பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, April 28, 2020

நோன்பின் சட்டங்கள் - 3

*🌐மீள்🌐 பதிவு🌐* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


*📚📚📚நபிவழியில் நோன்பின் சட்டங்கள்📚📚📚*


 *♻️♻️♻️இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்♻️♻️♻️* 


 *👉தொடர் பாகம் 3👈*

 *🌐🌐🌐விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது❓🌐🌐🌐*


மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

 *நூல்: புகாரி 1950* 

ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

 *ரமளான் மாதத்தை முடிவு செய்தல்* 

நோன்பைக் கடமையாக்கிய இறைவன், யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்று கூறுகிறான். இவ்வசனத்தை ஆரம்பமாக நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

ரமளான் மாதத்தை உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராகத் தான் அடைவார்கள் என்பதால் தான், யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் மதீனாவில் பிறை காணப்பட்ட போதெல்லாம் அந்தச் செய்தியை தம்மால் இயன்ற அளவுக்கு அறிவிக்குமாறு எந்த ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை. நான்கு கலீபாக்கள் காலத்திலும் இத்தகைய ஏற்பாடு எதையும் செய்யவில்லை.

மாதத்தை எப்படி முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்.

நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவக்குங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 *நூல்: புகாரி 1909, 1907* 

மேக மூட்டமாக இருந்தால் வானில் பிறை இருப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது. எனவே உயரமான உஹது மலை மீது ஏறிப் பாருங்கள் என்றோ, அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் போய் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றோ கூறாமல், பிறை பிறக்கவில்லை என்று முடிவு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒரு பகுதியில் காணப்படும் பிறை அப்பகுதியினரை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 *இதைப் பின்வரும் நிகழ்ச்சி மேலும் உறுதி செய்கின்றது.* 

என்னை உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவில் இருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் ஒரு அலுவலுக்காக அனுப்பி வைத்தார்கள். நான் அங்கே சென்று அவர்கள் தந்த அலுவலை முடித்தேன். நான் அங்கே இருக்கும் போது ஒரு வெள்ளிக்கிழமை இரவு ரமளானின் முதல் பிறையைப் பார்த்தேன். பின்னர் மாதத்தின் இறுதியில் மதீனா வந்தடைந்தேன். என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) விசாரித்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறை பார்த்தோம் என்று கூறினேன். நீ பிறை பார்த்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் பார்த்தேன். மக்களும் பார்த்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்களே மறு பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை நாங்கள் நிறைவு செய்யும் வரை நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். அப்போது நான், முஆவியா (ரலி) பிறை பார்த்ததும், அவர்கள் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், போதாது! இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

 *நூல்: முஸ்லிம் 1819* 

(பிறைபார்த்தல் குறித்தும் விஞ்ஞான அடிப்படையில் கணிப்பது குறித்தும் எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் பிறை ஒரு விளக்கம் என்ற நமது நூலில் தெளிவான விளக்கத்தைக் காணலாம்.)

 *சஹர் மற்றும் பித்அத்கள்* 

சுப்ஹ் நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹ் நேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!

 *திருக்குர்ஆன் 2:187* 

இவ்வசனத்தில் ஃபஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். ஃபஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான முஸ்லிம்களிடம் காணப்படும் அறியாமையைச் சுட்டிக் காட்ட இது பொருத்தமான இடமாகும்.

தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் சுமார் இரவு மூன்று மணியளவில் ஸஹர் செய்வதற்காக எழுந்து உண்பார்கள். ஸஹர் முடிந்ததும் 3.30 மணியளவில் அல்லது நான்கு மணியளவில் நிய்யத் செய்வார்கள். (நிய்யத் பற்றிப் பின்னர் விளக்கப்படவுள்ளது.)

இவ்வாறு நிய்யத் செய்த பின் ஃபஜ்ரு நேரம் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ மீதமிருக்கும். ஆனாலும் நிய்யத் செய்து விட்டதால் அதன் பிறகு எதையும் உண்ணக் கூடாது, பருகக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது தவறாகும்.

எந்த நேரம் முதல் உண்ணக் கூடாது என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டானோ அந்த நேரம் வரை உண்பதற்கு நமக்கு அனுமதியுள்ளது. நாம் நிய்யத் செய்து விட்டால் கூட, எப்போது முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அப்போது முதல் நோன்பு நோற்கிறேன் என்பது தான் அதன் பொருள்.

எனவே 5.40 மணிக்கு சுபுஹ் வேளை வருகிறது என்றால் மூன்று மணிக்கே நிய்யத் செய்தாலும் 5.40 வரை உண்ணலாம்; பருகலாம்; இல்லறத்திலும் ஈடுபடலாம்.

இன்னொரு அறியாமையையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

சுபுஹ் நேரம் 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது என்று வைத்துக் கொள்வோம். 5.29 வரை உண்ணலாம்; பருகலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நோன்பு அட்டவணை என்று வெளியிடப்படும் அட்டைகளில் ஸஹர் முடிவு 5.20 என்றும், சுபுஹ் 5.30 என்று போடும் வழக்கம் உள்ளது.

அதாவது சுபுஹ் நேரம் வருவதற்குப் பத்து நிமிடம் இருக்கும் போதே ஸஹரை முடிக்க வேண்டும் என்று இந்த அட்டவணை கூறுகின்றது. இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும்.

ஸஹர் முடிவும், சுபுஹ் நேரத்தின் துவக்கமும் ஒன்று தான். ஸஹர் முடிந்த மறு வினாடி சுபுஹ் ஆரம்பமாகி விடும். ஸஹர் முடிவுக்கும், சுபுஹுக்கும் இடைப்பட்ட நேரம் எதுவுமில்லை.

எனவே எப்போது சுபுஹ் நேரம் ஆரம்பமாகிறதோ அதற்கு ஒரு வினாடிக்கு முன்னால் வரை உண்ணவும், பருகவும் அனுமதி உள்ளது.

சுபுஹிலிருந்து நோன்பு ஆரம்பமாகின்றது என்றால் எது வரை நோன்பு நீடிக்கின்றது? இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!

 *திருக்குர்ஆன் 2:187* 

சூரியன் மறைந்தவுடன் இரவு ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியது அவசியம்.

மார்க்கம் பற்றிய அறிவு இல்லாத சிலர், ரமளான் அல்லாத நாட்களில் பகல் வரை சாப்பிடாமல் இருந்து விட்டு அரை நோன்பு வைக்கும் வழக்கம் உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.

நோன்பு என்பது சுபுஹ் முதல் மஃக்ரிப் வரை முழுமையாக வைக்க வேண்டுமே தவிர அரை நோன்பு, முக்கால் நோன்பெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

சூரியன் மறைந்தவுடன் இரவு ஆரம்பமாகி விடுகின்றது. ஆனாலும் சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்தே நோன்பு துறக்கும் வழக்கம் பெரும்பாலான ஊர்களில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும்.

நோன்பு துறப்பதைப் பத்து நிமிடம் தாமதமாகச் செய்வது பேணுதலான காரியம் என்று இவர்கள் நினைப்பதே இதற்குக் காரணமாகும்.

சூரியன் மறையும் வரை என்ன? அதற்கு மேலும் என்னால் பட்டினி கிடக்க முடியும் என்று நினைப்பதும், நடப்பதும் ஆணவமான செயலாகத் தான் கருதப்படுமே தவிர பேணுதலாக ஆகாது.

இறைவா! நான் பசியைத் தாங்கிக் கொள்ள இயலாத பலவீனன். நீ கட்டளையிட்டதற்காகத் தான் இதைத் தாங்கிக் கொள்கிறேன் என்ற அடக்கமும் பணிவும், விரைந்து நோன்பு துறக்கும் போது தான் ஏற்படும்.

என் அடியானைப் பாருங்கள்! எப்போது சூரியன் மறையும் என்று காத்திருந்து மறைந்தவுடன் அவசரமாகச் சாப்பிடுகிறான். இவ்வளவு பசியையும் எனக்காகத் தான் இவன் தாங்கிக் கொண்டான் என்று இறைவன் இத்தகைய அடியார்களைத் தான் பாராட்டுவான்.

இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இப்படித் தான் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

 *நூல்: புகாரி 1957* 

இந்தத் திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து, அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)

 *நூல்: புகாரி 1954* 

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்தவுடன் ஒரு மனிதரிடம், போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்கு அம்மனிதர், இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே! என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள். இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே! என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி)

 *நூல்: புகாரி 1941, 1955, 1956, 1958, 5297* 

இன்னும் பகல் உள்ளதே என்று அம்மனிதர் சுட்டிக் காட்டிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. சூரியன் மறையும் நேரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாத பேணுதலை யார் கண்டுபிடித்தாலும் அது நமக்குத் தேவையில்லை.

 *ஸஹர் உணவு* 

சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 *நூல்: புகாரி 1923* 

நமது நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறித்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

 *நூல்: முஸ்லிம் 1836* 

ஸஹர் உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

 *ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல்* 

ஸஹர் உணவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்தலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்முறை விளக்கம் தந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

 *நூல்: புகாரி 576, 1134, 1921, 575* 

தமிழகத்தில் சுப்ஹுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இருக்கும் போது ஸஹர் செய்யும் வழக்கத்தை பலரும் மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஸஹர் செய்து விட்டு உறங்கி, சுபுஹ் தொழுகையைப் பாழாக்கி விடுகின்றனர்.

ஸஹர் செய்து முடித்தவுடன் சுபுஹ் தொழுகைக்கு ஆயத்தமாகும் அளவுக்குத் தாமதமாக ஸஹர் செய்வதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையாகும்.

ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதிட, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் போதுமானதாகும். சுபுஹுக்குப் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் இருக்கும் போது தான் ஸஹர் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

 *ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்*

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக் கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. ரமளான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுபுஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பிலால் (ரலி) அவர்கள் ஸஹருக்கு எழுப்பி விடுவதற்கான பாங்கு சொல்வார் எனவும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில் (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி)

 *நூல்: புகாரி 621, 5299, 7247* 

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது.

 *நூல்கள்: முஸ்லிம் 1829, புகாரி 1919* 

சுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.

நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.

ஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ்செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.

மாற்று மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.

பின்னிரவில் எழுந்து தொழுவதே சிறப்பு என்ற அடிப்படையில் பின்னிரவில் எழுந்து தொழுபவர்களின் காதுகளைக் கிழிக்கும் வகையில் ஒலிபெருக்கியை அலற விட்டு, பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில பகுதிகளில் இரவு ஒரு மணியிலிருந்தே பக்கிரிசாக்கள் கொட்டு மேளத்துடன் தெருத்தெருவாகப் பாட்டுப் பாடிச் செல்லும் வழக்கம் உள்ளது.

ஸஹருக்காக இரவு ஒரு மணிக்கும், இரண்டு மணிக்கும் மக்களை எழுப்பி விடக் கூடிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?

கடைசி நேரத்தில் ஸஹர் செய்வதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நள்ளிரவு இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது குற்றமாகும். இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

 *அதிகமாக உண்பது* 

நோன்பு துறக்கும் போதும், ஸஹர் நேரத்திலும் அதிக சுவைகளுடனும், அதிக அளவிலும் உணவு உட்கொள்ளும் வழக்கம் உள்ளது.

மார்க்க அறிவு இல்லாத சூஃபிய்யாக்கள் எனும் அறிவிலிகள் இந்தப் பழக்கத்தைக் குறை கூறுகின்றனர். சுவையாக உண்பதால் நோன்பின் நோக்கமே பாழாகி விட்டதாகவும் எழுதி வைத்துள்ளனர்.

நோன்பின் நோக்கம் உணவின் அளவையும், சுவையையும் குறைத்துக் கொள்வதற்கான பயிற்சி அல்ல! மாறாக இறையச்சத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியே என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம். இந்தத் தத்துவத்திற்கு இது மாறாகவுள்ளது.

நமது சக்திக்கும், வசதிக்கும் தக்கவாறு எத்தனை வகைகளிலும் உணவு உண்ண நமக்கு அனுமதி உள்ளது.

நோன்பு துறந்த பின்பும் நோன்பாகவே இருங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.

அதிக அளவோ, அதிக சுவையோ கூடாது என்றால் அதைக் கூற வேண்டிய அதிகாரம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தான் உள்ளது. மார்க்க அறிவற்ற சூஃபிய்யாக்களுக்கு இல்லை.

அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

வகை வகையான உணவில் நாட்டமிருந்தும், எனக்காக அந்த ஆசையை எப்படி என் அடியான் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று அல்லாஹ் மகிழ்ச்சியடைவானே தவிர அவன் அனுமதித்ததைச் செய்யும் போது அதிருப்தி அடைய மாட்டான்.


 *🕋நோன்பு துறத்தல்🕋*


 *பசியை அடக்கிக் கொண்டு தொழுதல்* 

தமிழக முஸ்லிம்களிடம் உள்ள மற்றொரு அறியாமையையும் சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.

நோன்பு துறப்பதற்காகத் தண்ணீர் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விடுவதுண்டு. இதனால் தண்ணீரைக் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் உடலும், மனமும் உணவில் பால் நாட்டம் சொண்டிருக்கும். இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல் அல்ல! மாறாக மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட ஒரு செயலாகும்.

மல ஜலத்தை அடக்கிய நிலையிலும், உணவு முன்னே இருக்கும் போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்: முஸ்லிம் 869* 

உங்களில் ஒருவர் உணவில் இருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 *நூல்: புகாரி 5465, 671* 

இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத் தொழுகையை விட, பசியைப் போக்குவது முதன்மையானது என்பதை அறிந்து கொள்ளலாம். சாதாரண நாட்களிலேயே இந்த நிலை என்றால் நோன்பின் போது மஃக்ரிப் நேரத்தில் அதிகமான பசியும், உணவின் பால் அதிக நாட்டமும் இருக்கும். இந்த நேரத்தில் மனதை உணவில் வைத்து விட்டு, உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

இன்னொன்றையும் நாம் மறந்து விடக் கூடாது. ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப நேரமும், ஒரு முடிவு நேரமும் உள்ளது. முடிவு நேரத்துக்குள் தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும். பசியின் காரணமாக ஜமாஅத்தைத் தான் விடலாமே தவிர தொழுகையை விட்டு விடக் கூடாது. மஃக்ரிப் தொழுகையைப் பொறுத்த வரை சூரியன் மறைந்தது முதல் சுமார் 60 நிமிடம் வரை தொழுகை நேரம் நீடிக்கும். அதற்குள் தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.

ஏனெனில் தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது என்று *(4:103 வசனத்தில்)* அல்லாஹ் கூறுகிறான்.

 *பேரீச்சம் பழத்தையோ, தண்ணீரையோ* 

நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம் என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் போது முதலில் பேரீச்சம் பழங்களை உட்கொள்ளுமாறு ஆர்வமூட்டி உள்ளார்கள். யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 *நூல்: திர்மிதீ 594* 

பேரீச்சம் பழத்தையோ, தண்ணீரையோ முதலில் உட்கொண்டு விட்டு அதன் பிறகு மற்ற உணவுகளை உட்கொள்வதால் நபிகள் நாயகத்தின் சுன்னத்தைப் பேணிய நன்மையை அடைந்து கொள்ளலாம்.

 *☪️☪️☪️நோன்பை முறித்தல், பரிகாரம்☪️☪️☪️*

 *நோன்பு நோற்க வேண்டிய நாட்கள்* 

இஸ்லாமிய மார்க்கத்தில் மாதம் என்பது 29 நாட்களாகவும் சில வேளை 30 நாட்களாகவும் அமையும். இதை அறியாத சிலர் மாதம் 29 நாட்களில் முடியும் போது ஒரு நோன்பு விடுபட்டு விட்டதாக நினைக்கின்றனர்.

நினைப்பது மட்டுமின்றி விடுபட்டதாகக் கருதி அந்த ஒரு நோன்பைக் களாச் செய்யும் வழக்கமும் சிலரிடம் உள்ளது. ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. 29 நாட்களில் மாதம் நிறைவடைந்தாலும் 30 நாட்களில் நிறைவடைந்தாலும் ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குவான். முப்பது நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் 30 நாட்கள் நோன்பு பிடியுங்கள் என்று கூறியிருப்பான். எனவே இந்த அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். நன்மை என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலைக்குப் போய்விடக் கூடாது.


 *நோன்பை முறிக்கும் செயல்கள்* 

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது.

நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.

இவை தவிர நோன்பாளி கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக ஒழுங்குகளும் உள்ளன. அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 *நூல்: புகாரி 1903, 6057* 

எதை அல்லாஹ் தேவையில்லை என்று கூறினானோ அதற்கு அல்லாஹ் எந்தக் கூலியையும் தர மாட்டான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து விட்டுப் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் பயனேதும் இருக்க முடியாது.

பொதுவாகவே பொய்கள், புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து அதிகமாக விலகிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இவற்றால் நோன்பு முறியாது என்று ஃபத்வாக்கள் அளித்து வந்ததால் தான் முஸ்லிம்களிடம் நோன்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொய், புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நம்முடன் சண்டைக்கு வருபவர்களிடம் பதிலுக்குச் சண்டை போட பொதுவாக அனுமதி உள்ளது. நம்மிடம் எந்த அளவுக்கு ஒருவர் வரம்பு மீறுகிறாரோ அந்த அளவுக்கு வரம்பு மீறவும் அனுமதி இருக்கிறது. நோன்பாளி இந்த அனுமதியைக் கூட பயன்படுத்தக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் – அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 *நூல்: புகாரி 1894, 1904,* 

பொதுவாக அனுமதிக்கப்பட்ட சண்டையையே தவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சாதாரண நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதிலிருந்து விடுபட வேண்டும். நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 *நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்* 

நோன்பு நோற்றவர் நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் அது பெருங்குற்றமாகும். நோன்பு நோற்காதவர்களை விட நோன்பை வேண்டுமென்று முறிப்பவர்கள் கடும் குற்றவாளிகளாவர்.

இவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பை முறித்ததற்காக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதையும் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உடலில் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 *நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711* 

இம்மூன்று பரிகாரங்களில் எதையுமே செய்ய இயலாதவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது சம்பந்தமாகத் தான் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது. உண்பதன் மூலமும், பருகுவதன் மூலமும் நோன்பை முறித்தால் இவ்வாறு பரிகாரம் செய்யுமாறு ஹதீஸ்களில் கூறப் படவில்லை. ஆயினும் செய்கின்ற காரியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும். உடலுறவின் போது எவ்வாறு இறைவனது கட்டளை மீறப்படுகிறதோ அது போல் தான் உண்ணும் போதும் மீறப்படுகிறது. உடலுறவு எப்படி நோன்பை முறிக்குமோ அப்படித் தான் உண்பதும், பருகுவதும் நோன்பை முறிக்கும்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் உடலுறவை விட உண்ணுதல் கடுமையான விஷயமாகும். ஏனெனில் சில சமயங்களில் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி உடலுறவு ஏற்பட சாத்தியம் உள்ளது. உண்ணுதல், பருகுதல் தன்னை மீறி ஏற்படக் கூடியதல்ல. எனவே உடலுறவு கொள்வதற்கே பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் உண்பதற்குப் பரிகாரம் இல்லை என்ற கூற முடியாது. பரிகாரம் செய்து விடுவதே பேணுதலுக்குரிய வழியாகும். இந்த ஹதீஸில் உடலுறவில் ஈடுபட்ட கிராமவாசிக்குப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அவரது மனைவியைப் பரிகாரம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிடவில்லை. எனவே நோன்பு நோற்றுக் கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும். மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த ஹதீஸில் மனைவி குறித்து ஏதும் கூறப்படாவிட்டாலும் இவர்களின் வாதம் சரியானதல்ல! திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சட்டங்கள் ஆண்களுக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறப்பட்டுள்ளன. பெண்களுக்கு மட்டும் என்று பிரித்துக் கூறப்படாத எல்லாச் சட்டங்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையே என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.

ஒருவர் வந்து தனது குற்றம் குறித்து முறையிட்டதால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது அவருக்கு மட்டுமுரியது என்று யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்தக் குற்றத்தை யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது தான் சட்டம் என்று எடுத்துக் கொள்வோம். அவரது மனைவி விஷயமாகவும் இப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பரிகாரம் என்பது, குறிப்பிட்ட குற்றத்திற்குரியதே அன்றி குறிப்பிட்ட நபருக்குரியதல்ல! அவரிடம் கூறினால் அவர் போய் தனது மனைவியிடம் கூறாமல் இருக்க மாட்டார்.

மனைவி பரிகாரம் செய்ய வேண்டியதில்லை எனக் கூறினால் மனைவியின் செயல் குற்றமில்லை என்று ஆகிவிடும்.

பரிகாரம் செய்தவுடன் முறித்த நோன்பையும் களாச் செய்ய வேண்டுமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நேரடியாக இது குறித்து எந்த ஹதீஸ்களும் இல்லாததே இரு வேறு கருத்துக்கள் ஏற்படக் காரணமாகும். இது போன்ற சந்தர்ப்பங்களில் எது பேணுதலான முடிவோ அதையே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் விடுபட்ட ஒரு நோன்பையும் களாச் செய்து விடுவதே சரியான முடிவாக இருக்க முடியும்.

 *நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்* 

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 *நூல்: புகாரி 1933, 6669* 

அவர் களாச் செய்ய வேண்டியதில்லை என தாரகுத்னீயில் இடம் பெற்ற ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

எனவே மறதியாகச் சாப்பிட்டவர்கள், பருகியவர்கள், நினைவு வந்ததும் உண்ணுவதையும், பருகுவதையும் நிறுத்தி விட்டு நோன்பாளிகளாக இருந்து கொள்ள வேண்டும். அது முழுமையான நோன்பாக அமையும். நோன்பு நோற்றவர் மறதியாக உடலுறவு கொள்வது சாத்தியக் குறைவானதாகும். இது இருவர் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் ஒருவருக்கு மறதி வந்தால் மற்றவர் நினைவு படுத்திவிட முடியும். ஆனாலும் உண்மையிலேயே இருவருக்கும் மறதி ஏற்பட்டு விட்டால் இருவருக்கும் இது பொருந்தக் கூடியது தான்.

 *மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது* 

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 *நூல்: புகாரி 1927* 

நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 *நூல்: அபூதாவூத் 2039* 

இதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான அளவுகோலாகும். முத்தமிடுவதில் ஆரம்பித்து உடலுறவில் போய் முடிந்து விடும் என்று யார் தன்னைப் பற்றி அஞ்சுகிறாரோ அத்தகையவர்கள் பகல் காலங்களில் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டுக் குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.

அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)

 *நூல்: புகாரி 1926, 1930, 1932* 

தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காகக் குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காகக் குளிக்கலாம்.

 *குளித்தல், இரத்தம் வெளியேற்றுதல்*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் 4*

No comments:

Post a Comment