தான் மட்டுமே நன்கறிந்தவன்.மற்றவர்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்ற நம்பிக்கையிலும், மற்றவர்களை கேலி கிண்டல் செய்யும் எழுத்து நடையிலும் உங்கள் கருத்துக்களை பதிவிடாதீர்கள். எதுவாக இருந்தாலும் உங்கள் வாதங்களை கண்ணியமாகவும், ஆதாரப் பூர்வமாகவும், மார்க்க வரம்புகளுடன் ஒப்பிட்டும் பதிவிடுங்கள்.
சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல் நம் பார்வைக்கு அற்பமானவர்களிடமும் அறிவுசார் ஞானம் இருக்கலாம்.
மூஸாவுக்கு கிடைக்காத கல்வி ஹளிர் அவர்களுக்கு கிடைத்திருந்தது.
பேரீத்தம் மரம் காய்க்க மகரந்தச் சேர்க்கை முக்கியம் என அண்ணலாருக்குத் தெரியாத அறிவு அன்சாரிகளிடம் இருந்தது.
"இறைவா! எனக்கு கல்வியை அதிகமாக்கு!" என இறுதித் தூதரை இறுதி வேதம் பிரார்த்திக்கச் சொல்கிறது.
ஓருடலின் இரு பாகங்கள் சண்டையிட்டால் பாதிப்பு உடலுக்கே.
ஒரு கட்டிடத்தின் இரு பகுதிகள் பிளவுற்றால் பாதிப்பு கட்டிடத்திற்கே.
சர்க்கரை வியாதி முற்றினால் சிலருக்கு கால்களையே வெட்டி எடுப்பார்கள்.
புற்றுநோய் எல்லை கடந்தாலும் சில நேரங்களில் உடலுறுப்புகள் நீக்கப்படும்.
கருத்தியல் ரீதியாக சகோதரத்துவத்தை பாதிக்கும் நோய்களை முற்றவிடாதீர்கள்.
அறிவுசார் கருத்துக்களில் மற்றவர்களின் கருத்துக்களுக்கும் செவி கொடுங்கள். உண்மையிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
உண்மையில் பெருமை என்பது மக்களை மட்டமாகக் கருதுவதும், உண்மையை ஏற்க மறுப்பதும் தான்.
அல்லாஹ் கூறுகிறான்:
அறிவுரை கூறுவீராக! இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும்.
(அல்குர்ஆன் 51:55)
-- Abdun Nasir M.I.Sc.,
No comments:
Post a Comment