வரலாற்றுப் பக்கங்களில் சிலருடைய தியாகங்கள் பெரும் சப்தத்தோடு முழங்கும்.சிலருடைய தியாகங்களோ சப்தமில்லாமல், ஆனால் ஆழமாகப் பதிந்திருக்கும். பதவியும் அதிகாரமும் தேடி வரும்போது, அதைத் துச்சமென மதித்து உதறித் தள்ளிய ஒரு மாவீரரை இஸ்லாமிய வரலாறு சந்தித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் உயிருடன் இருக்கும்போதே சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்ட பத்து பேரில் (அஷரத்துல் முபஷ்ஷரா) ஒருவர்... அவர்தான் ஸயீத் இப்னு ஸைத் (ரலி).
இவருடைய தந்தை ஸைத் இப்னு அம்ர், இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்காவின் அறியாமைக் காலத்துச் சிலைகளை வணங்க மறுத்து, இப்ராஹீம் (அலை) அவர்களின் உண்மையான மார்க்கத்தைத் தேடி அலைந்தவர். தன் தந்தை விட்டுச் சென்ற அந்தச் சத்தியத் தேடலின் பக்குவம் ஸயீத் (ரலி) அவர்களின் ரத்தத்திலேயே ஊறியிருந்தது. இஸ்லாம் என்ற அழைப்பு வந்த மறுகணமே, எவ்விதத் தயக்கமுமின்றித் தன்னை இறைவனிடம் ஒப்படைத்தார்.
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் அது. உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு சிங்கம் போல் சீறித் திரிந்த நேரம். உமரின் சொந்தத் தங்கையான ஃபாத்திமா பின்த் கத்தாப் அவர்களைத்தான் ஸயீத் (ரலி) மணந்திருந்தார். இவர்கள் இருவரும் ரகசியமாக இஸ்லாத்தை ஏற்று, குர்ஆனை ஓதி வந்தனர். இந்தச் செய்தியறிந்த உமர் (ரலி) கோபத்தின் உச்சியில் வாளோடு வந்து இவர்களின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.
தங்கையையும், மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்களையும் உமர் கடுமையாகத் தாக்கினார். இருவருக்கும் ரத்தம் வழிந்தது. அந்த இக்கட்டான தருவாயிலும், ஸயீத் (ரலி) அவர்கள் பயந்து பின்வாங்கவில்லை. ரத்தம் வழிய வழிய நெஞ்சை நிமிர்த்தி நின்றவாறு உமரைப் பார்த்துக் கூறினார்கள். உமரே! நீங்கள் என்ன செய்தாலும் சரி, சத்தியம் உங்கள் மார்க்கத்தில் இல்லை. நாங்கள் இஸ்லாத்தை விடமாட்டோம்! அந்த ரத்தமும், அந்த அசையாத உறுதியும்தான் உமரின் இரும்பு உள்ளத்தை முதல்முறையாக உலுக்கியது. "என்னை விட வலிமை குறைந்தவர்கள், என் வாளுக்கு முன்னால் கொள்கைக்காக இப்படி நிற்கிறார்களே!" என்ற அந்தச் சிந்தனைதான் உமரை குர்ஆனை வாசிக்கத் தூண்டியது.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய உமர் (ரலி) என்ற மாபெரும் தலைவரை, இஸ்லாத்திற்குள் கொண்டுவர முதல் தியாகம் செய்தவர் ஸயீத் இப்னு ஸைத் (ரலி) தான்! உமர் (ரலி) கலீஃபாவாக ஆனபோது, உலகின் பெரும் பகுதிகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. உமரின் மைத்துனர் என்ற முறையில் ஸயீத் (ரலி) நினைத்திருந்தால் எந்த ஒரு பெரிய பதவியையும், சலுகையையும் பெற்றிருக்க முடியும். ஆனால், அதிகாரத்தின் வாடை கூட அவர் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.
ஷாம் தேசத்துப் போர்களில் (குறிப்பாக யர்மூக் போர்க்களத்தில்) தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய இந்த சப்தமில்லாத மாவீரர், தமாஸ்கஸ் வெற்றி கொள்ளப்பட்டபோது, இஸ்லாமியப் படையின் தளபதி அபூ உபைதா (ரலி) அவர்களால் டமாஸ்கஸின் பொறுப்பாளராக (கவர்னராக) நியமிக்கப்பட்டார். ஆனால், சொகுசான அந்தப் பதவி அவருக்குப் பிடிக்கவில்லை. உடனே தளபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்யும் பாக்கியத்தை விட்டுவிட்டு, நான் மட்டும் பதவியில் அமர்ந்திருக்க விரும்பவில்லை. இந்தப் பதவிக்கு வேறு யாரையாவது நியமியுங்கள். நான் ஒரு சாதாரணப் படைவீரனாகவே களத்திற்கு வருகிறேன்!" என்று கூறி, உலகமே ஆசைப்படும் கவர்னர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, சாதாரண போர்வீரராகப் படையில் வந்து இணைந்துகொண்டார் அந்தத் தியாகி. (அதன் பிறகு தான் யஸீத் இப்னு அபூ ஸுப்யான் (ரலி) அவரின் மரணத்தின் பின் முஆவியா இப்னு அபூ ஸுப்யான் (ரலி) சிரியாவின் கவர்னர் ஆனார்கள்)
சுபஹானல்லாஹ்! இன்று ஒரு சிறு பதவிக்காகவும், தலைமைக்காகவும் கொள்கையை விற்கக் காத்துக்கிடக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பதவிகள் தேடி வந்தும் அதை உதறித் தள்ளிவிட்டு, இறைவனின் திருப்தியை மட்டுமே தேடிய ஸயீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்கு எவ்வளவு பெரிய பாடம்! இஸ்லாத்திற்காக நாம் எதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்? பதவியும் புகழும் வரும்போது, நம் ஈமான் ஆட்டம் காண்கிறதா? எந்தப் பதவியும், புகழும் இல்லாத சாதாரண வரிசையில் நின்று இறைவனுக்காக உழைக்க நம் மனம் தயாராக இருக்கிறதா?
விளம்பரங்கள் இல்லாத தியாகங்களை இறைவன் தன் அரியணையில் வைத்துப் போற்றுகிறான் என்பதற்கு ஸயீத் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் வரலாறே சாட்சி.
சுவர்க்கத்தின் நற்செய்தி பெற்ற அந்த மாவீரரின் போல், புகழுக்காக அல்லாமல் இறைவனுக்காக மட்டுமே மார்க்கப் பணிகளைச் செய்யும் பாக்கியத்தை நமக்கும் இறைவன் வழங்குவானாக!
✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #SaidIbnZayd #AsharaMubashara #SilentWarrior #Sacrifice #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment