பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 18, 2026

இமாம் தாரகுத்னீ


ஒரு வைர வியாபாரிக்குத்தான் தெரியும் வைரத்தில் எங்கே கீறல் விழுந்திருக்கிறது என்று. பாமர மக்களுக்கு அது ஜொலிக்கும் கல்லாகத் தெரியும். ஆனால் நிபுணர்களுக்குத்தான் தெரியும் அது போலியா அல்லது உண்மையானதா என்று. ஹதீஸ் உலகில் அப்படிப்பட்ட ஒரு "வைர வியாபாரி" தான் இமாம் தாரகுத்னீ. மற்ற இமாம்கள் "இது ஸஹீஹான ஹதீஸ்" என்று சேகரித்தார்கள்.
ஆனால் இமாம் தாரகுத்னீ, "இந்த ஹதீஸ் பார்ப்பதற்கு ஸஹீஹ் போலத் தெரியும். ஆனால் இதன் மூன்றாவது அறிவிப்பாளருக்கு நினைவாற்றல் குறைவு. எனவே இது பலவீனம்" என்று ஹதீஸை 'எக்ஸ்-ரே' (X-Ray) எடுத்துப் பார்ப்பார்.

இவரைத் தாண்டி எந்த ஹதீஸும் தப்பிக்க முடியாது! யார் இந்த தாரகுத்னீ?

பெயர்: அபுல் ஹஸன் அலீ பின் உமர்.
ஊர்: ஈராக்கின் பக்தாத் நகரில் உள்ள 'தார் அல்-குத்ன்'  என்ற பகுதிக் குடியிருப்பு. (அதனால் தான் தாரகுத்னீ என்று அழைக்கப்படுகிறார்).
காலம்: ஹிஜ்ரி 306 - 385.
சிறப்பு: இவர் ஒரு நடமாடும் நூலகம். சிறுவயதிலேயே ஈராக், ஷாம் (சிரியா), எகிப்து எனப் பயணம் செய்து ஹதீஸ்களை அள்ளி வந்தார்.

இவரின் நினைவாற்றலைக் கண்டு உலகமே மிரண்டது. எகிப்தில் ஒருமுறை ஒரு ஷேக் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். தாரகுத்னீ அதை எழுதிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒருவர், "ஏன் எழுதவில்லை?" என்று கேட்டார். அதற்கு தாரகுத்னீ, "நீங்கள் எழுதியதை விட என் நெஞ்சில் பதிந்தது அதிகம்" என்று சொல்லி, அந்த ஷேக் நடத்திய அத்தனை ஹதீஸ்களையும் வரி பிசகாமல் ஒப்பித்தார்!

இமாம் தாரகுத்னீ எழுதிய நூற்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது இதுதான். ஏன் இது ஸ்பெஷல்?
பொதுவாக 'சுனன்' நூற்களில் (அபூதாவூத், நஸாயீ போன்றவை) சட்டத்திற்குத் தேவையான ஹதீஸ்கள் இருக்கும். ஆனால் தாரகுத்னீயின் பாணி வேறு.
மக்கள் மத்தியில் ஆதாரமாகச் சொல்லப்படும் ஹதீஸ்களை எடுத்து வருவார். பிறகு, "இந்த ஹதீஸ் பலவீனமானது. இதைக் கொண்டு சட்டம் வகுக்கக் கூடாது" என்று அதன் குறைகளைத் தோலுரித்துக் காட்டுவார். இதன் நோக்கம். பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு ஃபத்வா கொடுப்பவர்களை எச்சரிப்பது. ஒவ்வொரு ஹதீஸின் கீழும், அந்த அறிவிப்பாளர் தொடரில் உள்ள சிக்கல்களை ஒரு வக்கீல் போல அலசுவார். இன்று ஹதீஸ் ஆய்வாளர்கள் ஒரு ஹதீஸை ஆய்வு செய்ய வேண்டுமென்றால், முதலில் புரட்டும் நூல் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

ஹதீஸ் கலையிலேயே மிகவும் கடினமான துறை 'இலல்' (நுண்ணிய குறைகள்). தாரகுத்னீ எழுதிய "அல்-இலல் அல்-வாரிதா" என்ற நூல், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனை. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நூல் முழுவதையும் அவர் மனப்பாடமாகவே டிக்டேட் செய்தார்! மாணவர்கள் கேட்பார்கள் இமாமே! இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறீர்கள்? தாரகுத்னீ புத்தகத்தைப் பார்க்காமலே சொல்வார். "இந்த ஹதீஸை இன்னார் அறிவித்தார். ஆனால் அதில் இன்னார் தவறு செய்தார். சரியான அறிவிப்பு இதுதான்... இப்படி ஆயிரக்கணக்கான ஹதீஸ்களின் நுணுக்கங்களை நினைலிலிருந்தே கொட்டிய அந்த அறிவைக் கண்டு இமாம் தஹபி போன்றவர்களே சிலிர்த்துப் போனார்கள்.

இமாம் புகாரியும், முஸ்லிமும் ஹதீஸ் உலகின் இரு கண்கள். ஆனால், அவர்கள் மனிதர்கள் தானே? அவர்களும் தவறு செய்திருக்கலாம் அல்லவா? என்ற துணிச்சலான கேள்வியை முன்வைத்தவர் தாரகுத்னீ. அவர் "அல்-இஸ்தித்ராக் வத்-ததப்பஃ என்றொரு நூல் எழுதினார். அதில், புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் உள்ள சுமார் 200 ஹதீஸ்களை எடுத்து, "இவற்றில் இந்த இந்தக் குறைகள் உள்ளன" என்று விமர்சித்தார். (பிற்கால அறிஞர்கள் இவரின் விமர்சனங்களில் பலவற்றுக்குப் பதில் அளித்துவிட்டாலும், இவரின் அந்தத் துணிச்சல் ஹதீஸ் கலைக்குக் கிடைத்த ஆரோக்கியமான வளர்ச்சி).

சென்ற பதிவில் பார்த்த இமாம் ஹாகிம் (முஸ்தத்ரக் எழுதியவர்), இவரின் மாணவர்.
ஹாகிம் கூறுகிறார் அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாரகுத்னீயைப் போன்று இன்னொருவரை என் கண்கள் பார்த்ததே இல்லை. அவருக்குப் பிறகு அவருக்கு நிகரானவர் யாருமில்லை.

ஹிஜ்ரி 385-ம் ஆண்டு, பக்தாத் நகரில் அந்த அறிவுச் சூரியன் மறைந்தது. இமாம் தாரகுத்னீ மட்டும் இல்லையென்றால், பலவீனமான செய்திகள் எல்லாம் "வஹீ" (இறைச்செய்தி) என்ற பெயரில் மார்க்கத்திற்குள் நுழைந்திருக்கும். அவர் ஒரு பாதுகாவலர் என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

நாம் இன்று நிம்மதியாக "இது ஸஹீஹ், இது ளயீஃப்" என்று பேசுகிறோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்குப் பின்னால், இமாம் தாரகுத்னீ போன்றவர்கள் தங்கள் வாழ்நாளையே கரைத்து உருவாக்கிய உழைப்பு இருக்கிறது. கட்டிடம் அழகாக இருக்கிறது என்று ரசிக்கிறோம்; ஆனால் அதன் அஸ்திவாரத்தில் உள்ள விரிசல்களைக் கண்டுபிடித்துச் சொன்ன இன்ஜினியர் இவர்!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDaraqutni #SunanDaraqutni #HadithCritic #Ilal #Baghdad #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups

அஸ்-சுனனுல் குப்ரா


நம்மில் அநேகம் பேருக்கு நஸாயீ என்றதுமே நினைவுக்கு வருவது, குதுபுஸ் ஸித்தாவில் (ஆறு கிரந்தங்களில்) ஒன்றாக இருக்கும் சுனன் நஸாயீ நூல் தான். ஆனால், உண்மையில் நாம் படித்துக் கொண்டிருப்பது இமாம் நஸாயீயின் அறிவுக் கடலின் ஒரு சுருக்கம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இன்று இந்த நூலின் பின்னணியையும், இந்த 'ஸவாயிது' தொகுப்பின் அவசியத்தையும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் முதலில் தொகுத்தது 'அஸ்-சுனனுல் குப்ரா' (பெரிய சுனன்) எனும் பிரம்மாண்டமான நூலைத்தான். இதில் ஸஹீஹான (ஆதாரப்பூர்வமான), ஹஸனான, மற்றும் பலவீனமான (ஆனால் சான்றுக்குரிய) ஹதீஸ்கள், நுணுக்கமான இலல் விளக்கங்களுடன் இடம்பெற்றிருந்தன சுமார் 11,000 இற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். வரலாற்றுக் குறிப்புகளின்படி, இமாம் அவர்கள் இந்த நூலை ஒரு ஆளுநரிடம் சமர்ப்பித்தபோது, "இதிலுள்ள அனைத்தும் ஸஹீஹானவையா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாம், "இல்லை" என்று பதிலளித்தார். அப்போது அந்த ஆளுநர், "எனக்கு ஸஹீஹானதை மட்டும் தனியாகப் பிரித்துத் தாருங்கள்" என்று கேட்க, இமாம் நஸாயீ அவர்கள் அந்தப் பெரிய நூலிலிருந்து வடிகட்டித் தொகுத்த சுருக்கம்தான் அஸ்-சுனனுஸ் ஸுக்ரா (சிறிய சுனன்). இதற்கு அல்-முஜ்தபா (தேர்ந்தெடுக்கப்பட்டது) என்றும் பெயர் உண்டு. இன்று மத்ரஸாக்களிலும், பொதுவாசிப்பிலும் இருப்பது இந்த 'சிறிய' நூல்தான். ஆனால், ஆய்வாளர்களுக்குத் தீனி போடும் உண்மையான கடல் அந்த 'பெரிய' (குப்ரா) நூலில்தான் இருக்கிறது.

ஹதீஸ் கலையில் இமாம் நஸாயீ ஒரு புலி. அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் இமாம் முஸ்லிமை விடவும், ஏன் சில இடங்களில் இமாம் புஹாரியை விடவும் கூட கடுமையான நிபந்தனைகளைக் கொண்டவர். அவரது 'குப்ரா' நூலில், ஒரு ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள நுட்பமான தவறுகளை சுட்டிக்காட்டும் இடங்கள் பிரமிக்க வைக்கும். அத்தகைய அரிய குறிப்புகள் பலவும் சுருக்கப்பட்ட 'முஜ்தபா'வில் விடுபட்டிருக்கலாம்.

இப்போது என் கையில் இருக்கும் இந்த நூல் 'ஸவாயிது சுனனுல் குப்ரா'. ஆய்வுக்களத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நடைமுறைச் சிக்கல் உண்டு. நம்மிடம் ஏற்கனவே 'சுனன் நஸாயீ' (சிறியது) இருக்கும். இப்போது ஆய்வுக்காகப் பெரிய குப்ராவை வாங்கினால், அதில் பெரும்பகுதி ஏற்கனவே நம்மிடம் உள்ள சிறிய நூலில் உள்ள செய்திகளாகவே இருக்கும். இங்குதான் இந்த ஸவாயிது கைகொடுக்கிறது. இது என்ன செய்கிறது என்றால், நம்மில் பரவலாக இருக்கும் சிறிய நஸாயீ - முஜ்தபா மற்றும் மற்ற 10 நூற்களில் உள்ள ஹதீஸ்களை விட்டுவிடும். ஆனால் அவற்றில் இல்லாத பெரிய நஸாயீ மற்றும் மற்ற நூற்களில் இடம்பெற்றுள்ள தனித்துவமான ஹதீஸ்களை மட்டும் பிரித்தெடுத்துத் தருகிறது. இதனால், ஒரே நேரத்தில் இமாம் நஸாயீயின் முழுமையான இல்மை (அறிவை) அடைந்த திருப்தியும் கிடைக்கிறது. அதே சமயம் நேரமும் மிச்சமாகிறது.

என்னைப் பொறுத்தவரை, ஒரு ஆய்வாளனுக்கு மூல நூல்கள் தான் ஆக்ஸிஜன். அதிலும் குறிப்பாக, ஃபிக்ஹ் சட்டங்களை ஆய்வு செய்பவர்களுக்கு, இமாம் நஸாயீயின் பாடத் தலைப்புகளும், அவர் ஹதீஸ்களைக் கொண்டுவரும் விதமும் ஒரு தனிப் பல்கலைக்கழகம். அல்லாஹ் இந்த அறிவைத் தேடுவதையும், அதைப் பாதுகாப்பதையும் நமக்கு எளிதாக்குவானாக! இன்னும் தேடுவோம்...
இவன்,

- Abdullah Ibnu Naseer 

(நிறுவனர் - பைத்துல் ஹிக்மா )

இமாம் அபூ அவானா அல்-இஸ்ஃபராயினி.


ஒரு கட்டிடத்தைக் கட்டுவது கடினம். ஆனால் அந்தக் கட்டிடம் இடிந்துவிடாமல் இருக்க, அதற்குப் பக்கபலமாகத் தூண்கள் கொடுத்துத் தாங்கிப் பிடிப்பது அதைவிட முக்கியம். இமாம் முஸ்லிம் (ரஹ்) 'ஸஹீஹ் முஸ்லிம்' என்ற கட்டிடத்தைக் கட்டினார்.
அதற்குத் தூணாக நின்று, முஸ்லிம் சொன்னது உண்மைதான் என்று மாற்றுப் பாதையில் வந்து சாட்சி சொன்னவர் தான் இமாம் அபூ அவானா அல்-இஸ்ஃபராயினி.

ஹதீஸ் உலகில் இவரை "சிறிய முஸ்லிம்" என்றே செல்லமாக அழைக்கலாம்!

1. யார் இந்த அபூ அவானா?

பெயர்: யஃகூப் பின் இஸ்ஹாக்.
சிறப்புப் பெயர்: அபூ அவானா.
ஊர்: பாரசீகத்தின் (இன்றைய ஈரான்) இஸ்ஃபராயின்என்ற நகரம்.
காலம்: ஹிஜ்ரி 230 - 316. (இமாம் முஸ்லிமுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர்).
பயணம்: ஹதீஸ் தேடுவதற்காக ஐந்து முறை ஹஜ் செய்தார். ஷாம் (சிரியா), எகிப்து, ஈராக், குராஸான் என உலகம் முழுவதும் சுற்றினார்.

இவர் பரம்பரை பணக்காரர். தனது சொத்துக்கள் முழுவதையும் ஹதீஸ் தேடுவதற்காகவும், ஏழை மாணவர்களுக்காகவும் செலவிட்டார்.

முஸ்னத் / முஸ்தக்ரஜ் அபூ அவானா! இதுதான் இவரின் வாழ்நாள் சாதனை. இதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் முஸ்தக்ரஜ் என்று சொல்ல வேண்டும். அது என்ன 'முஸ்தக்ரஜ்'?  இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் ஊடாக சொல்கிறேன்.

இமாம் முஸ்லிம்: எனக்கு 'அ' என்பவர் சொன்னார், அவருக்கு 'ஆ' சொன்னார், அவருக்கு 'நபி (ஸல்)' சொன்னார்கள்" என்று ஒரு ஹதீஸைப் பதிவு செய்கிறார்.

இமாம் அபூ அவானா: அதே ஹதீஸை எடுப்பார். ஆனால் இமாம் முஸ்லிம் வழியாகச் செல்ல மாட்டார்.
வேறொரு பாதையில், எனக்கு 'X' சொன்னார், அவருக்கு 'Y' சொன்னார், அவருக்கு 'ஆ' சொன்னார்... என்று அதே ஹதீஸை, அதே நபித்தோழரிடம் கொண்டு போய் சேர்ப்பார்.

ஆக இமாம் முஸ்லிம் பதிவு செய்த ஹதீஸை பொறுத்தமட்டில் அவர் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. வேறொரு பாதையிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது என்று நிரூபணமாகும். ஒரே ஹதீஸுக்கு இரண்டு சாட்சிகள் கிடைப்பது போல இது மிக வலுவானதாக மாறும். இமாம் முஸ்லிம் சுருக்கமாகச் சொன்ன சில செய்திகளை, இவர் விரிவாகப் பதிவு செய்வார். இந்த அடிப்படையில், ஸஹீஹ் முஸ்லிமில் உள்ள பெரும்பாலான ஹதீஸ்களுக்கு, இவர் வேறொரு பலமான அறிவிப்பாளர் தொடரைக் கண்டுபிடித்து எழுதிய நூல் தான் முஸ்னத் அபூ அவானா.

இவரின் நூலின் இன்னொரு சிறப்பு, இமாம் முஸ்லிம் சில ஹதீஸ்களைச் சுருக்கியிருப்பார்.
ஆனால் அபூ அவானா, அதே ஹதீஸை முழுமையாக, கூடுதல் விபரங்களுடன் பதிவு செய்திருப்பார்.
இன்று சட்ட அறிஞர்கள், ஒரு ஹதீஸின் முழுமையான வடிவத்தைத் தெரிந்துகொள்ள அபூ அவானாவின் நூலைத்தான் நாடுவார்கள்.

இமாம் முஸ்லிமின் நூலை அந்தக்காலத்தில் மக்கள் அதிகம் கவனிக்கவில்லை. புஹாரிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஆனால், ஸஹீஹ் முஸ்லிம் ஒரு பொக்கிஷம் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் அபூ அவானா தான். அதனால்தான் அறிஞர்கள் ஸஹீஹ் முஸ்லிமின் ஹதீஸ்களை, அதே தரத்தில் (Quality), ஆனால் மாற்றுப் பாதையில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும் என்று கூறுகிறார்கள்.

இமாம் தாரகுத்னியைப் போலவே இவரும் ஒரு நினைவு இயந்திரம் என்று சொல்லலாம். இவருடைய மாணவர் ஒருவர் கூறும்போது இஸ்ஃபராயின் நகரத்தில் அபூ அவானாவைப் போல ஒரு மேதையை நாங்கள் பார்த்ததில்லை. அவர் இமாம் ஷாஃபியின் சட்ட ஆய்வு முடிவுகளயுய், ஹதீஸின் நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் கூறுகிறார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஸஹீஹ் முஸ்லிமுக்குச் சேவகம் செய்த அந்த அறிஞர், ஹிஜ்ரி 316-ம் ஆண்டு, தனது சொந்த ஊரான இஸ்ஃபராயினில் காலமானார். நாம் ஒரு செய்தியை ஒருவர் சொன்னால் நம்புவோம். இருவர் சொன்னால் உறுதியாக நம்புவோம். இமாம் முஸ்லிம் சொன்ன செய்திகளுக்கு, "நானும் சாட்சி!" என்று கையை உயர்த்தியவர் தான் இமாம் அபூ அவானா.
ஸஹீஹ் முஸ்லிமின் ஒவ்வொரு ஹதீஸின் பின்போடும் இவரின் உழைப்பு மறைந்திருக்கிறது!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamAbuAwanah #MusnadAbuAwanah #Mustakhraj #SahihMuslim #Isfarayin #HadithScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups

Tuesday, February 17, 2026

புனித மிக்க ரமலானை வரவேற்போம்


💞 புனித மிக்க ரமலானை வரவேற்போம் 💞

• ரமலான் இன்னும் சில தினங்களில் வரபோகிறது கேட்கும் பொழுதே எவ்வளவு உள்ளத்தில் மகிழ்ச்சியாக உள்ளது!

• ஒவ்வொரு வருடமும் ரமலான் உற்சாகமாக வருகிறது ஆனால் இதற்கு நம்மில் பலர் தயார் இல்லை! ஒரு சாரார் வேலை படிப்பு நிக்காஹ் என்ற அற்ப காரணங்களை கூறிய ரமலானை பாழாக்கி விடுகிறார்கள் - இன்னும் சிலர் என்ன புது வகை உணவு செய்யலாம்? ஸஹருக்கு என்ன செய்யலாம் - இப்தருக்கு என்ன செய்யலாம் என்பதில் நோன்பை பாழாக்கி விடுகிறார்கள்!

• இன்னும் சிலர் உண்ணுவது உறக்குவது என்பதிலயே ரமலான் சென்று விடுகிறது! இன்னும் சிலருக்கு பிறை பற்றி கருத்து வேறுபாடு - தராவிஹ் தொழுகை எண்ணிக்கை பற்றி கருத்து வேறுபாடு இதிலயே பலருக்கு ரமலான் பாழாகி விடுகிறது!

• வருடத்தில் ஒரு முறை தான் இந்த ரமலான் நமக்கு கிடைகின்றது அதையும் அற்ப காரணங்களால் நாம் பாழாக்கி விட கூடாது!

• ஏன் என்றால் எத்தனையோ நபர்கள் நமக்கு தெரிந்தவர்கள் சென்ற ரமலானில்  நம்முடன் இருந்தவர்கள் தற்பொழுது கிடையாது! இன்னும் சிலர் இன்று நாளையோ என்று கையில் உயிரை பிடித்து கொண்டு மரண படிக்கையில் உள்ளார்கள்! இவர்களிடம் கேட்டு பாருக்கள் ரமலான் உடைய அருமை பற்றி!!! காரணம் உடலில் ஆரோக்கியம் இருக்கும் போது அதன் அருமை தெரியவில்லை - சாகும் நேரத்தில் தான் அதன் அருமை நம்மில் பலருக்கு விளங்குகிறது!

💟 ரமலானை வரவேற்போம் :

• ரமலான் வரும் முன்பே நாம் ரமலானில் அதிகம் அமல்கள் செய்ய எற்றால் போல் நம்முடைய வேலை படிப்பு சூழ்நிலைகளை ஆகிவற்றை ஆக்கி கொள்ள வேண்டும்!

• நம்மில் எத்தனை நபர்கள் இந்த ரமலானை முழுமையாக அடைய போகிறோம் என்பது தெரியாது அதனால் இயன்ற அளவுக்கு இப்போது இருந்தே நாம் ரமலானுக்கு என்ன என்ன அமல் செய்யலாம்! அதை எப்படி செய்யலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும்!

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا  وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்! மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்!

(சூரத்துல் : அல் முல்க் : 02)

• அல்லாஹ் நம்மை படைத்த நோக்கமே அவனை இக்லாஸ் ஆன முறையில் அமல் செய்ய தான் என்றால் அதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ரமலானில் நமக்கு உள்ளது அதை ஒரு போதும் தவற விட்டு விட கூடாது!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்! அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும்! உடனே, அவர்கள் எழுவார்கள்! அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்! அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1896)

• நம்மில் எத்தனை பேர் இந்த பாக்கியத்தை அடைய போகிறோம்? இன்ஷாஅல்லாஹ் ரமலான் வர போகிறது அதை எந்த விதத்தில் எப்படி ஆதரித்து வரவேற்க போகிறோம்? என்பது தான் இப்போது முக்கியம்!

💟 ரமலான் என்பது நோன்பிற்கு மட்டும் தானா?

• நம்மில் பலர் ரமலான் என்றாலே நோன்பு மட்டும் நினைவில் வரும் காலை முதல் மாலை வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டும்! ஆனால் அவ்வாறு கிடையாது! ரமலானில் நோன்பு என்பது ஒரு பகுதி மட்டுமே அதை தவிர்த்து இன்னும் நிறைய உள்ளது!

• ரமலான் என்பது  : ரமலான் என்றால் அமைதிக்கான மாதம் - உடல் ஆரோக்கியத்திற்கான மாதம் - நல்ல அமல்கள் எந்த இடையூறும் இல்லாமல் செய்ய ஏற்ற மாதம் - அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையும் பெற்று தரும் மாதம் - சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் - நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம் - அல்குர்ஆன் அதிகம் ஓத ஏற்ற மாதம் - பாவங்களை விட்டு விலகி நல்லோர்களாக மாற ஏற்ற மாதம் - அல்லாஹ்வை நெருக்க ஏற்ற மாதம் - தானம் தர்மங்கள் அதிகம் செய்ய ஏற்ற மாதம் - உபரியானா தொழுகைகள் தொழ ஏற்ற மாதம் சுபஹானல்லாஹ் இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம் ரமலான் மாதம் பற்றி!!!!

• இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ரமலானில் நோன்புடன் நிறுத்தி விடாமல் நம்முடைய சக்திக்கு எற்றால் போல் அதிகம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ்!

💟 ரமலானுக்கு இப்போது இருந்தே தயார் ஆகுவோம் :

• நம்மில் பலர் சரியாக தொழ மாட்டோம்! அல்குர்ஆன் ஓத மாட்டோம் பாவங்களில் இருந்து விலக மாட்டோம் ரமலான் வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியமாக உள்ளோம்!

• நல்ல அமல்கள் செய்ய வேண்டும் - பாவங்களை விட்டு விலக வேண்டும் என்று எண்ணம் இருக்கும் பொழுது ஏன் அதை ரமலான் வரை தாமதம் செய்ய வேண்டும்?

• ஷைத்தான் இவ்வாறு தான் நம்மை ஏமாற்றி கொண்டு இருப்பான் ரமலான் வரும் பொழுது மாற்றி கொள்ளலாம் என்பான் - பின்பு ரமலான் 10 நோன்புகள் பின்பு மாற்றி கொள்ளலாம் என்பான் பின்பு ரமலான் 20 நோன்பு பின்பு பார்த்து கொள்ளலாம் என்பான் பின்பு ஒற்றைப்படை நோன்பில் மாற்றி கொள்ளலாம் என்பான் கடைசியாக ரமலான் முடிய போகிறது இதன் பின்பு மாறி என்ன ஆக போகிறது என்று கடைசி வரை நம்மை அமல் செய்யவும் விடாமல் பாவங்களில் இருந்து விலகுவும் விடாமல் வைத்து விடுவான்!

1) பாவங்களில் இருந்து விலகி இன்றே அல்லாஹ்வின் பக்கம் திரும்புபோம்!

• பாவங்களில் இருந்து விலக ரமலான் வரை காத்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது! இன்று பாவங்களில் இருந்து விலகி அந்த பாவத்தின் பக்கம் மீண்டும் செல்ல கூடாது என்று உறுதியாக எண்ணம் வைத்து அல்லாஹ்விடம் தவ்பா செய்து அவன் பக்கம் மீள்வோம்! மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்லாமல் இருக்க அல்லாஹ்விடம் உதவி தேடுவோம்!

• நாம் இப்போதே பாவங்களில் இருந்து விலக வில்லை என்றால் ரமலான் அப்போதும் நம்மால் அவ்வளவு எளிதில் பாவங்களை விட்டு விலக முடியாது! ரமலானை தூய்மையான உள்ளதுடன் வரவேற்போம் இன்ஷாஅல்லாஹ்!

2) அமல்கள் செய்ய திட்டமிடுவோம் :

• நாம் ஒரு ஊர்க்கு பயணம் செய்ய போகிறோம் அல்லது ஒரு தொழில் ஆரம்பம் செய்ய போகிறோம் என்றால் அதற்கு எவ்வாறு திட்டமிடுவோம்? அதை பற்றி பலரிடம் ஆலோசனை கேட்டு யோசித்து பின்பு ஆரம்பம் செய்வோம்!

• அழிந்து போக கூடிய உலகிற்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால் அழிவே இல்லாத மறுமை வாழ்கைக்கு தயார் செய்ய நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

• நம்மில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டு தான் இருக்கும் - சிலருக்கு பள்ளிக்கூடம் கல்லுரி - இன்னும் சிலருக்கு வேலைகள் சுய தொழில்கள் - மருத்துவ பார்ப்பது என்று ஏதேனும் ஒன்று இருக்கும்!

• இன்ஷாஅல்லாஹ் ரமலானில் அமல் செய்ய எற்றால் போல் நம்முடைய வேலை படிப்புகளை ஆக்கி கொள்ள வேண்டும் அதை எவ்வாறு செய்யலாம் எப்படி செய்யலாம் என்று இப்போதே திட்டமிட வேண்டும்!

3) ரமலான் பற்றி இப்போதே அறிந்து வைத்து கொள்ளுவோம்!

• ரமலான் மாதத்தில் தான் நம்மில் பலருக்கு இதை செய்யலாமா கூடாத? இது செய்ய அனுமதி உண்டா இல்லை என்று நிறைய கேள்விகள் எழும் பலர் ஸஹர் செய்யாமல் குளிப்பு கடமை ஆகி விட்டது! இப்போது எப்படி நோன்பு வைப்பது என்று ஸஹர் நேரத்தில் ஒவ்வொரு நபருக்கா போன் செய்து கொண்டு இருப்பார்கள்!

• இவ்வாறு சந்தேகம் நம்மில் ஒவ்வொரு நபருக்கும் எழும் எனவே ரமலான் வரும் முன்னே அதை பற்றி இயன்ற அளவுக்கு அறிந்து வைத்து கொள்ள வேண்டும்! ரமலான் சார்ந்த நூல்கள் வாசிப்பது! பயான்கள் கேட்பது! அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்களை பின் பற்றும் ஆலிம்களை கேட்பது என ஏதேனும் ஒரு வழியில் அறிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும்!

4) மனஇச்சைகளை வீழ்த்துவோம் :

• ரமலான் உடலுக்கு மட்டும் அல்ல உள்ளதை சீர் செய்யவும் ஏற்ற மாதமாகும்!  இவ்வளவு காலம் உள்ளம் பல தீய செயல்களை தூண்டி அதை செய்ய வைத்து! பல தவறான எண்ணங்களை உள்ளத்தில் வர வழைத்து நம்மை நிறைய பாவங்கள் செய்ய வழி காட்டி உள்ளது இதற்கு ஒரு முற்று புள்ளியாக இந்த ரமலான் மாதம் உள்ளது!

• உள்ளத்திற்கு எதிராக நாம் யுத்தம் செய்து அதை அல்லாஹ்விடம் பணிய செய்ய வேண்டும்! உள்ளம் அசுத்தம் ஆக இருந்தால் அதை நல்ல அமல்கள் மூலம் சுத்தம் செய்து விடலாம்! உள்ளத்தில் அதிகம் நல்ல செயல்கள் சென்றால் எளிதாக உள்ளம் தூய்மை ஆகி விடும் உள்ளம் தூய்மை ஆகி விட்டால் நம்மை இறைவன் பக்கம் செல்ல உள்ளமும் உறுதுணையாக இருக்கும்!

• இந்த ரமலானில் மட்டும் நாம் உள்ளதை எதிர்த்து அடக்கி விட்டால் அல்ஹம்துலில்லாஹ் அதன் பின்பு அதை எதிரிப்பது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும்! எனவே இந்த ரமலான் மாதத்தை வீணாக்கி விட வேண்டாம்!

5) ரமலான் தர்மத்தின் மாதம் :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள்! ஜிப்ரீல் (அலை) தம்மைச் சந்திக்கும் போது மழைக்காற்றை விட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1902)

இமாம் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் வழங்கி கொடை எல்லா வகையான கொடைகளையும் உள்ளடக்கியது : கல்வி கற்றுக் கொடுப்பது, அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக உயிரையும் பொருளையும் தியாகம் செய்வது, அல்லாஹ்வின் அடியார்களுக்கு வழிகாட்டுவது போன்ற எல்லா அம்சங்களும் நபியவர்களிடம் இருந்தன!

மேலும் மனித குலத்திற்கு எல்லா வழிகளிலும் நன்மை கிட்டுமாறு செய்வார்கள்! அதாவது, அறியாதவர்களுக்கு கல்விகற்பிப்பது, தேவையுடையோரின் தேவைகளை நிறைவேற்றுவது, பசித் தோருக்கு உணவழிப்பது போன்ற எல்லா வழிகளிலும் மக்களுக்குப் பயனளித்துக்கொண்டிருந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்!

இப்படி அவர்கள் கொடை வழங்குவது ரமளான் மாதத்தில் பன்மடங்காகும்! காரணம், ரமளானின் காலம் ஒரு சிறந்த காலம்! அதில் கூலி இரட்டிப்பாக்கப்படும்!

(நூல் : மஜாலிஸ் ஷஹ்ரு றமளான் : 51)

• தர்மம் என்றாலே செல்வத்தை பிறருக்கு கொடுப்பது மட்டும் அல்ல மாறாக நம்மிடம் உள்ள நல்ல விசயங்களையும் தர்மம் செய்ய வேண்டும்! நபியவர்களைப் போல. எந்த விதத்திலாவது மனித குலம் நம்மைக் கொண்டு பலனடைய வேண்டும்! அப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனைகள் உருவாக்குவதற்கு றமளான் ஒரு நமக்கு மகா வாய்ப்பு ஆகும்!

6) அல்குர்ஆன் ஓத ஆரம்பம் செய்வோம் :

• இன்று பலர் அல்குர்ஆன் ஓதுவது என்றாலே யாரேனும் வீட்டில் இறந்து விட்டால் - நிக்காஹ்வின் போது அல்லது ரமலான் பொழுது தான் அல்லாஹ் பாதுகாக்கனும்!

• அல்குர்ஆனில் தான் இம்மை மறுமைக்கு தேவையான அனைத்தும் உள்ளது! அல்லாஹ்வை நேசிக்கும் ஒவ்வொரு அடியானும் அல்குர்ஆனை ஓதுவதையும் - கேட்பதிலும் இன்பம் காண்பர்கள்!

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது!

(சூரத்துல் : அல் பகரா : 185)

• ரமலானையும் அல்குர்ஆனையும் பிரித்து பார்க்கவே முடியாது! அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி ரமலானை சிறப்பித்தான அல்லது ரமலானில் அல்குர்ஆனை இறக்கி சிறப்பித்தான? என்ற முடிவுக்கு வருவது கஷ்டம் ஆகும்!

• ரமலான் வந்தால் தான் அல்குர்ஆனை கையில் எடுப்பேன் என்று இருக்காமல் இன்று இருந்தே அல்குர்ஆனை ஓத ஆரம்பம் செய்ய வேண்டும்!

• நாம் அல்குர்ஆனை ஓத வேண்டும் - ஓதுவதை கேட்கவேண்டும்! பிறருக்கும் ஓத சொல்லி கொடுக்க வேண்டும்! ஓத தெரியவில்லை என்றால் தெரிந்த மொழில் ஆவது ஓத வேண்டும்! அல்லது குறைந்தது ஓதுவதையாவது செவிதாழ்த்தி கேட்கவேண்டும்!

7) உம்ரா செய்ய முயற்சி செய்யவேண்டும் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1863)

• நாம் தெரிந்தே எவ்வளவு உலக வாழ்கைக்கு செலவு செய்கிறோம் என்றாவது ஹஜ் செய்ய வேண்டும் அல்லது உம்ரா செய்ய என்று பணம் சேர்த்து உள்ளோமா அல்லது அதற்கு ஏதேனும் முயற்சி தான் செய்து உள்ளோமா?

• இன்ஷாஅல்லாஹ் இந்த ரமலானில் ஆவது உம்ரா செய்ய முயற்சி செய்யவேண்டும் அல்லது நம்மிடம் பொருளாதாரம் அதிகம் இருந்தால் ஸாலிஹான மார்க்க கடமைகளை பேணும் மக்களில் யாரேனும் நாம் ஹஜ் அல்லது உம்ரா செய்ய உதவி செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ்!

8) நன்மைகளை அதிகம் செய்ய முயற்சி செய்யவேண்டும் :

• ஒவ்வொரு முறை ரமலான் வரும் பொழுதும் நன்மைகளை வாரி வழங்கும் மாதமாகவே வருகிறது! ஆனால் நம்மில் பலர் இதை அலட்சியமாகவே விட்டு விடுகிறோம்!

• ரமலான் காலத்தில் நோன்பு கஞ்சி வாங்கவும் வடை சமோசா வாங்கவுமே நம்மிடம் போட்டி உள்ளது! தவிர நம்மில் எத்தனை பேரிடம் அமல் செய்வதில் போட்டி உள்ளது???

நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 148)

• ரமலான் மாதத்தில் பிறர் நோன்பு வைக்க வில்லை நாம் நோன்பு வைத்து உள்ளோம் என்று இருந்து விடாமல்! அவர் அல்குர்ஆன் அதிகம் உள்ளார் இன்ஷாஅல்லாஹ் நான் அவரை விட இன்னும் அதிகம் ஓத வேண்டும்! நபில் தொழுகைகள் தஹஜ்ஜத் - லூஹா தொழுகை போன்ற உபரியானா தொழுகைகள் மற்றும் தர்மம்கள் அதிகம் செய்ய வேண்டும்!

9) விளம்பரப்படுத்த வேண்டாம் :

• இன்று பலர் உண்ணுவது, உறக்குவது, உடுத்தும் ஆடை, குடும்பம் வாழ்கை என அனைத்தும் மக்கள் மத்தியில் விளம்பரம் செய்வார்கள்! இன்னும் சிலர் ரமலானில் ஸஹர் உணவு இஃப்தர் உணவு - பெருநாள் ஆடை - தஹஜ்ஜத் தொழுகை - அல்குர்ஆன் ஓதுவது என அனைத்தையும் புகைப்படம் எடுத்து பகிரவும் செய்கிறார்கள்!

• எவ்வளவு மக்கள் இந்த அருட்கொடைகள் கிடைக்க வில்லை - அல்லாஹ் அதை நமக்கு கொடுத்து உள்ளான் அதற்கு நன்றி செலுத்தாமல் ஏன் இவ்வாறு நாம் செய்ய வேண்டும்??? இதனால் கண்ணெறு தான் நமக்கு ஏற்படும்!

• நன்மை தீமை பதிவு செய்ய அல்லாஹ் மலக்கு மார்களை வைத்து இருக்கும் பொழுது ஏன் இத்தனை ரக்ஆத் தொழுது உள்ளேன் இவ்வளவு ஆயத் ஓதி உள்ளேன் என்று செய்த அமல்களை கூறி நாம் ஏன் பெருமை கொள்ள வேண்டும்???

Monday, February 16, 2026

.இமாம் ஹாகிம் (ரஹ்).


இஸ்லாமிய வரலாற்றில், இமாம் புஹாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகியோர் ஸஹீஹ் ஹதீஸ்களைத் தொகுத்துவிட்டுச் சென்ற பிறகு, ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக மக்கள் நினைத்தார்கள்.
புஹாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் எல்லா ஸஹீஹான ஹதீஸ்களும் வந்துவிட்டனவா? என்றால், இல்லை என்பதே பதில். அவர்கள் தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டுமே தொகுத்தார்கள்.

அப்போது தான் நிஷாப்பூரிலிருந்து ஒரு இமாம் எழுந்தார். புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் சில நிபந்தனைகளை வைத்திருந்தார்கள். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட எத்தனையோ ஹதீஸ்களை அவர்கள் விட்டுவிட்டார்கள். அவற்றை நான் தேடித் தொகுப்பேன் என்று சூளுரைத்தார்.
அவர்தான் இமாம் ஹாகிம் (ரஹ்).

பெயர்: முஹம்மது பின் அப்துல்லாஹ் (அபூ அப்துல்லாஹ்).
சிறப்புப் பெயர்: அல்-ஹாகிம் அந்-நிஷாப்பூரி. (இவரை 'இப்னுல் பய்யி' என்றும் அழைப்பர்).
பிறப்பு: ஹிஜ்ரி 321-ம் ஆண்டு, பாரசீகத்தின் நிஷாப்பூர் நகரில்.
கல்வி: மிகச் சிறுவயதிலேயே தந்தையிடம் ஹதீஸ் கற்கத் தொடங்கினார். ஈராக், குராஸான், ஹிஜாஸ் (மக்கா, மதீனா) என உலகைச் சுற்றி, சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஷைக்குகளிடம் ஹதீஸ் கேட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆசிரியர்: ஹதீஸ் கலையின் மாபெரும் விமர்சகர் இமாம் தாரகுத்னீ இவரின் முக்கியமான ஆசிரியர்.

இமாம் ஹாகிம் என்றாலே நினைவுக்கு வருவது இந்த நூல்தான். ஹதீஸ் உலகில் இது ஒரு மைல்கல்.
முஸ்தத்ரக் என்றால் என்ன? விடுபட்டதைத் தேடிப்பிடித்துத் தொகுத்தல் என்று பொருள். புஹாரியும் முஸ்லிமும் ஒரு ஹதீஸை ஏற்க வேண்டும் என்றால், அந்த அறிவிப்பாளர் வரிசை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தரம் வைத்திருந்தார்கள். அந்தத் தரத்தில் இருந்தும், அவர்கள் தங்கள் நூலில் சேர்க்கத் தவறிய ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை நான் இதில் இணைக்கிறேன் என்றார்.

முஸ்தத்ரக் அலஸ்ஸஹீஹைனில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. இவர் ஒவ்வொரு ஹதீஸுக்கும் கீழே, "இது புஹாரியின் நிபந்தனைக்குட்பட்டது", "இது முஸ்லிமின் நிபந்தனைக்குட்பட்டது" என்று குறிப்பு எழுதியிருப்பார். இமாம் ஹாகிம் ஒரு நல்ல நோக்கத்தில்தான் இதைத் தொடங்கினார். ஆனால், இந்த நூலில் நிறையப் பிழைகள் நடந்துவிட்டன என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இமாம் ஹாகிம் ஹதீஸ் விமர்சனத்தில் மிகவும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தார். பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கூட, இது ஸஹீஹானது என்று தவறுதலாகத் தீர்ப்பளித்துவிட்டார். இதற்கு காரணமாக இமாம் ஹாகிம் இந்த நூலைத் தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் (முதுமையில்) எழுதினார். அப்போது அவருக்கு நினைவாற்றல் சற்றுக் குறைந்திருந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஹாகிமின் நூல் அப்படியே விடப்பட்டிருந்தால், மார்க்கத்தில் பல பிழைகள் புகுந்திருக்கும் என்றும் ஒரு சில அறிஞர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால், பிற்காலத்தில் வந்த இமாம் தஹபி, இந்த நூலை முழுமையாக ஆய்வு செய்தார். ஹாகிம் எங்கெல்லாம் இது புகாரி தரத்தில் உள்ளது என்று சொன்னாரோ, அங்கெல்லாம் இமாம் தஹபி குறுக்கிட்டு, "இல்லை! இதில் வரும் அறிவிப்பாளர் பலவீனமானவர். இது இட்டுக்கட்டப்பட்டது" என்று மிகத் துல்லியமாக விமர்சித்தார். எனவே, இன்றுள்ள அறிஞர்கள் ஹாகிமின் 'முஸ்தத்ரக்'கை, தஹபியின் விமர்சனம் இல்லாமல் படிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்.

இவர் முஸ்தத்ரக்கை' மட்டும் எழுதவில்லை. ஹதீஸ் கலைக்கே இலக்கணம் வகுத்தவர் இவர். 

மஃரிபத் உலூம் அல்-ஹதீஸ். ஹதீஸ் கலையின் விதிகள் பற்றி எழுதப்பட்ட ஆரம்பகால நூற்களில் இது மிக முக்கியமானது. பிற்காலத்தில் வந்த இப்னு ஸலாஹ் போன்றவர்கள், ஹதீஸ் விதிகலை வகுக்க இந்த நூலையே அடிப்படையாகக் கொண்டனர்.

தனது ஊரான நிஷாப்பூரின் வரலாற்றையும், அங்கு வாழ்ந்த அறிஞர்களையும் பற்றி எழுதிய வரலாற்று ஆவணம்.

இமாம் ஹாகிம் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதாவது அவர் அலீ (ரலி) அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்றும், முஆவியா (ரலி) விஷயத்தில் சற்று விமர்சனப் போக்குடையவர் என்றும் கூறப்பட்டது. இமாம் இப்னு கஸிர் போன்றோர், "அவரிடம் ஷீஆக்களின் சாயல் இருந்தது உண்மைதான். ஆனால் அவர் ஸஹாபாக்களைத் திட்டும் நிலைக்குச் செல்லவில்லை. அவர் ஹதீஸில் நேர்மையானவர்" என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஹதீஸ் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்த, அதே சமயம் சில விமர்சனங்களையும் தாங்கி நின்ற அந்த இமயமலை, ஹிஜ்ரி 405-ம் ஆண்டு, ஸஃபர் மாதம் நிஷாப்பூரில் மரணமடைந்தது. அவரது மாணவரான இமாம் பைஹகீ, தனது ஆசிரியரின் மரணத்தை நினைத்து வெகுநாட்கள் துக்கத்திலிருந்தார்.

மனிதர்கள் சில பிழைகளை செய்யக்கூடியவர்கள் என்பதற்கு இமாம் ஹாகிம் ஒரு உதாரணம். அவர் செய்த அந்தத் பிழைகளால்தான், பிற்காலத்தில் இமாம் தஹபி போன்ற ஆய்வாளர்கள் உருவானார்கள். முஸ்தத்ரக் நூலில் பிழைகள் இருந்தாலும், அதில் உள்ள ஆயிரக்கணக்கான உண்மையான ஹதீஸ்கள் இன்றும் சட்டங்களுக்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அவர் திறந்தவாசல் வழியாகத்தான் பல அரிய ஹதீஸ்கள் நமக்குக் கிடைத்தன.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamHakim #Mustadrak #HadithScholar #Dhahabi #Nishapur #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups

Sunday, February 15, 2026

அபூ உர்வா மஃமர் பின் ராஷித் அல்-அஸ்தி


நாம் சில நேரங்களில் எதேச்சையாக பயணங்களுக்கு செல்வோம். ஆனால் அந்த சில பயணம் ஒரு வரலாற்றையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு பயணம்தான் இமாம் மஃமர் பின் ராஷித் மேற்கொண்டது.

பெயர்: அபூ உர்வா மஃமர் பின் ராஷித் அல்-அஸ்தி
பிறப்பு: ஹிஜ்ரி 95 (பஸ்ரா, ஈராக்).
இறப்பு: ஹிஜ்ரி 153 (ரமலான் மாதம்).
ஆசிரியர்கள்: கதாதா, இமாம் ஸுஹ்ரி, அய்யூப் சிக்தியானி.
மாணவர்கள்: அப்துர் ரஸ்ஸாக் (மிக முக்கியமானவர்), சுப்யான் அஸ்-ஸவ்ரி.

அவர் பிறந்தது ஈராக்கில் உள்ள 'பஸ்ரா' நகரில். ஆனால் இன்று அவர் அறியப்படுவது "யமனின் இமாம்" என்று. இது எப்படி நடந்தது?

மஃமர் பின் ராஷித் இளமையில் துணிகளை விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்தார். வியாபார விஷயாக அவர் யமன் நாட்டின் 'ஸன்ஆ' நகருக்குச் சென்றார். அங்கே தனது வேலையை முடித்துவிட்டுத் திரும்பத் தயாரானார்.
ஆனால், யேமன் மக்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தார்கள். இந்த வியாபாரியிடம் இருக்கும் சரக்குகளை விட, இவரின் நெஞ்சில் இருக்கும் ஹதீஸ்கள் அதிக மதிப்பு வாய்ந்தவை! அவரிடம் இருக்கும் அபாரமான கல்வி ஞானத்தைக் கண்டு வியந்த யேமன் மக்கள், "இவரைத் திரும்ப ஈராக்கிற்கு அனுப்பக் கூடாது" என்று முடிவு செய்தனர்.

அவர் ஊருக்குப் போக விடாமல் தடுக்க யமன் மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
அவரை மிரட்டவில்லை, சிறையில் அடைக்கவில்லை. மாறாக, அந்த ஊரிலேயே மிகச்சிறந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!
இங்கேயே தங்கிவிடுங்கள், எங்களுக்கு மார்க்கம் சொல்லிக்கொடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார்கள். அன்று யமன் மக்கள் செய்த அந்தச் செயல் இல்லையென்றால், இன்று முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலே நமக்குக் கிடைத்திருக்காது.

ஹதீஸ் கலையில் மிகப் பெரிய இமாம் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி (ரஹ்). மஃமர் அவர்கள், இமாம் ஜுஹ்ரியிடம் மிக நீண்ட காலம் தங்கியிருந்து பாடம் படித்தவர். ஒருமுறை ஒரு மாணவர் நீங்கள் ஏன் மஃமர் அறிவிக்கும் ஹதீஸுக்கே முன்னுரிமை கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அறிஞர்கள் சொன்னார்கள்: "ஜுஹ்ரியிடம் பாடம் படித்தவர்களிலேயே மிகத் துல்லியமானவர், நம்பகமானவர் மஃமர்தான்."
மதீனாவின் கல்வியை (ஸுஹ்ரியின் வழியாக) யமனுக்குக் கடத்தி வந்த தபால்காரர் இவர்தான்.

நாம் முந்தைய பதிவில் இமாம் அப்துர் ரஸ்ஸாக் எழுதிய 'முஸன்னஃப்' பற்றிப் பார்த்தோம்.
உண்மையில், அந்த நூலுக்கு அடிப்படையே மஃமர் எழுதிய அல்-ஜாமிஃ என்ற நூல்தான். இதுதான் இஸ்லாமிய வரலாற்றில் தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட முதல் சில நூற்களில் ஒன்று. இன்றும் 'முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்' நூலின் கடைசிப் பகுதியாக இந்த 'ஜாமிஃ' இணைக்கப்பட்டுள்ளது.

இமாம் அப்துர் ரஸ்ஸாக் (யமனின் ஷைக்) உருவானதற்கு முழுக் காரணமே மஃமர் தான்.
அப்துர் ரஸ்ஸாக் கூறுகிறார்: நான் மஃமர் அவர்களிடம் பாடம் படிப்பதற்காக எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் இறுதியில், அவரிடம் கற்ற கல்வியால் என் கவலைகள் எல்லாம் பறந்து போய்விட்டன. அப்துர் ரஸ்ஸாக்கின் மாணவர்களில் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹி) முக்கியமானவர் என்பதை கடந்த பதிவுகளில் பார்த்தோமல்லவா!

மஃமர் அவர்கள் யமனிலேயே தங்கிவிட்டாலும், தனது கடைசி காலத்தில் தாய் மண்ணான ஈராக்கிற்கு (பஸ்ரா) செல்ல ஆசைப்பட்டார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு பஸ்ரா திரும்பினார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்தது.
அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே, அங்கே மரணமடைந்தார்.
பிறந்தது பஸ்ரா... வாழ்ந்தது யமன்... மீண்டும் மரணித்தது பஸ்ரா!

ஒரு மனிதர் தனது சுகபோகங்களை, சொந்த ஊரைத் துறந்து எங்கையோ ஒரு தேசத்தில் (யமன்) சென்று அறிவைப் பரப்பினார். இன்று நாம் படிக்கும் ஒவ்வொரு ஹதீஸிலும், அந்தத் தியாகத்தின் வாசனை வீசுகிறது. அவர் அன்று யமனில் தங்கவில்லை என்றால், ஹதீஸ் கலையின் ஒரு சங்கிலி அறுந்து போயிருக்கும்!

அஹ்மத் பின் அல்-ஹுசைன் அல்-பைஹகீ.


ஃபிக்ஹ் (சட்டம்) வேறு, ஹதீஸ் வேறு என்று மக்கள் பிரித்து வைத்திருந்த காலம் அது. சட்டங்கள் என்றால் அது இமாம்களின் ராய் (சுய கருத்து)" என்றும், ஹதீஸ் என்றால் அது அறிவிப்பாளர் தொடர் என்றும் ஒரு மாயை இருந்தது.
அந்த மாயையை உடைத்தெறிந்தவர் இமாம் பைஹகீ (ரஹ்). எந்தவொரு சட்டமாக இருந்தாலும், அதற்கு அடிப்படையாக ஒரு 'நபிமொழி' (ஆதாரம்) இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் இவர்.

பெயர்: அஹ்மத் பின் அல்-ஹுசைன் அல்-பைஹகீ.
பிறப்பு: ஹிஜ்ரி 384-ம் ஆண்டு, பாரசீகத்தின் 'பைஹக்' மாவட்டத்தில் உள்ள குஸ்ராபாத் என்ற ஊரில் பிறந்தார்.
கல்வி தாகம்: இவர் ஒரு இடத்தோடு முடங்கிவிடவில்லை. குராஸான், பக்தாத், கூஃபா, மக்கா, மதீனா என அலைந்து திரிந்து, சுமார் 100-க்கும் மேற்பட்ட ஹதீஸ் கலை வல்லுநர்களிடம் பாடம் பயின்றார். இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்களின் தலைசிறந்த மாணவர் இவர்தான்.

இமாம் பைஹகீயின் வாழ்நாள் சாதனை அஸ்-சுனன் அல்-குப்ரா என்ற நூலாகும். மற்ற ஹதீஸ் நூற்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
புகாரி, முஸ்லிம் போன்ற நூற்கள் "ஸஹீஹான ஹதீஸ்களை" மட்டும் தொகுத்தன. ஆனால் இமாம் பைஹகீயின் நோக்கம், "சட்டங்களுக்கான ஆதாரங்களைத் தொகுப்பது". தொழுகையில் கையை உயர்த்த வேண்டுமா? பாங்கு சொல்லும்போது விரலை எங்கே வைக்க வேண்டும்?இப்படி ஒவ்வொரு செயலுக்கும் நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? சஹாபாக்கள் என்ன செய்தார்கள்? என்பதைத் தேடித் தேடித் தொகுத்தார்.
சுமார் 22,000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களைக் கொண்ட பிரம்மாண்டமான தொகுப்பு இது. இமாம் இப்னு ஸலாஹ் கூறுகிறார்: எமக்குத் தெரிந்த வரையில், சட்டதிட்டங்களுக்கு ஆதாரம் காட்டுவதில் பைஹகீயின் இந்த நூலுக்கு நிகரான ஒரு நூல் உலகில் இல்லை."

பலரும் இவரை ஷாஃபி மத்ஹபின் தீவிர ஆதரவாளர் என்று நினைப்பதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அவர் இமாம் ஷாஃபியின் சட்ட தீர்ப்புக்களை ஏற்க காரணம், "இமாம் ஷாஃபியின் சட்டங்கள் பெரும்பாலும் ஹதீஸை ஒட்டியே இருந்தன" என்பதுதானே தவிர, கண்மூடித்தனமான பற்று (தக்லீத்) அல்ல. சில இடங்களில் இமாம் ஷாஃபியின் கூற்றுக்கு மாற்றமான ஹதீஸ் கிடைத்தால், "ஹதீஸ் தான் எனக்கு முக்கியம்" என்று துணிச்சலாக மாற்றுக் கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதனால்தான் இமாம் தஹபி, "பைஹகீ நினைத்திருந்தால் தனக்கென ஒரு தனி வழிமுறையை (இஜ்திஹாக்) உருவாக்கியிருப்பார்" என்று புகழ்கிறார்.

இவர் ஹதீஸ் கலையின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்: தலாஇல் அந்-நுபுவ்வா. நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களை, கட்டுக்கதைகள் இல்லாமல் ஆதாரப்பூர்வமான செய்திகளாகத் தொகுத்த நூல் இது. சீறா (வரலாறு) எழுதுபவர்களுக்கு இதுவே அடிப்படை.

ஷுஅபுல் ஈமான் : ஈமான் என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது என்ற ஹதீஸின் அடிப்படையில், ஒவ்வொரு கிளையையும் விரிவாக விளக்கிய நூல்.

இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு ஹதீஸைப் பதிவு செய்தால் மட்டும் போதாது. அதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? அறிவிப்பாளர் யாராவது பலவீனமானவரா? என்பதையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுவார். ஹதீஸ் இல்லாத சட்டங்களை மக்கள் பின்பற்றக்கூடாது என்பதில் இவர் குறியாக இருந்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..." என்ற வார்த்தையைச் சுமந்து திரிந்த அந்த மகான், ஹிஜ்ரி 458-ம் ஆண்டு மரணமடைந்தார்.

சட்டங்கள் என்பது மனிதர்களின் மூளையில் உதிப்பவையல்ல மாறாக அவை வஹீ ( இறைச்செய்தி) எனும் கடலிலிருந்து எடுக்கப்பட வேண்டிய முத்துக்கள் என்பதை இமாம் பைஹகீ தனது 'சுனன்' நூல் மூலம் நிரூபித்தார்.

நபிமொழியின் பாதுகாவலர் இமாம் பைஹகீ! 

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamBayhaqi #SunanAlKubra #HadithScholar #SunnahDefender #DalailAlNubuwwah #IslamicHistory #AbdullahIbnuNaseerWriteups

Saturday, February 14, 2026

அஹ்மத் ஷாகிர்


20 ஆம் நூற்றாண்டில் ஹதீஸ் கலையை மீட்டெடுத்த "மூவர் கூட்டணி" என்று சொன்னால் அது 1. அஹ்மத் ஷாகிர், 2. அல்பானி, 3. ஷுஐப் அர்ணாவூத் ஆகியோர்தான். இதில் காலத்தால் மூத்தவர் அஹ்மத் ஷாகிர். ஹதீஸ் துறை எல்லாம் முடிந்துபோன விஷயம். இனி புதிதாக ஆய்வு செய்ய ஒன்றுமில்லை என்று அறிஞர்களே நினைத்திருந்த காலகட்டம். அப்போது எகிப்தில் ஒரு குரல் ஒலித்தது. அது ஒரு பள்ளிவாசல் இமாமின் குரலாக இருக்காமல் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் குரல்!அவர்தான் ஷேக் அஹ்மத் ஷாகிர். ஷேக் அல்பானி வருவதற்கு முன்பே, ஹதீஸ் கலையில் நவீன ஆய்வு முறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

பிறப்பு: 1892-ம் ஆண்டு எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பிறந்தார்.
தந்தை: இவரது தந்தை ஷேக் முஹம்மது ஷாகிர், உலகப்புகழ் பெற்ற அல்-அஸ்ஹர். பல்கலைக்கழகத்தின் முதுபெறும் அறிஞர். மேலும் சூடான் நாட்டின் தலைமை நீதிபதியாகவும் (Chief Justice) இருந்தவர்.
சகோதரர்: இவரது தம்பி மஹ்மூத் ஷாகிர், அரபு இலக்கிய உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்.
இப்படி ஒரு அறிவுக் குடும்பத்தில் பிறந்ததால், அஹ்மத் ஷாகிர் சிறுவயதிலேயே அரபு மொழியிலும், ஃபிக்ஹ் கலையிலும் கரைகண்டவராகத் திகழ்ந்தார்.

மற்ற ஹதீஸ் அறிஞர்களுக்கும் இவருக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் இதுதான். இவர் ஒரு முழுநேர நீதிபதியாக இருந்தார். எகிப்தின் ஷரீஆ நீதிமன்றங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாகப் பணியாற்றினார். இறுதியில் எகிப்தின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்து, 1951-ல் ஓய்வு பெற்றார். ஒரு நீதிபதிக்கே உரிய கூர்மையான அறிவு, சாட்சியங்களை (அறிவிப்பாளர்களை) எடைபோடும் திறன் ஆகியவை இவரது ஹதீஸ் ஆய்வுகளில் எதிரொலித்தன.

ஷேக் அல்பானிக்கு முன் ஹதீஸ் கலையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் இவர்தான். இவரது ஆய்வுப் பணிகள் மலைக்க வைப்பவை:

முஸ்னத் அஹ்மத்: இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் 'முஸ்னத்' நூல், 30,000 ஹதீஸ்களைக் கொண்ட ஒரு கடல். ஆனால், அதுவரை அது சரியாகத் தொகுக்கப்படாமலும், பல பிழைகளுடனும் இருந்தது. ஷேக் அஹ்மத் ஷாகிர் அந்த நூலைக் கையில் எடுத்தார். ஒவ்வொரு ஹதீஸுக்கும் தரமான விளக்கம் எழுதினார். ஹதீஸின் தரத்தை (ஸஹீஹ்/ளயீஃப்) ஆய்வு செய்தார். அவர் மரணிக்கும் வரை இந்நூலின் மூன்றில் ஒரு பகுதியை (சுமார் 8,000 ஹதீஸ்கள்) ஆய்வு செய்து முடித்திருந்தார். "முஸ்னத் அஹ்மத் நூலுக்கு அஹ்மத் ஷாகிர் செய்த சேவையை, வேறு யாரும் செய்யவில்லை" என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சுனன் திர்மிதி: இமாம் திர்மிதியின் நூலை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து வெளியிட்டார்.

தஃப்ஸீர் தபரி: குர்ஆன் விரிவுரைகளின் தாயான 'தஃப்ஸீர் தபரி'யின் கையெழுத்துப் பிரதிகள் சிதிலமடைந்திருந்தன. அதைத் தேடி எடுத்து, நவீன அச்சுக்கு ஏற்றவாறு செப்பனிட்டு வெளியிட்டார்.

ஹதீஸ் கலை மாணவர்களுக்கு இது முக்கியமான பகுதி. ஷேக் அல்பானி மற்றும் ஷேக் அஹ்மத் ஷாகிர் இருவரும் சமகாலத்தவர்கள் (அல்பானி இளையவர்). இருவரின் ஆய்வு முறையில் சிறிய வித்தியாசம் உண்டு. ஷேக் அல்பானி ஹதீஸ் அறிவிப்பாளர்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு சிறிய சந்தேகம் வந்தாலும் அந்த ஹதீஸை 'ளயீஃப்' என்று ஒதுக்கிவிடுவார். ஷேக் அஹ்மத் ஷாகிர் சற்று மென்மையான போக்கு உடையவர். சில பலவீனமான அறிவிப்பாளர்களை, அவர்களின் மற்ற நற்பண்புகளை வைத்து ஏற்பார்.
 
இவர் ஹனஃபி மத்ஹபைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தாலும், ஹதீஸ் என்று வந்துவிட்டால் மத்ஹபைத் தூக்கி எறிந்துவிடுவார்.
குர்ஆன் ஹதீஸ் இருக்கும்போது, இமாம்களின் பேச்சை வேதவாக்காகக் கொள்ளக்கூடாது என்பதில் இவர் அல்பானியை விடக் கடுமையாக இருந்தார்.

ஒருமுறை எகிப்தில் ஒரு பார்வையற்ற மனிதர், குர்ஆனைத் தவறாக ஓதுவதைக் கேட்டு, அஹ்மத் ஷாகிர் அவரைத் திருத்தினார். அந்த மனிதர் கோபத்துடன், "நீ யார் என்னைத் திருத்த? நான் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் படித்தவன்" என்றார்.
அதற்கு ஷேக் அமைதியாக, "நான் அஹ்மத் ஷாகிர்" என்றார். அந்தப் பெயரைக் கேட்டதும் அந்த மனிதர் நடுங்கிப் போனார். காரணம், எகிப்தில் அந்தப் பெயருக்கு இருந்த மரியாதை அப்படி!

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் நீதிமன்றத்திலும், மீதி நேரத்தை ஹதீஸ் ஆய்விலும் கழித்த அந்த மகான், 1958-ம் ஆண்டு எகிப்தில் காலமானார். இன்று நான் படிக்கும் 'முஸ்னத் அஹ்மத்' நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், அவரது பெயர் மின்னிக்கொண்டிருக்கிறது. நவீன ஹதீஸ் மறுமலர்ச்சிக்கு முதல் செங்கல்லை எடுத்து வைத்தவர் அவர்தான்!

அல்லாஹ் அவருக்கு உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக!

(இனி மீண்டும் டைம் மெஷினில் ஏறி ஆரம்பகால அறிஞர்களை பற்றி பார்ப்போம்.)

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #SheikhAhmadShakir #Egypt #HadithScholar #MusnadAhmad #Judge #IslamicHistory #AbdullahIbnuNaseerWriteups

ஈமானையே மஹராகக் கேட்ட இணையற்ற திருமணம்

*ஈமானையே மஹராகக் கேட்ட இணையற்ற திருமணம்*

`துணையை நரகிலிருந்து மீட்டெடுத்த நற்காதல்`

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின குடும்பத்தார் மற்றும் உத்தமத் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அன்பார்ந்த சகோதரர்களே!
இன்று உலகம் *காதல்* என்ற பெயரில் உணர்ச்சிகளுக்கும், கவர்ச்சிகளுக்கும் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறது. 

ஆனால், இஸ்லாம் காதலை இறை அச்சத்தின் அடிப்படையில் பார்க்கிறது. உண்மையான காதல் என்பது *ஒருவரை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றி, சுவனத்தின் பக்கம் அழைத்துச் செல்வதாகும்*. 

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் தான் *சுவனத்து பெண்மணி உம்மு ஸுலைம்* (ரலி) அவர்கள்.

இஸ்லாமியக் காதலின் அஸ்திவாரமே இறைநம்பிக்கைதான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

> *நான்கு விஷயங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 
அவளது செல்வம், 
அவளது குடும்பப் பாரம்பரியம், 
அவளது அழகு மற்றும் அவளது மார்க்கப்பற்று. 
ஆகவே, நீ மார்க்கப்பற்று உள்ளவளைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றுக்கொள்!*
> ( புகாரி: 5090)

இந்த ஹதீஸின் நேரடி உதாரணமாக உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

`உலகின் விலைமதிப்பற்ற மஹர்!`

அபூதல்ஹா (ரலி) அவர்கள் அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அவர் பெரும் செல்வந்தர், வீரர் மற்றும் நற்குணமிக்கவர். அவர் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களைத் திருமணம் செய்ய விரும்பிக் கேட்டபோது, 

ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தால் அவரது செல்வத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மயங்கியிருக்கலாம். ஆனால், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் பதில் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

> அவர்கள் கூறினார்கள்: *அபூதல்ஹாவே! உங்களைப் போன்ற ஒரு மனிதரின் விருப்பம் நிராகரிக்கப்பட மாட்டாது. ஆனால், நீங்கள் ஒரு இறைமறுப்பாளர், நானோ ஒரு முஸ்லிம். நான் உங்களை மணப்பது எனக்கு ஹலால் இல்லை. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால், அதுவே எனது மஹராகும். அதைத் தவிர வேறெந்தச் செல்வத்தையும் நான் உங்களிடம் கேட்க மாட்டேன்.*
> (நஸாயி: 3289)

இன்று பவுன்களையும், லட்சங்களையும் மஹராகக் கேட்கும் காலத்தில், ஒரு மனிதனின் *ஈமானை* மஹராகக் கேட்ட அந்தப் பெண்ணின் காதல் எவ்வளவு உயர்தரமானது! அந்தத் திருமணத்தின் மூலம் அவர் ஒரு கணவரை மட்டும் அடையவில்லை, மாறாக *ஒரு மனிதரை நரகத்திலிருந்து காப்பாற்றி இஸ்லாத்திற்குள் கொண்டு வந்தார்*.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

> *நீங்கள் மனைவியரிடம் மனநிம்மதி பெறுவதற்காக அவர்களை உங்களிலிருந்தே உங்களுக்காகப் படைத்திருப்பதும், உங்களுக்கிடையில் அன்பையும், கருணையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் சான்றுகள் உள்ளன.* (30:21)

உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் காதலில் இந்த *அன்பும் கிருபையும்* நிறைந்திருந்தது. அவர்களின் காதல் உலகத்தோடு முடிந்துவிடவில்லை, *தன் கணவரை மறுமையிலும் தன்னோடு சொர்க்கத்தில் இணைக்க வேண்டும்* என்ற உன்னத நோக்கம் அதில் இருந்தது.

*பொருளாதாரத்தை விட ஈமானுக்கு முன்னுரிமை*

சொத்து, சுகம், அந்தஸ்து ஆகியவற்றை விட மார்க்கப் பற்றே ஒரு திருமண வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ஒரு கொள்கைவாதியாக நின்றார். அபு தல்ஹாவின் காதலுக்காகத் தன் மார்க்கத்தை அவர் விட்டுக் கொடுக்கவில்லை; மாறாகத் தன் துணையை நரகிலிருந்து மீட்டெடுத்தார்

ஒரு ஷாலிஹான பெண் நினைத்தால், ஒரு மனிதனை நேர்வழிக்குக் கொண்டு வர முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று.

அன்புள்ளவர்களே! உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் ஈமானையும், புத்திசாலித்தனத்தையும் கண்டு நபிகளாரே வியந்துள்ளார்கள்.

> *நான் சொர்க்கத்தில் நுழைந்தபோது, அங்கே (அனஸ் இப்னு மாலிக் அவர்களின் தாயார்) 'ருமைஸா' (உம்மு ஸுலைம்) அவர்களைக் கண்டேன்* என்று நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.
(முஸ்லிம்: 6411)

உண்மையான காதல் என்பது நம் துணையைத் தொழுகைக்கு அழைப்பதிலும், ஹலாலான சம்பாத்தியத்தை வலியுறுத்துவதிலும், அல்லாஹ்வுக்குப் பயந்து நடப்பதிலுமே இருக்கிறது.

வல்ல அல்லாஹ், நம்முடைய இல்லற வாழ்வை உம்மு ஸுலைம் (ரலி) மற்றும் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வாழ்வைப் போல பரக்கத் நிறைந்ததாகவும், ஈமான் உறுதியுள்ளதாகவும் ஆக்கி அருள் புரிவானாக!

https://eagathuvam.com/இஸ்லாமியக்-காதல்-சுவனத்/

இப்னு ஹிப்பான்


இஸ்லாமிய அறிவுலகில், குர்ஆனுக்கு அடுத்தபடியாக நாம் பாதுகாப்பது அண்ணல் நபிகளாரின் பொன்மொழிகளையே. இந்த ஹதீஸ் கடலில், ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) என்று நம்பகத்தன்மையுடன் தொகுக்கப்பட்ட நூல்களில், புஹாரி மற்றும் முஸ்லிமுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவது ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பிறகு ஸஹீஹ் இப்னு குஸைமா!

எனது பைத்துல் ஹிக்மா நூலகத்தில் இணைந்துள்ள 'ஸவாயிது இப்னு ஹிப்பான் நூலை முன்னிட்டு, இந்த இமாம் மற்றும் அவரின் நூல் பற்றிய ஒரு பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அபூ ஹாதிம் முஹம்மத் இப்னு ஹிப்பான் அல்-பஸ்தி (இறப்பு: ஹிஜ்ரி 354) அவர்கள் நான்காம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர். இவர்  ஹதீஸ்லை அறிஞராக (முஹத்திஸ்) மட்டுமிருக்காமல் சிறந்த புவியியலாளர், மொழி ஆய்வாளர், மருத்துவர் மற்றும் தத்துவஞானியிகவும் இருந்தார். (இமாம் இப்னு ஹிப்பான் பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்) இந்த பன்முகத் திறமை அவரது ஹதீஸ் தேர்விலும், நூலின் கட்டமைப்பிலும் எதிரொலிப்பதை நாம் காணலாம்.

என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் நூற்களில் ஸஹீப் இப்னு ஹிப்பான்‌ மற்றும் இப்னு குஸைமா என்பன தவிர்க்க முடியாத இடத்தை பெற்றவை. இப்னு ஹிப்பானின் அசல் நூலின் பெயர் அத்-தகாஸீம் வல் அன்வா. அதாவது "பிரிவுகள் மற்றும் வகைகள்".
பொதுவாக ஹதீஸ் நூல்கள் 'முஸ்னத்' (அறிவிப்பாளர்) அடிப்படையிலோ அல்லது 'சுனன்/ஜாமி' (சட்டத் தலைப்புகள், பல்துறை தலைப்புகள்) அடிப்படையிலோ அமைந்திருக்கும். ஆனால், இப்னு ஹிப்பான் ஒரு புதிய, மிகவும் சிக்கலான முறையை அறிமுகப்படுத்தினார். அவர் தனது நூலை 5 பிரிவுகளாகவும், 400 வகைகளாகவும் பிரித்தார்.
உதாரணத்திற்கு, தொழுகை பற்றிய ஒரு ஹதீஸை தேட வேண்டுமென்றால், அது ஃபிக்ஹ் தலைப்பில் இருக்காது. மாறாக, அந்த ஹதீஸ் ஒரு கட்டளையா, தடையா,அல்லது செய்தியா;என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். இது சாதாரண மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. நூலின் இந்தச் சிக்கலான அமைப்பைப் பார்த்து, பிற்காலத்தில் வந்த அறிஞர் அமீர் அலாவுத்தீன் அலி இப்னு பலூபான் அவர்கள், இதை முறைப்படுத்தி, நமக்குத் தெரிந்த 'ஃபிக்ஹ்' தலைப்புகளின் கீழ் கொண்டு வந்தார். அந்த நூல்தான் "அல்-இஹ்ஸான் ஃபி தக்ரீபி ஸஹீஹ் இப்னு ஹிப்பான்". இன்று நாம் படிக்கும் பெரும்பாலான சஹீஹ் இப்னு ஹிப்பான் பிரதிகள் இந்த அடிப்படையிலேயே உள்ளன.

இப்னு ஹிப்பான் நூலை சுருக்கி அதில் இடம்பெற்றுள்ள ஸவாயிதான கூடுதலான செய்திகளை மட்டும் தொகுத்துள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு நூல் உண்டு. அதன் முழுப்பெயர் 'மவாரித் அல்-லம்ஆன் இலா ஸவாயிது இப்னு ஹிப்பான்'. இதைத் தொகுத்தவர் இமாம் அல்-ஹைதமி (ரஹ்). ஆய்வாளர்களுக்கு, ஏற்கனவே புகாரி மற்றும் முஸ்லிமில் உள்ள ஹதீஸ்கள் மனப்பாடமாகத் தெரிந்திருக்கலாம். அவர்களுக்குத் தேவை, "புகாரி, முஸ்லிமில் இல்லாத, ஆனால் இப்னு ஹிப்பானில் மட்டும் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்திகள் எவை?" என்பதுதான்.
இந்த 'ஸவாயிது' நூல் அதைத்தான் செய்கிறது:

புகாரி, முஸ்லிமில் வந்த ஹதீஸ்களை நீக்கிவிடும். இப்னு ஹிப்பானின் தனித்துவமான அறிவிப்புகளை (Unique Narrations) மட்டும் வடிகட்டித் தரும். இதனால் ஒரு ஆய்வாளரின் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. அரிதான செய்திகள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் இதில் அதிகம் கிடைக்கும். இப்னு ஹிப்பானின் நிபந்தனையும், விமர்சனமும் ஹதீஸ் கலை விதிகளின்படி, இப்னு குஸைமாவுக்கு அடுத்தபடியாக இப்னு ஹிப்பான் வைக்கப்படுகிறார். இருப்பினும், அறிஞர்கள் இவரிடம் ஒரு சிறிய 'தஸாஹுல்' (மென்போக்கு/Lenience) இருப்பதாகக் குறிப்பிடுவார்கள்.

மஜ்ஹூல் (அறியப்படாதவர்) பற்றிய விதி: ஒரு அறிவிப்பாளரைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை, அவர் நம்பகமானவர் என்று யாரும் சொல்லவும் இல்லை என்றால், மற்ற இமாம்கள் அவரை 'மஜ்ஹூல்' என்பார்கள். ஆனால், இப்னு ஹிப்பான் அவரை நம்பகமானவர் என்று ஏற்றுக்கொள்வார். எனவே, இப்னு ஹிப்பானின் தனித்துவமான ஹதீஸ்களை ஆய்வு செய்யும்போது, இந்த விதியை மனதில் கொண்டு அணுகுவது ஆய்வாளர்களுக்கு அவசியம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

படத்தில் நான் இணைத்திருக்கும் ஸவாயிது இப்னு ஹிப்பானில் 9 கிரந்தங்களில் இல்லாத மேலதிக செய்திகள் பதிவாகியுள்ளன. 300 க்கும் மேற்மட்ட ஸவாயிதான செய்திகளை தொகுத்து தமிழகத்லை சேர்ந்த அல்முதர்ஜிம் பதிப்பகம் வெளியிட்டுள்ளலு. ஸவாயிது இப்னு ஹிப்பானை வெறும் நூலாக பார்க்க கூடாது.அது ஒரு ஆய்வுக்களம். இமாம் நஸாயீயின் நுணுக்கத்தையும், இமாம் முஸ்லிமின் ஒழுங்கையும் தாண்டி, இப்னு ஹிப்பான் தனது அறிவார்ந்த பகுப்பாய்வின் மூலம் ஹதீஸ்களைத் தொகுத்த விதம் அற்புதமானது. எனது 'பைத்துல் ஹிக்மா' நூலகத்தில், ஆறு கிரந்தங்களுக்கு அப்பால் நின்று இஸ்லாமிய வரலாற்றையும் சட்டத்தையும் ஆய்வு செய்ய இந்த நூல் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்!

என்றும் தேடலுடன்,

- Abdullah Ibnu Naseer 
(பைத்துல் ஹிக்மா நூலகம்)

Friday, February 13, 2026

மரணத்தோடு முடிந்து விடுவதில்லை பெற்றோருடனான உறவு*

*மரணத்தோடு முடிந்து விடுவதில்லை பெற்றோருடனான உறவு*

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும் சமாதானமும் நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!

அன்புள்ள சகோதரர்களே!
இஸ்லாம் மனித உறவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். அதில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் *பெற்றோர்கள்*. 

உயிருடன் இருக்கும்போது அவர்களுக்குப் பணிவிடை செய்வது சொர்க்கத்தின் திறவுகோல் என்பதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம்.

ஆனால், நம்மிடம் பலரும் கேட்கும் ஒரு வேதனையான கேள்வி: *பாய், என் பெற்றோர் உயிருடன் இருந்தபோது நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை. இப்போது அவர்கள் இறந்துவிட்டார்கள். என் குற்ற உணர்ச்சியைப் போக்கவும், அவர்களுக்கு நன்மை சேர்ப்பிக்கவும் நான் இப்போது என்ன செய்ய முடியும்?*

இதற்கான அழகான, ஆறுதலான பதிலைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தந்துள்ளார்கள். *மரணத்தோடு பெற்றோருடனான உறவு முடிந்துவிடுவதில்லை; அது தனது வடிவத்தை மாற்றிக்கொள்கிறது.*

அல்லாஹ் குர்ஆனில் பெற்றோருக்கான கடமையை தனது வணக்கத்தோடு இணைத்துக் கூறுகிறான்:

> *தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உமது இறைவன் ஆணையிட்டுள்ளான்*

> *அவ்விருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ உம்மிடம் முதுமைப் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்களைச் ‘சீ’ என்று (சடைந்தும்) கூறாதீர்! அவர்களை விரட்டாதீர்*! கண்ணியமிக்க சொல்லையே அவர்களிடம் கூறுவீராக! (17:23)

அவர்கள் உயிருடன் இல்லாத நிலையிலும் அவர்களுக்கு நன்மை செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். இதோ நபிகளார்  காட்டிய 5 வழிகள்:

அபூ உஸைத் மாலிக் பின் ரபீஆ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்தபோது, பனூ சுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து, 

> *அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர் இறந்த பிறகு நான் அவர்களுக்குச் செய்யக்கூடிய நன்மை ஏதேனும் எஞ்சியுள்ளதா?* என்று கேட்டார்.

> அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: *ஆம்! (ஐந்து விஷயங்கள் உள்ளன):*

> 1. *அவர்களுக்காகப் பிரார்த்திப்பது*

> 2. *அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது *

> 3. *அவர்கள் இறந்த பிறகு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது.*

> 4. *அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது.*

> 5. *அவர்கள் மூலமாகவே தவிர இணைக்க முடியாத இரத்த உறவுகளைப் பேணி நடப்பது.*
(இப்னுமாஜா 3664, அபூதாவூத் 5142, அஹ்மத் 15533)

|| *இந்த ஐந்து விஷயங்களையும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.* ||

---

 1. *அவர்களுக்காகப் பிரார்த்திப்பது & 2. பாவமன்னிப்புத் தேடுவது*

சகோதரர்களே! ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது அமல்கள் அனைத்தும் நின்றுவிடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டும் அவனைத் தொடர்ந்து சென்றடைகின்றன. அதில் ஒன்று, 

> *தனக்காகப் பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான (நல்ல) பிள்ளை"** என்று நபிகளார்  கூறினார்கள். (முஸ்லிம் 3084)

நாம் செய்யும் ஒவ்வொரு துஆவும், கேட்கும் ஒவ்வொரு பாவமன்னிப்பும் கப்ரில் இருக்கும் நமது பெற்றோருக்கு பயனளிக்கும்

அல்லாஹ் குர்ஆனில் நமக்குக் கற்றுத்தந்த மிகச் சிறந்த துஆவை நாம் எப்போதும் ஓத வேண்டும்:

> *رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا*
> *என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது அவ்விருவரும் என்னை(ப் பரிவுடன்) வளர்த்தது போல் நீ அவர்களுக்குக் கருணை காட்டுவாயாக!* என்று பிரார்த்திப்பீராக!  (17:24)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது பெற்றோருக்காகக் கேட்ட துஆவையும் அல்லாஹ் பதிவு செய்துள்ளான்:

> *எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக!*  (14:41)

எனவே, ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், தனிமையிலும் அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தி துஆ செய்வோம். அது அவர்களின் மறுமை அந்தஸ்தை உயர்த்தும். இன்ஷாஅல்லாஹ் 

3. *அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது*

பெற்றோர் உயிருடன் இருந்தபோது *யாருக்கேனும் வாக்குறுதி அளித்திருந்தால்*, அல்லது ஏதேனும் அவர்கள் *தர்மம் செய்வதாக எண்ணி இருந்தால்*, அல்லது *யாருக்கேனும் கடன் வைத்திருந்தால் அதை நிறைவேற்றுவத பிள்ளைகளின் கடமையாகும்*.

அவர்களின் *மரண சாசனம்* மார்க்கத்திற்கு முரணாக இல்லாத வரை அதை நிறைவேற்றுவது, அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உபகாரமாகும்.

4. *அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது*

இது இஸ்லாம் கற்றுத்தரும் மிக உயர்ந்த பண்பாடு. பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களின் தொடர்புகளைத் துண்டித்துவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

> *நிச்சயமாக நன்மைகளில் மிகச் சிறந்தது, தந்தை இறந்த பிறகு, தந்தை நேசித்தவர்களுடன் (நண்பர்களுடன்) உறவைப் பேணுவதாகும்.* (முஸ்லிம் 6496)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், மக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு கிராமப்புற மனிதரைச் சந்தித்தார். அவருக்குத் தனது வாகனத்தைக் கொடுத்ததுடன், தனது தலைப்பாகையையும் அன்பளிப்பாகக் கொடுத்தார். இதைக் கண்ட மற்றவர்கள், "இவருடைய தந்தை, என் தந்தை உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார். தந்தையின் நட்பைப் பேணுவதே மிகச் சிறந்த நன்மை" என்று கூறினார்கள்.

உங்கள் பெற்றோரின் நண்பர்களைத் தேடிச் சென்று நலம் விசாரிப்பது, உங்கள் பெற்றோரை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதன் சான்றாகும்.

 5. *இரத்த உறவுகளைப் பேணி நடப்பது*

பெற்றோர் மூலமாக நமக்குக் கிடைத்த உறவுகள் (சின்னத்தா, பெரியஅத்தா, தாய் மாமா, தாய்/தந்தையின் சகோதர/தரிகள்,) ஆகியோரைப் பேணி நடக்க வேண்டும். பெற்றோர் உயிருடன் இருந்தபோது குடும்பத்தை எப்படி ஒற்றுமையாக வைத்திருந்தார்களோ, அதே ஒற்றுமையை அவர்கள் இறந்த பிறகும் பிள்ளைகள் காக்க வேண்டும்.

> *இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்* என்பது நபிமொழி. (முஸ்லிம் 6524)

குடும்ப உறவுகளைப் பேணுவது நமது பெற்றோரின் வளர்ப்பிற்குச் செய்யும் மரியாதையாகும்.

அன்பானவர்களே!
பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்குச் சேவை செய்வது எப்படி முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்குச் செய்ய வேண்டிய இந்த ஐந்து கடமைகளும்.

ஒருவேளை அவர்கள் உயிருடன் இருந்தபோது நீங்கள் அவர்களிடம் சரியாக நடக்கத் தவறியிருக்கலாம். கவலைப்படாதீர்கள்! அல்லாஹ் மகா கருணையாளன். இப்போது இந்த ஐந்து விஷயங்களைச் சரிவரச் செய்வதன் மூலம், *பெற்றோருக்கு நன்மை செய்த பிள்ளைகள்* என்ற பட்டியலில் நாமும் இடம் பெறுவோம் என்று நம்புவோம்.

வல்ல அல்லாஹ் நம் பெற்றோரின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக! நாமும் நம் பெற்றோருக்காகத் தொடர்ந்து துஆச் செய்யும் ஸாலிஹான பிள்ளைகளாக வாழ்ந்து மரணிக்க அருள் புரிவானாக!

https://eagathuvam.com/மரணத்தோடு-முடிந்து-விடு/

Wednesday, February 11, 2026

ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத்.


இமாம் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் பற்றி பார்த்தோம். இன்று அவரின் சமகாலத்தை சேர்ந்த இன்னொரு தவிர்க்கமுடியாத அறிஞரை பற்றி பார்க்கவிருக்கிறோம். ஷேக் அல்பானிக்கு (ரஹ்) அடுத்தபடியாக, நவீன காலத்தில் ஹதீஸ் கலையில் தவிர்க்க முடியாத பெயர் ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத்.

இவரை கையெழுத்துப் பிரதிகளின் பாதுகாவலர் என்று அழைக்கலாம். இஸ்லாமிய நூற்கள் பல நூற்றாண்டுகளாகக் கையெழுத்துப் பிரதிகளாகவே (Manuscripts) இருந்து வந்தன. அவற்றில் பல சிதிலமடைந்தும், பிழைகளுடனும் இருந்தன. அவற்றை நவீன அச்சுக்கு ஏற்றவாறு, பிழைகளைத் திருத்தி, மூல நூலோடு ஒப்பிட்டு, தரமான பதிப்புகளாக வெளியிடும் தஹ்கீக் (தஹ்கீக் - ஆய்வு மற்றும் சரிபார்ப்பு) கலையில் இமாலயச் சாதனை படைத்தவர் ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத்.

பிறப்பு: 1928-ம் ஆண்டு, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பிறந்தார்.
வம்சாவளி: இவரது குடும்பம் அல்பேனியா நாட்டைச் சேர்ந்தது (எனவேதான் 'அர்ணாவூத்' என்று அழைக்கப்படுகிறார்). அல்பேனியாவிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைப் பேணுவதற்காக இவரது குடும்பம் சிரியாவிற்குப் புலம்பெயர்ந்தது.

சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்தார். பிறகு டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசல்களில் அரபு இலக்கணம் (நஹ்வு, ஸர்ஃப்), இலக்கியம் மற்றும் பாலஃகா (Balagha - சொல்லாணித் திறன்) ஆகியவற்றை ஆழமாகக் கற்றார். அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற பிறகு, ஹதீஸ் கலையில் ஈடுபாடு கொண்டு, இஸ்லாமியச் சட்டத் துறை மற்றும் ஹதீஸ் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களைத் தரம்பிரிப்பதில் (ஸஹீஹ்/ளயீப்) அதிக கவனம் செலுத்தினார் என்றால், ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத் அவர்கள் மூல நூற்களைச் சரிபார்ப்பதில் கவனம் செலுத்தினார்.

இவரது ஆய்வு முறை தனித்துவமானது. ஒரு நூலை ஆய்வு செய்யும்போது, உலகெங்கிலும் உள்ள நூலகங்களில் இருக்கும் அந்நூலின் பழமையான கையெழுத்துப் பிரதிகளைத் திரட்டுவார். தனி மனிதராகச் செயல்படாமல், முஅஸ்ஸஸத் அல்-ரிஸாலா என்ற ஆய்வு மையத்தின் மூலம் ஒரு பெரிய ஆய்வுக்குழுவை உருவாக்கினார். நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை வைத்துப் பிழைகளைத் திருத்தினார். ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது, அதன் அடிக்குறிப்பில் ஹதீஸின் தரம், அறிவிப்பாளர்களின் நிலை, மாற்று அறிவிப்புகள் ஆகியவற்றை மிக விரிவாகக் குறிப்பிடுவார். இவர் தனது வாழ்நாளில் சுமார் 240-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். அவற்றில் இஸ்லாமிய உலகமே வியந்து பார்க்கும் சில படைப்புகள்: முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல் : இதுவே இவரின் வாழ்நாள் சாதனை. இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் முஸ்னத் நூல் சுமார் 28,000 ஹதீஸ்களைக் கொண்டது. இதை ஆய்வு செய்து, 50 பாகங்களாக வெளியிட்டார். நவீன காலத்தில் அச்சிடப்பட்ட ஹதீஸ் நூற்களிலேயே இதுதான் மிகப்பிரம்மாண்டமான மற்றும் துல்லியமான பதிப்பாகக் கருதப்படுகிறது.

ஸியர் அஃலாம் அல்-நுபலா. இமாம் தஹபி எழுதிய வரலாற்றுச் சுருக்க நூல் இது. இதை 25 பாகங்களில், மிகத் துல்லியமான அடிக்குறிப்புகளுடன் வெளியிட்டார். வரலாற்று மாணவர்களுக்கு இது ஒரு முதன்மை ஆதாரமாகத் திகழ்கிறது.

ஸஹீஹ் இப்னு ஹிப்பான். இமாம் இப்னு ஹிப்பானின் நூலை 18 பாகங்களில் ஆய்வு செய்து வெளியிட்டார். இப்னு ஹிப்பானின் ஹதீஸ் வரிசைமுறை சிக்கலானது. அதை எளிமைப்படுத்தி, ஹதீஸ்களின் தரத்தையும் இதில் பதிவு செய்துள்ளார். ஷரஹ் அஸ்-சுன்னா. இமாம் அல்பகவியின் இந்த நூலை 16 பாகங்களில் வெளியிட்டார். ஸாதுல் மஆத். இமாம் இப்னுல் கய்யிம் எழுதிய இந்நூலை, ஷேக் அப்துல் காதர் அல்-அர்ணாவூத் உடன் இணைந்து 5 பாகங்களில் மிகச்சிறப்பாகப் பதிப்பித்தார்.

அல்பானி மற்றும் அர்ணாவூத் இருவரும் அல்பேனியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் டமாஸ்கஸில் வாழ்ந்த சமகாலத்தவர்கள். இருவருக்கும் ஹதீஸ் தரம்பிரித்தலில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஷேக் ஷுஐப், ஹதீஸ் விதிகளில் ஹனஃபி மற்றும் ஷாஃபி மத்ஹபின் முற்கால அறிஞர்களின் முறையைச் சற்று அதிகமாகப் பேணினார். ஆயினும், ஷேக் அல்பானியின் சேவையை இவர் மதித்தார். அல்பானி இல்லையென்றால், இந்த நூற்றாண்டில் ஹதீஸ் கலை மக்களிடம் சென்றடைந்திருக்காது என்று வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.

சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக, தனது இறுதிக்காலத்தில் ஜோர்டான் நாட்டின் அம்மான் நகருக்குக் குடிபெயர்ந்தார்.
ஹிஜ்ரி 1438 (கி.பி 2016), அக்டோபர் 27 அன்று தனது 88-வது வயதில் காலமானார்.

இன்று நாம் புத்தகக் கடைகளில் அல்லது நூலகங்களில் மிக அழகாக அச்சிடப்பட்ட, வாசிப்பதற்கு இலகுவான ஹதீஸ் நூற்களைப் பார்க்கிறோம் என்றால், அந்த எழுத்துக்களுக்குப் பின்னால் ஷேக் ஷுஐப் அல்-அர்ணாவூத் அவர்களின் பல ஆண்டுகால உழைப்பு உள்ளது. அவர் உருவாக்கிய தஹ்கீக் (ஆய்வு) முறைமை, இனி வரும் காலங்களில் ஹதீஸ் பதிப்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும்.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#HadithScholar #ShuaibAlArnaut #MusnadAhmad #Tahqiq #IslamicScholar #History #Syria #Jordan #AbdullahIbnuNaseerWriteups

Tuesday, February 10, 2026

அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி)


💞 முந்தியவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• மக்காவில் செல்வமும் அரசியல் வளமும் மிக்க சுஹைல் இப்னு அம்ர், ஃபாகிதா இவர்கள் இருவருக்கும் மகனாக அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்! அபு ஜந்தல் (ரழி) என்ற ஒரு சகோதரும் இவருக்கு உண்டு!

• இவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர், குரைஷ் குலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்! மேலும் குரைஷ் குலத்தின் முக்கிய பேச்சாளர்,
மக்காவின் அரசியல்–தூதரகத் தலைவராகவும் விளக்கினார்! மக்காவில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். முஸ்லீம்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர். இதற்கு நிறைய ஆலோசனைகளும் கூறியுள்ளார்கள்!

• இந்த அளவிற்கு தந்தை கடுமையாக இஸ்லாத்தை எதிர்த்தாலும், இவரின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி), நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர் அதை வெளிப்படுத்தாமல் மறைமுகமாகவே வைத்திருந்தார்கள்!

• குரைஷிகளின் சபைகளை புறக்கணித்து விட்டு, அர்கம் (ரழி) அவர்கள் வீட்டில் மறைமுகமாக இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்வார்கள்! தந்தைக்கு இந்த விசியம் தெரியவர இவரை கண்டித்தார்கள் மேலும் பொருளாதாரம் எதையும் கொடுக்கமாட்டேன் என்றும் கடுமையாக கூறினார்கள்!

• ஒரு கட்டத்தில் மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு, மக்கா காஃபிர்கள் அதிகம் கொடுமை இழைக்க, நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்களை அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்ய சொன்னார்கள், அதில் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்களும் ஒருவர் என்பதை வரலாற்று அறிஞர் இப்னு ஹிஷாம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்!

• பின்பு, சில மாதம் கழித்து ஹிஜ்ரத் செய்தவர்கள் மக்கா வர, அப்துல்லாஹ் (ரழி) அவர்களை அவர் தந்தை வீட்டிலயே சிறை வைத்தார். இவ்வாறு சில நாட்கள் செல்ல, இவரின் சகோதரன் அபு ஜந்தல் (ரழி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். 

• பத்ருப் போர் சமயத்தில் இவர் தந்தையும் முஸ்லீம்களுக்கு எதிராக போர் புரிய தயாராகினார். அப்போது அப்துல்லாஹ் (ரழி) சாமர்த்தியாக சிந்தித்து, தந்தையிடம் மன்னிப்பு கேட்டு தான் நம்முடைய பழைய மார்க்கத்திற்கே வந்து விட்டேன்! என்னையும் உங்களுடன் போருக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய தந்தை அவரையும் உடன் அழைத்து சென்றார்.

• போர் ஆரம்பம் ஆகும் முன்பே, பிறர் தன்னை கவனிக்காத சூழ்நிலையில் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டார் அப்துல்லாஹ் (ரழி). அந்த வகையில் இவரும் பத்ர் போரில் கலந்து கொண்டு ஸஹாபி ஆவார்!

• இதன் பின்பு, மதினாவிலயே தங்கி இருந்தார்கள்! இவர் பத்ர் போர், உஹத் போர், அகழ்ப்போர், யர்மூக் போர், யமாமா போர் போன்றவற்றில் கலந்து கொண்டு வீரமாக போரிட்டுள்ளார்.

• மக்காவிற்கு உம்ராவிற்காக நபி (ஸல்) அவர்களுடன், 1,400 ஸஹாபாக்கள் வந்தார்கள். மக்கா காபிர்கள் இவர்கள் போருக்கு வந்து உள்ளார்கள் என்று உள்ளே விடமால் ஹுதைபியா எனும் இடத்திலயே தடுத்து விட்டார்கள். இதன் பின்பு முஸ்லீம்கள் வந்த நோக்கத்தை பற்றி எடுத்து கூற உஸ்மான் (ரழி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள்.

• சில நாட்கள் ஆகியும் உஸ்மான் (ரழி) அவர்கள் திரும்பி வராததால் உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று ஒரு தகவல் பரவுகிறது! இதற்கு கண்டிப்பாக நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) ஒரு மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) ஸஹாபாக்களிடம் மரணம் வரும் வரை போரிடுவோம், மாறாக, (எந்தச் சூழ்நிலையிலும்) நாங்கள் புறமுதுகிட்டு ஓட மாட்டோம் என்று உறுதிமொழி வாங்கினார்கள்! அதில் அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் ஒருவர்! ஸஹாபாக்களின் இந்த உறுதியை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் வசனமே அருளியுள்ளான்!
 
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.

(அல்குர்ஆன் : 48:18)

• இதன் பின்பு முஸ்லீம்களுக்கும், மக்கா காஃபிர்களுக்கும் இடையே நடைபெற்ற ஹுதைபியா உடன் படிக்கையில் முஸ்லீம்கள் சார்பாக நபி (ஸல்) அவர்கள், அபூக்கர் (ரழி) உமர் (ரழி) போன்ற பெரும் ஸஹாபாக்கள் சாட்சியாக முத்திரையிட அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் அதில் கலந்து கொண்டு தன்னுடைய கையெழுத்தை முத்திரையாகயிட்டார்கள்! காஃபிர்களின் சார்பாக சுஹைல் இப்னு அம்ர் கலந்து கொண்டார்.

• இதன் பின்பு சில மாதம் கழித்து மக்கா வெற்றியின் போது, முஸ்லீம்கள் மக்காவிற்கு உள்ளே நுழைந்தார்கள்! அப்போது தன்னுடைய தந்தையான சுஹைல் இப்னு அம்ர் அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள் நபி (ஸல்) அவர்களும் அவரை மன்னித்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் இறப்பிற்கு பிறகு, மக்காவில் குழப்பம் ஏற்பட அப்போது சுஹைல் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் தான் மக்களுக்கு உபதேசம் செய்து அந்த குழப்பத்தை போக்கி, முஸ்லீம்களை ஈமானில் உறுதியாக இருக்கும்படி செய்தார்கள்!

• நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு, அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் யமாமா என்ற இடத்தில் பொய்யன் நபி முஸைலமாவிற்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் போர் ஒன்று நடைபெற்றது.

• போர் மிக கடுமையாக நடைபெற்றது. இதில் பல ஸஹாபாக்கள் வீரமாக போரிட்டு ஷஹீத் ஆனார்கள். அவ்வாறு போரிட்டு ஷஹீத் ஆனவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் (ரழி).

• மக்காவில் செல்வம், அரசியல் பலமிக்க, வசதியான வாய்ப்புகள் உள்ள வீட்டில் பிறந்தாலும் இஸ்லாத்திற்காக அனைத்தையும் விட்டு வந்தார்கள். முஸ்லீம்களிடம் ஆட்சியில், அதிகமான செல்வங்கள் வந்த போதும் அதை எதையும் அனுபவிக்காமல் இஸ்லாத்திற்காக தன்னையே அர்ப்பணம் செய்தவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் ரலியல்லாஹு அன்ஹு!

@அல்லாஹ் போதுமானவன் 💞

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம்


💞 சொர்க்கவாசி அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் மதினாவில் உள்ள பனு கைனுகா குலத்தை சார்ந்தவர்கள்! 

• ஆரம்ப காலத்தில் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மதீனாவில் மிகப் பெரிய யூத மத அறிஞராகவும், நேர்மையான மனிதராகவும் அறியப்பட்டார்கள். யூதர்களிடையே அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. யூதர்கள் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, பிரச்சனைகளுக்கு இவரிடமே மக்கள் தீர்வு கேட்பார்கள்!

• மக்காவில் இருந்து மதினாவிற்கு நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து வந்துள்ளார்கள் என்பதை அறிந்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க சென்றார்கள்!

• அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் தவ்ராத் வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். ஈஸா (அலை) அவர்களுக்கு பின்பு ஒரு இறைத்தூதர் வருவார் அவரின் பண்பு, தோற்றம் எல்லாம் எப்படி இருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். இதை பற்றி நேரில் சந்தித்து கேட்டு தெளிவு பெறவேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களை சந்திக்க சென்றார்கள்!

• நபி (ஸல்) அவர்களை முதன் முதலில் பார்த்த போதே ‘இது ஒரு பொய்யரின் முகமல்ல’ என்று தமக்குள்ளே கூறிக் கொண்டார்கள்! பின்பு நபி (ஸல்) அவர்களிடம் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு, தங்களிடம் மூன்று கேள்விகள் கேட்க போகிறேன் இதற்கான பதில் இறைத்தூதருக்கு மட்டுமே தெரியும் என்று கூறி கேள்விகளை கேட்டார்கள்!

• (1) இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? (2) சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? (3) குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்? என்று கேட்டார்கள்!

• இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார் என்று கூறினார்கள்.

(1) இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். 

(2) சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். 

(3) குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது என்று பதிலளித்தார்கள். 

• இந்த பதில்களை கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி), தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்!

• பிறகு, இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்' என்று கூறினார்கள். 

• அப்போது யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று கேட்டார்கள். 

• அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்' என்று பதிலளித்தார்கள். 

• உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக! என்று கூறினார்கள்.

• உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்' என்று கூறினார்கள். 

• உடனே யூதர்கள், இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3329)

• அப்துல்லாஹ் (ரழி) அவர்களை பார்த்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்! பூமியின் மீது நடந்து செல்லும் சொர்க்கவாசி இவர் என்று!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 3812)

• இஸ்லாம் மார்க்கம் உண்மையானது என்று சாட்சியமளித்த அஹ்லுல் கிதாப் (வேத மக்கள்) ஒருவராக குர்ஆனில் புகழப்பட்டார். இவரை குறித்தே அல்குர்ஆனில் அல்லாஹ் கிழே உள்ள வசனத்தை அருளியுள்ளான்!

இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா? என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்!

(அல்குர்ஆன் : 46 : 10)

• நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் (ரழி) அவர்களை பார்த்து (இறை நம்பிக்கை எனும்) பலமான பிடியைப் பற்றியவராக இவர் இறப்பார் என்று கூறியுள்ளார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 7010)

• அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மொத்தம் 25 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்களுக்கு பின்பு கலீஃபாக்கள் ஆட்சி காலத்தில் அஹ்லுல் கிதாப் விஷயங்களில் ஆலோசகராக இருந்தார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள் தொடர்பான சட்டங்கள், ஒப்பந்தங்கள்
உணவு, திருமணம் போன்ற விவகாரங்களில் கலீஃபாக்கள் இவர்களிடமே ஆலோசனை பெறுவார்கள்!

• உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் இறுதியில் அன்னார் மரணம் அடைந்தார்கள். மதினாவிலயே இவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

ஷேக் நாஸிருத்தீன் அல்பானி!


இஸ்லாமிய உலகம் மத்ஹபுகளின் பிடியிலும், பலவீனமான ஹதீஸ்களின் ஆதிக்கத்திலும் சிக்கியிருந்த 20-ம் நூற்றாண்டில், ஒரு தனி மனிதராகப் போராடி, "ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டுமே மார்க்கம்" என்ற விதையை உலகம் முழுவதும் விதைத்தவர் ஷேக் நாஸிருத்தீன் அல்பானி!

(ஆரம்ப கால அறிஞர்களை தான் இந்த தொடரில் பார்த்து வருகிறோம். ஆனால் சில அன்பர்கள் இமாம் அல்பானி பற்றி வற்புறுத்தி கேட்டதால் முன்கூட்டியே இத்தொடரை எழுதுகிறேன்.)

அது 1914-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள அல்பேனியா நாட்டின் 'ஷ்கோடர்' நகரில் பிறந்தார். (அதனால்தான் 'அல்பானி' என்று அழைக்கப்படுகிறார்). அல்பேனியாவில் ஆட்சியாளர் அஹ்மத் ஸோகுவின் மதச்சார்பற்ற கொடுங்கோல் ஆட்சி நடந்ததால், இவரது தந்தை குடும்பத்துடன் சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரத் செய்தார். இவரின் தந்தை ஒரு கடிகாரம் பழுதுபார்க்கும் கலைஞர். அல்பானியும் இத்தொழிலைக் கற்றார். கடிகாரம் பழுதுபார்க்கும் தொழில் அவருக்கு இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது: ஒன்று 'நுணுக்கம்' (Precision), மற்றொன்று 'பொறுமை'. இந்த இரண்டும்தான் பிற்காலத்தில் இலட்சக்கணக்கான ஹதீஸ்களைத் துல்லியமாக ஆய்வு செய்ய அவருக்கு உதவியது.

இவரது தந்தை ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர். ஆனால் இமாம் அல்பானிக்கு, ஏன் மத்ஹபுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டும்? குர்ஆன் ஹதீஸை நேரடியாகப் பார்க்கலாமே? என்ற சிந்தனை எழுந்தது. எகிப்திலிருந்து வந்த அல்-மனார் என்ற பத்திரிகையில், ரஷீத் ரிழா எழுதிய கட்டுரைகளைப் படித்தபோது, ஹதீஸ் கலையின் மீது அவருக்குத் தீராத காதல் ஏற்பட்டது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமாஸ்கஸில் உள்ள பிரசித்தி பெற்ற தாஹிரிய்யா நூலகத்தில்  அவர் மூழ்கிக்கிடப்பாராம். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அங்கேயே இருப்பார். உணவு உண்ணக்கூட வெளியே வரமாட்டார். நூலக நிர்வாகம் இவரின் ஆர்வத்தைப் பார்த்து, நூலகத்தின் சாவியையே இவரிடம் கொடுத்துவிட்டது. இரவும் பகலும் ஹதீஸ் சுவடிகளோடுதான் வாழ்க்கை!

ஷேக் அல்பானியின் சேவையை ஒரே வரியில் சொல்வதானால்,தஸ்ஃபியா மற்றும் தர்பியா எனலாம்.
தஸ்ஃபியா : இஸ்லாத்தில் கலந்துவிட்ட பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பிரித்தெடுத்து, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் மக்களுக்கு அடையாளம் காட்டினார்.

தர்பியா (கற்பித்தல்): அந்தத் தூய ஹதீஸ்களின் அடிப்படையில் புதிய தலைமுறையை உருவாக்குதல்.

சவூதியில் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அங்கு ஹதீஸ் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஹதீஸ்களை எப்படி ஆய்வு செய்வது என்பதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். உண்மையை உரக்கச் சொன்னதால், இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலும் அவர் ஹதீஸ் ஆய்வைத் தொடர்ந்தார். சஹீஹ் முஸ்லிமின் சுருக்கம் என்ற நூலைச் சிறையில்தான் எழுதினார்.

ஷேக் அல்பானி எழுதிய நூற்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். அவர் சுமார் 217-க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்கியமானவை:

A. சில்ஸிலாத் தொடர் இது ஹதீஸ் உலகின் ஒரு புரட்சி.

ஸில்ஸிலா அஸ்-ஸஹீஹா:  இதில் ஆயிரக்கணக்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைத் தொகுத்து, அதற்கான விரிவான விளக்கங்களையும், அறிவிப்பாளர் தொடர் ஆய்வையும் எழுதியுள்ளார்.

ஸில்ஸிலா அஸ்-ளயீஃபா:  இதில் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள, ஆனால் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். (உதாரணம்: "கல்வியைத் தேடி சீனா வரை செல்லுங்கள்" என்பது ஹதீஸ் அல்ல என்று நிரூபித்தது).
இந்தத் தொடர் மட்டும் 14 பாகங்களைக் கொண்டது!

B. இர்வா உல்-கலீல்:  இது ஃபிக்ஹ் (சட்ட) மாணவர்களுக்கு ஒரு அற்புதமான புத்தகம்.
'மனார் அஸ்-ஸபீல்' என்ற ஹம்பலி மத்ஹபு சட்ட நூலில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். இதில் 2707 ஹதீஸ்களை ஆய்வு செய்துள்ளார். ஒரு சட்ட நூலில் உள்ள ஹதீஸ், சஹீஹா அல்லது ளயீஃபா என்று தெரிந்துகொள்ள இதுவே அடிப்படை எனலாம்.

C. சுனன் நூற்களின் ஆய்வு.

முன்பெல்லாம் திர்மிதி, அபூதாவூத் போன்ற நூற்களைப் படிக்கும்போது, அதில் எது சரி, எது தவறு என்று பாமர மக்களுக்குத் தெரியாது. அல்பானி அவர்கள் ஒவ்வொரு நூலையும் இரண்டாகப் பிரித்தார்:
ஸஹீஹ் அபூதாவூத் - ளயீஃப் அபூதாவூத்
ஸஹீஹ் திர்மிதி - ளயீஃப் திர்மிதி
ஸஹீஹ் நஸாயீ - ளயீஃப் நஸாயீ
ஸஹீஹ் இப்னு மாஜா - ளயீஃப் இப்னு மாஜா
ஸஹீஹ் அத்-தர்கீப் வத் தர்ஹீப்.
இன்று நாம் கையில் வைத்திருக்கும் பல ஹதீஸ் மென்பொருட்களில் என்று வருவதற்குக் காரணம் இந்த உழைப்புதான்.

D. நபிகளாரின் தொழுகை முறை

இதுதான் அல்பானியைப் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்த நூல். "தொழுகை பற்றி மத்ஹப் நூற்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்காதீர்கள்; நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்று பாருங்கள்" என்று கூறி, தக்பீர் முதல் சலாம் வரை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டுமே கொண்டு இந்நூலை எழுதினார்.
உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட இஸ்லாமிய நூற்களில் இதுவும் ஒன்று.

இவரின் ஆய்வு முறை மிகவும் கண்டிப்பானது. இவர் எந்த மத்ஹபையும் சாராமல், ஹதீஸ் எங்கு பலமாக இருக்கிறதோ அந்தத் தீர்ப்பை எடுப்பார். சில நேரங்களில் ஹனஃபி கருத்தை ஏற்பார், சில நேரங்களில் ஷாஃபி கருத்தை ஏற்பார் - ஆதாரம் எங்கு உள்ளதோ அதுவே அவர் மத்ஹப். அறிவிப்பாளர் தொடரில் ஒருவர் பொய்யராகவோ அல்லது நினைவாற்றல் குறைந்தவராகவோ இருந்தால், எவ்வளவு பெரிய இமாம் அந்த ஹதீஸை எழுதியிருந்தாலும், "இது பலவீனம்" என்று துணிச்சலாகக் கூறுவார்.

மற்ற இமாம்களை போலவே ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
இவர் புகாரி, முஸ்லிம் ஹதீஸ்களைக் கூட விமர்சிக்கிறார் என்று சிலர் கூறினர்.
உண்மையை சொல்லப்போனால் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஹதீஸ்களை துல்லியமான முறையில் இவ்வளவு ஆழமான ஆய்வை மேற்கொண்டவர் இவரைத் தவிர வேறு யாருமில்லை. இத்தனைக்கும் ஷேக் அல்பானி அவர்கள் முற்கால இமாம்கள் (தாரகுத்னி போன்றோர்) விட்டுச்சென்ற விமர்சனங்களையே இவர் பல இடங்களில் சுட்டிக்காட்டினார்.

ஹிஜ்ரி 1420 (கி.பி 1999) அக்டோபர் மாதம், ஜோர்டான் நாட்டில் தனது 85-வது வயதில் இமாம் அல்பானி காலமானார். அவர் மரணித்திருக்கலாம். ஆனால், இன்று உலகம் முழுவதும் உள்ள மதரஸாக்களிலும், பள்ளிவாசல்களிலும், இணையதளங்களிலும் "ஸஹ்ஹஹு அல்பானி" (இதை அல்பானி சரி கண்டுள்ளார்) என்ற வாசகம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு தனி மனிதராக, ஒரு நூலகத்தில் அமர்ந்து அவர் செய்த வேலை, பல பல்கலைக்கழகங்கள் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை.

அல்லாஹ் அந்தப் பேரறிஞருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக!

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #SheikhAlbani #HadithReviver #Silsilah #SifatSalah #Jordan #Damascus #IslamicScholar #Facts #AbdullahIbnuNaseerWriteups

இமாம் அவ்ஸாயீ


இன்று நாம் ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹம்பலி என நான்கு மத்ஹபுகளைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், ஒரு காலத்தில் ஸ்பெயினிலும் (அண்டலூஸ்), ஷாம் தேசத்திலும் (சிரியா) கோலோச்சிய ஒரு மத்ஹப் இருந்தது. அதுதான் அவ்ஸாயீ மத்ஹப். அதன் நிறுவனர், ஷாம் தேசத்தின் இமயம் - அப்துர் ரஹ்மான் அல்-அவ்ஸாயீ (எந்தவொரு இமாமும் தன் பெயரில் மத்ஹப் உருவாக்கவில்லை என்றாலும் அவர்களின் சட்ட நடைமுறைகளை மாணவர்கள் கொண்டு சென்றதால் இமாம்களின் பெயரே நிலைத்து நின்றது) 

முழுப்பெயர்: அப்துர் ரஹ்மான் இப்னு அம்ர் அல்-அவ்ஸாயீ.
பிறப்பு: ஹிஜ்ரி 88 (லெபனானில் உள்ள பால்பெக் நகரில்).
இறப்பு: ஹிஜ்ரி 157 (பெய்ரூட் நகரில்).
வகித்த இடம்: "இமாம் அஹ்லுஸ் ஷாம்" (ஷாம் தேசத்து மக்களின் தலைவர்).
ஃபத்வாக்கள்: இவர் தனது வாழ்நாளில் சுமார் 70,000 மார்க்கத் தீர்ப்புகளுக்கு பதில் அளித்துள்ளார் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆசிரியர்கள்: அதா இப்னு அபீ ரபாஹ், கதாதா, நாஃபி போன்ற தாபியீன்கள்.
சிறப்பு: இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இவரைப் பற்றிக் கூறும்போது, "நான் பார்த்ததிலேயே, சட்டத்துறையிலும் ஹதீஸ் துறையிலும் ஒருசேரப் பாண்டித்தியம் பெற்றவர் அவ்ஸாயீ தான்" என்று புகழ்ந்துள்ளார்.

இவரைப் பற்றி நினைக்கும் போதே, உடல் சிலிர்க்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
அப்பாஸிய ஆட்சி அப்போதுதான் மலர்கிறது. அதன் தளபதி அப்துல்லாஹ் பின் அலீ, உமையாக்களைக் கொன்று குவித்துவிட்டு, அதிகார போதையில் அமர்ந்திருக்கிறார். அவரது சபைக்கு இமாம் அவ்ஸாயீ அழைக்கப்படுகிறார்.
தளபதி கேட்கிறான், உமையாக்களின் சொத்துக்களை நாங்கள் கைப்பற்றுவது ஹலாலா? ஹராமா? சுற்றிலும் வாள் ஏந்திய வீரர்கள். "ஹலால்" என்று சொன்னால் உயிர் தப்பும். "ஹராம்" என்று சொன்னால் தலை உருளும். அந்தச் சூழலில் இமாம் அவ்ஸாயீ கர்ஜிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு முஸ்லிமின் உயிர், உடைமை அனைத்தும் புனிதமானது. நியாயமான காரணமின்றி அதை எடுப்பது ஹராம்! ஹராம்! ஹராம்!"

அந்தத் தளபதி கையில் இருந்த கைத்தடியால் தரையை ஓங்கிக் குத்தினார். சபை உறைந்து போனது. ஆனால், இமாமின் துணிச்சலைக் கண்டு மிரண்டுபோன அவர், அவரைக் கொல்லாமல், ஒரு பணமுடிப்பைக் கொடுத்து அனுப்பினான். இமாம் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டு, கம்பீரமாக வெளியேறினார்.

இமாம் அவ்ஸாயீயின் அறிவுக்கூர்மை இமாம் மாலிக்கை விட அதிகம்" என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால், இமாம் மாலிக்கிற்கு இருந்ததைப் போல, இமாம் அவ்ஸாயீயின் கருத்துக்களைத் தொகுத்துப் பாதுகாக்கச் சுறுசுறுப்பான மாணவர்கள் அமையவில்லை. அதனால், ஒரு பிரம்மாண்டமான சட்டத்துறை (மத்ஹப்) காலப்போக்கில் அழிந்து போனது. இஸ்லாமிய வரலாற்றுக்கு இது ஒரு பேரிழப்பு எனலாம். 

இஸ்லாம் சிறுபான்மையினரை எப்படிப் பாதுகாக்கும் என்பதற்கு இவரே உதாரணம். லெபனானில் சில கிறிஸ்தவர்கள் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டபோது, ஆளுநருக்கு இவர் எழுதிய கடிதம் இன்றும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விட்டுவிட்டு, நிரபராதி மக்களைத் தண்டிப்பது இஸ்லாம் ஆகாது" என்று இடித்துரைத்தார்.

இவரது மரணம் மிகவும் உருக்கமானது. ஹிஜ்ரி 157-ல், ஒரு நாள் குளியலறைக்குச் சென்றார். அறியாமல் கதவு பூட்டப்பட்டது (அல்லது கரிப்புகை சூழ்ந்தது). உள்ளே வெப்பம் தாங்காமல் அந்த அறிஞர் மூச்சுத் திணறி மரணமடைந்தார். போர்க்களத்தில் நின்றிருக்க வேண்டிய ஒரு சிங்கம், ஒரு குளியலறையில் தன் மூச்சை நிறுத்தியது வரலாற்றின் பெரும் சோகம்.

- Abdullah Ibnu Naseer 

#History #ImamAwzai #Syria #LostMadhhab #IslamicScholars #Bravery #Facts #beirut

இமாம் தாரமீ (ரஹ்).


நாம் இதுவரை ஈராக் (கூஃபா, பஸ்ரா, பக்தாத்), மதீனா, யமன் , சிரியா ஆகிய இடங்களைப் பார்த்தோம். இப்போது நாம் பயணிக்க வேண்டியது மத்திய ஆசியா (Central Asia). இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள 'சமர்கந்த்' (Samarkand) நகர். அங்கே வாழ்ந்த ஒரு மாபெரும் இமயம்தான் இமாம் தாரமீ (ரஹ்).

ஹதீஸ் உலகில் இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஸிஹாஹ் ஸித்தா (ஆறு கிரந்தங்கள்) என்று சொல்லும்போது, அதில் ஆறாவதாக இப்னு மாஜாவைச் சேர்ப்பதா அல்லது இமாம் தாரமீயின் நூலைச் சேர்ப்பதா என்று அறிஞர்களுக்கு இடையே இன்றும் ஒரு மெல்லிய விவாதம் உண்டு. அந்த அளவிற்குத் தரமானவர்!

பெயர்: அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அத்-தாரமீ
காலம்: ஹிஜ்ரி 181 - 255
ஊர்: சமர்கந்த் (உஸ்பெகிஸ்தான்)

இவர் எப்படிப்பட்டவர் என்றால் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், இமாம் தாரமீயின் மரணச் செய்தியைக் கேட்டபோது, ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதார்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீரில்லாத பாலைவனத்தில் நான் தனித்து விடப்பட்டதைப் போல உணர்கிறேன்" என்று கவிதையும்  பாடியுள்ளார்கள்.
புகாரியையே அழவைத்த ஆளுமை இவர்!

இமாம் தாரமீயின் இறையச்சத்திற்கு இது ஒரு வரலாற்றுச் சான்று. சமர்கந்த் நகரத்தின் ஆட்சியாளர், இமாம் தாரமீயின் அறிவைக் கண்டு வியந்து, நீங்கள்தான் இந்த ஊரின் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இமாம் தாரமீ மறுத்தார். எனக்கு அதிகாரமும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்றார். ஆனால் ஆட்சியாளர் விடுவதாக இல்லை. கட்டாயப்படுத்தினார். வேறு வழியின்றி இமாம் தாரமீ ஒப்புக்கொண்டார். பதவியேற்ற முதல் நாள். ஒரே ஒரு வழக்கை விசாரித்தார். தீர்ப்பு வழங்கினார். அன்று வீடு திரும்பியதும் அவருக்கு உடல் நடுக்கம் கண்டது. அல்லாஹ்வின் சட்டத்தில் நான் ஏதேனும் தவறு செய்துவிடுவேனோ? என்ற பயம் அவரை ஆட்கொண்டது. மறுநாளே ஆட்சியாளரிடம் ஓடிச் சென்று, என்னை விட்டுவிடுங்கள்! என் மார்க்கத்தை நான் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டார்.
அதன் பிறகு, அவர் கல்விப் பணியைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்தவில்லை.

இஸ்லாமிய உலகில் பரவலாக ஆறு கிரந்தங்கள் (ஸிஹாஹ் ஸித்தா) என்று சொல்லும்போது, ஆறாவது நூலாக இப்னு மாஜாவைச் சொல்வார்கள்.
ஆனால், பல நுணுக்கமான ஹதீஸ் அறிஞர்கள் (உதாரணமாக இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி, இமாம் சுயூத்தி போன்றோர்), இப்னு மாஜாவை விட இமாம் தாரமீ எழுதிய 'சுனன் தாரமீ' தரம் வாய்ந்தது என்று கூறுகிறார்கள். இது ஏன்? இப்னு மாஜாவில் பலவீனமான ஹதீஸ்கள் அதிகம். ஆனால், தாரமீயின் நூலில் பலவீனமான ஹதீஸ்கள் மிகக் குறைவு. இதன் அறிவிப்பாளர் தொடர்கள் மிக உயர்ந்தவை. எனவே தாரமீ தான் ஆறாவது நூலாக வர சிறந்தது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

சுனன் தாரமீ' நூலின் மிகப்பெரிய சிறப்பு அதன் முன்னுரை அரபியில் முகத்திமா! நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, கல்வியின் சிறப்பு, அறிஞர்களின் ஒழுக்கம், ஃபித்னா (குழப்பங்கள்) தோன்றும் காலங்கள் பற்றி அவர் எழுதிய முன்னுரை மட்டுமே தனி ஒரு புத்தகத்திற்குச் சமம்!இமாம் முஸ்லிம், இமாம் அபூ தாவூத், இமாம் திர்மிதி (இவர்கள் மூவரும் 'ஸிஹாஹ் ஸித்தா' ஆசிரியர்கள்) இவரின் மாணவர்கள் தாம்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் இவரை பற்றி கூறும்போது  உலகில் செல்வம், பதவி எதையும் விரும்பாத ஒருவரை நீங்கள் பார்க்க வேண்டுமானால், சமர்கந்தில் உள்ள தாரமீயைப் பாருங்கள் என்று நவின்றுள்ளார்.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #ImamDarimi #SunanDarimi #Samarkand #HadithMaster #SihahSitta #IslamicScholar #Taqwa #AbdullahIbnuNaseerWriteups

இமாம் அப்துர் ரஸ்ஸாக்


இஸ்லாமிய வரலாற்றில் ஒரு காலகட்டம் இருந்தது. ஹதீஸ் தேடும் மாணவர்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஸன்ஆ நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அங்கே என்ன இருந்தது? தங்கம்? வைரம்? இல்லை! அங்கே அப்துர் ரஸ்ஸாக் இருந்தார். இமாம் அப்துர் ரஸ்ஸாக்கை சந்திப்பதற்காக மக்கள் தங்கள் ஒட்டகங்களை விரட்டியது போல (அவ்வளவு வேகமாக/ஆர்வமாக), நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரையும் தேடி மக்கள் சென்றதில்லை" என்று வரலாற்றாசிரியர்கள் வியக்கிறார்கள்.

முழுப்பெயர்: அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் அஸ்-ஸன்ஆனி.
பிறப்பு: ஹிஜ்ரி 126 (ஸன்ஆ, யமன்).
இறப்பு: ஹிஜ்ரி 211 (தனது 85-வது வயதில்).
ஆசிரியர்: மஃமர் பின் ராஷித். இவருடன் சுமார் 7-8 ஆண்டுகள் தங்கியிருந்து கல்வி கற்றார்.
மாணவர்கள்: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு அல் மதீனீ.
முக்கிய நூல்கள்: அல் முஸன்னப் இவரது மிகப்பிரபலமான நூல்.
தஃப்ஸீர் அப்துர் ரஸ்ஸாக்: குர்ஆன் விரிவுரை நூல்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பலும், யஹ்யா இப்னு மயீனும் ஹஜ்ஜுக்காக மக்கா வந்தார்கள். அங்கே அப்துர் ரஸ்ஸாக்கைச் சந்திக்கத் திட்டமிட்டார்கள். ஆனால், கூட்ட நெரிசலில் சந்திக்க முடியவில்லை.
யஹ்யா சொன்னார்: "பரவாயில்லை, அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்." ஆனால் இமாம் அஹ்மத் இல்லை! நான் இப்போதே யமன் கிளம்புகிறேன் என்று தான் சொன்னார். கையில் போதிய பணம் இல்லை. யேமன் செல்லும் வழி கரடுமுரடானது. ஆனாலும் அந்த இளைஞர் (அஹ்மத்) நடந்தே சென்றார். வழியில் பணம் தீர்ந்துவிட்டது. கூலி வேலை செய்து, சுமைகளைச் சுமந்து காசு சம்பாதித்து, கடைசியில் அப்துர் ரஸ்ஸாக்கைச் சென்றடைந்தார்.

ஒரு பெரிய இமாம் (அஹ்மத்), இன்னொரு இமாமைத் (அப்துர் ரஸ்ஸாக்) தேடி கூலி வேலை செய்தார் என்றால், அப்துர் ரஸ்ஸாக்கின் மதிப்பு என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.

இவர் எழுதிய "அல்-முஸன்னஃப்"  என்ற நூல் ஹதீஸ் உலகின் ஒரு அதிசயம். பல நூற்றாண்டுகளாக இந்த நூல் தொலைந்து போனதாகவே கருதப்பட்டது. ஆனால், நவீன காலத்தில் இதன் கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டன.
இதில் சுமார் 21,000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் மற்றும் அஸர்கள் (நபித்தோழர்களின் கூற்றுகள்) உள்ளன. சஹாபாக்கள் மற்றும் தாபியீன்கள் ஒவ்வொரு சட்டத்திலும் என்ன தீர்ப்பு சொன்னார்கள் என்பதை அறிய, இந்த நூல் ஒரு கலைக்களஞ்சியம்!

அப்துர் ரஸ்ஸாக் பற்றி ஹதீஸ் அறிஞர்களிடம் ஒரு சிறிய சர்ச்சை உண்டு. அவர் மீது "தஷய்யு" (ஷீஆ ஆதரவு நிலைப்பாடு) குற்றச்சாட்டு இருந்தது.
அதாவது, அவர் அலீ (ரலி) அவர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்தார் என்றும், உஸ்மான் (ரலி) போன்றவர்கள் மீது விமர்சனம் வைத்ததாகவும் கூறப்பட்டது. அவரிடம் ஒருவர், "நீங்கள் எப்படி ஷீஆ கருத்துக்களைப் பேசுகிறீர்கள்? உங்கள் ஆசிரியர் (மஃமர்) அப்படிப்பட்டவர் இல்லையே?" என்று கேட்டார். அதற்கு அவர், "எங்கள் குலப்பெருமை மிக்க ஜாஃபர் பின் சுலைமான் (ஒரு ஷீஆ) எங்களிடம் வந்தார். அவரின் பேச்சால் கவரப்பட்டு நான் இந்த நிலைக்கு வந்துவிட்டேன்" என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் சஹாபாக்களைத் திட்டும் அளவிற்கு (ராஃபிழி) செல்லவில்லை. அஹ்லுஸ் சுன்னாவின் அறிஞர்கள் அவரை சற்று ஷீஆ சாய்வு கொண்டவர், ஆனால் ஹதீஸில் நேர்மையானவர் என்றே முடிவு செய்தனர்.
இறுதிக்காலச் குழப்பம் தனது வாழ்நாளின் இறுதியில் இமாம் அப்துர் ரஸ்ஸாக் கண் பார்வையை இழந்தார். அப்போது அவருக்கு நினைவாற்றல் குழப்பம் ஏற்பட்டது. எனவே, ஹதீஸ் விதி என்னவென்றால்: அவர் கண் தெரியும்போது (ஆரம்ப காலத்தில்) அறிவித்த ஹதீஸ்கள் - ஏற்கப்படும். கண் பார்வையை இழந்த பின் அறிவித்த ஹதீஸ்கள் - ஆய்வு செய்யப்படும்.

இமாம் அஹ்மத்: "அப்துர் ரஸ்ஸாக்கை விட ஹதீஸில் சிறந்த ஒருவரை நாங்கள் பார்த்ததில்லை (ஆனால் இறுதியில் கண் பார்வை போனதால் குழப்பம் ஏற்பட்டது)."
இமாம் புகாரி: "அவரின் நூல்களில் உள்ளதை மட்டும் ஏற்கலாம்; வாய்மொழியாகச் சொன்னதில் கவனம் தேவை."

யேமன் நாட்டின் மலைகளுக்கு இடையே அமர்ந்து, 20,000-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களைத் தொகுத்து, அடுத்த தலைமுறைக்கு (புகாரி, முஸ்லிம் போன்றவர்களுக்கு) கடத்திய ஒரு மாபெரும் பாலம் இவர். மனிதர் என்ற முறையில் சில பலவீனங்கள் இருந்தாலும், அவரின் "முஸன்னஃப்" இன்றும் ஒரு கலங்கரை விளக்கமாக ஒளிர்கிறது.

✍️ எழுத்து: Abdullah Ibnu Naseer 

#History #AbdurRazzaq #Yemen #Musannaf #HadithScholar #IslamicHistory #AbdullahIbnuNaseerWriteups