பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

பிரார்த்தனை

பிரார்த்தனை

தேவைகளை நிறைவேற்றித் தரும் கொடையாளன் அல்லாஹ் தன் அரும் மறையில் கூறுகின்றான்:
'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள். அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள். இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர்.அவன் நம்பிக்கைக் கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்'.        (அல்குர்ஆன் : 33 : 41 – 43)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
துஆ, அதுவே இபாதத் (இறைவணக்கம்) ஆகும். (நுஃமான் பின் பஷீர் (ரலி) அபூதாவுத், திர்மிதி)

பிரார்த்தனை! படைப்பினங்கள் அனைத்துமே தேவைகள் உடையவை. படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்  மட்டுமே எந்த தேவையுமற்றவன். மேலும், எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றித் தரும் கருணையாளன் அவனே!
படைப்பினங்களில் மனிதர்கள் மட்டும் எப்போதும் ஏதேனும் தேவையடையவர்களாகவே இருப்பதைப் பார்க்கிறோம். தங்கள் தேவைகள் நிறைவேறிட பெரிதும் ஆசைப்படும் மனிதர்கள் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசரம் காட்டுகின்றனர். அந்த அவசரத் தினால் ஏதேனுமொரு வழி கிடைத்தால் போதும் - அது ஹலாலா, ஹராமா என்றெல்லாம் பார்க்க மறுக்கிறார்கள்.

அதிலும் துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள், நோய் நொடி பயம், பீதி இவைகள் மனிதர்களுக்கு வந்து விட்டாலோ அவைகளின் உடனடித் தீர்வுக்காக மார்க்கத்தின் புறம்பான வழிகளாயிருந்தாலும், அதைப்பற்றி கவலைக் கொள்ளாமல் அதில் வீழ்ந்து விடுவதைப் பார்க்கிறோம். 

இதனால் பெரும் பேரிழப்பு ஏற்பட்டு விடுமென்பதை எத்தனை பேர் உணர்ந்து வைத்துள்ளனர்?. அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்ற வேண்டும். மனிதர்களை வெறுமனே படைத்து மட்டும் விட்டுவிட்டு வாழ்வியல் அம்சங்களில் ஏற்படும் பிரச்னைகளை கண்டு சொல்லாமலும் அதற்கு தீர்வு கொள்ளாமலும் மார்க்கம் விட்டு விடவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு வழியைக் காட்டியுள்ளது.
பிரார்த்தனை என்பது ஏக இறைவனோடு உள்ள பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு இலகுவான வழிமுறையாகும். மனிதர்களில் சிலர் தொழுவார்கள்; .பிரார்த்திப்பதில்லை. சிலர் பிரார்த்தனை மட்டும் செய்வர். தொழுவதில்லை. இரண்டையும் ஒரு சேரச் செய்து அல்லாஹ்வை முறையாகக் கண்ணியப்படுத்துவதில் தான் இறை நம்பிக்கையாளனின் வெற்றி அடங்கியுள்ளது.

விதியை மாற்றும் வலிமை எதில் இருக்கிறதென்றால் அது அல்லாஹ்விடத்தில் நாம் செய்யும் பிரார்த்தனைகளில் தான். இது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் கூற்றாகும்.

ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்தது முதல் மீண்டும் படுக்கைக்குச் செல்லும் வரை ஏற்படும் ஒவ்வொரு சூழலுக்கு தக்கவாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, அல்லாஹ்வை நினைவு கூறும் முறைகளை மார்க்கம் கூறியுள்ளது.
அவற்றைச் சொல்வதன், பிரார்த்திப்பதன் மூலம் மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களிலிருந்து நீங்கிக் கொள்வதுடன் நாம் எதிர்பாராத வகையிலான பாதுகாப்புகளும் இறைகிருபையால் கிடைத்து விடும். 

அதை விட்டு விட்டு கண்ட கண்ட மனிதர்களிடம், கல்லறைகளிடம், கல், மண், மரம் போன்றவற்றின் முன் பிரார்த்தனைச் செய்கின்றனர். இது அவர்களை தங்களை தாங்களே அழித்துக் கொள்வதாகும். இந்த அழிவிலிருந்து மனிதன் தன்னை காத்துக் கொள்ள மார்க்கம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ் அல்லாத பிறவற்றிடம் போய் முறையிடுகின்றனர். அதைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

'அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்'. (அல்குர்ஆன் 7 : 194)

'அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட முடியாது. தமக்கே அவர்கள் உதவிட முடியாது'.   (அல்குர்ஆன் 7 : 197)

மேலும் அல்லாஹ் பிராத்தனைக்கு பதில் அளிப்பதை பற்றி கூறுகின்றான்:
'பிரார்த்திப்பவர்கள் என்னிடமே பிரார்த்திக்கவும். அவர்களின் பிரார்த்தனைக்கு நானே பதிலளிக்கிறேன்'. என்று அல்லாஹ் கூறுகிறான்.    (அல்குர்ஆன் 2:186) 

பொதுவாக கடவுளை மனிதனால் எளிதில் அணுக முடியாது என்று மக்கள் கருதுகின்றனர். இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களும் இவ்வாறு தான் போதிக்கின்றன. 

கடவுளை மனிதன் எளிதில் அணுக முடியாது எனும் போது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இடைத் தரகர்கள் நுழைகின்றனர். கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றிச் சுரண்டுகின்றனர். ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளுக்கும் பெண்கள் மானம் இழப்பதற்கும் இந்த நம்பிக்கை தான் முழு முதற்காரணமாக அமைகின்றது.

ஆனால் இஸ்லாம் இந்த நம்பிக்கையைத் தகர்க்கிறது. கடவுள் மனிதனுக்கு மிகவும் அருகில் இருக்கிறான் என்று மட்டும் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், எளிதில் யாரும் தன்னை அணுக முடியும் என்று கடவுள் கூறுவதாக இஸ்லாம் பிரகடனம் செய்கிறது. ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் அனைத்து சுரண்டலும் இதனால் ஒழிக்கப்படுகிறது.

ஓவ்வொருவரும் தத்தமது தேவைகளை நேரடியாகத்தான் கேட்க வேண்டுமே தவிர இன்னொருவர் வழியாகக் கோரிக்கை அனுப்பக் கூடாது. அந்த இன்னொருவரும் கடவுளுக்கு அடிமைதான் என்பது இஸ்லாமிய கோட்பாடு.

அதனால் கூட்டு துஆ என்ற பெயரால் ஒருவர் துஆ என்று எதையோ ஓத கூடியிருப்பவர்கள் விளங்கியும் விளங்காமலும் ஆமீன் என்று சப்தமிட்டு கூறும் வழிமுறை மார்க்கத்தில் இல்லாததாகும்.  

துஆ என்பதே வணக்கமாகும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளது எதை சுட்டிக்காட்டுகிறதென்றால் வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பாகும். அங்கு இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை என்பதே அந்தப் பிரகடனம். 

மேலும் பிரார்த்தனை என்பது அவரவர் தேவைகளைச் சார்ந்ததாகும். அது அவரவருக்குத் தான் தெரியுமேத் தவிர ஹஜ்ரத் மார்களுக்குத் தெரியாது. எனவே கூட்டு துஆ என்பது இஸ்லாமிய நடைமுறைக்குட்பட்டது அல்ல. வல்லநாயன் அல்லாஹ் துஆச் செய்யும் முறையை கூறும்போது

'உங்கள் இறைவனைப் பணிவுடனும். இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்!. வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான';.         (அல்குர்ஆன் 7 : 55)

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித்தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.  மேலும், இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. 

இதிலிருந்து கூட்டாகச் சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரியவரும்.  ஓவ்வொருவருக்கும் தனித்தனி தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும் இரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும். 

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னபை;பற்றி நினைவு கூறுவதை நன்றிமிக்க காரியமாக அல்லாஹ் கூறுகின்றான்:

'எனவே என்னை நினையுங்கள். நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு நன்றி மறவாதீர்கள்'.     (அல்குர்ஆன் 2: 152)

மேலும்,  'அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்.ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அவன் விரும்புகிறான';. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி)

அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது: 
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல்ஹூவல்லாஹூ அஹது, குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112,113,114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங் கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும் தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம்படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள். (புகாரி 5748)

சஅத் பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் எந்த வார்த்தைகளால் பாதுகாப்புக் கோரி வந்தார்களோ அவற்றைக் கூறி நீங்களும் பாதுகாப்புக் கோருங்கள். அல்லாஹூம்ம இன்னீ அவூதுபிக மினல் ஜூப்னி, வ அவூதுபிக்க மினல் புக்(மா)லி, வஅவூதுபிக்க மின் அன் உறத்த இலா அர்தலில் உமுரி வஅவூதுபிக்க மின் ஃபித்னத்தித் துன்யா வஅதாபில் கப்ர்.

(பொருள்: இறைவா! கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். கருமித்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நான் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படு வதிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் கோருகிறேன். (புகாரி 6374)

இவ்வாறு எளிமையான வார்த்தைகளால் உயர்வான அர்த்தங்களும் நன்மைகளும் பொதிந்துள்ள பிரார்த்தனைகள் மார்க்கத்தில் ஏராளம் உள்ளன. ஸூப்ஹானல்லாஹ்.!!! அதில் நாம் கவனம் கொண்டு நன்மைகளைப் பெற முயற்சிப்போமாக! நாமும் வரக் கூடிய காலங்களில் சமுதாயத்தின் கவனத்திற்கு அவைகளை இன்ஷாஅல்லாஹ் கொண்டு வருவோம்! அல்லாஹ் கிருபையாளன் !!!

1 comment:

  1. alhamdulillah good work-france thowheed jamath
    www.frtj.net

    ReplyDelete