்ஆன் 2 : 151)

இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும் அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப் பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப் பட்டது.

அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும்.

ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்களாம்.

2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்களாம்!

3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்களாம்.

4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்களாம்.

5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்களாம்.

இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும்பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்னபிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன. அவ்வாறு இருப்பதால் தான் வசனங்களை ஓதிக் காட்டுவார். மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.

ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருள் விளங்கலாம். ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும். உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருள் விளங்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.

இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(164) سورة آل عمران

அவனது வசனங்களை ஓதிக் காட்டி மேலும் அவர்களைத் தூய்மைப் படுத்தி மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அல்லாஹ் மூமின்களுக்கு பேரருள் புரிந்து விட்டான் (3 : 164)

வெறும் வேதத்தை மட்டும் அருளியதை அருட்கொடையாக அல்லாஹ் கூறவில்லை. மாறாக தூதரை அனுப்பியது தான் அருட் கொடை என்கிறான். அதுவும் அந்தத் தூதர் வேதத்தை வாசித்துக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு விளக்கம் கூறும் அதிகாரமும் பெற்றவராக இருப்பதையும் கூறி விட்டு இதைத் தனது அருட்கொடை என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இதே போன்று ஜும்ஆ அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசித்துக் காட்டிய குர்ஆன் எங்கே என்றால் இதோ என்று கூறி விடுவோம். அந்த வேதத்துக்கு விளக்கம் அளித்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அந்த விளக்கம் எங்கே? அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறானே அவையெல்லாம் எங்கே?

இறைவன் அந்தப் பணிகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளான் என்பதிலிருந்து அவர்களின் விளக்கம் இன்றியமையாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த இன்றி அமையாத விளக்கம் எங்கே? குர்ஆன் மட்டும் போதும் என்போர் அதை ஒருக்காலும் எடுத்துக் காட்ட முடியாது.

வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் வசனங்களை ஓதிக் காட்டுவதும் ஹிக்மத்தைக் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்று உளறுவதைத் தவிர அவர்களிடம் இதற்கு பதில் கிடையாது.

அல்லாஹ் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன் படுத்தியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்தாவது தங்கள் மனோ இச்சையை நிலை நாட்டப் பார்க்கிறார்கள்.

பயனற்ற தேவையற்ற ஒரே ஒரு சொல்லும் அல்லாஹ்வின் வேதத்தில் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வேதத்தை ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை வெறுமனே வாசித்துக் காட்ட மட்டும் வரவில்லை. வாசித்துக் காட்டும் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும் நடைமுறைப்படுத்திக் காட்டும் அதிகாரம் பெற்றவர்களாகவுமே வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ - இறைச் செய்தி உள்ளது என்பதற்கான சான்றுகள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.

Tuesday, August 24, 2010

தூதருக்குக் கட்டுப்படுதல்


தூதருக்குக் கட்டுப்படுதல்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான். இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளி­ருந்தே நாம் நிலை நாட்டி வருகின்றோம்.


நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது.

குர்ஆனைப் பற்றிய ஆய்வும் அறிவும் இல்லாத மக்களிடம் மட்டும் தான் இத்தகையோர் பிரச்சாரம் செய்து ஏமாற்றுவார்களே தவிர நேரடியான விவாதத்துக்கு அழைத்தால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். இவர்களில் உள்ள ஏராளமான ‘குரூப்’ களும் விவாதம் என்றால் ஓடி ஒளிபவர்களாகவே உள்ளனர். இதி­ருந்தே இவர்களின் உளுத்துப் போன வாதத்தை அறிந்து கொள்ள முடியும்.

திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்­ம்களின் மீது கடமை என்பதை விளக்கும் மேலும் பல சான்றுகளைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் தொழுகையை வ­யுறுத்தும் வசனங்கள் மிக அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. மேலும் சில விஷயங்களும் அடிக்கடி வ­யுறுத்தப் பட்டுள்ளன. இவ்வாறு அதிகமாக வ­யுறுத்தப் பட்ட விஷயங்களில் ”அல்லாஹ்வுக்கும் கட்டுப் படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்” என்பதும் ஒன்றாகும்.

ஒரிரு இடங்களில் அல்ல. ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

”அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்” என்று (நபியே!) நீர் கூறும். ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் லி நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3 : 32)

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப் படுவீர்கள். (அல்குர்ஆன் 3 : 132)

எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான். அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள். லி இது மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 4 : 13)

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், சித்தீக்கீன்கள் (சத்தியவான்கள்), ஷுஹதாக்கள் (உயிர்த் தியாகிகள்), ஸா­ஹீன்கள் (நற்கருமங்கள் உடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 4 : 69)

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கட்டுப்படுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகின்றார். யாராவது ஒருவர் (இவ்வாறு கட்டுப்படுவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)

இன்னும் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5 : 92)

நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அல்குர்ஆன் 8 : 1)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள். (அல்குர்ஆன் 8 : 20)

இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றி விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்8:46)

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகின்றார்கள். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள். ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுகின்றார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9 : 71)

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கின்றார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24 : 52)

”அல்லாஹ்வுக்கு நீங்கள் கட்டுப்படுங்கள். இன்னும் (அவனுடைய) ரசூலுக்கும் கட்டுப்படுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப் பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)து தான். இன்னும் உங்கள் மீதுள்ள(கடமையான)து உங்கள் மீது சுமத்தப் பட்ட(படி நீங்கள் வழிபடுவ)து தான். எனவே நீங்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள். இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர் மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24 : 54)

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப் படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள். மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கட்டுப்படுங்கள். (அல்குர்ஆன் 24 : 56)

(நபியின் மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து வாருங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகின்றான். (அல்குர்ஆன் 33 : 33)

நெருப்பில் அவர்களுடய முகங்கள் புரட்டப் படும் அந்நாளில், ”ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 33 : 66)

அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கட்டுப்படுகின்றாரோ அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். (அல்குர்ஆன் 33 : 71)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், இன்னும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 47 : 33)

(போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றமில்லை. முடவர் மீதும் குற்றம் இல்லை. நோயாளி மீதும் குற்றம் இல்லை. அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகின்றாரோ அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் எவன் பின்வாங்குகின்றானோ அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான். (அல்குர்ஆன் 48 : 17)

”நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகின்றார்கள். ”நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் ‘நாங்கள் வழிப்பட்டோம்’ (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள்” என்று (நபியே! அவர்களிடம்) கூறுவீராக! ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை. மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில் எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 49:14)

தொழுகையை முறைப்படி நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள். அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகின்றான். (அல்குர்ஆன் 58 : 13)

நீங்கள் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். (அவனுடைய) இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள். இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பது தான். (அல்குர்ஆன் 64 : 12)

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று இத்தனை இடங்களில் அல்லாஹ் வ­யுறுத்திக் கூறுகின்றான்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாதவர்கள் காஃபிர்கள்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமே இறையருள் கிட்டும்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் பாழாகி விடும்.

என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் முஸ்­மா அல்லவா என்பதை அளந்து பார்க்கக் கூடிய அளவு கோலாக இந்தக் கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.

தொழுகை நோன்பு போன்ற கட்டளைகளை மீறினால் அது பெருங்குற்றமாகக் கூறப்பட்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய காரணமாக குர்ஆனில் கூறப்படவில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தால் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் காரணமாக கூறப்படுகின்றது.

எனவே, பல இடங்களில் கூறப்பட்டுள்ளதாலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் கூறப்பட்டுள்ளதாலும் இக்கட்டளையை சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றே ஈமானைப் பாதுகாக்க முடியும்.

திருக்குர்ஆனை மட்டும் அல்லாஹ் வழங்கி வேறு எந்த வழிகாட்டுதலையும் வழங்காமல் இருந்தால் லி குர்ஆனைக் கொண்டு வந்து மக்களிடம் தருவது மட்டுமே தூதரின் பணி, வேறு பணி ஏதும் அவருக்கு இல்லை என்றிருந்தால் இவ்வாறு இறைவன் நிச்சயமாகக் கூறமாட்டான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறுவது மட்டுமே இந்தக் கருத்தைத் தெளிவாகக் கூறிவிடும் போது தேவையில்லாமலும் வேறு கருத்தைக் கொடுக்கும் வகையிலும் ”இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்” என்று கூறியிருக்க மாட்டான்.

இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான் என்பதைப் பல வசனங்களை ஆதாரமாகக் காட்டி இத்தொடரில் நிரூபித்துள்ளோம். இறைத்தூதரின் அந்த விளக்கங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதைத் தான் இக்கட்டளைகள் வ­யுறுத்துகின்றன.

குர்ஆனில் உள்ளதை மட்டும் பின்பற்றுவது தான் ரசூலுக்குக் கட்டுப்படுவது என்று நபிவழியை மறுப்போர் கூறுவார்கள்.

அல்லாஹ் வீணான லி தேவையில்லாத லி குழப்பமான வார்த்தைகளைக் கூறி விட்டான் என்று அல்லாஹ்வையும் குர்ஆனையும் இழிவு படுத்தியாவது தங்களின் மனோ இச்சையை நிலை நாட்ட எண்ணுகிறார்கள் என்பது இவர்களின் பதி­­ருந்து தெரிகின்றது.

‘இதாஅத்’ என்ற மூலச் சொல்லே மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒருவரது கட்டளையை ஏற்று அப்படியே செயல்படுவது என்பது இதன் பொருளாகும்.

இதன் பொருளைச் சரியாக விளங்கிட அல்குர்ஆனின் 4 : 59 வசனத்தை உதாரணமாகக் எடுத்துக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பிள் லி அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4 : 59)

 அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.

 தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

 அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.

என மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் உள்ளன. முத­ரண்டு கட்டளைகளை விட்டு விடுவோம். மூன்றாவது கட்டளைக்கு என்ன பொருள்? அதிகாரத்தில் இருப்பவர்கள் போடுகின்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒப்புக் கொள்கின்றது. அதிகாரமுடையவர்களுக்கு இவர்கள் வழங்குகின்ற மரியாதை கூட அல்லாஹ்வின் தூதருக்கு வழங்குவதில்லை என்பது இதி­ருந்து தெரிகின்றது.

அதிகாரமுடையவர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படலாம் என்று பொருள் செய்த இவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுபடுங்கள் என்பது எந்தப் பொருளும் அற்றது என்று வாதிடுவதை விட அறியாமை வேறு இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இவ்வசனத்தில் அதீவூ (கட்டுப்படுங்கள்) என்ற சொல் இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள் என்பது ஓர் இடம். அலலாஹ்வின் தூதருக்கும் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்பது இரண்டாவது இடம்.

அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கும் போது அதனுடன் சேர்த்து ரசூலுக்குக் கட்டுப்படுவதையும் இறைவன் கூறுகின்றான். இதி­ருந்து அதிகாரமுடையவர்கள் சுயமாகக் கூறும் கட்டளைகளுக்குக் கட்டுப் படுவது போன்று தூதரின் கட்டளைக்கும் கட்டுப்படவேண்டும் என்பது உறுதியாகின்றது. ”தூதருக்குக் கட்டுப்படுவது என்பதன் பொருள் லி குர்ஆனுக்குக் கட்டுப்படுவதுதான்” என்ற வாதம் இதனால் அடிபட்டுப் போகின்றது.

மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களில் 8 : 20, 24 : 54 ஆகிய வசனங்களில் ரசூலுக்குக் கட்டுப்படுவது கூடுதலாக முன்னிறுத்தப் படுகின்றது. ‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவரைப் புறக்கணிக்காதீர்கள்’ என்று கூறப்படுகின்றது. அவ்விருவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று கூறாமல் அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று 8 : 20 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வைப் புறக்கணிக்க மாட்டார்கள். தூதரைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள் என்பதற்காகத் தேர்வு செய்து பயன்படுத்தப் பட்டது போல் இவ்வாசகம் அமைந்துள்ளது.

24 : 54 வசனத்தில் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று துவங்கி விட்டு, நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமை அவருக்கு, உங்கள் மீதுள்ள கடமை உங்களுக்கு என்றும் அவரைப் பின்பற்றினால் நேர்வழி அடைவீர்கள் என்றும் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அது போலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.

தூதரை நோக்கி வருதல்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனி­ருந்தே நாம் நிரூபித்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவு படுத்தி வருகிறோம். குர்ஆன் மட்டும் போதும்! நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியமில்லை என்று கூறுவோர் இது குறித்து விவாதம் நடத்திடத் தயாரா? என்று கேட்கும் போதெல்லாம் அவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டமெடுப்பதில் இருந்தும் அவர்கள் பொய்யர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப் படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் இத்தூதரின் பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் ‘முனாபிக்குகள்’ உம்மை விட்டும் ஒரேயடியாக வெருண்டு ஓடுவதை நீர் காண்பீர்!

அல்குர்ஆன் 4 : 61

இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்திய இரண்டு சொற்றொடர்களைக் கவனியுங்கள்.

1. அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் 2. இத்தூதரின் பாலும் என இரண்டு சொற்றொடர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

குர்ஆன் மட்டும் தான் அல்லாஹ் இறக்கியருளியது, அது மட்டுமே போதும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் ”இத்தூதரின் பாலும்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். எதையும் தெளிவாகப் பேசும் திருக்குர்ஆனில் வேண்டாத லி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய லி ஒரு சொல்லும் பயன்படுத்தப் படவில்லை என்பதை முஸ்­ம்கள் நம்ப வேண்டும்.

ஹதீஸ்களை மறுப்போரின் கருத்துப் படி அல்லாஹ் இறக்கியருளியதின் பால் வாருங்கள் என்று கூறியவுடனேயே கூற வேண்டிய செய்தி முற்றுப் பெற்று விடுகின்றது. ”இத்தூதரின் பாலும்” என்ற சொற்றொடரை அல்லாஹ் அர்த்தமில்லாமல் பயன்படுத்தி விட்டான் என்று அவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ் தேவையற்ற ஒரு சொல்லையும் பயன்படுத்தவே மாட்டான் என்று நம்பிக்கை கொண்டு குர்ஆனை மதிப்பவர்கள், ”இத்தூதரின் பாலும்” என்று அல்லாஹ் கூறியதை உரிய முக்கியத்துவத்துடன் கவனத்தில் கொள்ளக் கடமைப் பட்டுள்ளனர்.

திருக்குர்ஆனின் பால் மக்கள் வரக் கடமைப் பட்டுள்ளது போல் அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போதனைகளின் பாலும் வரவேண்டும். அவ்வாறு வருவது தான் குர்ஆனைப் பின்பற்றுவதாக ஆகும் என்பதை இவ்வசனம் தெளிவாகவே பிரகடனம் செய்வதை ஏற்றுக் கொள்வார்கள்.

இதே வசனத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ள மற்றொரு சொற்றொடரும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

இறைவன் இறக்கியருளியதன் பாலும் இத்தூதரின் பாலும் அழைக்கப் பட்டால் இரண்டையும் புறக்கணிப்பார்கள் என்று இவ்வசனத்தில் கூறாமல் ”உம்மைப் புறக்கணிப்பார்கள்” என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு புறக்கணிப்பவர்கள் முனாஃபிக்குகள் என்றும் பிரகடனம் செய்கின்றான்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் வருவதை ஏற்றுக் கொண்டு, இத்தூதரின் பால் வரவேண்டும் என்ற அழைப்பை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தம்மை அஹ்லுல் குர்ஆன் என்று கூறிக் கொண்டாலும் இவர்களுக்கு அல்லாஹ் சூட்டும் பெயர் முனாஃபிக்குகள்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் மட்டும் வருவோம். இத்தூதரின் பால் வர மாட்டோம் எனக் கூறும் இவர்களுக்காகவே இவ்வசனம் அருளப் பட்டது போல் அற்புதமாக அமைந்திருப்பதை அவர்கள் கவனித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்று கூறாமல்

அல்லாஹ் இறக்கியருளியதைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் கூறாமல்

உம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று இறைவன் கூறியது ஏன் என்பதை இவர்கள் சிந்திப்பார்களானால் நிச்சயமாக உண்மையை உணர்வார்கள்.

இதே போல் 5 : 104 வசனத்திலும் இரண்டு விஷயங்களின் பால் அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்.

”அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் இத்தூதரின் பாலும் வாருங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் ”எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகின்றார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்)

அல்குர்ஆன் 5 : 104

அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் மேலும் இத்தூதரின் பாலும் வாருங்கள் என்று இரண்டு அடிப்படைகளின் பால் இறைவன் அழைப்பு விடுக்கின்றான். இரண்டையும் ஒருசேர மறுப்பவர்கள் பற்றி இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.

இவ்வசனங்களி­ருந்து அல்லாஹ் இறக்கியருளியது மட்டுமின்றி அவன் தூதரின் பாலும் மக்கள் வரவேண்டும் என்பதும், இரண்டுமே இறைவனின் வஹீயை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் சந்தேகமற நிரூபிக்கப் படுகின்றது.

திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில், ”அல்லாஹ்வின் பாலும் அவனது தூதரின் பாலும் அழைக்கப் பட்டால்” என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

குர்ஆன் மட்டும் போதும் என்றிருந்தால், குர்ஆனைக் கொண்டு வந்து தருவது தவிர தூதருக்கு ஒரு வேலையும் இல்லை என்றிருந்தால் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது.

மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப் பட்டால் அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள். (அல்குர்ஆன் 24 : 48)

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்பு கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப் பட்டால், அவர்கள் சொல்வதெல்லாம் ”நாங்கள் செவியேற்றோம், கட்டுப்பட்டோம்” என்பது தான். இவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். (அல்குர்ஆன் 24 : 51)

மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33 : 36)

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய காரியத்தின் பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள். இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்கும் இடையேயும் ஆதிக்கம் செலுத்துகின்றான் என்பதையும் அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8 : 24)

அல்லாஹ்வின் பால் அழைக்கப் படுவது என்றால் திருக்குர்ஆனின் பால் அழைக்கப் படுவது என்பது பொருள். தூதரின் பால் அழைக்கப் படுவது என்றால் என்ன பொருள்? அதற்கும் திருக்குர்ஆனின் பால் அழைக்கப் படுதல் எனப் பொருள் கொள்ள முடியுமா? திருக்குர்ஆனின் பால் அழைக்கப் படுவது பற்றி ஏற்கனவே கூறப்பட்டு விட்ட பின் அவ்வாறு பொருள் கொள்வது பொருத்தமாகாது.

நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளபடி குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயின் பால் அழைக்கப் படுவதையே இவ்வாறு இறைவன் குறிப்பிடுகின்றான் எனப் பொருள் கொள்வதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களைப் பின்பற்றியே ஆகவேண்டும் எனக் கூறும் வசனங்கள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.

மீஸான்லிஸுபுர்லிஃபுர்கான்

திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அதுபோலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும். இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு கடந்த இதழ்களில் நாம் நிரூபித்தோம்.

இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம்.

யார் வேதத்தையும் எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் நம்ப மறுக்கின்றார்களோ அவர்கள் (இதன் விளைவைப்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.

அல்குர்ஆன் 40 : 70

தூதர்களுக்கு வேதம் மட்டும் தான் அருளப்பட்டது, வேறு எதுவும் இறைவனால் அருளப்படவில்லை என்றால் இவ்வசனத்தில் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

! வேதத்தையும்

! எதனுடன் நமது தூதர்களை நாம் அனுப்பினோமோ அதனையும்

என்று இறைவன் கூறுகின்றான்.

எனவே வேதத்துடன் அதற்கு விளக்கவுரையான செய்திகளையும் கொடுத்தே இறைவன் தூதர்களை அனுப்புகின்றான். இரண்டுமே இறைவன் புறத்தி­ருந்து கிடைத்த செய்திகளேயாகும்.

நாங்கள்வேதத்தை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம். முஹம்மது (ஸல்) அவர்கள் எதனுடன் அனுப்பப் பட்டார்களோ அதை ஏற்க மாட்டோம் என்று யாரேனும் கூறினால் அதன் விளைவை அவர்கள் மறுமையில் அறிந்து கொள்வார்கள்.

‘பின்னர் அறிந்து கொள்வார்கள்’ என்ற சொற்றொடரை ‘அவர்கள் நரகத்தையே அடைவார்கள்’ என்ற கருத்தில் திருக்குர்ஆன் பயன்படுத்துகின்றது. எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மறுப்போர் நரகவாசிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

இதுபோல் அமைந்த மற்றொரு வசனத்தையும் காணுங்கள்!

அல்லாஹ் தான் சத்தியத்துடன் இவ்வேதத்தையும் மீஸானையும் இறக்கினான்.

அல்குர்ஆன் 42 : 17

வேதத்துடன் மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் இங்கே கூறுகின்றான். மீஸான் என்பதற்கு நேரடிப் பொருள் எடை போடும் கருவி என்பதாகும். தராசை மீஸான் என்று கூறுவது இந்த அடிப்படையில் தான். நன்மை தீமைகளை மறுமையில் மதிப்பிடுவதையும் இறைவன் மீஸான் என்று கூறுகின்றான்.

மீஸானை இறக்குவதாகக் கூறும் போது தராசை இறக்குவதாகப் பொருள் கொள்ள முடியாது. உலகில் நன்மை தீமைகளை எடை போட்டுக் காட்டும் அறிவுரை என்றே பொருள் கொள்ள வேண்டும். வேதத்தை இறக்கியது போலவே மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் கூறும் போது இரண்டில் ஒன்றை மறுப்பவர்கள் எப்படி முஸ்­ம்களாக இருக்க முடியும்?

குறிப்பாக இவ்வசனம் நபிகள் நாயகத்தையே நோக்கிப் பேசுகின்றது. ”கியாமத் நாள் எப்போது என்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று இவ்வசனம் முடிகின்றது. இதி­ருந்து முந்தைய நபிமார்களைப் பற்றி இது பேசவில்லை. நபிகள் நாயகத்தைக் குறித்தே பேசுகின்றது.

நபிகள் நாயகத்துக்கு வழங்கப் பட்ட ”கிதாப்” எனப்படுவது குர்ஆன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட ”மீஸான்” என்பது என்ன?

இந்த இடத்திலும் தராசு என்றே பொருள் கொள்வார்களானால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன்பே தராசு இருந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. எனவே தராசையும் வேதத்தையும் இறக்கினோம் என்பதற்கு ‘குர்ஆனையும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் எடை போடக் கூடிய போதனைகளையும்’ என்பதே பொருளாக இருக்க முடியும்.

இதுபோல் மற்ற தூதர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இதுபோன்ற வார்த்தையை இறைவன் பயன் படுத்தியுள்ளான்.

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் நாம் அனுப்பினோம். மக்கள் நீதியை நிலை நாட்டுவதற்காக வேதத்தையும் மீஸானையும் அவர்களுடன் இறக்கி வைத்தோம்.

அல்குர்ஆன் 57 : 25

மனிதர்கள் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் நேர்வழி செல்வதற்காகவும் கிதாப், மீஸான் என்ற இரண்டு வழிகாட்டி நெறிகளை இறைவன் அனுப்பியுள்ளான். எனவே மீஸான் என்பது இறைத்தூதர்களின் விளக்கம் தவிர வேறு இருக்க முடியாது. (முந்தைய தொடர்களில் நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதை நாம் நிரூபித்துள்ளதைப் பார்வையிடுக)

நபிமார்கள் வேதத்தை மட்டும் இறைவனிடம் பெற்றுத் தருபவர்கள் அல்லர். வேதமல்லாத இன்னொரு வழிகாட்டுதலையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

இவர்கள் உம்மை நம்ப மறுத்தால் உமக்கு முன்னர் தூதர்களை நிராகரித்துள்ளனர். அவர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் ஸுபுரையும் ஒளி வீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் 3 : 184

இவர்கள் உம்மை நிராகரித்தால் இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நிராகரித்துள்ளனர். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளையும் ஸுபுரையும் ஒளி வீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் 35 : 25

இறைத்தூதர்கள் இரண்டு வழிகாட்டி நெறிகளுடன் அனுப்பப் பட்டனர் என்று இவ்விரு வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்றாலும் ஸுபுர் என்றாலும் ஏடு என்பதே பொருளாகும். கிதாப் எனும் ஏட்டையும் ஸுபுர் எனும் ஏட்டையும் இறைத்தூதர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்பதை வேதம் என்று நாம் புரிந்து கொள்கின்றோம். அப்படியானால் கிதாபுடன் அருளப்பட்ட ஸுபுர் என்பது என்ன? இறைவன் அனுப்பிய ஸுபுரை நிராகரிப்பது இறை வேதத்தையே நிராகரிப்பதாக ஆகாதா?

இரண்டு வகையான வஹீயை இறைவன் அருளியுள்ளதால் தான் கிதாபையும் ஸுபுரையும் அனுப்பினோம் என்று கூறுகின்றான்.

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு கிதாபையும் ஃபுர்கானையும் வழங்கினோம்.

அல்குர்ஆன் 2 : 53

ஃபுர்கான் என்றால் அசத்தியத்தி­ருந்து சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்று பொருள். வேதமும் சில இடங்களில் ஃபுர்கான் என்று கூறப்பட்டாலும் இங்கே கிதாபையும் ஃபுர்கானையும் என இரண்டு வழிகாட்டி நெறிகள் மூஸா நபிக்கு வழங்கப் பட்டதாகக் கூறப்படுகின்றது.

மூஸா நபியவர்களுக்கு வேறு வகையில் அருளப்பட்ட வஹீ தான் இங்கே ஃபுர்கான் என்று குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

! கிதாபையும் ஹிக்மத்தையும்

! கிதாபையும் ஹுக்மையும்

! கிதாபையும் இன்னொரு செய்தியையும்

! கிதாபையும் மீஸானையும்

! கிதாபையும் ஸுபுரையும்

! கிதாபையும் ஃபுர்கானையும்

என்றெல்லாம் கிதாபுடன் இன்னொரு செய்தி இணைத்துக் கூறப்பட்டிருக்கும் போது ஒன்றை ஏற்று மற்றதை மறுப்பது குர்ஆனையே மறுப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை.

! உம்மை விளக்குவதற்காகவே அனுப்பியுள்ளோம்.

! விளக்குவதற்காகவே தவிர உம்மை அனுப்பவில்லை.

! இவர் வசனங்களை ஓதிக் காட்டி, வேதத்தைக் கற்றுத் தருவார்.

! எந்தத் தூதருக்கும் அவரது தாய்மொழியிலேயே வேதத்தை அருளினோம். அவர் விளக்குவதற்காகவே இவ்வாறு செய்தோம்.

! அவர் பேசுவதெல்லாம் வஹீ தான்.

! இறைவனின் வஹீ மூன்று வகைகளில் உள்ளன.

! தூதர்கள் அனுப்பப் படுவதற்கான நோக்கம்.

! அவரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

! தூதருக்கும் கட்டுப்படுங்கள்.

என்றெல்லாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல சான்றுகளையும் ஆதாரங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி ஹதீஸ்களைப் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம் என்பதைச் சந்தேகமற நிரூபித்தோம்.

முடிவாகச் சொல்வதென்றால் நபிகள் நாயகத்தின் விளக்கமாக அமைந்துள்ள ஹிக்மத்தை, மீஸானை, ஃபுர்கானை அதாவது ஹதீஸை யார் நிராகரித்தாலும் அவர்கள் மறுப்பது குர்ஆனைத் தான் என்பதில் ஐயமே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய வழிகாட்டுதல் இன்றி வேறு வஹீ மூலம் நடைமுறைப் படுத்திய பல விஷயங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அங்கீகாரம் செய்துள்ளான். நபியின் கட்டளை தனது கட்டளையே என ஏற்றுள்ளான்.

Sunday, August 22, 2010

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே!



அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கவில்லை என்றே அறியமுடிகின்றது. மறைவான விஷயங்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததெல்லாம் அல்லாஹ்வினால் வஹிமூலம் அவர்களுக்கு அருளப்பட்டதே தவிர வேறில்லை.


அல்லாஹ் கூறுகிறான்: -


(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)


(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)

வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் – நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்-குர்ஆன் 11:123)


(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 27:65)


மேற்கண்ட திருமறையின் தெள்ளத் தெளிவான வசனங்களின் அடிப்படையில் மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அவன் வஹி மூலம் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறென்றும் தெரியாது என்பது தெளிவாகின்றது.

அல்லாஹ் கூறுகிறான்:-


(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல்-குர்ஆன் 3:44)


(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்). (அல்-குர்ஆன் 11:49)


72:21 கூறுவீராக: ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.’


72:22 கூறுவீராக: ‘நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.


72:23 ‘அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும்.


72:24 அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.


72:25 (நபியே!) நீர் கூறும்: ‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.


72:26 ‘(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். (அல்-குர்ஆன் 72:21-26)


எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு எதிராக ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கும் அனைத்து மறைவான விஷயங்களும் தெரியும் என்று கூறுவாரானால் அது அடிப்படையற்ற பொய்யான வார்த்தைகளாகும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதை உணரவேண்டும்.


http://suvanathendral.com/portal/?p=205