நபிகளாரின் இல்லத்துச் செய்திகளையும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களையும் உலகிற்கு மிகத் துல்லியமாகச் சுமந்து வந்த ஒரு மாபெரும் குடும்பம் மதீனாவில் இருந்தது. அந்த 'அபூபக்ர் (ரலி)' அவர்களின் வழித்தோன்றலில் வந்து, ஹதீஸ் கலைக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்த ஒரு நடமாடும் பல்கலைக்கழகத்தைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இஸ்லாமிய வரலாற்றில் சில அறிவிப்பாளர் தொடர்களைப் பார்த்தவுடனேயே முஹத்திஸீன்கள் கண்ணை மூடிக்கொண்டு இது ஸஹீஹான ஹதீஸ்தான் என்று சான்றளித்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் நம்பகத்தன்மை வாய்ந்த, மதீனாவின் அறிவுப் பாரம்பரியத்தின் வாரிசுதான் இமாம் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்).
முழுப் பெயர்: ஹிஷாம் பின் உர்வா பின் அஸ்-ஸுபைர் பின் அல்-அவ்வாம்.
சிறப்புப் பெயர்: அபுல் முன்திர் (அல்லது) அபூ அப்தில்லாஹ்.
காலம்: ஹிஜ்ரி 61-ல் மதீனாவில் பிறந்து, ஹிஜ்ரி 146-ல் பகுதாதில் மரணமடைந்தார்.
மாபெரும் பரம்பரை: இவர் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்களின் பேரானாவார்.
ஹிஷாம் அவர்களின் தந்தை உர்வா (ரஹ்), அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) மகன். அதாவது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உர்வா சொந்த மருமகன். இதனால் நபிகளாரின் வீட்டுக்குள் நடந்த மிக நுணுக்கமான மார்க்கச் சட்டங்கள், குடும்பவியல் செய்திகள் அனைத்தும் ஆயிஷா (ரலி) வழியாக உர்வாவுக்கும், உர்வா வழியாக அவருடைய மகன் ஹிஷாமுக்கும் நேரடியாக வந்து சேர்ந்தன. புகாரி மற்றும் முஸ்லிமில் நீங்கள் காணும் பல நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் 'ஹிஷாம் — உர்வா — ஆயிஷா (ரலி)' என்ற இந்த அசைக்க முடியாத சங்கிலி வழியாகவே நமக்குக் கிடைத்தன.
மதீனாவின் மாபெரும் இமாமான மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களுக்கு ஹதீஸ் கலையில் மிக முக்கியமான ஆசான் இந்த ஹிஷாம் அவர்கள்தான். இமாம் மாலிக் மட்டுமின்றி, இமாம்களான சுஃப்யான் அஸ்-ஸவ்ரி, சுஃப்யான் இப்னு உயைனா, ஷுஃபா போன்ற ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் கலையின் மாபெரும் ஜாம்பவான்கள் அனைவரும் இவருடைய சபையில் அமர்ந்து ஹதீஸ்களைக் கற்ற மாணவர்களே!
ஹிஷாம் அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் மதீனாவிலிருந்து ஈராக்கின் கூஃபா மற்றும் பக்தாத் நகரங்களுக்குப் பயணம் செய்தார். அங்குள்ள ஆட்சியாளர்கள் அவரை மிகுந்த கண்ணியத்துடன் நடத்தினார்கள். அங்கு ஆயிரக்கணக்கான ஈராக் மாணவர்கள் அவரிடம் ஹதீஸ்களைக் கற்றனர். ஆனால், இங்குதான் ஹதீஸ் கலையின் பயங்கரமான நேர்மையை நாம் பார்க்க முடியும். ஹிஷாம் அவர்கள் ஈராக்கிற்குச் சென்றபோது அவருக்கு வயது முதிர்ந்துவிட்டது. இதனால் அவருடைய நினைவாற்றலில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டதாக அவருடைய சொந்த மாணவரான இமாம் மாலிக் (ரஹ்) போன்றவர்கள் மிக நேர்மையாகப் பதிவு செய்தார்கள்.
ஒருவருடைய பரம்பரையோ, அந்தஸ்தோ ஹதீஸ் கலையின் கடுமையான விதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு மாபெரும் சான்று. ஆயினும், ஆறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களின் (ஸிஹாஹ் ஸித்தா) ஆசிரியர்கள் அனைவரும் ஹிஷாம் அவர்களின் ஹதீஸ்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது அவருடைய நம்பகத்தன்மைக்கு மகுடம் ஆகும்.
இவ்வளவு பெரிய பரம்பரையில் பிறந்தும், செல்வச் செழிப்பான வாய்ப்புகள் இருந்தும், ஹிஷாம் அவர்கள் மிக எளிமையான வாழ்வையே தேர்ந்தெடுத்தார். அதிகமாக நோன்பு நோற்பவராகவும், இரவுத் தொழுகைகளில் ஈடுபடுபவராகவும் திகழ்ந்தார்.
குடும்பப் பாரம்பரியம் என்பதை பெருமை பேசுவதற்குரியதாக ஆக்காமல் அதை பொறுப்புகளைச் சுமப்பதற்கானது என்பதை ஹிஷாம் பின் உர்வா அவர்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அபூபக்கர் (ரலி) அவர்களின் குடும்பம் என்ற கர்வம் இல்லாமல், தன் பாட்டியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்மை தன் நெஞ்சில் சுமந்து அதை அடுத்த தலைமுறைக்கு எந்தக் கலப்படமும் இல்லாமல் கொண்டு சேர்த்த அந்தப் பொறுப்புணர்வுதான் அவரை இன்றுவரை வரலாற்றில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. நாமும் நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டிய உண்மையான சொத்து கல்வி மட்டுமே!
✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer
#History #HishamIbnUrwah #Madina #HadithScholar #Ayesha #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment