ஹதீஸ் கலையின் வரலாற்றில் நாம் பல இமாம்களைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள். ஆனால், இன்று நாம் பார்க்கப் போகும் மாமேதைக்கு வரலாற்றில் இருக்கும் இடம் முற்றிலும் தனித்துவமானது. குர்ஆன் எப்படி அபூபக்கர் (ரலி) காலத்தில் முழுமையாக ஏடுகளில் தொகுக்கப்பட்டதோ, அதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக ஏடுகளில் தொகுக்கப்படுவதற்கு மூலகாரணமாக இருந்தவர்தான் இமாம் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி (ரஹ்).
சஹாபாக்கள் மற்றும் ஆரம்பகாலத் தாபியீன்கள் காலத்தில் ஹதீஸ்கள் பெரும்பாலும் நெஞ்சங்களில்தான் மனனம் செய்து பாதுகாக்கப்பட்டன. எழுதும் வழக்கம் இருந்தாலும் அது தனிப்பட்ட குறிப்புகளாகவே இருந்தது. ஆனால், மார்க்க அறிஞர்கள் பலரும் போர் முனைகளிலும், வயோதிகத்தாலும் மரணமடையத் தொடங்கியபோது, "ஹதீஸ்கள் அழிந்துவிடுமோ" என்ற அச்சம் எழுந்தது. அந்த அச்சத்தைப் போக்க வந்த அல்லாஹ்வின் மாபெரும் அருள்தான் இமாம் அஸ்-ஸுஹ்ரி!
முழுப் பெயர்: முஹம்மத் இப்னு முஸ்லிம் இப்னு உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி.
சுருக்கமான பெயர்: இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி.
காலம்: ஹிஜ்ரி 50 (அல்லது 51)-ல் மதீனாவில் பிறந்தார். ஹிஜ்ரி 124-ல் மரணமடைந்தார்.
சிறப்பு: இவர் இளைய தாபியீன்கள் வரிசையைச் சேர்ந்தவர். அனஸ் பின் மாலிக் (ரலி), ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) போன்ற சஹாபாக்களை நேரில் சந்தித்துப் பாடம் படித்தவர்.
கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், இஸ்லாமிய மாகாணங்களுக்கு ஒரு அவசர சுற்றறிக்கையை அனுப்பினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைத் தேடிப் பிடித்து ஏடுகளில் எழுதுங்கள். மார்க்க அறிஞர்களின் மரணத்தால் கல்வியும் அழிந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
அந்தக் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பல ஊர்களுக்கும் பயணித்து, சிதறிக் கிடந்த ஹதீஸ்களை எல்லாம் முதன்முதலில் பிரம்மாண்டமான ஏடுகளில் ஒன்றிணைத்துத் தொகுக்கத் தொடங்கிய முதல் அறிஞர் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி அவர்கள்தான்.
இதனால்தான், உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் மக்களிடம் கூறினார்: "நீங்கள் ஸுஹ்ரியைப் பற்றிக்கொள்ளுங்கள். கடந்த கால சுன்னத்துகளை அவரை விடச் சிறப்பாக அறிந்தவர் வேறு யாருமில்லை என்றார்.
(அப்துல் மலிக் இப்னு மர்வானின் வியப்பு)
இமாம் ஸுஹ்ரியின் மனப்பாட சக்தி ஈடு இணையற்றது. வெறும் 80 இரவுகளில் ஒட்டுமொத்த குர்ஆனையும் மனனம் செய்தவர் இவர்.
அவர் தெருக்களில் நடந்து செல்லும்போது தன் இரண்டு காதுகளிலும் விரல்களை வைத்து அடைத்துக்கொண்டு நடப்பார். காரணம், அவர் எதைக் கேட்டாலும் அது அப்படியே அவர் மூளையில் பதிவாகிவிடும். தேவையில்லாத செய்திகளோ, பாடல்களோ தன் மூளையில் பதிவாகி ஹதீஸ்களுக்கு இடையூறாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வளவு பேணுதல் காட்டினார்.
அவருடைய நினைவாற்றலைப் பற்றி அவரே கூறுகிறார்: "என் இதயம் எதை மனனம் செய்ததோ, அது அதை ஒருபோதும் மறந்ததில்லை! என்கிறார்.
மதீனாவின் மாபெரும் தாபியீயான ஸயீத் இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்களின் சபையில் சுமார் 8 ஆண்டுகள் தன் முழங்கால்களை மடித்துக் கல்வி பயின்றார் ஸுஹ்ரி. உர்வா இப்னு ஸுபைர், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் போன்ற மதீனாவின் ஏழு மாபெரும் சட்ட மேதைகளிடமிருந்தும் முழுமையாகக் கல்வியை உறிஞ்சிக் குடித்தார். மதீனாவின் மொத்த அறிவும் இவரிடம் வந்து குவிந்தது.
இமாம் மாலிக், மாபெரும் அறிஞர் சுஃப்யான் இப்னு உயைனா, லைஸ் இப்னு ஸஅத் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் இவருடைய மாணவர்கள்தான். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இவரைப் பற்றிக் கூறும்போது, "இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரியைப் போன்று ஹதீஸ் கலையில் அறிவில் சிறந்த ஒருவரை நான் பார்த்ததில்லை" என்று சிலாகித்துப் பேசுவார்.
பல அறிஞர்கள் ஏழ்மையில் இருந்தபோது, இமாம் ஸுஹ்ரி ஒரு செல்வந்தராக இருந்தார். ஆனால் தன் செல்வத்தை ஹதீஸ் மாணவர்களுக்காகவே வாரி வழங்கினார். தன்னிடம் பாடம் படிக்க வரும் வெளியூர் மாணவர்களுக்குத் தன் சொந்தச் செலவில் உணவளித்துப் பராமரிப்பார். இதனால் பல நேரங்களில் அவர் கடனாளியாகவும் மாறியிருக்கிறார்.
நாம் இன்று மிக எளிதாகப் பல தொகுப்புகளில் (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஅத்தா மாலிக்) ஹதீஸ்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கெல்லாம் மூலகாரணமாக, அஸ்திவாரக் கல்லாக இருந்தவர் இமாம் ஸுஹ்ரிதான். "ஹதீஸ்கள் வாய்மொழியாகவே இருக்கட்டும், எழுதினால் குர்ஆனோடு கலந்துவிடுமோ" என்ற ஆரம்பகாலத் தயக்கங்களை எல்லாம் உடைத்தெறிந்து, உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஆணையைச் செயல்படுத்தி, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் மாபெரும் வழிகாட்டிக் கல்லை நாட்டியவர் இவரே!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #ImamZuhri #IbnShihabAlZuhri #Tabiin #HadithCompilation #Madinah #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment