பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 23, 2020

குர்பானியின் சட்டங்கள்


குர்பானியின் சட்டங்கள்

நூலின் பெயர் : குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் பின்னணி

இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வுக்காகப் பலியிட முன்வந்த போது அதற்குப் பதிலாக ஒரு ஆட்டைப் பலியிடுமாறு அல்லாஹ் வழிகாட்டினான். அந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் குர்பானியின் பின்னணியாகும்

இது பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

அல்குர்ஆன் (37 : 100)

குர்பானியின் நோக்கம்

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் (22 : 37)

குர்பானியின் சிறப்பு

(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (969)

குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (5546)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : புகாரி (955)

யார்மீது கடமை?

குர்பானி கொடுப்பது கடமை என்பதால் தான் யார் மீது கடமை என்ற தலைப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இதன் கீழே காட்டப்படும் ஆதாரங்களும் கடமை என்பதற்கான ஆதாரங்களாக உள்ளன. எனவே தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் மாற்றமாக கீழே உள்ள வாசகம் அமந்துள்ளதால் அதை நீக்கி விட்டு சரியான வாசகத்தை கீழே தந்துள்ளோம்.

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும்.

பின் வரும் ஆதாரங்கள் குர்பானி கடமை என்ற கருத்தைத் தாங்கி நிற்கின்றன. தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்தவரை மீண்டும் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியதாலும், இறைவனுக்காக தொழுது அறுத்துப் பலியிடுவிராக என்று அல்லாஹ் கட்டளையிடுவதாலும் (112:1,2) குர்பானி கடமையாகும். தொழுகை எப்படி கடமையோ அது போல் குர்பானியும் கடமையாகும். ஆயினும் இது அதற்கான வ்சதி படைத்தவர்களுக்குத் தான் கடமை

வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி) அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா? என்று கேட்டார். ஆம் இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : பராஃ (ரலி)

நூல் : புகாரி (955)

தவறாக குர்பனி கொடுக்கப்பட்டால் மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (954)

ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)

நூல் : புகாரி (5500)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திலும், ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று என்னிடம் கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

நூல் : முஸ்லிம் (3649)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.

அறவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (5554)

நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அறவிப்பவர் பராஃ (ரலி)

நூல் புகாரி (951)

(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

(அல்குர்ஆன் 108 : 1,2)

கடன் வாங்கி குர்பானி

வசதி இல்லாவிட்டால் கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானதாகும்.

19021 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ الْأَصْبَهَانِيُّ قَالَا: أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، ثنا ابْنُ مُبَشِّرٍ، ثنا أَحْمَدُ بْنُ سِنَانٍ، ثنا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، ثنا رِفَاعَةُ بْنُ هُدَيْرٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ أَسْتَدِينُ وَأُضَحِّي؟ قَالَ: " نَعَمْ فَإِنَّهُ دَيْنٌ مَقْضِيٌّ ". قَالَ عَلِيٌّ: هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ , وَهُدَيْرٌ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ , وَلَمْ يَسْمَعْ مِنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , وَلَمْ يُدْرِكْهَا

அல்லாஹ்வின் தூதரே நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாக இதை அறிவிக்கும் ஹுதைர் என்பார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது தொடர்பு அறுந்த பலவீனமான ஹதீஸாகும் என்று பைஹகீ அவர்களே இதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : பைஹகீ (19021)

கடனாளியாக இருப்பவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

(அல்குர்ஆன் 2 : 286)

குர்பானி கொடுப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

துல்ஹஜ் மாதம் ஆரம்பத்தில் குர்பனி கொடுக்கும் வசதியைப் பெறாதவர் ஓரிரு நாட்கள் கழித்து வசதியைப் பெற்றுக் கொண்டால் அப்போது முதல் குர்பானி கொடுக்கும் வரை இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நகம் முடி ஆகியவை விழுவது நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அது நம்மை பாதிக்காது.

நகம், தலைமுடியை வெட்டும் அவசியம் அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் ஏற்பட்டால் அப்போது இவற்றை அகற்றுவதும் குற்றமாகாது.

ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு மீறும் வகையில் கஷ்டம் கொடுப்பதில்லை.

குர்பானி கொடுப்பவர் தான் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

.மேற்கண்ட ஹதீஸில் குர்பானி கொடுப்பவர் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

குர்பானிப் பிராணிகள்

ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.

ஆடு என்பதில் வெள்ளாடு, செம்மறி ஆடு இன்னும் பலவகைகள் அடங்கும். மாடு என்பதில் நாட்டு மாடு, எருமை மாடு உள்ளிட்ட அதன் அனைத்து வகைகளும் அடங்கும். ஒட்டகம் என்பதில் ஒட்டகத்தின் அனைத்து வகைகளும் அடங்கும். இம்மூன்று இனத்தில் அடங்கும் அனைத்தையும் குர்பானி கொடுக்கலாம்.

அகீகா, குர்பானி ஆகிய வணக்கங்களுக்குத் தான் ஆடு மாடு ஒட்டக்கங்களை மட்டும் கொடுக்க வேண்டும். இது அல்லாமல் நன்மையை நாடி நாமாக அறுத்துப் பலியிட நினைத்தால் கோழி சேவல் உள்ளிட்ட எதனையும் குர்பானியாக கொடுக்கலாம்.

ஒரு காரியம் நிறைவேறினால் ஒரு முயலை அறுத்து அல்லது கோழியை அறுத்து தர்மம் செய்வேன் என்று நேர்ச்சை செய்தால் அதை குர்பானி கொடுக்கலாம்.

ஜும்ஆவுக்கு முதல் நேரத்தில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில்  வருபவர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வருபவர் கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வருபவர் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி881

பிராணிகளின் தன்மைகள்

குர்பானிப் பிராணிகள் பெரிய குறைகள் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)

நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

பளிச்சென்று தெரியும் குறைகளைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சிறிய அளவிலான குறைபாடுகள் இருந்தால் குற்றமில்லை என்பதை இது உள்ளடக்கி இருக்கிறது.

கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3637)

உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

நூல் : நஸயீ (4301)

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

கொம்புகளில் மேல் ஓடும், உள் பகுதியும் உடைந்து இருந்தால் அதைக் குர்பானி கொடுக்கக் கூடாது. கொம்பின் மேல் ஓடு மட்டும் உடைந்து உட்புறம் உடையாமல் இருந்தால் அதைக் குர்பானி கொடுக்கலாம்.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை.

பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் குர்பானி கொடுப்பதில்லை. இது கூடாது என்று கருதுகிறார்கள். பெண் பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாக உள்ளது.

(பலிப் பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்! என (முஹம்மதே!) கேட்பீராக! ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா? என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் (6 : 143)

குர்பானிப் பிராணிகளுக்குப் போதுமான உணவளித்து பராமரிக்க வேண்டும்.

மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா(ரலி)

நூற்கள் : அபூஅவானா

ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி

காயடிக்கப்பட்ட பிராணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது.

இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத் தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.

பிராணியின் வயது

குர்பானிக்காக வாங்கப்படும் பிராணிக்கு பல் விழுந்திருக்க வேண்டும். சிலர் பால்குடிக்கும் குட்டிகளை அறுத்துப் பலியிடுகிறார்கள். குர்பானிப் பிராணிகள் எத்தனை வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்து நாம் அறியலாம்.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா(ரலி)

நூற்கள் : புகாரி(5560)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (3634)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.

அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்

நூல் : நஸயீ (4306)

பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை.

முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆடு, மாடு, ஒட்டகத்தில் பல் விழுந்தவை முஸின்னா என்று சொல்லப்படும்.

இரண்டு வருடம் பூர்த்தியான ஆடு, மாடுகள் முஸின்னா எனப்படும். ஆனால் ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்தால் தான் முஸின்னா என்பர். பிரபலமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இது இடம் பெற்றுள்ளது.

அடுத்து ஜத்வு என்பதையும் கொடுக்கலாம் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்வு என்பது முஸின்னாவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஆறு மாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

முஸின்னா கிடைக்கவில்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு முந்தைய நிலையில் உள்ள ஜத்வு வகையைக் கொடுக்கலாம்.

பாலூட்டும் பிராணி

குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும், பாலிற்கும் ஏங்கும் நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள்  பால் கொடுத்துக் கொண்டு இருக்கும் பிராணிகளை அறுக்கக் கூடாது.

(ஒரு அன்சாரித் தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

முஸ்லிம் : (3799)

குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?

அவசியம் ஏற்படும் போது குர்பானிப் பிராணிகளைப் பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. ஆனால் கொடுமை செய்யாமல் அதன் சக்திக்கு உட்பட்டவாறு அழகிய முறையில் அதைக் கையாள வேண்டும்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது., நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ் (ரஹ்)

நூல் : முஸ்லிம் (2562 , 2563), நஸயீ (2752), அபூதாவூத் (1498), அஹ்மத் (14230)

ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். அதற்கவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். மீண்டும் அவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும் என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (1690)

சில பிராணிகள் நம் கட்டளைகளுக்கு அடங்காமல் மிரண்டு ஓடும். இப்ராணிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அவற்றை அடிப்பதில் தவறேதும் இல்லை. அடங்காத பிராணிகளை அம்பெய்து கட்டுப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

எங்களுக்கு சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்.

அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ்

நூல் : புகாரி (2488) முஸ்லிம் (3638)

கூட்டுக் குர்பானி

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி)

நூற்கள் : முஸ்லிம்(2325),)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)

ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : அபூதாவூத் (2425)

மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரம் உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

எங்கே கொடுப்பது?

முஸல்லா எனும் திடலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)

நூற்கள் : புகாரி(5552), அபூதாவூத் (2428), நஸயீ (1571)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் முஸல்லா என்ற திடலில் குர்பானி கொடுத்துள்ளார்கள். பொதுவான ஒரு இடத்தில் வெளிப்படையாக அறுக்கும் போது ஏழை எளியவர்கள் இதைக் கண்டு கொள்வார்கள். குர்பானி கொடுத்தவர்களிடம் சென்று இறைச்சியை அவர்கள் வாங்குவதற்கு இம்முறை உதவியாக இருக்கும்.

இந்த நோக்கத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸல்லாவில் சென்று குர்பானி கொடுத்திருக்கலாம். விரும்பினால் வீட்டில் கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (இல்லத்திற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம்.

அறிவிப்பவர் : பரா(ரலி)

நூற்கள் : புகாரி(5545), முஸ்லிம் (3627)

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்வ்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டை கீழே படுக்க வைத்து அறுத்தார்கள்.

நூல் : முஸ்லிம் (3637)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்களிடம் கத்தியை எடுத்து வரும் படி கட்டளையிட்டிருப்பது அறுத்தல் வீட்டில் நடந்திருக்கிறது எனத் தெரிவிக்கிறது. திடலுக்குச் சென்றிருந்தால் கத்தியுடனே அங்கு சென்றிருப்பார்கள். கத்தியை எடுத்து வரும்படி கூறுவதற்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. இதன்படி குர்பானிப் பிராணியை ஈத்கா திடலில் அல்லது வீட்டில் அறுக்கலாம் என்பது தெளிவாகிறது.

வீடு அல்லது திடலில் அறுக்காமல் வீட்டிற்கு முன்பு தெருவில் சிலர் அறுக்கிறார்கள். இவர்களது இச்செயல் தெருக்களில் அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இடையூறாக அமைந்து விடுகிறது.

அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிராணியை அறுக்கும் முன் அதன் வாயில் சிறிது நீரை விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. இதனால் அப்பிராணிக்கு வேதனை குறையும் என்று நம்புவதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை.

கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்வது அவசியம். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எம்முறை பிராணிக்குச் சிரமத்தைக் குறைக்குமோ அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)

ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

நூற்கள் : முஸ்லிம் (3615)

கால்நடைகளை முறையாக ஒரு பக்கமாகப் படுக்கவைத்து அவை எழாமல் இருப்பதற்காக அவற்றின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பலிப்பிராணியை அறுக்கும் போது அது துள்ளி பூரணமாக அறுப்பதைத் தடுத்துவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருப்பும் வெள்ளையும் கலந்த இரு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தம்முடைய பாதத்தை அவற்றின் கழுத்தில் வைப்பதை நான் பார்த்தேன். பிஸ்மில்லாஹ்வையும், தக்பீரையும் கூறி அவற்றை தம் கையால் அறுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (5558)

ஒட்டகத்தைப் பொறுத்தவரை நிற்க வைத்து அதன் ஒரு காலை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு அறுக்க வேண்டும். ஆட்டை அறுப்பதைப் போன்று படுக்க வைத்து ஒட்டகத்தை அறுக்க இயலாது. ஆகையால் ஒட்டகத்தில் இம்முறையைக் கடைபிடிக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறுப்பதற்காக அவரது ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறை என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : ஸியாத் பின் ஜுபைர் (ரலி)

நூல் : புகாரி (1713)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து தமது கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில் பெரிய கொம்புகளுடைய கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (1712)

பிராணியைப் படுக்க வைப்பதற்கு முன்பாகவே கத்தியைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப் படுக்க வைத்துக் கொண்டு அதன் கண்ணெதிரே கத்தியைத் தீட்டுவதினால் பிராணி மிரள ஆரம்பிக்கும். இவ்வாறு செய்வது பிராணியைத் துன்புறுத்துவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்க வைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257

குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா?

குர்பானி கொடுக்கும் போது குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் வந்து நிற்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானதாக உள்ளது.

ஃபாத்திமா! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானிப் பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும் போதே உனது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாகக் கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள். முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : பைஹகீ (19161) (19162)

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அமீர் பின் காலித் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகையால் குடும்பத்தினர் வந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதில் கூறப்பட்டுள்ள சிறப்புகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாகாது.

ஆனால் அறுப்பதைப் பார்க்க குடும்பத்தினர்கள் விரும்பி அவர்களாகவே முன்வந்தால் அதில் எந்தக் குற்றமும் இல்லை. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நின்று பார்த்துள்ளார்கள் என்ற தகவலை முன்பே பார்த்தோம்.

கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா?

குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே எந்தத் திசை அறுப்பவருக்கு தோதுவாக உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.

சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர். இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

பிராணியை அறுப்பதற்கு முன்பு கூற வேண்டியவை

பிராணியை அறுக்கும் போது வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ என்ற துஆவை சிலர் ஒதுகின்றனர். இது பற்றி அபூதாவுத், பைஹகீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் ஒரு பலவீனமான ஹதீஸ் இடம் பெறுகிறது. ஆகயால் இதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஸஹீஹான ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில வார்த்தைகளைக் கூறியதாக உள்ளது.

அறுக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூறி இவ்வணக்கத்தை நம்மிடமிருந்து ஏற்றுக் கொள்ளும்படி அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)

முஸ்லிமில் உள்ள இன்னொரு அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று சொன்னதாக வந்துள்ளது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (3636)

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய கருப்பு நிறத்தால் அமரக்கூடிய கருப்பு நிறத்தால் பார்க்கக்கூடிய கொம்புள்ள ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பிறகு அதை கல்லில் தீட்டு என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள்.

(அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். இறைவா முஹம்மதிடமிருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (3637) அபூதாவுத் (2410) அஹ்மத் (23351)

பெருநாள் தொழுகை முடிந்த உடன் பள்ளிவாசலில் பணிபுரியும் ஹஜ்ரத்மார்களுக்கும், மோதினாருக்கும் கடுமையான வேலை வந்துவிடும். ஒவ்வொருவரும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அவர்களையே நாடி இருப்பார்கள். இவர்கள் அறுத்தாலே குர்பானி ஏற்கப்படும் என்று பலர் இன்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய கரத்தால் அறுத்துள்ளதால் குர்பானி கொடுப்பவர் தானே அறுப்பதே சிறந்ததாகும். அவ்வாறு அறுக்கும் போது பிறரை உதவிக்கு அழைத்துக் கொள்வது தவறாகாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணியை அறுப்பதற்காக அதைப் படுக்கவைத்து விட்டு ஒரு மனிதரிடத்தில் எனது குர்பானிப் பிராணியை (அறுப்பதற்கு) எனக்கு உதவிபுரியுங்கள் என்று கூறினார்கள். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உதவி புரிந்தார்.

அறிவிப்பவர் : பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழர்

நூல் : அஹ்மத் (22086)

எப்போது அறுக்க வேண்டும்?

குர்பனிப் பிராணியை உலுஹியா, குர்பானி என்று பிரித்து உலுஹியா என்றால் தொழுகைக்கு முன்பு அறுக்கலாம் என்றும், குர்பானி என்றால் தொழுகைக்குப் பின்பு தான் அறுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரித்துச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உலுஹியா என்பதும், குர்பானி என்பதும் ஒன்று தான்.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர் கொடுத்தால் அது குர்பானியாகக் கணக்கில் கொள்ளப்படாது.

தொழுகை முடிந்த உடன் தான் அறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்து விட்டதால் அதையே துவங்குவதற்குரிய நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் இதை அறியாமல் ஃபஜர் ஆரம்பித்த உடனே அறுத்து விடுகிறார்கள். தெரியாமல் தொழுகைக்கு முன் அறுத்து விட்டால் தொழுத பின் மற்றொரு பிராணியை அறுக்க வேண்டும்.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாதக் குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா (ரலி)

நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)

அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டை வீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக் கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்து விட்டேன் என்று கூறினார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர்அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் இதுவே உனது இரு குர்பானிப் பிராணியில் சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : முஸ்லிம் (3625)

எவ்வளவு நாட்களுக்குள் அறுத்துப் பலியிட வேண்டும்?

பெருநாள் மற்றும் அதற்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்குள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட வேண்டும். பெருநாளுக்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்கு தஷ்ரீக்குடைய நாட்கள் என்று சொல்லப்படும். இந்நாளில் மக்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை சூரிய ஒளியில் காயவைத்து உப்புக்கண்டம் தயாரித்ததால் இதற்கு அய்யாமுத் தஷ்ரீக் உப்புக் கண்டம் தயாரிக்கும் நாள் என்ற பெயர் வந்தது.

தஷ்ரீக்குடைய நாட்களுக்கு மினாவுடைய நாட்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தஷ்ரீக்குடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நுபைஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2099)

என்னையும், அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அனுப்பி இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார். மினாவின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம் (2100)

மினாவுடைய நாட்கள் அதாவது தஷ்ரீக்குடைய நாட்கள் என்பது மூன்று நாளாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மினாவுடைய நாட்கள் மூன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் யஃமர் (ரலி)

நூல் : திர்மிதி (814)

பெருநாளுக்கு அடுத்துள்ள இந்த மூன்று நாட்களும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கீழே உள்ள ஹதீஸ் பலவீனமான ஹதீஸாகும். தஷ்ரீக் நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் அமைந்த எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவைவையாகும்

தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)

நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)

ஹஜ் பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்குப் பின்னர் கொடுப்பது குர்பானியாக ஆகாது,.

இது குறித்து விரிவான ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

குர்பானி எத்தனை நாட்கள்

குபானி பல நாட்கள் கொடுக்கலாம் என்று குர் ஆன் கூறுகிறதா?

ஹஜ் பெருநாள் மட்டுமே குர்பானிக்கு உரிய நாட்கள்

பகலில் மட்டுமே அறுக்கும் வழக்கம் மக்களிடம் உள்ளது. இரவில் பிராணியை அறுப்பதற்கு குர்ஆனிலோ ஏற்கத்தகுந்த நபிமொழிகளிலோ எந்தத் தடையும் இல்லை என்பதால் விரும்புபவர்கள் இரவில் அறுத்துப் பலியிடலாம்.

பெண்கள் அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி)

நூல் : புகாரி 5504

எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?

சிலர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும், சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.

இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாகக் கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அதா இப்னு யஸார்

நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற கறுப்பில் படுக்கின்ற கறுப்பில் பார்க்கின்ற (கால்கள் வயிறு கண் ஆகியப் பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறி ஆட்டுக்கெடா ஒன்றைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறு அது குர்பானிக்காக கொண்டுவரப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷாவே அந்தக் கத்தியை எடு என்றார்கள். பிறகு அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு என்றார்கள்.அவ்வாறே நான் செய்தேன்.பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (3637)

இது மட்டுமல்லாமல் குர்பானிக் கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்தி விட்டார்கள்.

நான் அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ஒவ்வொரு பெருநாளிலும், ஒவ்வொரு ரஜப் மாதத்திலும் ஒரு ஆட்டை அறுப்பது ஒவ்வொரு வீட்டின் மீதும் கடமை என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

நூல் : அஹ்மத் (19804)

அறிவிப்பாளர் : ஹபீப் பின் மிஹ்னஃப்

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தமது கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும்படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பைப் பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2137

நன்மையைக் கருதி அதிகமாக குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானிப் பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும்.

நீண்ட இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத் துண்டுகளைச் சமைத்து சாப்பிட்டதாக உள்ளது. குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.

பங்கிடுதல்

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

அல்குர்ஆன் (22 : 36)

இந்த வசனத்தில் அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி தோல் சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்கு கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)

நூல் : புகாரி (1717)

நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து அதை அனைத்தையும் பங்கிட்டு ஏழைகளுக்கு வழங்குமாறு அலீ(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்ட செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் ஒரு துண்டு எடுத்து அதை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள். எனவே குறிப்பிட்ட அளவில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் தர்மம் வழங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (2137)

மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன்.

அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)

நூல் : முஸ்லிம் (3649)

மாற்றப்பட்டச் சட்டம்

பஞ்சம் மிகைத்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் மாமிசத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்று மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். பின்பு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்துக் கொள்வதற்கு சலுகை வழங்கினர்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஈதுல் அல்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள் மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஒரு ஆண்டில் தான் அவர்கள் அப்படி (த் தடை) செய்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதியுள்ளவர் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதை சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆபிஸ் பின் ரபீஆ

நூல் : புகாரி (5423)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் (மாமிசத்தை எதிர்பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலவீனமான மக்களுக்காகத் தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (3643)

பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்

ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் சேமித்து வைப்பதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள் ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.

(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று சொல்லிவிட்டு தம் அண்டை வீட்டாரின் தேவை(யினால் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டதாக) குறிப்பிட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் இருந்தது. .

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (5561)

அபூபுர்தா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நானும் சாப்பிட்டுவிட்டு எனது குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் உண்ணக் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக புகாரியில் 983 வது செய்தியில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது? என்று அபூஅய்யூப் அல்அன்சாரீ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக் கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

அறிவிப்பவர் : அதா பின் யசார்

நூல் : திர்மிதி (1425)

குர்பானி மாமிசத்தைக் முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) இந்த வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறப்படுகிறது.

ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் முஸ்லிமல்லாத ஏழைக்கும் வழங்குவதில் எந்தக் குற்றமும் இல்லை. முஸ்லிம்களுக்கு குர்பானி இறைச்சியை தர்மமாகக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்று கூறியிருப்பதினாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வழங்குவது குற்றமல்ல.

(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி)

நூல் : முஸ்லிம் (3643)

எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக மிச்சம் இருந்தால் முஸ்லிமல்லாதவர்களுக்கும் வழங்கலாம்.

பிராணிகளின் தோல்

குர்பானிப் பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : அலீ(ரலி)

நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)

தோல்கள் ஏழைகளுக்குச் சேர வேண்டியது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும், இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம்.

மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

இரத்தம்

பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். ஏனென்றால் இரத்தம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையறியாமல் பலர் ஆடுகளை அறுக்கும் போது வெளிவரும் இரத்தத்தை எடுத்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்

அல்குர்ஆன் (2 : 173)

இறந்தவர்களுக்காக குர்பானி

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பஸ்ன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (3084)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138)

அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)

மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப் பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம், மகள் ஜைனப், மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்காகக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்கக் கூடாது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானிகொடுக்கலாமா?

அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை, நோன்பு, ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.

யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : புகாரி (5545) முஸ்லிம் (3624)

பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் (6 : 162)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்,

அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி)

நூல் : முஸ்லிம் (3659)

அவ்லியாக்களுக்காகவோ அல்லது மகான்களுக்காகவோ அறுப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியைச் சாப்பிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் (5 : 3)

எனவே குர்பானியின் சட்டங்களை தெரிந்து அதன் அடிப்படையில் இவ்வணக்கத்தை நிறைவேற்றி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக!

17.08.2009. 23:15 PM

No comments:

Post a Comment