பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, March 16, 2026

இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்

வரலாற்றின் பக்கங்களில் எத்தனையோ மாபெரும் அறிஞர்களை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் ஹதீஸ் கலையில் உச்சம் தொட்டிருப்பார்கள்; சிலர் போர்க்களத்தில் வீரத்தின் மறுஉருவமாக இருந்திருப்பார்கள்; சிலர் கோடீஸ்வரர்களாக மாபெரும் கொடையாளிகளாகத் திகழ்ந்திருப்பார்கள்; இன்னும் சிலர் இரவெல்லாம் விழித்து வணங்கும் மாபெரும் வணக்கசாலிகளாக இருந்திருப்பார்கள். ஆனால், இந்த எல்லாப் பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மனிதரை வரலாறு கண்டிருக்கிறது என்றால், அது அவர் மட்டும்தான்! 

அன்றைய இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞர்கள் ஒன்று கூடி அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு சுவாரஸ்யமான போட்டியை வைத்துக்கொண்டார்கள். அதாவது, "இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளைப் பட்டியலிடுவோம்" என்பதே அந்தப் போட்டி. அவர்கள் பட்டியலிடத் தொடங்கினார்கள்: "அறிவு, ஹதீஸ், ஃபிக்ஹ், அரபு இலக்கணம், கவிதை, மொழித்திறன், வீரம், குதிரையேற்றம், தைரியம், இரவுத் தொழுகை, தொடர் நோன்பு, தாராள குணம், வியாபார நேர்மை..." என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்று, கடைசியில் "அவரிடம் இல்லாத நற்பண்புகளே இல்லை" என்று வியந்து முடித்தார்கள்.

முழுப் பெயர்: அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அல்-ஹன்ழலீ அல்-மர்வாஸீ.
சிறப்புப் பெயர்: அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ் (ஹதீஸ் கலையின் தலைவர்).
காலம்: ஹிஜ்ரி 118-ல் (துர்க்மெனிஸ்தானின் 'மர்வ்' நகரில்) பிறந்து, ஹிஜ்ரி 181-ல் (ஈராக்கின் 'ஹீத்' நகரில்) மரணமடைந்தார்.
பின்னணி: இவருடைய தந்தை முபாரக் ஒரு அடிமையாக இருந்து தன் நேர்மையால் உயர்ந்தவர்.

இப்னுல் முபாரக் ஒரு மாபெரும் வியாபாரி. பல நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார். ஒருமுறை அவரிடம், "நீங்கள் ஒரு மாபெரும் மார்க்க அறிஞர், எதற்காக இப்படிப் பொருள் தேடி உலகத்தின் பின்னால் ஓடுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சொன்ன பதில் வரலாற்றுப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது: "நான் எனக்காகச் சம்பாதிக்கவில்லை. சுஃப்யான் அஸ்-ஸவ்ரீ, ஃபுளைல் இப்னு இயாழ் போன்ற மாபெரும் ஹதீஸ் அறிஞர்கள், வறுமையின் காரணமாக அரசர்களிடமோ அதிகாரிகளிடமோ கையேந்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் சம்பாதிக்கிறேன். என் செல்வத்தைக் கொண்டு அவர்களின் குடும்ப வறுமையைப் போக்கிவிட்டால், அவர்கள் முழுநேரமும் இந்த உம்மாவுக்காக ஹதீஸ்களைத் தொகுப்பார்கள் அல்லவா!" என்றார்.

பொதுவாக மார்க்க அறிஞர்கள் என்றால் பள்ளியிலோ, நூலகத்திலோ முடங்கிக் கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தவர் இவர். இஸ்லாமிய வரலாற்றில் ஜிஹாத் குறித்து முதன்முதலில் ஒரு முழுமையான நூலை (கிதாபுல் ஜிஹாத்) எழுதியவர் இவர்தான். அதை அவர் வெறும் மையால் எழுதவில்லை, தன் ரத்தத்தால் எழுதினார். ரோமானியப் படையினருக்கு எதிரான ஒரு போரில், எதிரிப் படையின் மாவீரன் ஒருவன் சண்டைக்கு அழைத்தான். முஸ்லிம் படையிலிருந்து முகமூடி அணிந்த ஒரு வீரர் சென்று, அவனை வீழ்த்தினார். அடுத்தடுத்து வந்த எதிரிப் படை வீரர்களையும் அந்த முகமூடி வீரர் சாய்த்தார். போர் முடிந்த பின் அந்த முகமூடியை விலக்கிப் பார்த்தால்... அது தியானக் கூடத்தில் கண்ணீர் வடிக்கும் மாபெரும் ஹதீஸ் அறிஞர் இப்னுல் முபாரக்! தன் புகழ் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துப் போரிட்டிருக்கிறார் அந்த மாவீரர்.

ஹதீஸ்களுக்கான அறிவிப்பாளர் தொடர் என்பதும் மார்க்கத்தின் ஒரு பகுதியாகும்; அது மட்டும் இல்லையென்றால், எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் மார்க்கத்தின் பெயரால் பேசியிருப்பார்கள்" - இன்று நாம் ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யப் பயன்படுத்தும் இந்த இரும்பு போன்ற விதியை உலகிற்கு உரக்கச் சொன்னவர் இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்).

