ஸஹீஹ் இப்னு குஸைமா காலவெள்ளத்தில் தொலைந்துபோன ஒரு மாபெரும் அறிவுப் பெட்டகம் இப்படித்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் காரணம் உண்டு. ஹதீஸ் கலையின் வரலாற்றில் மிக பிரம்மாண்டமானதும், அதே சமயம் இஸ்லாமிய அறிவுலகுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பை நினைவூட்டி நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவதுமான ஒரு நூல் தான் இப்னு குஸைமா. புகாரி, முஸ்லிமுக்கு நிகரான தரத்தைக் கொண்ட, ஆனால் காலத்தின் சூறாவளியில் சிக்கித் தனது பெரும்பகுதியை இழந்து நிற்கும் ஸஹீஹ் இப்னு குஸைமா நூலின் சுவாரஸ்யமான மற்றும் கண்ணீர் வரவழைக்கும் வரலாற்றை இன்று விரிவாகப் பார்ப்போம்.
இமாம் அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா (ரஹ்). ஹிஜ்ரி 223-ல் குராசான் மாகாணத்தின் நைஸாபூர் நகரில் பிறந்தார். இவர் சாதாரண அறிஞர் என்று நினைத்துவிடாதீர்கள்
அன்றைய இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞர்களால் இமாம்களுக்கெல்லாம் இமாம் என்று முடிசூட்டப்பட்ட மாமேதை! இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோரின் சமகாலத்தவரான இவர், ஹதீஸ் கலையிலும், சட்டவியலிலும் மாபெரும் சிகரமாகத் திகழ்ந்தார்.
1. புகாரி, முஸ்லிமுக்கு அடுத்த இடம்: ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல்களில் புகாரி மற்றும் முஸ்லிமுக்கு அடுத்தபடியாக, மிக உயர்ந்த மற்றும் தூய்மையான இடத்தை வகிப்பது ஸஹீஹ் இப்னு குஸைமா ஆகும்.
2.நேர்மை: இமாம் இப்னு குஸைமா அவர்களின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை. ஒரு அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையில் அல்லது நினைவாற்றலில் ஒரு சிறிய சந்தேகம் வந்தால்கூட, அந்த ஹதீஸைப் பதிவு செய்யும் போது, இந்த அறிவிப்பாளரின் நினைவாற்றல் சரியாக இருந்தால் மட்டுமே இது ஸஹீஹ் என்று தனது சந்தேகத்தை அங்கேயே வெளிப்படையாகப் பதிவு செய்துவிடுவார். இந்த அசாத்திய நேர்மை அவரை ஹதீஸ் கலையின் உச்சத்தில் அமர்த்தியது.
3. சட்டவியலின் ஆழம்: இந்த நூலின் உண்மையான பெயர் "முக்தஸர் அல்-முக்தஸர் மின் அல்-முஸ்னத் அஸ்-ஸஹீஹ்". இமாம் புகாரியைப் போலவே, இவரும் தனது அத்தியாயங்களின் தலைப்புகளிலேயே மாபெரும் சட்ட நுணுக்கங்களை வடித்து வைத்திருப்பார். ஒரு தலைப்பைப் படித்தாலே, இமாம் சொல்ல வரும் சட்டம் என்னவென்று விளங்கிவிடும் அளவுக்கு அது ஆழமானதாக இருக்கும்.
காணாமல் போன மாபெரும் பொக்கிஷம்!
இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நூல், இன்று நம் கைகளில் முழுமையாக இருக்கிறதா என்றால்... இல்லை! இதுதான் இந்த நூலின் ஆகப்பெரிய சோகம். பல நூற்றாண்டுகளாக நடந்த பல்வேறு போர்களாலும், காலத்தின் சுழற்சியாலும் இந்த முழுமையான பிரம்மாண்டமான நூல் முற்றிலுமாக உலகத்தை விட்டே அழிந்து போனது! பல நூற்றாண்டுகளாக உலக அறிஞர்கள், முந்தைய இமாம்களின் (உதாரணமாக இப்னு ஹஜர் போன்றவர்களின்) மேற்கோள்களை வைத்து மட்டுமே இப்படி ஒரு நூல் இருந்தது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.
இருபதாம் நூற்றாண்டில், பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த துருக்கியின் இஸ்தான்புல் நகரத்து 'தோப்காபி' (Topkapi) நூலகத்தின் பழைய சுவடிகளை (Manuscripts) அறிஞர்கள் தேடியபோது, தற்செயலாக இப்னு குஸைமா நூலின் ஒரு சிறு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது! இன்று நம்மிடம் இருப்பது எவ்வளவு? அந்தப் பழைய சுவடியிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹதீஸ் கலை அறிஞர் ஷேக் முஹம்மது முஸ்தபா அல்-அஃழமீ (ரஹ்) அவர்கள் நீண்ட பல வருடங்கள் ஆய்வு செய்து, இன்றுள்ள 'ஸஹீஹ் இப்னு குஸைமா'வை வெளியிட்டார். ஆனால், இது ஒட்டுமொத்த நூலின் வெறும் கால்வாசிப் பகுதி (1/4) மட்டுமே! (சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள்). நூலின் மீதமுள்ள முக்கால்வாசிப் பகுதிகள், என்றென்றைக்குமாக உலகத்தை விட்டு மறைந்து போய்விட்டன. (பெரும் இமாம்களான இப்னு ஹஜர் , இப்னு அஸீர் போன்றோர் இப்னு குஸைமாவின் காணாமல் போன பகுதிகளில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றனர். எனவே இதில் 12,000 க்கும் அதிகமான ஹதீஸ்கள் இருந்திருக்கும் என்று நாம் குத்துமதிப்பான ஒரு கணக்கை எடுக்கலாம்)
ஒரு மாபெரும் இமாம், தனது வாழ்நாளெல்லாம் ஊர் ஊராகச் சென்று அணு அணுவாகச் சேகரித்த ஒரு பிரம்மாண்டமான அறிவுச் சொத்தின் பெரும்பகுதி நம்மை வந்தடையவில்லையே என்ற ஏக்கம், இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு மார்க்க மாணவனின் மனதிலும் எழாமல் இருக்காது. மீதமிருக்கும் அந்தக் கால்வாசிப் பகுதியே இன்று மார்க்கச் சட்டங்களுக்கு ஒரு மாபெரும் தூணாகச் செயல்படுகிறது என்றால், முழு நூலும் கிடைத்திருந்தால் அது எத்தகைய பேரதிர்வை ஏற்படுத்தியிருக்கும்!
என் கைகளில் தவழும் இந்த நூல் இப்னு குஸைமாவில் மட்டுமே இடம்பெற்றுள்ள அதாவது கூடுதலான - ஸவாயிதான ஹதீஸ்களை மட்டும் கொண்டுள்ள தொகுப்பாகும்.
- Abdullah Ibnu Naseer