பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, March 14, 2026

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)


இஸ்லாமிய வரலாற்றில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் உண்டு. அதில் மிகவும் ஆச்சரியமான ஒரு கூட்டணிதான், எகிப்தை வென்ற மாபெரும் தளபதி அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) மற்றும் அவருடைய மகன் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆகியோராவர். தந்தைக்கும் மகனுக்கும் இடையே வெறும் 12 வயதுதான் வித்தியாசம்! அதுமட்டுமல்ல, தந்தைக்கு முன்பாகவே இஸ்லாத்தை ஏற்று, தன் வாலிபப் பருவம் முழுவதையும் இறைவழிபாட்டிற்கும், கல்வியைத் தேடுவதற்கும் அர்ப்பணித்த மாபெரும் அறிஞர்தான் அப்துல்லாஹ் (ரலி).

இன்று நாம் பல ஹதீஸ் நூல்களைப் படிக்கிறோம். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே எழுத்துபூர்வமாகப் பதிவு செய்த ஒரு மாபெரும் வரலாற்று ஆவணம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்தது. அதன் பெயர் 'அஸ்-ஸஹீஃபா அஸ்-ஸாதிகா' (உண்மையான ஏடு).
ஒருமுறை குறைஷிகள் அவரிடம், "நபிகளார் சில நேரங்களில் கோபத்திலும் பேசுவார்கள், சில நேரங்களில் மகிழ்ச்சியிலும் பேசுவார்கள். நீ எல்லாவற்றையும் அப்படியே எழுதுகிறாயே?" என்று தடுத்தார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி), அண்ணலார் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டார். அப்போது நபிகளார் தன் வாயைக் கைகாட்டி, "அப்துல்லாஹ்வே! நீர் எழுதுங்கள். என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீதாணையாக, இதிலிருந்து சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் வெளிவரப் போவதில்லை!" என்று கட்டளையிட்டார்கள். அதன் பிறகு ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அவர் பதிவு செய்தார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களின் இறைவழிபாடு எப்படிப்பட்டது தெரியுமா? தினமும் நோன்பு வைப்பார்; இரவு முழுவதும் தூங்காமல் தொழுதுகொண்டே இருப்பார். இதைக் கேள்வியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, மாபெரும் வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்.

"அப்துல்லாஹ்வே! நீர் தினமும் நோன்பு வைப்பதாகவும், இரவெல்லாம் விழித்திருந்து தொழுவதாகவும் நான் கேள்விப்பட்டேனே, அது உண்மையா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். அண்ணலார் கூறினார்கள்: "அப்படிச் செய்யாதீர். சில நாட்கள் நோன்பு வையுங்கள், சில நாட்கள் விட்டுவிடுங்கள். இரவில் சிறிது நேரம் தொழுங்கள், பின்பு உறங்குங்கள். ஏனெனில், உமது உடலுக்கு நீர் செய்ய வேண்டிய கடமை உள்ளது; உமது கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமை உள்ளது; உமது மனைவிக்கும் நீர் செய்ய வேண்டிய கடமை உள்ளது!" பின்னர், தாவூத் (அலை) அவர்கள் வைத்தது போல ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு வைக்குமாறும், மாதம் ஒருமுறை குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்குமாறும் நபிகளார் அவருக்கு அறிவுறுத்தினார்கள். அவர் அதையே தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். ஆனால் முதுமை அடைந்தபோது, "அன்று நபிகளார் அளித்த சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருக்கலாமே" என்று அவருடைய தளர்ந்த உடல் அதற்காக ஏங்கியது.

அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு மிகச் சோகமான கட்டம் 'ஸிப்பீன் போர்'. முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த அந்தப் போரில் கலந்துகொள்ள அவருக்குத் துளியும் விருப்பமில்லை. முஸ்லிம்களின் ரத்தத்தைச் சிந்த அவர் விரும்பவில்லை. ஆனால், அவருடைய தந்தை அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள், முஆவியா (ரலி) அவர்களின் படையில் இருந்தார். தந்தை தன் மகனைத் தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தினார். ஒருமுறை நபிகளார் அவரிடம், "உம் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவருக்குக் கட்டுப்படு" என்று கூறியிருந்த வார்த்தை அப்துல்லாஹ்வுக்கு நினைவுக்கு வந்தது. நபிகளாரின் கட்டளையை மீறக் கூடாது என்பதற்காக, கண்ணீருடன் அந்தப் போர்க்களத்திற்குச் சென்றார். ஆனால், அவர் ஒருபோதும் வாள் ஏந்திப் போரிடவில்லை; மாறாகப் படையின் கொடியை மட்டுமே தாங்கி நின்றார். தன் வாழ்நாளின் இறுதிவரை அந்தப் போர்க்களத்திற்குச் சென்றதற்காக அவர் வருத்தப்பட்டு அழுதுகொண்டே இருந்தார்.

குர்ஆனையும், தவ்ராத்தையும் ஆழமாகக் கற்றறிந்த அறிஞராக, பல மொழிகளைத் தெரிந்தவராக, இறுதிவரை மார்க்கச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், ஹிஜ்ரி 65-ஆம் ஆண்டு எகிப்தில் (அல்லது தாயிஃபில்) வபாத்தானார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன? இஸ்லாம் என்பது உலகத்தைத் துறந்து சந்நியாசியாக வாழும் மார்க்கம் இல்லை என்றும் வணக்க வழிபாடுகளோடு, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் சமநிலையாகச் செய்வதே உண்மையான இஸ்லாம் என்று உணர்த்தியவர். அந்தச் சமநிலையான ஈமானை அல்லாஹ் நமக்கும் தந்தருள்வானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #AbdullahIbnAmr #HadithScholar #Siffin #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment