இஸ்லாமிய வரலாற்றில் மாவீரர்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. ஆனால், போர்க்களத்தில் எதிரிகளை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு அசாத்திய வீரமும், அதேசமயம் பதவியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு நேர்மையும் ஒருங்கே அமைந்த ஒரு மாமனிதர் இருந்தார் என்றால், அவர்தான் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி).
கம்பீரமான உயரம், கோதுமை நிறம், ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரை மதீனாவாசிகள் 'நபிகளாரின் மாவீரன்' என்று பெருமையோடு அழைப்பார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்பக் காலகட்டத்தில், மதீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அண்ணலார் (ஸல்) அவர்களைக் கொலை செய்யத் தூண்டிக்கொண்டிருந்தவன் யூதத் தலைவன் கஅப் இப்னு அஷ்ரஃப். அவனுடைய கோட்டையை நெருங்குவது என்பது மரணத்தோடு விளையாடுவதற்குச் சமம். அப்போது நபிகளார், "இந்தத் துரோகியை வீழ்த்த யார் தயார்?" என்று கேட்டபோது, கூட்டத்திலிருந்து முதல் ஆளாக எழுந்து நின்றார் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி). எதற்கும் அஞ்சாத தன்னுடைய அபாரமான வீரத்தாலும், ராஜதந்திரத்தாலும் அந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக முறியடித்து, மதீனாவின் பாதுகாப்பை உறுதி செய்தவர் இவர்தான். தபூக் போரைத் தவிர்த்து, நபிகளார் கலந்துகொண்ட அத்தனை போர்களிலும் தன் வாளை சுழற்றிய மாவீரர் இவர்! மாவீரர் அலி (ரலி) அவர்களுடன் மதீனாவை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்ததால் தபூக் போரில் அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் கலீஃபா உமரின் நம்பிக்கைக்குரிய 'விசாரணை அதிகாரியாக (Inspector General) இவர் இருந்தார். நபிகளாரின் காலத்திற்குப் பிறகு, உமர் (ரலி) அவர்களின் பொற்கால ஆட்சியில் முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு ஒரு மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது. அதுதான் மாகாண ஆளுநர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு! ஆளுநர்கள் மீது சிறு புகார் வந்தாலும், உமர் (ரலி) அவர்கள் உடனடியாக முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்களைத்தான் அனுப்பி வைப்பார்கள். எகிப்தின் ஆளுநராக இருந்த அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி), கூஃபாவின் ஆளுநராக இருந்த மாவீரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) போன்ற மாபெரும் சஹாபாக்களாகவே இருந்தாலும், உமரின் கட்டளையை ஏற்று அவர்களிடம் நேரில் சென்று துணிச்சலாக விசாரணை நடத்தும் அளவுக்குத் தூய்மையான கரங்களுக்குச் சொந்தக்காரராக அவர் இருந்தார். எந்த ஆளுநரும் இவருடைய வருகையைக் கண்டால் ஒருகணம் நடுங்குவார்கள்; அந்த அளவுக்கு இவருடைய நேர்மை பிரசித்தமானது!
இவருடைய வாழ்வின் உச்சகட்ட தியாகம் என்பது உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹாதத்திற்குப் பிறகு அரங்கேறியது. முஸ்லிம்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி, உள்நாட்டுப் போர் வெடித்தது. அலி (ரலி) மற்றும் முஆவியா (ரலி) இருவருக்கும் இடையே போர் மூண்டபோது, பலரும் ஏதாவது ஒரு பக்கம் அணிவகுத்தார்கள்.
ஆனால், முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் தன் வீட்டிலிருந்த வாளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஒரு பெரிய பாறையின் மீது அந்த இரும்பு வாளை ஓங்கி அடித்துச் சுக்குநூறாக உடைத்தார். சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
அப்போது அவர் கூறினார்: "என் அன்புக்குரிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு வஸிய்யத் (உபதேசம்) செய்திருந்தார்கள். 'முஹம்மத் இப்னு மஸ்லமாவே! முஸ்லிம்களுக்கு இடையே போர் மூளும் ஒரு காலம் வந்தால், உன்னுடைய வாளைப் பாறையில் அடித்து உடைத்துவிடு. அதற்குப் பதிலாக ஒரு மர வாளைச் செய்துகொண்டு உன் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொள்' என்றார்கள்.
இதோ, என் நபியின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன்!" ஒரு உண்மையான வீரனுக்குப் போர்க்களத்தில் வாளைச் சுழற்றுவது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம் தன் சொந்த சகோதரர்களின் ரத்தம் சிந்தப்படக் கூடாது என்பதற்காகக் கையில் மர வாளோடு வீட்டிற்குள் பொறுமையாக முடங்கிக் கிடப்பது. அந்த மாபெரும் ஈமானியப் பொறுமையை அவர் தழுவிக்கொண்டார்.
முஸ்லிம்களுக்கு இடையிலான எந்தக் குழப்பத்திலும் தலையிடாமல், ரத்தம் சிந்தாத ஒரு தூய ஆன்மாவாகத் தன் இறுதி நாட்களைக் கழித்த அந்த மாவீரர், முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஹிஜ்ரி 46-ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார்.
வீரம் என்பது வாளை உயர்த்துவதாக இல்லாமல் ரத்தம் சிந்தக் கூடாது என்பதற்காக, அதை உடைத்து எறிவதிலும் இருக்கிறது என்ற மாபெரும் பாடத்தை உலகிற்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுச் சென்றது அந்த மர வாள் வீரர் தான்.
✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #MuhammadIbnMaslamah #FarisRasulullah #WoodenSword #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment