பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 11, 2010

சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா

சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா



கேள்வி: சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பாடலாமா? இசை வாசிக்கலாமா?-


குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் எடுத்துக் கூறவும்




பதில் :

இசை கூடுமா?

பாட்டுப் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா? என்பதை அறிவதற்கு முன்னால் இசையைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அறிந்து கொள்வோம்.

நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.

மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள். இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்.

எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்யும் போது இசை கூடாது என ஏற்கனவே நாம் எடுத்த முடிவே சரியானது என்பதை அறியலாம்.

இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

நூல்: புகாரி 5590

விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத்தன்மை மாத்திரம் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.

ஒருவர் நல்ல மனனத்தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பிவிட்டால் அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டுவிட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது.

மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா? அல்லது பின்பு அறிவித்ததா? என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலுள்ள ஹதீஸில் இடம் பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார். அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 30, பக்கம்: 242

இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா அல்லது பின்பு அறிவித்தாரா என்று தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.

இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா, பாகம்: 3, பக்கம்: 272

இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது. பைஹகீயில் உள்ள இந்த சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.

எனவே இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு அம்சமாகும்.

இஸ்லாத்தில் பாட்டுப்பாடுவது கூடுமா?

பாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் அடங்கிய பாடல்களை இஸ்லாம் தடை செய்கின்றது. நற்கருத்துகள் அடங்கிய பாடல்களை இசையின்றி பாடுவதற்கு மட்டுமே அனுமதியுள்ளது. பின்வரும் செய்திகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.

4001حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ عَنْ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ حَتَّى قَالَتْ جَارِيَةٌ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ رواه البخاري

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) "எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, "எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், "இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள்.

புகாரி (4001)

மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.

எனவே தவறான கருத்துள்ள பாடல்களைப் பாடுவது கூடாது. நற்கருத்துள்ள பாடல்களை மட்டுமே பாடலாம்.

இந்தச் சம்பவத்தில் சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து இசைத்ததாகக் கூறப்படுகின்றது. எனவே இசைக்கருவிகளைப் பயன்படுத்தி பாடுவதற்கு அனுமதியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இசைக்கருவிகளை இஸ்லாம் தடுத்துள்ளது என்பதை முன்பே பார்த்தோம். திருமணம் பெருநாள் போன்ற சந்தோஷமான நேரங்களில் மட்டும் கஞ்சிராக்களை அடித்து பாடுவது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. கஞ்சிராக்களுக்கு மட்டுமே இந்த அனுமதி உள்ளது. இந்த நேரங்களில் கஞ்சிராக்கள் அல்லாத தற்காலத்தில் உள்ள புதுபுது இசைக் கருவிகளைப் பயன்படுத்துவது கூடாது. இதைப் பின்வரும் சம்பவமும் விளக்குகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 1619

சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸ‚ம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அதே நேரத்தில் பெருநாள் தினத்தில் மட்டும் இதற்கு அனுமதி உள்ளது என்பதால் இவ்வாறு செய்பவர்களைத் தடுக்கக் கூடாது.

5163حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا زَفَّتْ امْرَأَةً إِلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ مَا كَانَ مَعَكُمْ لَهْوٌ فَإِنَّ الْأَنْصَارَ يُعْجِبُهُمْ اللَّهْوُ رواه البخاري

பின்வரும் செய்திகளும் நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்று கூறுகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து, அவளை அவ)ரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.

புகாரி (5162)

3841حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلٌ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன "அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (3841)

4185حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِي عُمَرَ كِلَاهُمَا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ قُلْتُ نَعَمْ قَالَ هِيهْ فَأَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ رواه مسلم

ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ச் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)'' என்றேன். "பாடு'' என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன்.

முஸ்லிம் (4540)

நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

Source: http://www.onlinepj.com/

Abdul Aleem
Ayyampet
http://aleemislam.blogspot.com/

No comments:

Post a Comment