ஹதீஸ்களைச் சேகரிப்பதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் மலைக்கத்தக்கவை. குராசான், ஈராக், ஹிஜாஸ் (மக்கா, மதீனா), ஷாம் (சிரியா), எகிப்து என அன்றைய இஸ்லாமிய உலகின் ஒவ்வொரு மூலைக்கும் அவர் பயணித்தார். வெறுமனே தகவல்களைச் சேகரிக்கவில்லை; அந்தந்த ஊர்களில் வாழ்ந்த மாபெரும் அறிஞர்களின் 'இல்மை' அப்படியே உள்வாங்கினார். இதனால்தான் இவரை "அறிஞர்களின் சங்கமம்" என்று அழைப்பார்கள்.

ஹதீஸ் துறையில் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகச்சிறந்த பட்டம் இது. இமாம் புகாரி, முஸ்லிம் போன்றவர்களுக்கு முன்பே இந்தப் பட்டத்திற்கு முழுத்தகுதியுடையவராக இவர் திகழ்ந்தார். அது தான் அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ்.  ஹதீஸ்களை அறிவிப்பதில் அவர் காட்டிய நம்பகத்தன்மை எவ்வளவு என்றால், ஒரு ஹதீஸில் 'இப்னுல் முபாரக்' பெயர் வந்துவிட்டால், ஹதீஸ் விமர்சகர்கள் அந்த ஹதீஸை எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள்.

யார் அறிவிக்கும் ஹதீஸை ஏற்கலாம், யாரை நிராகரிக்கலாம் என்று அறிவிப்பாளர்களைத் தரம் பிரிக்கும் நுணுக்கமான கலையில் இவர் ஒரு தேர்ந்த நீதிபதியாகத் திகழ்ந்தார். தன் நண்பர்களாக இருந்தாலும், மார்க்க விஷயத்தில் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை. "இஸ்லாம் என்பது தூய்மையானது, அதில் மனிதக் கற்பனைகளுக்கு இடமில்லை" என்பதில் அவர் மிகவும் கறாராக இருந்தார்.

அவருடைய நூற்கள்.

கிதாபுல் ஸுஹ்த்: ஹதீஸ்களின் அடிப்படையில் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவது மற்றும் உலகப்பற்றற்ற நிலை குறித்து எழுதப்பட்ட மிகத் தொன்மையான நூல்.
முஸ்னத் இப்னுல் முபாரக்: அவர் சேகரித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தொகுப்பு. இவை தவிர தப்ஸீர் மற்றும் வரலாறு குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: "நான் இப்னுல் முபாரக் மற்றும் வக்கீஃ இப்னுல் ஜர்ராஹ் ஆகியோரின் நூல்களை முழுமையாக மனனம் செய்திருந்தேன்." ஹதீஸ் உலகையே கட்டி ஆண்ட இமாம் புகாரிக்கே இப்னுல் முபாரக் அவர்களின் எழுத்துக்கள்தான் ஆரம்பகால உத்வேகமாக இருந்தது என்றால், அவருடைய சேவையின் ஆழத்தை நாம் உணரலாம்.

அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்கள் ஒரு மாபெரும் வியாபாரியாக இருந்தும், "அறிவிப்பாளர் தொடர்  இல்லாத ஹதீஸ்கள் வெறும் வெறும் கூச்சல்கள்" என்று நிரூபித்தார். இன்று நாம் மிகத் தெளிவான, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் படிக்கிறோம் என்றால், அதற்கு அன்று அவர் போட்ட அறிவிப்பாளர் ஆய்வு என்ற அடித்தளமே மிக முக்கிய காரணம்.

அவருடைய மரணச் செய்தி மாபெரும் அறிஞரான ஃபுளைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்களுக்கு எட்டியபோது, அவர் சிறு குழந்தையைப் போலக் குலுங்கி அழுது, "கிழக்கும் மேற்கும் இவரோடு இறந்துவிட்டது!" என்று கண்ணீர் வடித்தார். கலீஃபா ஹாருன் அர்-ரஷீத் இந்தச் செய்தியைக் கேட்டவுடன், "அறிஞர்களின் தலைவர் மரணித்துவிட்டார்" என்று சோகத்தில் மூழ்கினார்.

மார்க்கப் பற்று என்றால் ஏழ்மையாக இருப்பதுதான், உலகத்தைத் துறப்பதுதான் என்ற தவறான புரிதல் நம்மிடம் இருக்கிறது. ஆனால், மாபெரும் கோடீஸ்வரராக இருந்து கொண்டும், போர்க்களத்தில் வாளேந்தும் மாவீரராக இருந்து கொண்டும், ஹதீஸ் கலையின் முடிசூடா மன்னராகத் திகழ முடியும் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களின் வாழ்வு ஒரு மாபெரும் உதாரணம். செல்வம் நல்லவர்களின் கைகளில் இருக்கும்போது அது சமுதாயத்தின் இருளைப் போக்கும் பேரொளியாக மாறும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AbdullahIbnAlMubarak #HadithScholar #WarriorScholar #Generosity #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment