பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, March 1, 2026

வகீஉ இப்னுல் ஜர்ராஹ் அல்-கூஃபி

இஸ்லாமிய அறிவுலகில் கல்வி என்பது செய்திகளைச் சுமப்பதாக மட்டுமிருக்கவில்லை. அது இறைவனால் வழங்கப்படும் ஒரு பிரகாசமான ஒளி என்பதை உலகுக்கு ஆழமாக உணர்த்தியவர் இமாம் வகீஉ (ரஹ்) அவர்கள். இவரைப் பற்றி இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறும்போது, "நான் வகீஉ அவர்களை விட ஒரு சிறந்த மனிதரை என் கண்களால் கண்டதில்லை" என்று நெஞ்சாரப் புகழ்கிறார் என்றால், அவரின் தரத்தை எண்ணிப் பாருங்கள்!

பெயர்: வகீஉ இப்னுல் ஜர்ராஹ் அல்-கூஃபி
சிறப்புப் பெயர்: அபூ சுஃப்யான்.
காலம்: ஹிஜ்ரி 129-ல் பிறந்து, ஹிஜ்ரி 197-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈராக்கின் அறிவு கேந்திரமான கூஃபா நகரம்.
மாணவர்கள்: இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் ஷாஃபியீ, யஹ்யா இப்னு மயீன் போன்ற உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்கள் அனைவரும் இவரின் மண்டியிட்டுப் பாடம் படித்த மாணவர்கள்தான்.

இமாம் வகீஉ என்ற பெயரை உச்சரித்தாலே, இமாம் ஷாஃபியீ பாடிய அந்த உலகப் புகழ்பெற்ற கவிதைதான் ஒவ்வொரு மார்க்க மாணவனின் நினைவுக்கும் வரும். இமாம் ஷாஃபியீ தனது இளமைக் காலத்தில், தனது நினைவாற்றலில் ஒரு சிறிய தொய்வு ஏற்படுவதை உணர்ந்தார். உடனடியாகத் தனது ஆசான் வகீஉ அவர்களிடம் சென்று முறையிட்டார். அப்போது வகீஉ அவர்கள் வழங்கிய அறிவுரையை இமாம் ஷாஃபியீ கவிதையாகப் பதிவு செய்துள்ளார்:

நான் எனது ஆசான் வகீஉ அவர்களிடம் என் நினைவாற்றல் குறைபாட்டைப் பற்றி முறையிட்டேன். அவர் எனக்கு, 'பாவங்களை விட்டு விலகிவிடு' என்று வழிகாட்டினார். மேலும் அவர் சொன்னார்: 'அறிந்துகொள்! கல்வி என்பது இறைவனின் ஒளி (நூர்). இறைவனின் ஒளி ஒரு பாவிக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது!'"

(شكوت إلى وكيع سوء حفظي ... فأرشدني إلى ترك المعاصي)

நினைவாற்றல் என்பது வெறும் மூளையின் வேலை அல்ல. அது உள்ளத்தின் தூய்மையோடு தொடர்புடையது என்ற இந்த ஒற்றைத் தத்துவம் இன்றும் ஒவ்வொரு மாணவனின் செவிகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இமாம் வகீஉ அவர்கள் ஹதீஸ் வகுப்பிற்கு வரும்போது கையில் ஒரு சிறு காகிதத்தைக் கூடக் கொண்டு வர மாட்டார். அவரின் நெஞ்சமே ஒரு மாபெரும் நூலகமாக இருந்தது. அவரிடம் பல ஆண்டுகள் பாடம் படித்த இமாம் அஹ்மத் கூறுகிறார்: "வகீஉ அவர்கள் எந்தப் புத்தகத்தையும் பார்த்து ஹதீஸ் சொல்ல நான் கண்டதே இல்லை. பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களையும், அதில் உள்ள நுணுக்கங்களையும் அவர் தன் நெஞ்சிலிருந்தே மடைதிறந்த வெள்ளம் போல அறிவிப்பார்."

வகீஉ அவர்களின் தந்தை 'ஜர்ராஹ்' அன்றைய அப்பாஸிய அரசாங்கத்தின் கஜானாவைக் கவனிக்கும் மாபெரும் அதிகாரியாக இருந்தார். அவர் அரசனுக்கு நெருக்கமானவர். ஆனால் வகீஉ அவர்கள், அரசுப் பதவிகளிலிருந்தும், உலக சுகபோகங்களிலிருந்தும் தன்னை முழுமையாக விலக்கிக் கொண்டார். அரசவை உணவு வகைகளைத் தொடமாட்டார். தனது தந்தையின் அதிகாரத்தையோ, செல்வத்தையோ அவர் ஒருபோதும் தனது மார்க்கக் கல்விக்குப் பயன்படுத்தியதில்லை. அவர் மிகவும் எளிமையான ஒரு மனிதராகவே வாழ்ந்தார்.

இமாம் வகீஉ அவர்கள் மக்காவிற்குப் புனிதப் பயணம் (ஹஜ்) சென்றுவிட்டுத் திரும்பும் வழியில், ஃபைத் என்ற இடத்தில் ஹிஜ்ரி 197-ம் ஆண்டு தனது 68-வது வயதில் மரணமடைந்தார். மாபெரும் அறிவுச் சுடரொன்று பாலைவனத்தில் அணைந்தது.

மெமரி பவர் எப்படி அதிகரிப்பது என்று இன்று நாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களைத் தேடுகிறோம். பாதாம் பருப்புகளையும், மருந்துகளையும் நாடுகிறோம். ஆனால், இமாம் வகீஉ அவர்கள் காட்டிய வழிமுறை மிக எளிமையானது, ஆனால் ஆழமானது: "உன் கண்களையும், காதுகளையும், உள்ளத்தையும் பாவங்களை விட்டும் பாதுகாத்துக்கொள்; இறைவனின் அறிவுத் தானாக உன் நெஞ்சில் வந்து தங்கும்." இந்த ஒரு தத்துவத்தை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால், நம் உள்ளமும் ஒரு "பைத்துல் ஹிக்மா"வாக (அறிவு இல்லமாக) மாறும்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamWaki #WakiIbnAlJarrah #Kufa #ImamShafii #HadithScholar #Memory #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

ஸைத் இப்னு ஸாபித் (ரலி).


இஸ்லாமிய வரலாறு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வாளேந்திப் போரிட்ட மாவீரர்களும், ரத்தம் சிந்திய தியாகிகளும்தான். ஆனால், வாளைக் காட்டிலும் வலிமையான ஓர் ஆயுதம் இருக்கிறது, அதுதான் எழுதுகோல்! போர்க்களத்தில் சிந்தப்படும் ரத்தத்தை விட, அறிஞர்களின் எழுதுகோலில் இருந்து சிந்தப்படும் மைக்கு இறைவனிடம் பெரும் அந்தஸ்து உண்டு என்பதை நிரூபித்தவர் ஒரு மாபெரும் இளைஞர். அவர்தான் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குரிய வஹீ (இறைச்செய்தி) எழுத்தாளர்... ஸைத் இப்னு ஸாபித் (ரலி).

பத்ருப் போர்க்களத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, சிறு வயது என்பதால் நபிகளாரால் திருப்பி அனுப்பப்பட்டபோது கண்ணீர் வடித்த ஒரு சிறுவர் தான் இந்த ஸைத். போர்க்களத்திற்குச் சென்று தன் வீரத்தைக் காட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் அந்தச் சிறுவருக்கு இருந்தது. ஆனால், அல்லாஹ் இந்தச் சிறுவரின் அறிவாற்றலை வேறு ஒரு மாபெரும் பணிக்காகத் தேர்ந்தெடுத்திருந்தான்.

ஸைத் (ரலி) அவர்களின் புத்திக்கூர்மையை கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரிடம் ஒரு மாபெரும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். யூதர்களின் கடிதங்களை நான் நம்புவதில்லை. எனவே எனக்காக அவர்களின் மொழியை (ஹீப்ரு/ஸிரியானிக்) நீ கற்றுக்கொள்" என்றார்கள். அண்ணலாரின் கட்டளையை ஏற்ற அந்தச் சிறுவன், வெறும் 15 முதல் 17 நாட்களுக்குள் ஒரு புதிய மொழியை எழுதவும், படிக்கவும், சரளமாகப் பேசவும் கற்றுக்கொண்டு வந்து நபிகளாரின் முன்னே நின்றார்! சுபஹானல்லாஹ்! அந்த அபாரமான அறிவாற்றலைப் பார்த்த நபிகளார், குர்ஆன் வசனங்கள் அருளப்படும்போதெல்லாம் அதை எழுதும் வஹீ எழுத்தாளராக ஸைத் (ரலி) அவர்களை நியமித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பிறகு, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மிக முக்கியமான கட்டம் வருகிறது. யமாமா போர்க்களத்தில் ஏராளமான குர்ஆன் மனனக் கலைஞர்கள் ஷஹீத் ஆக்கப்படுகிறார்கள். இதே நிலை நீடித்தால் குர்ஆனின் பல பகுதிகள் அழிந்துவிடுமோ என்று பயந்த உமர் (ரலி), குர்ஆனை ஒரே புத்தகமாகத் தொகுக்கும்படி கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வலியுறுத்துகிறார்கள். தயக்கத்திற்குப் பிறகு சம்மதித்த அபூபக்கர் (ரலி), இந்த இமாலயப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று சிந்தித்தபோது, அவர்கள் கண்களுக்குத் தெரிந்த ஒரே நபர் அந்த இளைஞர் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) தான்!

அபூபக்கர் (ரலி) அவர்கள் ஸைதை அழைத்து, நீர் ஒரு புத்திசாலி இளைஞர், உம்மீது எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நீர் நபிகளாருக்கு வஹீ எழுதியவர். எனவே, குர்ஆனைத் தேடிச் சென்று தொகுப்பீராக! என்று கட்டளையிட்டார்கள். அந்தப் பொறுப்பின் கனத்தை உணர்ந்த ஸைத் (ரலி) அவர்கள் கூறிய வார்த்தைகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மலையைப் பெயர்த்து இன்னொரு இடத்தில் வைக்கும்படி அவர்கள் எனக்குக் கட்டளையிட்டிருந்தால்கூட அது எனக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால், குர்ஆனைத் தொகுக்கும் இந்தப் பணி அந்த மலையை விட எனக்குப் பெரும் சுமையாக இருந்தது!

எவ்வளவு பெரிய பொறுப்புணர்வு! தன்னிடம் ஏற்கனவே மனனமாக குர்ஆன் முழுமையாக இருந்தபோதிலும், ஒவ்வொரு வசனத்தையும் இரண்டு சாட்சிகளோடு சரிபார்த்து, எறும்பு ஊர்வதைப் போன்ற நுணுக்கத்துடனும், இறைச்சச்சத்துடனும் அவர் குர்ஆனைத் தொகுத்த அந்தத் தியாகம்தான், இன்று உலகெங்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் கைகளில் ஒரு சிறு பிழைகூட இல்லாமல் குர்ஆன் தவழக் காரணம்! பின்னாளில், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் குர்ஆனின் பிரதிகளைப் பல தேசங்களுக்கும் அனுப்பும் பணி நடந்தபோதும், அந்தப் பணிக்கும் தலைமையேற்றவர் இதே ஸைத் (ரலி) தான்.

இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இதில் ஒரு மிகப்பெரிய பாடம் இருக்கிறது. நம்முடைய கல்வி, நம்முடைய பட்டங்கள், நம்முடைய அறிவாற்றல் அனைத்தையும் எதற்காகப் பயன்படுத்துகிறோம்? வெறும் பணத்தைச் சம்பாதிக்கவும், உலக ஆடம்பரங்களை அனுபவிக்கவும்தானா? அல்லது, அந்த அறிவாற்றலைக் கொண்டு மார்க்கத்திற்கு ஏதாவது ஒரு சிறு சேவையாவது செய்கிறோமா?

இஸ்லாம் போர்க்களத்தில் வாள்களால் மட்டும் வளரவில்லை. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) போன்ற இளைஞர்களின் தூக்கமில்லாத இரவுகளாலும், அறிவார்ந்த உழைப்பாலும்தான் பாதுகாக்கப்பட்டது. இன்று நாம் ஓதும் குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் அந்த மாபெரும் அறிஞரின் வியர்வையும் தியாகமும் கலந்திருக்கிறது. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் குர்ஆனுக்காகச் செய்த அந்த ஒப்பற்ற அர்ப்பணத்தை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! நம்முடைய அறிவாற்றலையும் அவனது மார்க்கத்திற்காகப் பயன்படுத்தும் நற்பாக்கியத்தை நமக்கும் வழங்குவானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #ZaydIbnThabit #QuranCompiler #KnowledgeInIslam #PowerOfPen #AbdullahIbnuNaseerWriteups

இமாம் ஷுஅபா


ஹதீஸ்களைத் தொகுப்பது ஒரு கலை என்றால், அதை அறிவிக்கும் மனிதர்களை இவர் நல்லவர், இவர் பொய்யர், இவர் பலவீனமானவர் என்று சல்லடை போட்டுச் சலித்தெடுப்பது இன்னொரு கலை. அந்தக் கலையை ஈராக்கில் முதன்முதலில் தொடங்கி வைத்த மாமேதை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.

ஒரு தங்க நாணயம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய அதை நெருப்பில் உருக்கிக் கல்லில் உரசிப் பார்க்க ஒரு பொற்கொல்லர் தேவை. அதேபோல, ஹதீஸ் என்ற பொக்கிஷத்தில் போலிகள் கலந்துவிடாமல் தடுக்க, பஸ்ரா மண்ணில் உருவான மாபெரும் ஹதீஸ் கொல்லர் தான் இமாம் ஷுஅபா. அதனால்தான் இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரீ அவர்கள் இவரை, அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ் (ஹதீஸ் கலையின் விசுவாசிகளின் தலைவர்) என்று நெஞ்சாரப் புகழ்ந்துள்ளார்.

பெயர்: ஷுஅபா இப்னுல் ஹஜ்ஜாஜ் அல்-அதிகி
சிறப்புப் பெயர்: அபு பிஸ்தாம்.
காலம்: ஹிஜ்ரி 82-ல் பிறந்து, ஹிஜ்ரி 160-ல் மரணமடைந்தார்.
ஊர்: ஈராக்கின் பஸ்ரா நகரம். (இவர்கள் 'தபஉத் தாபியீன்கள்' - தாபியீன்களைப் பார்த்தவர்கள் என்ற தலைமுறையைச் சேர்ந்தவர்).

அன்றைய காலகட்டத்தில் பலர் ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த அறிவிப்பாளர்களின் பின்னணியை ஆராயும் பழக்கம் ஈராக்கில் பெரிய அளவில் இல்லை. அந்த நேரத்தில் தான் இமாம் ஷுஅபா வந்தார். எல்லோரிடமிருந்தும் ஹதீஸ்களை ஏற்க முடியாது. ஒரு நபர் உண்மையானவரா, அவரின் நினைவாற்றல் எப்படிப்பட்டது என்று முதலில் பரிசோதிக்க வேண்டும் என்று ஈராக்கில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார். இதற்குப் பெயர்தான் ஜர்ஹ் வத் தஃதீல் (அறிவிப்பாளர் விமர்சனக் கலை). ஈராக்கில் இந்தக் கலைக்கு ஆணிவேர் இவர்தான்.

ஹதீஸில் யாராவது பொய் சொல்கிறார்கள் அல்லது மனப்பாடத் திறனில் குறைபாடு உடையவர்கள் என்று தெரிந்தால், ஷுஅபா அவர்களைச் சும்மா விடமாட்டார். அவர்கள் ஊரில் இருக்கும் பெரிய ஆளாக இருந்தாலும் சரி, தயவுதாட்சண்யமின்றி மக்கள் மன்றத்தில் அவர்களைத் தோலுரித்துக் காட்டுவார். அவர் சொல்லும் ஒரு புகழ்பெற்ற வார்த்தை:

நான் வானத்திலிருந்து கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்து போவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாக நான் அறிவிப்பதை விட எனக்கு மிகச் சிறந்ததாகும்!

இமாம் ஷுஅபாவிடம் இருந்த கடுமையைப் பார்த்து அன்றைய உலகமே பயந்தது. ஒரு அறிவிப்பாளரிடம் சென்று ஷுஅபா ஒரு ஹதீஸைக் கேட்கிறார் என்றால், அந்த அறிவிப்பாளருக்கு அது ஒரு மிகப்பெரிய நம்பகச் சான்றிதழ். ஹதீஸ் அறிஞர்கள் கூறுவார்கள்: 

ஒரு ஹதீஸை ஷுஅபா அறிவிக்கிறார் என்று தெரிந்தால், அந்த ஹதீஸின் நம்பகத்தன்மை பற்றி நீங்கள் எந்தக் கவலையும் படத் தேவையில்லை. அவர் தனக்கு முன்னால் உள்ள அனைத்தையும் மிகத் துல்லியமாகச் சல்லடை போட்டுத் தேய்த்துப் பார்த்திருப்பார்!

அவர் ஹதீஸ் தேடி ஊர் ஊராகப் பயணம் செய்ததால், ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த சொந்தப் பொருட்கள் அனைத்தையும் விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய வீட்டின் கூரையில் இருந்த மரக் கட்டைகளைக் கூடப் பிய்த்து விற்று ஹதீஸ் தேடினார் என்றால் அவர் கல்வியின் மீது கொண்டிருந்த காதலை என்னவென்று சொல்வது!
அவர் வறுமையில் வாழ்ந்தாலும், தன்னிடம் யாராவது வந்து உதவி கேட்டால் தட்டாமல் கொடுப்பார். ஒருமுறை அவர் கழுதையின் மீது சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஏழை வந்து உதவி கேட்டார். தன்னிடம் கொடுக்க ஒன்றுமே இல்லை என்பதால், தான் ஏறி வந்த அந்தக் கழுதையை அப்படியே அந்த ஏழையிடம் கொடுத்துவிட்டு நடந்தே சென்றார் அந்த மாமனிதர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹதீஸ் கலையைத் தூய்மைப்படுத்தும் மாபெரும் பணியைச் செய்து முடித்த இமாம் ஷுஅபா (ரஹ்), ஹிஜ்ரி 160-ம் ஆண்டு பஸ்ரா நகரில் வறுமையிலேயே மரணமடைந்தார்.

இன்று நாம் ஒரு செய்தியை வாட்ஸ்அப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ பார்த்தவுடன் அதன் உண்மைத்தன்மையைச் சிறிதும் ஆராயாமல் அப்படியே மற்றவர்களுக்கு ஃபார்வர்ட் செய்கிறோம். ஆனால், இமாம் ஷுஅபா போன்றவர்கள், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு வார்த்தை சொல்லப்பட்டால், அதைக் கூறுபவன் யார், அவனுடைய குணம் என்ன, அவன் நினைவாற்றல் எப்படிப்பட்டது என்று அவனுடைய நாடி நரம்பையெல்லாம் அலசி ஆராய்ந்துள்ளார்கள். இஸ்லாம் என்ற மாளிகையின் அஸ்திவாரங்கள் இவ்வளவு வலிமையாகக் கட்டப்பட்டதால்தான், இன்றும் அது எந்தப் புயலுக்கும் அசையாமல் கம்பீரமாக நிற்கிறது!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamShuba #ShubaIbnAlHajjaj #Basra #JarhWaTadil #HadithCritic #IslamicHistory #Facts #AbdullahIbnuNaseerWriteups

உபை இப்னு கஅப் (ரலி).

இந்த உலகில் ஒரு சாதாரண அரசியல்வாதியோ அல்லது ஒரு பெரிய அதிகாரியோ நம் பெயரைச் சொன்னால் நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்? அவருக்கு என்னைத் தெரியும், என் பெயர் அவருக்குத் தெரியும் என்று ஊரெல்லாம் மார்தட்டிச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், ஏழு வானங்களுக்கும் அப்பால் இருக்கும் அகிலத்தின் அதிபதி, பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், ஒரு மனிதரின் பெயரை உச்சரித்து, அவருக்கு நீர் குர்ஆனை ஓதிக்காட்டுங்கள் என்று தன் தூதருக்குக் கட்டளையிட்டான் என்றால், அந்த மனிதரின் அந்தஸ்து எவ்வளவு பெரியதாக இருக்கும்? அவர்தான் 'ஸையிதுல் குர்ரா' (குர்ஆன் ஓதுபவர்களின் தலைவர்) என்று அழைக்கப்பட்ட உபை இப்னு கஅப் (ரலி).

மதீனாவாசிகள் (அன்சாரிகள்) இஸ்லாத்தை ஏற்ற ஆரம்ப காலத்திலேயே ஈமான் கொண்டவர் இவர். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் முக்கியமான வஹீ (இறைச்செய்தி) எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். குர்ஆனை அவர் ஓதும் அழகையும், அதன் உச்சரிப்புத் தூய்மையையும் பார்த்த நபிகளார், "என் சமுதாயத்தில் குர்ஆனை மிகச் சிறப்பாக ஓதுபவர் உபை இப்னு கஅப் ஆவார்" என்று நற்சான்றிதழ் அளித்தார்கள்.

அவருடைய வாழ்வின் மிகச் சிறந்த அந்தப் பொன்னான நாள் ஒன்று வந்தது. ஒருநாள் உபை (ரலி) அவர்களை அழைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உபையே! 'லம் யகுனில்லதீன கஃபரூ...' (சூரா அல்-பய்யினா) என்ற அத்தியாயத்தை உமக்கு நான் ஓதிக் காட்ட வேண்டும் என்று அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். இதைக் கேட்ட உபை (ரலி) அவர்களின் இதயம் ஒருகணம் அதிர்ந்தது. கண்கள் கலங்க, தழுதழுத்த குரலில் கேட்டார்கள்: இறைத்தூதரே! என் இறைவன் என் பெயரைக் குறிப்பிட்டுக் கூறினானா? அண்ணலார் புன்னகையோடு, ஆம், அல்லாஹ் உமது பெயரைச் சொல்லித்தான் கட்டளையிட்டான்! என்றார்கள்.
அடுத்த விநாடி உபை (ரலி) அவர்கள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார்கள். சுபஹானல்லாஹ்! இறைவனால் தன் பெயர் உச்சரிக்கப்பட்ட அந்தப் பாக்கியத்தை நினைத்து ஒரு மனிதரால் எப்படி அழாமல் இருக்க முடியும்! அல்லாஹ்விற்கு ஒரு அடியான் மீது எவ்வளவு அளப்பரிய நேசம் இருந்தால், தன் வேதத்தின் ஒரு பகுதியை அவரிடம் ஓதிக்காட்டுமாறு தன் தூதருக்கே கட்டளையிடுவான்!

உபை (ரலி) அவர்களின் அந்தத் தேன் சிந்தும் குரலுக்கு இன்னொரு மாபெரும் அங்கீகாரமும் கிடைத்தது. உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில், ரமழான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்றபோது, மக்கள் சிறுசிறு குழுக்களாகத் தனித்தனியாக இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தார்கள். மக்கள் அனைவரையும் ஒரே இமாமின் கீழ் ஒருங்கிணைக்க நினைத்த உமர் (ரலி) அவர்கள், அந்தப் பொறுப்பை யாரிடம் கொடுத்தார்கள் தெரியுமா? இதே உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம்தான்! அந்த ரமழான் இரவுகளில், உபை (ரலி) அவர்களின் உள்ளத்தை உருக்கும் குரலில் குர்ஆன் ஒலித்தபோது, ஒட்டுமொத்த மதீனாவும் கண்ணீரில் மிதந்தது.
உபை (ரலி) அவர்கள் பெரிய கோடீஸ்வரரோ, மாபெரும் சாம்ராஜ்யத்தின் அரசனோ அல்ல. ஆனால், அவர் குர்ஆனை உயிருக்கு நிகராக நேசித்தார்; குர்ஆனைத் தன் இரத்தத்தில் கலந்தார். அதனால் இறைவன் அவரை நேசித்தான்.

இன்று குர்ஆனுடனான நமது தொடர்பு எப்படி இருக்கிறது? நமது பட்டங்களையும், பதவிகளையும், உலகத்தின் செல்வாக்கையும் காட்டிப் பெருமையடிக்கும் நாம், குர்ஆனுக்காக எந்த நேரத்தை ஒதுக்கியிருக்கிறோம்? ரமழான் மாதத்தில் மட்டுமே தூசி தட்டப்படும் ஒரு புத்தகமாக அது சுருங்கிவிட்டதா? இறைவனின் வார்த்தைகளை நேசிப்பவனை, இறைவன் நேசிப்பான் என்பதற்கு உபை இப்னு கஅப் (ரலி) அவர்களின் வாழ்க்கையே ஆகச்சிறந்த உதாரணம். அந்த மாபெரும் குர்ஆன் அறிஞரின் நேசத்தை அல்லாஹ் நமக்கும் தந்தருள்வானாக! குர்ஆனுடனான நமது தொடர்பையும் அவன் பலப்படுத்துவானாக!

✍️ Abdullah Ibnu Naseer 

#IslamicHistory #SahabaSeries #Ramadan2026 #UbayyIbnKab #MasterOfQuran #SayyidAlQurra #AbdullahIbnuNaseerWriteups