பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 11, 2019

மத்ஹப் தரீக்காக்கள்இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!


மத்ஹப் தரீக்காக்கள்
இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

(தமிழ்நாடு தவ்ஹீத் மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய தொடர் உரை எழுத்து வடிவில்
உரிமையாளனுக்கே அதிகாரம்!

எந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கென்று சில அடிப்படை விதிகள், சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுகிறான் என்றால், அதற்கென சில விதிமுறைகளையும் சட்டங்களையும் வகுத்துத் தான் செயல்படுகிறான்.

அவ்வாறு விதிகள் வகுக்கும் போது தான் அவ்விஷயம் வெற்றியடையும்.

அந்தப் பள்ளிக்கூடம் செயல்படும் நேரம், யாரைச் சேர்க்க வேண்டும், யாரை பணியை விட்டு நீக்க வேண்டும், மாணவர்களுக்கான சீருடை போன்ற எதுவாக இருந்தாலும், அதன் நிறுவனர் எவரோ அவர் தான் அவற்றைத் தீர்மானிப்பார். அவர் முடிவு செய்ததன் அடிப்படையில் தான் அவை செயல்படவும் செய்யும்.

இதில் இன்னொரு நபர்  தலையிட முடியுமா? தலையிட்டால் அவர்  ஒப்புக் கொள்ள மாட்டார். எனது பொறுப்பில் உள்ள விஷயத்திற்கு நான் தான் முடிவு செய்வேன் என்கிற இறுமாப்பு மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கிறது.

நாம் கட்டும் வீடாக இருந்தாலும், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, நாம் பயன்படுத்தும் வாகனம் என எதுவாக இருந்தாலும், நமக்குச் சொந்தமான காரியத்தில் முடிவுகள் எடுப்பது நாம் தான்.

இன்னொரு நபரின் தலையீட்டை நாம் விரும்ப மாட்டோம்.

அற்பமான மனிதனுக்கே இத்தனை உரிமையும், அல்லாஹ்வின் அடிமைகளான நமக்கே இறுமாப்பு இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ்வுக்கு அவன் சொந்தம் கொண்டாடுகிற இந்த மார்க்கம் மீது எத்தனை உரிமை இருக்கும்?

மனிதன், தனக்கு என்னவெல்லாம் உரிமைப்பட்டதோ அவற்றில் சட்டம் வகுக்கிறான்.  தொழுகை, நோன்பு விஷயத்தில் மனிதன் சட்டம் வகுக்க முடியாது.

இந்த அடிப்படையை விளக்குவது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.

இஸ்லாத்தில் சட்டம் வகுக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் இருக்கிறது.

இந்தக் கொள்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேர்

அந்த இமாமிடம் இது மக்ரூஹ், இந்த இமாமிடம் இது முஸ்தஹப், அந்த இமாமிடம் இது ஹலால், இந்த இமாமிடம் இது ஹராம்.. என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் மேலே நாம் சொன்ன அடிப்படைக் கொள்கையில் அவர்கள் இல்லை என்பது தான் காரணம்.

ஒரு இமாம் ஒன்றைச் சொல்வார்,; இன்னொரு இமாம் அதற்கு நேர் மாற்றமாக இன்னொன்றைச்  சொல்வார், நாம் எதைப் பின்பற்றுவது?

இப்படி மார்க்கத்தில் சுய கருத்துக்களைப் புகுத்துவதை மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ் எப்படி அங்கீகரிப்பான்?

நமக்குச் சொந்தமான ஒரு வீட்டில் இன்னொருவன் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்புவோமா?

நாம் நிர்வகிக்கும் ஒரு அலுவலகத்திலோ,பள்ளிக்கூடத்திலோ இன்னொரு மனிதர் நுழைந்து அதிகாரம் செலுத்துவதை நாம் வேடிக்கை பார்ப்போமா?

ஒரு விஷயத்திற்கு யார்  சொந்தக்காரரோ, யார் அதற்கு உரிமையாளரோ அவர்  தான் அந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முழு உரிமை படைத்தவர் என்று அற்பத்திலும் அற்பமான இந்த மனிதனே எண்ணும் போது, சர்வ வல்லமை படைத்த அந்த அல்லாஹ் அப்படி எண்ண மாட்டானா?

அவனுக்குச் சொந்தமான இந்த மார்க்கத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமையை இந்த அற்பமான மனிதன் கையில் வழங்கி விடுவானா?

அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அவன் தான் அதிபதி என்பதையும், மார்க்கத்தில் சட்டமியற்றும் முழு அதிகாரம் அவன் ஒருவனுக்கே இருக்கிறது என்பதையும் அடிப்படையில் நாம் புரிய வேண்டும்.

சட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா? :

சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் இருக்கிறதே தவிர, மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறு மார்க்கத்தில் சட்டமியற்றுகின்ற தகுதியாவது மனிதனுக்கு இருக்கிறதா?

மனித இனத்திற்கு, ஏனைய எந்தப் படைப்புக்கும் வழங்கப்படாத ஏராளமான அருள்களை அல்லாஹ் புரிந்திருக்கிறான்.

பல சாதனைகளையும், பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்ற ஆற்றலையும், அறிவையும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

சாதாரண குண்டூசியில் துவங்கி இன்று விஞ்ஞானத்தின் உச்சத்தில் நிற்பதாகச் சொல்கிறோமே, அவை அனைத்துமே மனிதனின் அறிவால் வந்தது தான்.

இதை மனதில் கொண்டிருப்பதால் தான் இவ்வளவு பிரமிக்க வைக்கும் அறிவைக் கொண்டிருக்கும் மனிதனுக்கு மார்க்கத்தின் நன்மை தீமையைக் கண்டறியும் அறிவும் இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம்.,

மனிதனுக்கு மார்க்கத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை சர்வ சாதாரணமாக நாம் மற்றவருக்கு வழங்கி விடுவதற்கு இந்த எண்ணம் தான் காரணமாக இருக்கிறது.

மத்ஹப் இமாம்கள் சொன்னால் அது தான் மார்க்கம், அவர்கள் சரி  என்று சொன்னால் சரி, தவறு என்று சொன்னால் தவறு.. என்கிற அளவிற்கு நாம் அவர்களை நம்பி விடுவதற்கும் இதுவே காரணம்.

ஆனால், மனிதனின் அறிவு, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றல், திறன் இவையெல்லாம் உலகத்தில் அவன் தன் திறமையைக் காட்டுவதற்குத் தான் பயன்படும். இஸ்லாம் மார்க்கத்தில் எது சரி  எது தவறு என்பதை அவனால் முடிவு செய்ய முடியுமா?

நான்கு இமாம்களிடம் ஒரு மார்க்கச் சட்டம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள். தாம் சொல்வது தான் சரி  என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனர்  என்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அந்த நான்கில் ஒன்று தான் சரி. அது எந்த ஒன்றாக வேண்டுமானாலும் இருக்கட்டும், மீதமுள்ள மூன்றும் தவறு என்று அதிலேயே விளங்குகிறது தானே?

அந்த மூன்று நிலைகளைச் சொன்ன இமாம்கள் தவறிழைத்திருக்கிறார்கள் என்பதும் அதிலேயே விளங்குகிறது தானே?

கம்யூனிஸம் தான் சரி  என்று ஒருவர் சொல்வார், அவரும் உலகின் மிகப்பெரிய அறிவாளி என்று அறியப்பட்டவராகத் தான் இருப்பார்.

அதற்கு மாற்றமாக, கம்யூனிஸச் சித்தாந்தம் தவறு என்று பிரச்சாரம் செய்பவரை எடுத்துக் கொண்டால் அவரும் உலகின் மிகப்பெரும் அறிவு ஜீவியாகத் தான் இருப்பார்.

இன்னும், அரசியல் சாசனத்தை நிறுவுவதாகட்டும்! குற்றவியல் சட்டங்களை உருவாக்குவதாகட்டும்! எதிலுமே முரண்பட்ட பல்வேறு நிலைபாடுகளை மனிதர்கள் கொண்டிருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் அனைவருமே கற்றறிந்த மேதைகளாகத் தான் காட்சியும் அளிக்கின்றனர்.

இவ்வாறு, இரண்டு அறிவு ஜீவிகள் இரு வேறு முரண்பட்ட நிலைபாட்டைக் கொண்டிருப்பதிலிருந்து நாம் விளங்க வேண்டியது, மனிதனின் சிந்தனை என்பது சில வரையறைக்கு உட்பட்டது தான். அவனுடைய புரிதலிலும் சறுகல்கள் ஏற்படும். தவறுகளும், கவனக்குறைவுகளும் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் ஏதேனும் உலகாதாயங்களைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே தவறிழைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மிகப்பெரும் விண்கலன் ஒன்றை மனிதன் கண்டுபிடிக்கிறான், அதற்கு தேவையான உபகரணங்கள், ராக்கெட் என பிரமிக்க வைக்கும் பல காரியங்களைத் தனது அறிவைக் கொண்டு அவன் உருவாக்குகிறான்.

பார்க்கும் நமக்கு அவனது அறிவை எண்ணி பிரமிப்பாய் இருக்கும்.

அனைத்தையும் செய்து விட்டு, அவனது கண்டுபிடிப்பின் வரைபடத்தையோ, அதன் மாதிரியையோ எடுத்துக் கொண்டு கோவிலில் சிலைக்கு முன் வைத்து பூஜை செய்கிறான்.

இது பளிச்சென்று தெரிகிற முரண்பாடா இல்லையா?

பெரும் பெரும் விஞ்ஞானப் படைப்புகளை உருவாக்குகின்ற திறமையும், ஆற்றலும் அறிவும் பெற்ற மனிதனுக்கு, தான் நிற்பது வெறும் கல்லுக்கு முன்பு தான் என்பது தெரிந்ததா?

அந்தக் கல்லுக்கு எந்த சக்தியும் இல்லை, நமக்கு எந்த நன்மையும் தீமையும் செய்வதற்கு அந்தக் கல் சக்தி பெற்றிருக்கவில்லை என்பது புரிந்ததா? இல்லை.

பெரிய அறிவாளிகள் என்று அறியப்பட்டோர் எல்லாம், எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்கள் அறிவை சரிவரச் செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

அறிவைக் கொண்டு சிலவற்றைச் சரியாக புரிவார்கள், சிலவற்றை முரண்பட்டு, தவறாகவும் புரிவார்கள்.

இன்னும் சொல்லப்போனால், இன்று சமூகத் தீமைகள் மலிந்து கிடக்கின்றதே அவற்றிலெல்லாம் யார்  அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று சிந்தித்தால் பெரும் அறிவு படைத்தவர்கள் தான் ஈடுபடுகின்றனர்.

அரசியல்வாதிகளில் துவங்கி, ஊடகம், சினிமா, மருத்துவம்,கல்வி என எல்லா துறைகளிலும் முறைகேடுகள் மலிந்து தானே காணப்படுகிறது? அங்கெல்லாம் இருப்பது பெரும் அறிவு ஜீவிகள் தானே?

மாகி நூடுல்ஸ்ஸில் கலப்படம் எனக் கூறி இன்று அதை அரசாங்கம் தடை செய்திருக்கிறது என்றால், இந்தக் கலப்படத்தை இன்றைக்குத் தான் அரசாங்கம் கண்டுபிடித்ததா?

எத்தனையோ ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த பொருள் தான். ஆனால் அப்போதெல்லாம் முறைகேடாக அவை அனுமதிக்கப்பட்டு வந்தது என்றால் இதிலெல்லாம் ஈடுபடுவதும் கற்றறிந்த கல்விமான்கள் தானே?

வரதட்சணை வாங்குவது தீமை என்று கற்றறிந்த மக்களுக்குத் தெரியாதா? அவர்கள் தானே இன்றைக்கு அதிகம் வரதட்சணை வாங்குகின்றார்கள்?

எனவே, அறிவு இருக்கிறது, எதையும் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதெல்லாம் மனிதன் சரியாகத் தான் செய்வான் என்பதற்குரிய காரிணிகளாகுமா என்றால் நிச்சயம் ஆகாது.

உலக காரியங்களுக்கே இது தான் நிலை என்று சொல்லும் போது மார்க்கத்தில் நன்மை, தீமையை உருவாக்குகின்ற அதிகாரத்தை மனிதன் கையில் வழங்க முடியுமா?

நிச்சயம் முடியாது.

இதன் காரணமாகவும் மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்பது புலனாகிறது.

உலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை :

ஆதம் நபியை அல்லாஹ் படைத்து இந்தப் பூமியின் அனைத்து ஆற்றலையும், அறிவையும் அவர்களுக்கு வழங்கியதாகச் சொல்கிறான்.

இன்று மனிதன் சொந்தம் கொண்டாடும் எல்லா அறிவும், ஆற்றலும், ஆதம் நபியிடமிருந்து வந்தவை தான் என்கிற அளவிற்கு அனைத்து அறிவையும் ஆதம் நபிக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்.

அத்தகைய பேரறிவு கொண்ட ஆதம் நபி அல்லாஹ்வின் கட்டளையை மீறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தை நெருங்காதே என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க, அதை மீறி அந்த மரத்தை நெருங்குகிறார்கள்.

கோபமுற்ற அல்லாஹ் அவரை அங்கிருந்து வெளியேற்றுகிறான்.

வெளியேற்றும் போது, உனக்கிருக்கும் அறிவைக் கொண்டு நீ இவ்வுலகில் வாழ்ந்து கொள் என்று அல்லாஹ் சொன்னானா? என்றால் அப்படி அவன் சொல்லவில்லை.

திருக்குர்ஆனில் அல்லாஹ் இது பற்றி சொல்லும் போது,

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள் என்று கூறினோம்.
திருக்குர்ஆன் 2:38

 அறிவு மேதையான ஆதம் நபிக்கு என்னிடமிருந்து நேர்வழி வரும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இன்னும் சொல்லப்போனால், மனித குலத்திற்கு அல்லாஹ்வால் இடப்பட்ட முதல் கட்டளையும் இது தான்.

பேராற்றலும், அறிவும் கொண்ட ஆதம் நபிக்கே சுயமாக நன்மை தீமைகளை முடிவு செய்யும் அதிகாரத்தை அல்லாஹ் வழங்கவில்லை எனும் போது, அவர்களை விடவும் பல மடங்கு அறிவு குறைவு உள்ள நம்மைப் போன்ற மனிதர்களுக்கு அல்லாஹ் அந்த அதிகாரத்தை வழங்கி விடுவானா?

அதிகாரங்கள் அனைத்திற்குமான முழு உரிமை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று இதன் மூலமும் தெளிவாகிறது.

கலிமாவின் சாராம்சம் :

இஸ்லாத்தின் அடிப்படை கலிமா.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்பதும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்பதும் இந்தக் கலிமாவில் உட்பொருள்.

இந்தக் கலிமாவை ஒருவன் ஏற்றால் தான் அவனால் முஸ்லிமாக ஆக முடியும்.

கலிமாவை ஏற்பது என்றால் என்ன? வாயால் சொல்வதன் மூலம் கலிமாவை ஏற்றுக் கொண்டதாக முடியுமா? முடியாது.

வாயால் சொல்வது என்று பார்த்தால் அஃரிணைப் பொருட்கள் கூட சொன்னதையே திருப்பிச் சொல்லும், கிளி சொல்லும்.

ஆனால், கலிமாவை ஏற்பது என்பது உள்ளத்தால் அதை நம்புவது.

அதன் கருத்தை உள்ளத்தில் உள்வாங்குவது தான் அதை ஏற்பதற்கான முழு அர்த்தம்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்று சொல்லும் போது, அவனை எஜமானனாகவும், நம்மை அவனுக்கு அடிமையாகவும் நாம் நம்புகிறோம்.

அவனைத் தவிர வேறு எவருமே எனக்கு எஜமானன் இல்லை என்று நம்புகிறோம்.

இப்படி நம்புவது உண்மையாக இருந்தால் ஒருவர் சுயமாக மார்க்கக் கட்டளை இடுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஒருவனை எஜமானன் என்று நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்றால், அவனைத் தவிர வேறு எஜமானன் இல்லை என்று நம்பி விட்டோம் என்றால் சட்டங்கள் இயற்றும் முழு அதிகாரம் அந்த எஜமானன் கைகளில் மட்டுமே தான் இருக்கிறது என்பதையும் சேர்த்தே தான் நாம் ஏற்கிறோம்.

அந்த எஜமானன் அல்லாத இன்னொருவரிடமிருந்து ஒரு சட்டத்தை நாம் ஏற்றோம் என்றால் அவரை நாம் எஜமானன் ஆக்கி விட்டோம் என்று பொருள்.

அது போல், முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் ஏற்கிறோம் என்றால், அல்லாஹ்வின் கருத்தைத் தான் இந்தத் தூதர்  நமக்குச் சொல்வார்  என்று நாம் நம்ப வேண்டும்.

இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர் அமெரிக்கா செல்கிறார்  என்றால், அவருக்கென்று சுய கருத்துக்கள் எத்தனை இருந்தாலும், அங்கே சென்று அவரது சுயக் கருத்த்துக்களை அவரால் பேச முடியாது.

இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்ற காரணத்தால் இந்தியாவின் கருத்து எதுவோ அதை மட்டும் தான் அமெரிக்காவில் அவரால் பேச முடியும்.

தூதர்  என்றாலே பொருள் அது தான்.

முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் நம்பினால், அவர்கள் அல்லாஹ் சொன்னதைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார்கள் என்கிற நம்பிக்கையும் சேர்ந்தே தான் இருக்கிறது. அப்படி தான் இருக்கவும் வேண்டும்.

இவ்விரண்டு விஷயங்கள் தான் கலிமா.

ஒருவர்  புதிதாக இஸ்லாத்திற்குள் நுழைவதாக இருந்தாலும், இந்த இரு விஷயங்களை உளமாற அவர்  நம்பினால் போதும். மூன்றாவதாக வேறெதையும் அவர் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

அதனால் தான் இந்த கலிமாவே எதிர்மறையாக நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது.

அல்லாஹ் தான் வணக்கத்திற்குரியவன் என்று நேர்மறையாகப் போதிப்பதற்கு பதில், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை என்று எதிர்மறையாக தன் கொள்கையை போதிக்கும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம் மட்டும் தான்.

இவ்வாறு எதிர்மறையாகப் போதிப்பதால் தான் அதன் கருத்து இன்னும் அழுத்தம் பெறுகிறது.

இதைச் சரியாகப் புரிந்து கொண்டால், மொத்த தலைப்பும் தெளிவாகி விடும்.

மார்க்கம் என்று நாம் எதைச் செய்வதாக இருந்தாலும், எதை நம்புவதாக இருந்தாலும், அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும், அல்லது அல்லாஹ்வின் தூதர்  சொல்லியிருக்க வேண்டும்.

இது தவிர வேறு யார்  சொன்னாலும், அது அடிப்படை கலிமாவுக்கு எதிரானது என்கிற வகையில் அதை நாம் நம்பக் கூடாது.

மார்க்கத்திற்கு சொந்தக்காரன் யார்?

அல்லாஹ் தமது திருமறையில் கூறும் போது,

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
திருக்குர்ஆன் 39:3

நாம் ஒரு வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடுகிறோம் என்றால், அதன் அனைத்து உரிமைகளும் நமது கைகளில் மட்டும் தான் இருக்கிறது என்று பொருள்.

நமது வீட்டின் ஒரு பகுதியை இன்னொருவர் வந்து ஆக்கிரமித்தால் அதை நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

அற்பமான ஒரு வீடு தொடர்பாக அற்பமான இந்த மனிதனுக்கே இத்தனை ரோஷமும், உரிமையும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் என்று தன்னைப் பற்றி கூறும் அல்லாஹ்வுக்கு இந்த மார்க்கத்தில் எந்த அளவிற்கு உரிமை இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவனது தூதரான முஹம்மது நபி (சல்) அவர்களுக்குக் கூட இந்த மார்க்கத்தில் எந்த உரிமையும் கிடையாது. அதை இந்த வசனத்தின் வாயிலாக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

மனிதர்களுக்கும் அல்லாஹ் தான் எஜமானன், அது போன்று, இந்த மார்க்கத்திற்கும் அவன் தான் எஜமானன் !

இன்னும் சொல்லப்போனால், இஸ்லாம் மார்க்கத்தை ஒருவர்  புதிதாக தழுவுகிறார் என்றால் உலகிலுள்ள மனிதர்களுக்கு அதில் ஏதேனும் உரிமை கொண்டாட இடமிருக்கிறதா?

கிறித்தவர்கள் போப் என்று ஒருவரை நியமித்து வைத்திருக்கிறார்களே, இவர் நாடினால் தான் ஒருவரால் கிறுத்தவராக முடியும் என்று, அது போன்று இஸ்லாத்தில் எவரேனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை.

ஏன் இல்லை என்றால், இந்த மார்க்கத்திற்கு உரிமையாளனாக எந்த மனிதனும் இல்லை,

உரிமையாளன் அல்லாஹ்.

அதனால் தான் ஒருவன் இஸ்லாத்தைத் தழுவ எண்ணினாலும், அவன் யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை, வெறுமனே மனதால் எண்ணிக் கொண்டாலே போதும் என்று சொல்கிறது இஸ்லாம்.

ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வுக்கே :

ஒட்டு மொத்த அண்ட சராசரங்களும் ஒரு நாள் அழியும். அப்போதும் அல்லாஹ்வின் திருமுகம் மட்டும் நிலைத்திருக்கும், அவனே நித்திய ஜீவன். அவனே எல்லா பொருட்களின் மீதும் முழு ஆற்றல் கொண்டவன்.

இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் சொல்லும் போது,

உங்கள் தீனை (மார்க்கத்தை) எனக்கு நீங்கள் கற்றுத் தருகிறீர்களா? என்று மிகக் கடுமையாகக் கேட்கிறான்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளை யும் அறிந்தவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 49:16

அல்லாஹ்வுக்கே அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன எனும் போது அவனுக்கு தெரியாதவை என்ன?

ஒரு விஷயத்தில் ஒரு சட்டத்தை ஒருவர் வகுக்க வேண்டுமானால் அவர் அதில் முழு ஆற்றலையும் பெற்றவராக இருக்க வேண்டும்.

வானத்தில் உள்ளவை பற்றி உனக்கு தெரியுமா?

மறைவானவை பற்றி உனக்கு தெரியுமா?

இத்தகைய எந்த அறிவும் இல்லாத அற்பத்திலும் அற்பமான மனிதன் ஒரு சட்டத்தை வகுக்க வேண்டுமா அல்லது அனைத்து பொருட்களின் மீதும் எல்லா ஆற்றல்களையும் கொண்டிருக்கும் அந்த மகத்தான அல்லாஹ் சட்டமியற்ற வேண்டுமா?

சட்டமியற்றும் எந்தத் தகுதியும் மனிதனுக்குக் கிடையாது என்பதை அல்லாஹ் மிகக் கடுமையாக, அதற்கான காரணங்களோடு சொல்கிறான் என்பதை நாம் புரிய வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் கைகளில் மட்டும் தான் என இன்னும் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.
திருக்குர்ஆன்12:40, 6:57, 12:67

மேற்குறிப்பிடப்பட்ட எல்லா வசனங்களிலும், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் புறத்தில் மட்டும் தான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

யாருக்கு முழு அதிகாரமும் இருக்கிறதோ அவன் மட்டும் தான் சட்டமியற்ற முடியும்.

அதுவல்லாமல், அந்த மனிதர் சட்டமியற்றுவார், இந்த மனிதர் சொல்வதும் மார்க்கம், அந்த இமாம் சொல்லி விட்டால் அது ஃபர்ல், இந்த இமாம் சொல்லி விட்டால் அது ஹராம் என்று நாம் எவரைப் பற்றியாவது நம்பினால் அல்லாஹ்வுக்கே எல்லா அதிகாரமும் என்கிற வசனத்தையும், இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் தான் என்று கூறும் எல்லா இறை வசனங்களையும் நாம் அப்பட்டமாக மறுக்கிறோம் என்று பொருளாகும்.

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே எழுத்து வடிவில் -2

மார்க்கத்தில் அல்லாஹ் குறை வைத்து விட்டானா?

அல்லாஹ் தான் இந்த மார்க்கத்திற்கு உரிமையாளன் என்று நாம் சொல்லும் போது, நாம் எப்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு அவன் எதிர்பார்க்கிறானோ அந்த முறையில் நாம் அமைத்துக் கொண்டால் தான் மறுமையில் நாம் வெற்றி பெற முடியும். எனவே தான், இந்த மார்க்கத்தின் உரிமையாளன் நானே என்ற கருத்தையும், எல்லா அதிகாரமும் எனக்கு மட்டுமே என்ற கருத்தையும் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் சொல்கின்றான்.

அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?
திருக்குர்ஆன் 5:50

யார்  சொல்வதைக் கேட்கப் போகிறீர்கள்? என்று அல்லாஹ் கேட்டு விட்டு கூடவே, அல்லாஹ்வின் தீர்ப்பே வெற்றி தரக் கூடியது என்றும், மற்ற எவரது தீர்ப்பாக இருந்தாலும் அவற்றைப் பின்பற்றுவது என்பது அறியாமை எனவும், அது தோல்வியை அளிக்கக் கூடியது எனவும் கூறுகிறான்.

இன்னும் சொல்லப்போனால், எவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்ற மனிதர்களின் கூற்றின் பின்னால் செல்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு அல்லாஹ் போதவில்லை என்று கருதுகிறார்கள் என்றே பொருள். அல்லாஹ்வுக்கு விளக்கிச் சொல்லத் தெரியவில்லை என்றும், மார்க்கத்தில் அல்லாஹ் ஏதோ குறை வைத்து விட்டான் எனவும் இவர்கள் நம்பினால் மட்டுமே அல்லாஹ்வை விட்டு விட்டு இன்னொருவரின் கூற்றை மார்க்கமாக ஏற்பார்கள். இதைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.
திருக்குர்ஆன் 29:51

என்று கூறுகிறான்.

அல்லாஹ் அருளிய வஹியில் தான் அருளும், அறிவுரையும் இருக்கிறது. இதை விட்டு விட்டு வேறு பக்கம் நீங்கள் சென்றால் அல்லாஹ் உங்களுக்குப் போதவில்லையா? என்று மிக அழகான முறையில், பாமரனுக்கும் புரிகிற தெளிவான நடையில் அல்லாஹ் கேட்கிறான்.

இன்னும் அல்லாஹ் தமது திருமறையில் சொல்லும் போது,

(முஹம்மதே!) இவை அல்லாஹ்வின் வசனங்கள். இதை உண்மையுடன் உமக்குக் கூறுகிறோம். அல்லாஹ்வுக்கும், அவனது வசனங்களுக்கும் பிறகு வேறு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்?
திருக்குர்ஆன் 45:6

என்று கூறுகிறான்.

இதே கருத்தை 77:50 வசனத்திலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ்வின் வசனங்கள் இவர்களுக்குப் போதவில்லை என்றால் வேறு எது தான் இவர்களுக்கு வேண்டும்? அல்லாஹ்வின் வசனங்களை இவர்கள் நம்பவில்லை என்றால் வேறு எதைத் தான் நம்ப முடியும்? என்று அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் கேட்பதிலிருந்து, சட்டமியற்றும் முழு அதிகாரமும் அவனது கைகளில் மட்டுமே உள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.

அல்லாஹ்வை விட்டு விட்டு மனிதர்களின் தீர்ப்புக்களையும், அவர்களின் விளக்கங்களையும் மார்க்க ஆதாரமாக நாம் கொண்டால், அந்த மனிதர்களை நாம் அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறோம் என்று தான் அர்த்தமாகிறது. அல்லாஹ்வின் அதிகாரத்தில் வேறு எவருக்கும் துளியளவு பங்கும் கிடையாது என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது எதிரானது.

இந்த வசனங்கள் வாயிலாக இவ்விஷயம் தெளிவாகப் புரிகிறது என்ற போதிலும், பாமரர்களுக்கும் புரியும் வகையில் இன்னும் அதிகமதிகமாக குர்ஆன் விளக்குவதை பாருங்கள்!

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர்வழி காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 28:49

அல்லாஹ்வின் வஹி மட்டுமே மனிதன் பின்பற்ற வேண்டியவை என்பதை 6:106, 33:2 போன்ற இன்னும் ஏராளமான; வசனங்களில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவதைக் கவனியுங்கள்.

அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதை மட்டும் தான் நபியே நீர்  பின்பற்ற வேண்டும் என்று நேர் மறையாக பல வசனங்களில் சொன்ன இறைவன், 7:3 வசனத்தில் அதையே எதிர்மறையாகவும் சொல்லிக் காட்டி அதன் முக்கியத்துவத்தை அழுத்தப்படுத்துகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
திருக்குர்ஆன் 7:3

அல்லாஹ்விடமிருந்து அருளியதைப் பின்பற்றுங்கள் என்று சொன்னால் வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்கிற கருத்து அதிலேயே ஒளிந்து தான் இருக்கிறது என்ற போதிலும், மற்ற எவரையும் பின்பற்றாதீர்கள் என்று அதையே எதிர்மறை வாசகத்தோடும் அல்லாஹ் சேர்த்துச் சொல்வதிலிருந்து இது விஷயமாக அல்லாஹ் எந்த அளவிற்கு நம்மை எச்சரிக்கிறான் என்பதை நாம் உணர வேண்டும்.

இன்னும் 5:48 வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது,

உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப் படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!
திருக்குர்ஆன் 5:48

ஆக, இவையெல்லாமே நமக்கு உணர்த்துவது ஒரேயொரு செய்தியைத் தான். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட வஹீயை மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரமாக நாம் கருத வேண்டும். அதைத் தவிர்த்து, அதைப் புறந்தள்ளி வேறு எவரது கூற்றுக்காவது நாம் முன்னுரிமை கொடுத்தால் அது அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பது தான்.

இன்னும் சொல்வதானால், இந்த அடிப்படையை நாம் ஒவ்வொரு மார்க்க மசாயில்களுடனும் உரசிப் பார்க்கும் போது 99 சதவிகித குழப்பங்களுக்குத் தீர்வு கிடைத்து விடும்.

மவ்லூது ஓத வேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்டால், நாம் முதலில் கேட்க வேண்டியது, இதை வலியுறுத்துகின்ற இறைவனின் வஹீ எது? தர்கா செல்ல வேண்டுமா, மீலாது, தட்டு தாயத்து.. என எதை மார்க்கமாக நமக்குச் சொன்னாலும், நாம் கேட்க வேண்டியது, எந்த குர்ஆன் வசனத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது? எந்த ஹதீஸில் இதற்கு ஆதாரம் இருக்கிறது?

இரண்டிலும் இல்லை, இன்னார்  தான் சொன்னார்கள், இந்த இமாம் தான் இதைச் சரி கண்டார்கள் என்றால், அவை தூக்கி வீசப்பட வேண்டியவை! அதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது

அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், அல்லாஹ்வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே என்று கூறுவதற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்! மாறாக, உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. அவற்றை நீ பொய்யெனக் கருதினாய். ஆணவம் கொண்டாய். (என்னை) மறுப்பவனாக இருந்தாய் (எனக் கூறப்படும்.)
திருக்குர் ஆன் 33:55-59

வஹீ மட்டும் தான் மார்க்கம் என்கிற கொள்கையைக் கொண்டவனுக்கு இவ்வாறு மறுமையில் புலம்புகிற நிலை ஏற்படாது. அல்லாஹ்வின் வஹியை விட்டு விட்டு எவர் வழி தவறி, அறிஞர்கள், இமாம்கள் எனச் சென்றார்களோ அவர்கள், தாங்கள் அனைத்தையும் சரிவர செய்து விட்டோம் என்று உலகில் வாழும் போது இறுமாப்புடன் இருந்து வந்தாலும், நாளை மறுமையில் அவர்கள் சம்பாதிப்பவை அனைத்தும் பூஜியமாக நிற்பதை அறிவர். இவ்வுலகில் அவர்கள் செய்து வந்த தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ், உம்ரா இன்ன பிற நல்லமல்கள் என எதுவாயினும் அவை அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லாததாய் நிற்கும்.

குர்ஆன் நமக்கு விளங்காதா?

இறைவனின் வஹீ மட்டும் தான் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்கிற இந்தப் பிரச்சாரத்தை நாம் செய்கின்ற போது, இதற்கு நேரடியாக எந்தப் பதிலும் சொல்ல இயலாதவர்கள், எப்படியாவது தாங்கள் சார்ந்திருக்கும் மத்ஹப், சலஃபு கொள்கைகளை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக முன்வைக்கும் வாதம், குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது, எனவே அதை விளக்கித் தர ஒரு இமாம் எங்களுக்கு தேவைப்படுகிறார், என்பதாகும்.

இது போன்ற மிக மோசமான, ஆபத்தான கருத்து வேறு உண்டா? அல்லாஹ்வின் வஹியான குர்ஆன் மனிதர்களுக்கு விளங்காது என்றால், இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அல்லாஹ்வுக்குச் சரியாக விளக்கத் தெரியவில்லை என்று தானே இதன் பொருளாகிறது?

வஹியைப் பின்பற்றாமல் இருப்பதைக் காட்டிலும் மோசமான குற்றமில்லையா இது?

வஹியை மறுக்கின்ற முதல் குற்றம், அந்த வஹி மனிதர்களுக்குப் புரியாது என அல்லாஹ்வை கேலி செய்கிற இரண்டாம் குற்றம் என்று, இரு வகைகளில் குற்றம் புரிவோர்  தான் இத்தகைய வாதம் புரிகின்றவர்கள்.

என்னைப் போல் அழகாக விளக்க வேறு எவரால் இயலும் என்று அல்லாஹ் குர்ஆனில் (35:14) கேட்கிறானே, அதற்கு என்ன பொருள்?

சரி, ஒரு வாதத்திற்கு அல்லாஹ்வின் குர்ஆன் நமக்கு விளங்காது என்பதனால் தான் மத்ஹபு பக்கம் செல்கிறோம் என்பது சரியென்றால், மதுஹபு இமாம்களின் போதனைகளெல்லாம் என்ன தமிழ் மொழியிலா இருந்தன? இவர்கள் பின்பற்றி ஒழுகக் கூடிய ஷாஃபி இமாம், அபூ ஹனீஃபா இமாம், மாலிக் இமாம், ஹம்பலி இமாம் ஆகியோரின் விரிவுரைகள் எல்லாம் தமிழில் தான் இருக்கின்றன என்று இவர்கள் சொல்ல வருகிறார்களா?

அவைகளும் அரபு மொழியில் தானே இருக்கின்றன? அந்த இமாம்கள் அரபியில் எழுதினால் புரியும், அல்லாஹ் அரபியில் சொன்னால் புரியாதா? எவ்வளவு அபத்தமான, மிக மோசமான வாதம் இது, என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல நமக்கு விசா வருகிறது, ஆங்கிலத்தில் அல்லது அரபியில் தான் அதில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும், எனவே இதைக் கிழித்துப் போடு என்று கிழித்துப் போடுவோமா அல்லது ஆங்கிலமோ, அரபு மொழியோ தெரிந்தவர்களிடம் மொழியாக்கம் செய்து புரிந்து கொள்வோமா?

உலகக் காரியங்கள் என்று வரும் போது, அவற்றை எப்படி புரிய முடியுமோ அப்படி புரிவதற்குரிய எல்லா முயற்சிகளையும் செய்யும் நாம், குர்ஆன் என்று வரும் போது, அது அரபியில் இருக்கிறது, எனக்கு அரபி மொழி தெரியாது என்று அதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

விசாவில் எழுதப்பட்டவைகளை தமிழில் மொழியாக்கம் செய்து புரிந்து கொள்ள நமக்கு இயலும் போது, குர்ஆனில் உள்ள அரபு வசனங்களை தமிழில் மொழியாக்கம் செய்து புரிய நமக்கு இயலாதா?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர்ஆன் புரியாது என்று சொல்லி எந்த மத்ஹபு நூற்களின் பக்கம் இவர்கள் சென்றார்களோ அந்த நூற்களும் அதே அரபு மொழியில் தான் இருக்கின்றன, அவற்றையெல்லாம் இவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படியானால், குர்ஆனை இவர்கள் எந்த அளவிற்கு கேலி செய்கிறார்கள், அல்லாஹ்வை இவர்கள் எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று பட்டவர்த்தனமாக தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பட்ட சமுதாயம் கற்றறிந்த பண்டிதர்களைக் கொண்ட சமுதாயமாகவா இருந்தது? இல்லை. அவர்கள் உம்மி சமுதாயமாகத் தான் இருந்தனர்.

உம்மு என்றால் தாய். எப்படி தாயை மட்டுமே சார்ந்திருக்கும் குழந்தைக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாதோ அதே போன்று அந்த மக்களும் இருந்த காரணத்தால் அவர்கள் உம்மி சமூகம் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரபு இலக்கணம் தெரியாது, இலக்கியம் தெரியாது, இன்று இவர்கள் எதையெல்லாம் காரணம் காட்டி குர்ஆன் நமக்குப் புரியாது என்கிறார்களோ அவை எதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து உம்மி சமூகமும் அறிந்து வைத்திருக்கவில்லை. அத்தகைய கல்வியறிவில்லாத சமூகத்தைத் தான் இந்த மார்க்கம் வென்றெடுத்தது.

எழுதவும் படிக்கவும் தெரியாத பெரும் பெரும் நபித்தோழர்களான பிலால், அம்மார்,, யாசிர், சுஹைப், சுமையா போன்றோரை இந்த குர்ஆன் ஈர்த்ததே, அது எப்படி? குர்ஆன் பாமரர்களுக்குப் புரியாது என்றிருக்குமானால், அவர்களெல்லாம் எப்படி இஸ்லாத்திற்கு வந்தார்கள்? கூட்டம் கூட்டமாக, சாரை சாரையாக இஸ்லாத்தை நோக்கி கடலென வந்தார்களே, அது எப்படி? அரபு தீபகற்பம் முழுவதும் இஸ்லாத்தின் ஜோதி சுடர் விட்டெரிந்ததே, அது எப்படி?

இன்னும் சொல்லப்போனால், எந்த மொழியறிவைப் பற்றி இவர்கள் பேசுகிறார்களோ, அந்த மொழியறிவை இஸ்லாத்தின் எதிரியான அபு ஜஹல் தான் கொண்டிருந்தான். கல்வியறிவும், மொழியறிவும், இலக்கண, இலக்கிய ஞானமும் அவனுக்கு அதிகமிருந்த காரணத்தால் தான் அவனை அபுல் ஹிக்கம் (அறிவின் தந்தை) என்று அம்மக்கள் அழைத்தனர். ஆனால், அவனை இந்த இஸ்லாம் ஈர்த்ததா? இல்லை. இத்தனை அறிவு இருந்தும் அல்லாஹ்வின் வேத வசனத்தை அவன் ஏற்காத காரணத்தால் தான் அவன் அபுல் ஹிக்கம் என்பதற்கு பதில் அபு ஜஹ்ல்; அறியாமையின் தந்தை என்று பின்னர் அழைக்கப்பட்டான் என்பது தனி விஷயம்.

மொழியறிவு தான் இஸ்லாம் ஈர்க்கப்படுவதற்குக் காரணம் என்றால், மொழியறிவு தான் குர்ஆன் ஒருவருக்குப் புரிவதற்கு காரணமென்றால், அபு ஜஹல் குர்ஆனைப் புரிந்திருக்க வேண்டுமே, அவன் இந்த இஸ்லாத்தை ஏற்றிருக்க வேண்டுமே? அது ஏன் நிகழவில்லை?

அதுவல்லாமல், எந்தக் கல்வியறிவும் இல்லாத பிலால் (ரலி) அவர்களும், அம்மார் (ரலி) அவர்கள் போன்றோரும் எப்படி குர்ஆனை விளங்கினார்கள்?

அல்லாஹ் தனது திருமறையில் சொல்லும் போது,

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
திருக்குர் ஆன் 2:185

என்கிறான்.

இந்தக் குர்ஆன், நேர்வழியை மிகவும் தெள்ளத் தெளிவாகக் காட்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, இது பாமரர்களுக்குப் புரியாது என்று சொல்லப்படுகிற கூற்று வழிகேடானது என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்!

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
திருக்குர் ஆன் 54:17

குர்ஆன் பாமரர்களுக்குப் புரியவே செய்யாது என்று இவர்கள் சொல்கிறார்கள். அல்லாஹ்வோ, நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக தான் இதை எளிதாக்கியிருக்கிறேன் என்கிறான்.

இன்னும், 31:20, 3:184, 65:11 போன்ற ஏராளமான வசனங்களில் அல்லாஹ் சொல்லும் போது, இந்த குர்ஆனைப் பிரகாசிக்கும் ஒளியுடன் ஒப்பீடு செய்கிறான். ஒளி எப்படி ஒரு இடத்தில் நாம் செல்ல வேண்டிய பாதையை துல்லியமாகக் காட்டுமோ, நம் பாதையில் உள்ள தடைகளை, கற்களை, முட்களையெல்லாம் தெளிவாக அடையாளம் காண ஒளி எப்படி நமக்கு அவசியமோ அது போன்று, நம் வாழ்வில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, சரி, தவறு, ஹலால், ஹராம்கள் என எதுவாயினும், இந்த குர்ஆன் அவற்றைப் பிரித்துக் காட்டும். தெளிவாகவே பிரித்துக் காட்டும்!

இந்த வாக்குறுதியை அல்லாஹ் நமக்கு இவ்வசனங்கள் மூலமாக அளிக்கிறான். மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான்.
திருக்குர்ஆன் 39:23

அதாவது, அல்லாஹ்வின் வசனம் பாமரர்களுக்குப் புரியாது என்கிற வழிகெட்ட கொள்கைவாதிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு மரணஅடி கொடுக்கும் வகையில் இவ்வசனமானது குர்ஆனைப் பற்றி எடுத்துச் சொல்கிறது.

குர்ஆன் வசனம் ஓதப்பட்டால் அது வெறுமனே புரிய மட்டும் செய்யாது. மாறாக, நமது தோல்கள் சிலிர்த்து விடும். அந்த அளவிற்கு மிகவும் ஆழமான தாக்கத்தை நம் உள்ளங்களில் ஏற்படுத்தவல்ல ஆற்றல் பெற்றது தான் அல்லாஹ் அருளியிருக்கும் திருக்குர்ஆன்.

படித்தால் புரியவே செய்யாது என்கிற வாதம் உண்மையென்று இருக்குமானால், உள்ளத்தில் இத்தகைய தாக்கத்தை அது உருவாக்கும் என்கிற அளவிற்கு அல்லாஹ் அதைப் பற்றி சிலாகிப்பானா?

இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் வசனங்கள் மனிதர்களுக்குப் புரிவது ஒரு பக்கம் இருக்கட்டும், மலைகளுக்கும், பாறைகளுக்கும் அறிவு வழங்கப்பட்டிருக்குமானால், அவை இதைப் புரிந்து, நடுநடுங்கி விடும் என்று அல்லாஹ் சொல்வது நமக்கு எதைக் காட்டுகிறது?

இதோ அந்த வசனம்..

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.
திருக்குர்ஆன் 59:21

ஆக, அல்லாஹ்வின் வசனம் என்பது தெள்ளத் தெளிவானது. எந்த அமல்களையும் செய்ய இயலாத ஒரு மலைக்கு, அல்லாஹ் அறிவைத் தந்து இந்த குர்ஆன் வசனங்களை அதற்கு ஓதிக் காட்டினால், அல்லாஹ்வின் வசனத்தின் தாக்கமானது அந்த மலையையே கிடுகிடுக்க வைக்கும். அச்சத்தால் அது நடுங்கி விடும் என்று அல்லாஹ் சொல்கிறான் என்பதும் நமக்கு எதைக் காட்டுகிறது?

வேதத்தைப் பாமரர்களிடம் காட்டாமல் அந்தந்த சித்தாந்தத்தில் கரை தேர்ந்தவர்கள் மட்டுமே மூடி வைத்துக் கொண்ட காலம் இருந்தது. யூதர்களானாலும், இந்து மதத்தவர்களானாலும், அவர்களது மத நூல் என்பது அந்தப் பண்டிதர்களால் மட்டுமே கற்கப்படும், பாமரர்களோ என்றைக்கும் அந்தப் பண்டிதர்களையே சார்ந்திருக்கும் நிலை இருந்தது.

இவ்வாறு பொது மக்களுக்கும் பாமரர்களுக்கும், கல்வியறிவில் குறைந்தவர்களுக்கும் தங்கள் மத நூற்களை கூட வெளிக்காட்டாமல் மறைத்து வைத்திருந்ததால் தான் இதற்கு ;மறை; என்றே பெயர் உருவானது போலும்.

உயர்ந்த குலத்தினர்  மட்டுமே வாசிக்க முடியும் என்ற பாரபட்சத்தை மதத்தின் பெயரால் உருவாக்கி வைத்திருந்த காலத்தில் இஸ்லாம் மட்டும் தான் இறைவனின் வார்த்தைகளை உலகத்திற்கான பொதுவுடைமையாக்கியது. அறிவு ஜீவி முதல் பாமரன் வரை, பணக்காரன் முதல் ஏழை வரை அனைவருக்கும் இந்தக் குர்ஆன் சமம். அனைவருக்கும் இது திறந்த புத்தகம், அனைவரது வாழ்விலும் இது சரிசமமாய் வழி காட்டும். அதனால் தான் அல்லாஹ் சொல்கிறான்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
திருக்குர்ஆன் 47:24

இந்தக் குர்ஆனை எப்போது சிந்திக்க முடியும்? அது சொல்கிற போதனைகள் நமக்குப் புரிந்தால் தான் சிந்திக்க முடியும். ஆக, சிந்திக்க மாட்டீர்களா? என்கிற அல்லாஹ்வின் கேள்வியே இது அனைவருக்கும் புரியும் என்பதைக் காட்டுகிறது!

அல்லாஹ்வின் வஹீச் செய்தியான இந்த குர்ஆன், புரிவதற்கு மிகவும் இலகுவானது என்பதற்கு அடுக்கடுக்காக பல்வேறு சான்றுகளை நாம் கண்டோம்.

அல்லாஹ் தரக்கூடிய சான்றுகள் இன்னும் நிற்கவில்லை. தமது இந்த வேதத்தைப் பற்றி அல்லாஹ் சொல்கின்ற போது, ஆயாத்துன் பையினாத் தெள்ளத் தெளிவான வசனங்கள் என்பதாக பல்வேறு வசனங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

உதாரணத்திற்கு, 29:49, 65:11, 58:5, 57:9, 10:15, 2:99 இன்னும் பல வசனங்களின் வாயிலாக இதே கருத்தை அல்லாஹ் திரும்பத் திரும்ப சொல்வதிலிருந்து, குர்ஆன் நமக்குப் புரியாது என்கிற வாதம் எந்த அளவிற்கு பலகீனமானதும் அல்லாஹ்வையே இழிவுப்படுத்துகிறதாகவும் இருக்கின்றது என்பதை நாம் அறியலாம்.

வஹீயில் முரண்பாடுகளோ பொய்களோ இல்லை!

அல்லாஹ்வின் வஹிச் செய்தியான குர்ஆனை ஒருவர்  புறக்கணிப்பதாக இருந்தால் ஏதேனும் ஒரு காரணத்தை அவர் சொல்ல வேண்டும். எந்தவொரு நூலை அல்லது சித்தாந்தத்தை ஒருவர்  மறுப்பதாக இருந்தாலும், அதிலிருக்கும் பொய்யையோ, முரண்பாட்டையோ, உளறல்களையோ அவர் சுட்டிக் காட்டித் தான் அதை மறுக்க வேண்டும். அந்த அடிப்படையில், குர்ஆன் என்கிற வஹீ செய்தியை மறுக்க வேண்டுமானால், குர்ஆனில் ஒரேயொரு பொய்யையாவது இவர்களால் காட்ட முடியுமா? ஒரேயொரு முரண்பாட்டையோ உளறலையோ இவர்களால் காட்ட முடியுமா? என்றால் நிச்சயம் காட்ட முடியாது.

எந்தக் கோணலும் இல்லாத வேதத்தை அருளியிருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தே (பார்க்க 18:2), இந்த வேதத்தில் ஒரு குறையையும் கண்டுபிடிக்கவே இயலாது என்பது தெரிகிறது.

இதே கருத்தை இன்னும் பல்வேறு இடங்களில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
திருக்குர்ஆன் 39:28

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய  ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
திருக்குர்ஆன் 41:42

எந்தக் கோணலும் இல்லாத, இதன் முன்னும் தவறு இல்லாத, பின்னும் தவறில்லாத தூய்மையான வசனத்தைத் தான் அல்லாஹ் அருளியிருக்கிறான்.

என்பதை நாம் சரிவரப் புரியும் போது அல்லாஹ்வின் வஹீயை மறுப்பதற்கோ, அதோடு இணையாக இன்னொருவரின் கருத்தைச் சேர்ப்பதற்கோ எந்த நியாயமும் இல்லை என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

எனவே தான் அல்லாஹ் சொல்கிறான்,

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 4:82

இதைப் பொய்படுத்துவதற்கு இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனையோ பேர் முயன்றும் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். அத்துடன், குர்ஆனைப் பொய்ப்படுத்த புகுந்தவர்கள் எல்லாம் இந்த வஹீச் செய்தியின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவுகிற காட்சியைத் தான் நாம் காண்கிறோம்.

உமர் (ரலி) அவர்கள் இதற்கு சிறந்த உதாரணம் என்பதை நாம் அறிவோம்.

எனவே, முஸ்லிமாக நாம் வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் அல்லாஹ்வின் வஹீச் செய்திக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். முஸ்லிம் என்கிற சொல்லின் பொருளே கட்டுப்பட்டவன் தான் எனும் போது, அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் என்பது அதிலேயே அடங்கித்தான் இருக்கிறது.

எதில் ஒற்றுமை?

வஹீச் செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும், வேறெந்த மனிதரின் கூற்றும் மார்க்கமாகாது என்கிற பிரச்சாரத்தை நாம் முன்னெடுக்கும் போது, இவர்கள் குழப்பவாதிகள், அல்லாஹ் வலியுறுத்துகின்ற ஒற்றுமைக்கு இவர்கள் எதிரானவர்கள் என்கிற பிரச்சாரம் நமக்கெதிராகச் செய்யப்பட்டு வருவதை நாம் பார்க்கலாம்.

இது ஒரு பொய்ப் பிரச்சாரம்.

இவர்கள் கூறுவது போன்று, ஒற்றுமையாக இருக்குமாறு குர்ஆனில் எந்த வசனத்திலாவது அல்லாஹ் சொல்லியிருக்கிறானா என்றால் இல்லை. ஒற்றுமையை அல்லாஹ் எங்குமே வலியுறுத்தவில்லை. சத்தியத்தை எடுத்துச் சொல்லி, அந்த சத்தியத்தின் பால் ஒன்றுபடுவதற்குத் தான் சொல்கிறான்.

இதற்கு மறுப்புச் சொல்லும் இந்த கூட்டமானது திருக்குர்ஆனில் 3:103 வசனத்தை எடுத்துக் காட்டி, ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்குமாறு அல்லாஹ் சொல்கிறான் என்று சொல்வர்.

ஆனால் அவ்வசனத்தில் ஒற்றுமை எனும் கயிறு என்று அல்லாஹ் சொல்கிறானா? நிச்சயம் இல்லை. வஃதஸிமு பி ஹப்லில்லாஹ் என்பது தான் அதன் அரபி மூலத்திலுள்ள சொற்கள். அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பற்றிப் பிடியுங்கள் என்பது தான் இதன் பொருளே தவிர, ஒற்றுமை எனும் கயிறு என்று எங்கும் இல்லை.

இது போன்று, மற்றுமொரு வசனத்தையும் இவர்கள் தங்கள் வாதத்திற்குச் சான்றாக வைப்பார்கள். நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!
திருக்குர்ஆன் 42:13

பிரிந்து விடாதீர்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டான், எனவே ஒற்றுமை தான் முக்கியம் என்று வாதம் புரிகின்றனர்.

இந்த வாதத்திலாவது அர்த்தமிருக்கிறதா? அந்த வசனத்தில் வெறுமனே பிரிந்து விடாதீர்கள் என்றா அல்லாஹ் சொல்கிறான்? இல்லை. மார்க்கத்தை நிலை நாட்டுங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பது தான் அல்லாஹ் அந்த வசனத்தில் இடும் கட்டளை.

அதில்; என்றால் நாம் நிலை நாட்டிய மார்க்கத்தில்! ஆக, மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்றுவதில் தான் ஒற்றுமையே தவிர, நீ எந்த மார்க்கத்தை வேண்டுமென்றாலும் பின்பற்றி விட்டுப் போ, நான் எந்த மார்க்கத்தை வேண்டுமென்றாலும் பின்பற்றுகிறேன், நாம் இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என்கின்ற நிலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்காத ஒன்றாகும்.

இன்னும் சொல்லப்போனால், நன்மையை ஏவி தீமை தடு என்று அல்லாஹ் சொல்கிறானே, இதைச் செய்தால் ஒற்றுமை ஏற்படுமா ஒற்றுமை குலையுமா?

ஒரு சமூகத்தில் வட்டி மலிந்து கிடக்கிறது, அவர்களிடம் சென்று வட்டி வாங்குவதைத் தடுத்தால் அங்கே ஒற்றுமை மேலோங்குமா அல்லது ஒற்றுமை குலையுமா? வரதட்சணை வாங்குவோரிடம் அவ்வாறு வாங்குவது குற்றம் என்று விளக்கினால் ஒற்றுமை வலுப்பெறுமா அல்லது சிதறுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தூதுத்துவப் பணியைத் துவக்கிய ஆரம்ப காலங்களில் அந்தச் சமுதாயம் ஒற்றுமையாகத் தான் ஷிர்க் வைத்து வந்தனர். ஒற்றுமையாகத் தான் இன்னபிற அனாச்சாரங்களைச் செய்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்த ஏகத்துவப் பிரச்சாரமானது அங்கே நிலவி வந்த இத்தகைய போலி ஒற்றுமையைச் சிதறடிக்கத் தான் செய்தது.

எல்லா நபிமார்களும் ஒற்றுமையைக் குலைக்கவே செய்தனர். சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது, அந்த சத்தியத்திற்கு எதிரானவர்கள் பிரிந்து செல்வது தான் இயல்பு. அந்தப் பிரிவைக் கூட நாம் சந்திக்கக் கூடாது என்று சொன்னால் நாம் எந்த பிரச்சாரத்தையுமே செய்யக் கூடாது,

நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுங்கள் என்று அல்லாஹ் நமக்கிட்டிருக்கும் கட்டளையை நம்மால் பேணவே இயலாது. ஆக, ஒற்றுமை என்பது அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதில் தான் உள்ளது. அல்லாஹ்வின் கயிறு என்பது அவன் அருளிய வஹீச் செய்தி. அது மட்டுமே மார்க்கம், அது தவிர வேறெதுவுமே மார்க்க ஆதாரமில்லை என்கிற சித்தாந்தத்தில் அனைவரும் ஒன்றுபடுமாறு தான் இஸ்லாம் அழைக்கிறது.

No comments:

Post a Comment