பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, March 14, 2026

அபூ நுஐம்


ஹதீஸ் கலை அறிஞர்கள் தொடர் அதற் இறுதிப்பகுதியில் உள்ளது. இந்த இறுதிப் கட்டப் பயணத்தில், நாம் பார்க்கவிருக்கும் அறிஞர் மிக முக்கியமானவர். ஹதீஸ் கலையை வெறும் சட்டக் கலையாக மட்டும் பார்க்காமல், அதை மனிதர்களின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு மாபெரும் கருவியாகப் பயன்படுத்திய பாரசீக தேசத்து மாமேதை அவர்.

"அபூ நுஐம் அவர்களின் காலத்தில், அவரைப் போல அதிக ஹதீஸ்களை மனனம் செய்தவரும், அறிவிப்பாளர் தொடர்களை (ஸனதுகளை) விரல் நுனியில் வைத்திருந்தவரும் உலகில் வேறெவரும் இருந்ததில்லை" என்று மாபெரும் வரலாற்று ஆசிரியர் இமாம் தஹபீ (ரஹ்) அவர்களால் புகழப்பட்டவர்தான் இமாம் அபூ நுஐம் அல்-இஸ்பஹானி.

முழுப் பெயர்: அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு
அஹ்மத் இப்னு இஸ்ஹாக்.
சிறப்புப் பெயர்: அபூ நுஐம் அல்-இஸ்பஹானி.
காலம்: ஹிஜ்ரி 336-ல் பிறந்து, ஹிஜ்ரி 430-ல் மரணமடைந்தார்.
ஊர்: பாரசீகத்தின் (இன்றைய ஈரான்) மாபெரும் கல்வி நகரமான 'இஸ்பஹான்'.

இஸ்லாமிய வரலாற்றில் நல்லடியார்களின் (ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள்) இறையச்சம் நிறைந்த வாழ்க்கையையும், அவர்களின் ஆழமான தத்துவங்களையும், அவர்கள் அறிவித்த ஹதீஸ்களையும் தொகுத்து அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான நூல்தான் 'ஹில்யத்துல் அவ்லியா வ தபகாத்துல் அஸ்ஃபியா'. சுமார் 10 பாகங்களைக் கொண்ட இந்த மாபெரும் கலைக்களஞ்சியம், அன்றைய நிஷாபூர் நகரத்துச் சந்தைகளில் ஆயிரக்கணக்கான தங்கக் காசுகளுக்கு விலைபோனது என்றால், அதன் மதிப்பைப் புரிந்துகொள்ளலாம். இன்றுவரை, இஸ்லாமிய ஆன்மீக வரலாற்றை அறிய விரும்பும் எந்தவொரு மாணவனும் இந்த நூலைத் தாண்டிச் செல்ல முடியாது.

அன்றைய வழக்கம் என்னவென்றால், ஹதீஸ்களைத் தேடி அறிஞர்கள் ஊர் ஊராகப் பயணிப்பார்கள். ஆனால் அபூ நுஐம் அவர்களின் ஹதீஸ் ஞானம் உலகம் முழுவதும் பரவியதால், அவர் இஸ்பஹான் நகரை விட்டு எங்கும் செல்ல வேண்டியிருக்கவில்லை. மாறாக, உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் மார்க்க மாணவர்கள் இஸ்பஹானை நோக்கிப் படையெடுத்தார்கள். அவருடைய சபை எப்பொழுதும் மாணவர்களால் நிரம்பி வழிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான தூதர்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளையும், அற்புதங்களையும் (முஃஜிஸாத்) தொகுத்து இவர் எழுதிய 'தலாயிலுந் நுபுவ்வா' என்ற நூல் சீரா (நபி வரலாறு) துறையில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். அதேபோல, தான் பிறந்த ஊரான இஸ்பஹானின் வரலாற்றையும், அங்கு வாழ்ந்த அறிஞர்களையும் ஆவணப்படுத்தி 'தரீக் இஸ்பஹான்' என்ற வரலாற்று நூலையும் உம்மாவுக்கு அர்ப்பணித்தார்.

அபூ நுஐம் அவர்கள், ஹதீஸ்களை அறிவிக்கும் ஒரு முஹத்திஸாக மட்டுமில்லாமல், மிகச்சிறந்த சட்ட அறிஞராக (ஃபகீஹ்) இருந்தார்.

அறிவியலும் தொழில்நுட்பமும் உச்சத்தில் இருக்கும் இந்த நவீன யுகத்தில், மனிதர்களின் மனங்கள் இயந்திரங்களைப் போல வறண்டு போயிருக்கின்றன. இந்த நேரத்தில், வெறும் வரட்டுச் சட்டங்களை மட்டும் பேசாமல், அபூ நுஐம் அவர்களின் 'ஹில்யத்துல் அவ்லியா' காட்டும் அந்த நல்லடியார்களின் கண்ணீரையும், தியாகத்தையும், இரவுத் தொழுகைகளையும், எளிமையான வாழ்க்கையையும் நம்முடைய வாசிப்பிற்கும் பேச்சிற்கும் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AbuNuaym #Isfahani #HilyatAlAwliya #HadithScholar #Tazkiyah #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

No comments:

Post a Comment