*ஈமானையே மஹராகக் கேட்ட இணையற்ற திருமணம்*
`துணையை நரகிலிருந்து மீட்டெடுத்த நற்காதல்`
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின குடும்பத்தார் மற்றும் உத்தமத் தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அன்பார்ந்த சகோதரர்களே!
இன்று உலகம் *காதல்* என்ற பெயரில் உணர்ச்சிகளுக்கும், கவர்ச்சிகளுக்கும் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இஸ்லாம் காதலை இறை அச்சத்தின் அடிப்படையில் பார்க்கிறது. உண்மையான காதல் என்பது *ஒருவரை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றி, சுவனத்தின் பக்கம் அழைத்துச் செல்வதாகும்*.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் தான் *சுவனத்து பெண்மணி உம்மு ஸுலைம்* (ரலி) அவர்கள்.
இஸ்லாமியக் காதலின் அஸ்திவாரமே இறைநம்பிக்கைதான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
> *நான்கு விஷயங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
அவளது செல்வம்,
அவளது குடும்பப் பாரம்பரியம்,
அவளது அழகு மற்றும் அவளது மார்க்கப்பற்று.
ஆகவே, நீ மார்க்கப்பற்று உள்ளவளைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றுக்கொள்!*
> ( புகாரி: 5090)
இந்த ஹதீஸின் நேரடி உதாரணமாக உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
`உலகின் விலைமதிப்பற்ற மஹர்!`
அபூதல்ஹா (ரலி) அவர்கள் அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அவர் பெரும் செல்வந்தர், வீரர் மற்றும் நற்குணமிக்கவர். அவர் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களைத் திருமணம் செய்ய விரும்பிக் கேட்டபோது,
ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தால் அவரது செல்வத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மயங்கியிருக்கலாம். ஆனால், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் பதில் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
> அவர்கள் கூறினார்கள்: *அபூதல்ஹாவே! உங்களைப் போன்ற ஒரு மனிதரின் விருப்பம் நிராகரிக்கப்பட மாட்டாது. ஆனால், நீங்கள் ஒரு இறைமறுப்பாளர், நானோ ஒரு முஸ்லிம். நான் உங்களை மணப்பது எனக்கு ஹலால் இல்லை. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால், அதுவே எனது மஹராகும். அதைத் தவிர வேறெந்தச் செல்வத்தையும் நான் உங்களிடம் கேட்க மாட்டேன்.*
> (நஸாயி: 3289)
இன்று பவுன்களையும், லட்சங்களையும் மஹராகக் கேட்கும் காலத்தில், ஒரு மனிதனின் *ஈமானை* மஹராகக் கேட்ட அந்தப் பெண்ணின் காதல் எவ்வளவு உயர்தரமானது! அந்தத் திருமணத்தின் மூலம் அவர் ஒரு கணவரை மட்டும் அடையவில்லை, மாறாக *ஒரு மனிதரை நரகத்திலிருந்து காப்பாற்றி இஸ்லாத்திற்குள் கொண்டு வந்தார்*.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
> *நீங்கள் மனைவியரிடம் மனநிம்மதி பெறுவதற்காக அவர்களை உங்களிலிருந்தே உங்களுக்காகப் படைத்திருப்பதும், உங்களுக்கிடையில் அன்பையும், கருணையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் சான்றுகள் உள்ளன.* (30:21)
உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் காதலில் இந்த *அன்பும் கிருபையும்* நிறைந்திருந்தது. அவர்களின் காதல் உலகத்தோடு முடிந்துவிடவில்லை, *தன் கணவரை மறுமையிலும் தன்னோடு சொர்க்கத்தில் இணைக்க வேண்டும்* என்ற உன்னத நோக்கம் அதில் இருந்தது.
*பொருளாதாரத்தை விட ஈமானுக்கு முன்னுரிமை*
சொத்து, சுகம், அந்தஸ்து ஆகியவற்றை விட மார்க்கப் பற்றே ஒரு திருமண வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ஒரு கொள்கைவாதியாக நின்றார். அபு தல்ஹாவின் காதலுக்காகத் தன் மார்க்கத்தை அவர் விட்டுக் கொடுக்கவில்லை; மாறாகத் தன் துணையை நரகிலிருந்து மீட்டெடுத்தார்
ஒரு ஷாலிஹான பெண் நினைத்தால், ஒரு மனிதனை நேர்வழிக்குக் கொண்டு வர முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று.
அன்புள்ளவர்களே! உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் ஈமானையும், புத்திசாலித்தனத்தையும் கண்டு நபிகளாரே வியந்துள்ளார்கள்.
> *நான் சொர்க்கத்தில் நுழைந்தபோது, அங்கே (அனஸ் இப்னு மாலிக் அவர்களின் தாயார்) 'ருமைஸா' (உம்மு ஸுலைம்) அவர்களைக் கண்டேன்* என்று நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.
(முஸ்லிம்: 6411)
உண்மையான காதல் என்பது நம் துணையைத் தொழுகைக்கு அழைப்பதிலும், ஹலாலான சம்பாத்தியத்தை வலியுறுத்துவதிலும், அல்லாஹ்வுக்குப் பயந்து நடப்பதிலுமே இருக்கிறது.
வல்ல அல்லாஹ், நம்முடைய இல்லற வாழ்வை உம்மு ஸுலைம் (ரலி) மற்றும் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வாழ்வைப் போல பரக்கத் நிறைந்ததாகவும், ஈமான் உறுதியுள்ளதாகவும் ஆக்கி அருள் புரிவானாக!
https://eagathuvam.com/இஸ்லாமியக்-காதல்-சுவனத்/
No comments:
Post a Comment