ஒரு மனிதனின் வெளிப்புற அழகு என்பது இறைவனால் வழங்கப்படுவது. இன்று அந்த அழகைக் காட்டி உலகத்திடம் கைதட்டல் வாங்குவதற்கும், சமூக வலைத்தளங்களில் லைக்குகளைக் குவிப்பதற்கும் மனிதர்கள் எவ்வளவோ மெனக்கெடுகிறார்கள். ஆனால், தன்னிடம் இருந்த இணையற்ற அழகை எவ்விதத் தற்பெருமையுமின்றி இறைவனின் மார்க்கத்திற்காக அர்ப்பணித்த ஒருவரைப் பற்றி இஸ்லாமிய வரலாறு பெருமையோடு பேசுகிறது.
அவர் எவ்வளவு அழகானவர் என்றால், வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமியில் மனித உருவில் வரும்போதெல்லாம் பெரும்பாலும் இவருடைய உருவத்தில்தான் வருவார்கள்! அவர்தான் திஹ்யா இப்னு கலீஃபா அல்-கல்பீ (ரலி).
மதீனாவில் திஹ்யா (ரலி) அவர்களைப் போல ஒரு அழகான மனிதரைப் பார்ப்பது அரிது என்று ஸஹாபாக்கள் கூறுவார்கள். ஆனால், அந்த வெளிப்புற அழகை விட அவருடைய உள்ளத்தின் தூய்மை மிக உயர்ந்ததாக இருந்தது. அதனால்தான், பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் தூதரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இறைச்செய்தியைக் கொண்டு வர மனித உருவை எடுக்கும்போது, பல நேரங்களில் திஹ்யா (ரலி) அவர்களின் உருவத்தையே தேர்ந்தெடுத்தார்கள். ஒரு மனிதனின் முக அமைப்பை வானவர்களின் தலைவரே விரும்பித் தேர்ந்தெடுக்கிறார் என்றால், இறைவனிடம் திஹ்யா (ரலி) அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது!
அழகு என்பது மென்மை என்று மட்டும் சிலர் நினைக்கிறார்கள். அது வீரத்தின் மறுபக்கமும்கூட என்பதை திஹ்யா (ரலி) நிரூபித்தார். ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு, உலகின் மாபெரும் வல்லரசுகளுக்கு இஸ்லாத்தின் அழைப்பைக் கடிதமாக எழுதி அனுப்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள். அன்றைய உலகின் மிகப்பிரம்மாண்டமான சக்தி ரோமப் பேரரசு (பைஸாந்திய சாம்ராஜ்யம்). அதன் சக்கரவர்த்தியான ஹிராக்ளியஸுக்குக் கடிதத்தைக் கொண்டு செல்லும் அந்த மாபெரும் அபாயகரமான பொறுப்பை அண்ணலார் திஹ்யா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், நீண்ட பாலைவனங்களைக் கடந்து சிரியா (ஷாம்) தேசத்திற்குப் பயணம் செய்து, மாபெரும் படையைக் கொண்ட ரோம சக்கரவர்த்தியின் அரசவையில் போய் நிற்பது சாதாரண விஷயமல்ல. சிறு பிழை நடந்தாலும் தலை துண்டிக்கப்படலாம். ஆனால், ஈமான் என்ற கவசத்தை அணிந்திருந்த திஹ்யா (ரலி) அவர்களின் உள்ளத்தில் ரோமப் பேரரசனின் சிம்மாசனத்தைப் பற்றிய எந்தப் பயமும் இல்லை.
ஹிராக்ளியஸ் மன்னனின் அரசவைக்குச் சென்று, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதத்தை மிகக் கம்பீரமாக நீட்டினார் திஹ்யா (ரலி). அந்தக் கடிதம் "அஸ்லிம் தஸ்லம்" (இஸ்லாத்தை ஏற்றுக்கொள், நீ ஈடேற்றம் பெறுவாய்) என்று உலகின் மாபெரும் வல்லரசுக்கு எந்தத் தயக்கமுமின்றி நிபந்தனை விதித்தது! திஹ்யா (ரலி) அவர்களின் ஆளுமையையும், நபிகளாரின் கடிதத்தையும் கண்ட ரோம மன்னன் சிலிர்த்துப் போனான். இஸ்லாத்தின் உண்மையை உணர்ந்த ஹிராக்ளியஸ், திஹ்யா (ரலி) அவர்களுக்கு ஏராளமான பரிசுகளையும், செல்வங்களையும் கொடுத்து வழியனுப்பி வைத்தான்.
ரோம மன்னன் கொடுத்த பெரும் செல்வங்களோடு மதீனா திரும்பிக்கொண்டிருந்த திஹ்யா (ரலி) அவர்களை, 'ஹிஸ்மா' என்ற பகுதியில் வைத்து ஒரு கொள்ளைக் கும்பல் வழிமறித்தது. அவரிடமிருந்த அத்தனை செல்வங்களும், பரிசுகளும் இரக்கமின்றிச் சூறையாடப்பட்டன. உடுத்தியிருந்த ஆடைகளைத் தவிர அனைத்தையும் இழந்த நிலையில் மதீனா வந்து சேர்ந்தார் திஹ்யா (ரலி).
ஆனாலும், அவருடைய முகத்தில் எந்தக் கவலையும் இல்லை! "மன்னன் கொடுத்த செல்வங்கள் பறிபோய்விட்டதே" என்று அவர் ஒருநாளும் கலங்கவில்லை. மாறாக, "என் இறைத்தூதர் கொடுத்த பொறுப்பை நான் சரியாக நிறைவேற்றிவிட்டேன். ரோம சாம்ராஜ்யத்தின் அரசவை வரை இஸ்லாத்தின் செய்தியைக் கொண்டு சேர்த்துவிட்டேன்" என்ற அந்த ஆத்ம திருப்தி மட்டுமே அவரிடம் எஞ்சியிருந்தது. செல்வத்தை விட, சத்தியத்தை எத்திவைப்பதே தன் வாழ்வின் ஆகப்பெரிய வெற்றி என்று அவர் நம்பினார்.
இன்றைய இளைஞர்களின் நிலை என்ன? கண்ணாடியின் முன் மணிக்கணக்கில் நின்று தங்களை அழகுபடுத்துவதில் காட்டும் கவனத்தில் ஒரு சிறு பகுதியையேனும், தங்கள் உள்ளத்தை அழகுபடுத்துவதில் காட்டுகிறார்களா? தங்களுக்குக் கிடைத்த அழகையும், இளமையையும், திறமையையும் இஸ்லாத்தின் செய்தியைப் பிறருக்குச் சொல்வதற்காக எப்போதாவது பயன்படுத்தியது உண்டா? உலகத்தின் கண்கள் நம் அழகைப் பார்த்து வியக்கலாம். ஆனால் இறைவனின் கண்கள் நம் உள்ளத்தையும், செயல்களையும் மட்டுமே பார்க்கின்றன. வெளிப்புற அழகோடு, ஈமானின் அழகையும் இணைத்து மாபெரும் வரலாற்றைப் படைத்த திஹ்யா அல்-கல்பீ (ரலி) அவர்களின் அந்த உன்னதமான அர்ப்பணிப்பு உணர்வை அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!
✍️ Abdullah Ibnu Naseer
#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #DihyahAlKalbi #AngelJibril #Heraclius #Dawah #AbdullahIbnuNaseerWriteups
No comments:
Post a Comment