பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, March 8, 2026

இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்).


ஹதீஸ் கலையில், எது உண்மையான ஹதீஸ்? என்று தேடிக் கண்டுபிடித்த இமாம்களைப் பற்றிப் பார்த்து வருகிறோம். ஆனால், எதெல்லாம் பொய்யான ஹதீஸ்? என்று சல்லடை போட்டுச் சலித்தெடுத்து, இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகளை இஸ்லாத்திலிருந்து கூட்டிப் பெருக்கி வெளியேற்றிய ஒரு மாபெரும் துப்புரவுப் பணியைச் செய்தவர்தான் இமாம் அபுல்-ஃபரஜ் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்).

முழுப் பெயர்: அப்துர் ரஹ்மான் இப்னு அபில் ஹஸன் அலி இப்னு முஹம்மத்.
சிறப்புப் பெயர்: அபுல்-ஃபரஜ் இப்னுல் ஜவ்ஸீ (அவருடைய மூதாதையர் வீட்டில் ஒரு பெரிய 'ஜவ்ஸியா' மரம் இருந்ததால் இப்பெயர் வந்தது).
காலம்: ஹிஜ்ரி 510-ல் ஈராக்கின் பகுதாத் நகரில் பிறந்து, ஹிஜ்ரி 597-ல் அங்கேயே மரணமடைந்தார். முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களின் வழித்தோன்றல் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 

ஹதீஸ் பெயரால் பல பொய்யான செய்திகள் உலவ ஆரம்பித்த காலத்தில், இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் எடுத்த மிகப்பெரிய ஆயுதம்தான் அல்-மவ்ழூஆத்துல் குப்ரா என்ற மாபெரும் பிரம்மாண்டமான நூல்.
எந்தெந்த ஹதீஸ்கள் எல்லாம் பொய்யாக இட்டுக்கட்டப்பட்டவை என்பதை ஆதாரங்களோடு இதில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்தார். ஹதீஸ் கலையில் அவர் எந்த அளவுக்குக் கடுமையானவர் என்றால், சில பலவீனமான (ழயீஃப்) ஹதீஸ்களைக் கூட இட்டுக்கட்டப்பட்டவை என்ற பட்டியலில் சேர்த்துவிட்டார் என்று பிற்கால அறிஞர்கள் விமர்சிக்கும் அளவுக்கு, சுன்னாவைப் பாதுகாப்பதில் கறாராக இருந்தார்.

அவர் எழுத்தாளராக மட்டுமிருக்கவில்லை. பக்தாத் நகரமே வியந்து பார்க்கும் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவாளர். இவருடைய மார்க்கச் சபைகளில் ஒரு லட்சம் பேர் வரை கூடக் கலந்துகொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்! அன்றைய கலீஃபாக்களும், அமைச்சர்களும் இவருடைய சபைக்கு வந்து சாதாரண மக்களைப் போலத் தரையில் அமர்ந்து அழுவார்கள். 

இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் எழுதாத துறைகளே இஸ்லாத்தில் இல்லை எனலாம். ஹதீஸ், தஃப்ஸீர், வரலாறு, மருத்துவம், தத்துவம் என சுமார் 300-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவர் வாழ்ந்த நாட்களையும், அவர் எழுதிய புத்தகங்களின் பக்கங்களையும் கணக்கிட்டுப் பார்த்த இமாம் இப்னு ரஜப் அவர்கள் வியந்துபோய்க் கூறுகிறார், இப்னுல் ஜவ்ஸீ தன் வாழ்நாளில் தினமும் குறைந்தது 4 நோட்டுப் புத்தகங்கள் (கையேடுகள்) அளவாவது எழுதியிருக்க வேண்டும்; இல்லையென்றால் இவ்வளவு நூல்களை எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை!" ஷைத்தான் மனிதனை எப்படித் தடம் புரளச் செய்கிறான் என்பதை விளக்கும் தல்பீஸ் இப்லீஸ் (ஷைத்தானின் சூழ்ச்சிகள்) மற்றும் நல்லடியார்களின் வரலாற்றைத் தொகுத்த ஸிஃபத்துஸ் ஸஃப்வா ஆகியவை அவருடைய மாஸ்டர் பீஸ் நூல்கள்.

நேரத்தைப் பாதுகாப்பதில் இவரைப் போல ஒருவரை வரலாற்றில் பார்ப்பது கடினம். ஹதீஸ்களை எழுதுவதற்காக, தன் வாழ்நாள் முழுவதும் மூங்கில் பேனாக்களைச் சீவுவார். அப்படிப் பேனாவைச் சீவும்போது விழும் மரத்துகள்களைக் கீழே கொட்டாமல் ஒரு பையில் சேகரித்து வைத்தார். தான் மரணிக்கும் தருவாயில் ஒரு உயில் எழுதினார்: "நான் மரணித்த பிறகு, எனக்குக் குளிப்பாட்டத் தண்ணீரைக் காய்ச்சும்போது, நான் ஹதீஸ் எழுதுவதற்காகப் பேனா சீவிய இந்தத் துகள்களை விறகாகப் பயன்படுத்தியே தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்!"
ஆச்சரியம் என்னவென்றால், அவர் மரணித்தபோது அந்தத் துகள்களை எரித்துத் தண்ணீர் காய்ச்சிய பிறகும், மீதம் கொஞ்சம் துகள்கள் இருந்தன! அந்த அளவுக்கு ஹதீஸுக்காகத் தன் வாழ்நாளையே தேய்த்தவர் அவர். 

நாம் இன்று சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரத்தை வீணடித்துவிட்டு, நேரமே இல்லை என்று புலம்புகிறோம். ஆனால் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தன்னிடம் வருபவர்களிடம் பேசும்போது கூட, தன் நேரத்தை வீணாக்காமல் இருக்க, கைகளில் பேனா சீவுவதையோ அல்லது புத்தகங்களை அடுக்கி வைப்பதையோ வேலையாகச் செய்துகொண்டே பேசுவார். ஹதீஸை நேசிப்பது என்பது அதன் வார்த்தைகளைப் பாதுகாப்பது என்று இருக்காமல் ஹதீஸை எழுதுவதற்காகச் சீவிய பேனாவின் துகள்களைக் கூட நேசிப்பதுதான் என்பதை இந்த பகுதாத் இமாமின் வரலாறு நமக்குக் கற்றுத்தருகிறது!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #IbnAlJawzi #Baghdad #HadithScholar #AlMawduat #TalbisIblis #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment