பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, June 23, 2019

சர்ச்சைக்குரிய ஹதீஸ்கள் - 1

*🌐🌐🌐சர்ச்சைக்குரிய ஹதீஸ்கள்🌐🌐🌐*

*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉 தொடர் பாகம் 1👈*

*👉 👉 குஸைமா சம்பவம்👈👈*

*👉👉👉குஸைமா சம்பவமும் – புரிந்து கொள்ளப்படாத அடிப்படைகளும்.👈👈👈*

*நபியவர்களுக்காக கண்ணால் காணாத ஒன்றைக் கண்டதாக குஸைமா (ரலி) சாட்சி கூறினார் என்று வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது, குர்ஆனுக்கு எதிரானது. இதனை ஏற்றுக் கொள்வது கூடாது என்று நாம் மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தோம்.*

இதற்குப் பதில் சொல்லப் போகிறோம் என்று கிளம்பிய சிலர் இந்தச் செய்தியை நியாயப்படுத்துவற்காக மடமை வாதங்களை முன்வைத்துள்ளனர். அவர்கள் வைக்கும் மடமை வாதங்களுக்கு பதிலைக் காண்பதற்கு முன் குஸைமா தொடர்பான சம்பவத்தையும் அது எவ்வாறு குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதையும் காண்போம்.

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான்தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமமாக ஆக்கினார்கள்.*

*நூல்கள் : அபூதாவூத் 3130, அஹ்மத் 20878*

இதுதான் குஸைமாவின் சாட்சியம் இருவரின் சாட்சியத்துக்குச் சமமானது என்று சொல்லப்படுவதற்கான ஆதாரமாகும்.

*இஸ்லாம் போதிக்கும் நாணயத்துக்கும், நபிகள் நாயகத்தின் அப்பழுக்கற்ற நேர்மைக்கும் உகந்ததாக இந்தச் செய்தி அமையவில்லை.*

முதலில் இந்தப் பிரச்சனை தலைபோகிற காரியமல்ல. ஒரு குதிரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைக்கு கேட்டு விட்டு போனார்களா? அல்லது விலை பேசி முடித்தார்களா என்பது தான் அடிப்படைப் பிரச்சனை.

*நபிகள் நாயகம் விலைக்குக் கேட்ட போது அந்தக் கிராமவாசி மவுனமாக இருந்ததால் விலைக்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு விலைக்கு விற்று விட்டேன் என்று சொல்லாததால் அதை விற்கவில்லை என்று கிராமவாசி நினைத்திருக்கிறார். கிராமவாசி இப்படி நினைத்ததால் தான் நான் சொன்ன விலைக்கு நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்களா? மற்றவருக்கு விற்றுவிடட்டுமா என்று கேட்கிறார்* .

இருவரும் புரிந்து கொள்வதில் ஏதோ பிழை நேர்ந்துள்ளது தான் இதிலிருந்து தெரிகிறது. எனக்கு விற்கவில்லை என்று நீ சொல்வதால் உன் விருப்பப்படி யாருக்காவது விற்றுக் கொள் என்று சொல்வதுதான் நபிகள் நாயகம் கொண்டு வந்த மார்க்கப் படி கூற வேண்டியதாகும். ஏனெனில் இந்தப் பேச்சு வார்த்தையின் போது சாட்சிகள் யாரும் இருக்கவில்லை என்ற நிலையில் பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சொல்வதைத் தான் ஏற்க வேண்டும்.

*கிராமவாசி சாட்சியைக் கொண்டு வா என்று கேட்டவுடன் பேரம் நடந்த போது அந்த இடத்தில் இருந்திராத குஸைமா (ரலி) அவர்கள் பொய்யாக சாட்சி கூறுகிறார். நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இப்படிக் கூறினேன் என்று அவர் காரணம் கூறுகிறார்.*

இவர் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல. கிராமவாசியின் சொல்லை ஏற்பதால் நபிகள் நாயகம் பொய் சொல்லி விட்டார்கள் என்று ஆகாது. யாரோ ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்பதுதான் இதன் விளைவாகும். இதற்காக குஸைமா பொய் சொல்லத் தேவை இல்லை. இது தலை போகிற காரியமும் அல்ல. ஒரு ஏழைக்கும் நாட்டின் அதிபருக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. குஸைமா அப்படி பொய் சாட்சி சொல்லி இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்து இருப்பார்கள்.

*அதுதான் அவர்களின் இயற்கை குணமாகும்.*

*என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்றும், வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி என்ற கெட்ட கொள்கையால் தான் முந்தைய சமுதாயம் அழிந்தது என்றும் சொன்னவர்கள் அவர்கள்.*

*(பார்க்க புகாரி 3475)*

நபிகள் நாயகத்துக்குப் பதிலாக இனொருவர் சம்மந்தப்பட்ட வழக்காக இது இருந்திருந்தால் நபிகள் நாயகம் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ அதையே தான் தனக்கும் தீர்ப்பாக அளித்திருப்பார்கள். எனவே நபிகள் நாயகத்தை நேர்மையற்றவராகக் காட்டும் இது கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.

*சாட்சியம் குறித்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகளைப் பாருங்கள்.*

நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

*திருக்குர்ஆன் 2:283*

*நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோஇச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.*

*திருக்குர்ஆன் 4:135*

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

*திருக்குர்ஆன் 5:8*

*இப்படித் தான் நபிகள் நாயகம் போதித்தார்களே தவிர, கள்ளத்தனத்தைக் கற்றுக் கொடுக்க அவர்கள் அனுப்பப்படவில்லை.*

கிராமவாசி சொன்னதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறாகப் புரிந்திருந்தால் அந்தக் கிராமவாசியின் குதிரையை குறைந்த விலைக்கு வாங்கி அநீதியிழைத்த குற்றம் சேராதா? அதற்கு துணை போன குற்றம் குஸைமாவுக்கு வராதா?

*இதில் இன்னொரு அநியாயமும் அடங்கியுள்ளது.*

பொதுவாக கொடுக்கல் வாங்கலுக்கு இரு சாட்சிகள் அவசியம். 2:282 வசனத்தில் இதைக் காணலாம்.

*நபிகள் நாயகத்துக்காக ஒருவர் சாட்சி சொல்கிறார். அதுவும் அவர் காணாததைக் கண்டதாகச் சொன்ன பொய்யான சாட்சி. இப்போது இன்னொரு சாட்சி தேவை.*

இதற்கு நபிகள் நாயகம் சொன்ன தீர்வாக என்ன சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒருவர் சாட்சி இருவர் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி கிராமவாசிக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எலோருக்கும் இரு சாட்சிகள், நபிகளுக்கு மட்டும் ஒரு சாட்சியே இரு சாட்சிக்கு சமம் என்பதைச் சொல்லத்தான் நபியவர்கள் வந்தார்களா?

*அதுவும் குஸைமா பொய் சாட்சி சொன்ன இந்தச் சம்பவம் உண்மை என்றால் இவரது சாட்சி இனி ஏற்கப்படக் கூடாது என்று தான் நபியவர்கள் கூறுவார்கள். பொய் சொன்னவர் என்று தெரிந்தும் தனது சொந்த ஆதாயத்துக்காக இரு சாட்சிக்கு சமம் என்று அவருக்கு கிரீடம் சூட்டுவார்களா? என்ன?*

இது இஸ்லாத்தின் நீதிநெறியைக் கேவலப்படுத்தும் சதிகாரர்கள் இட்டுக்கட்டிய பச்சைப் பொய் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

*மாற்றுக் கருத்துடையவர்களின் மடமை வாதங்களும், தக்க பதிலும்*

இதற்குப் பதில் சொல்லப் போகிறோம் என்று கிளம்பியவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாமல் உளறல்களையே பதிலாக பதிவு செய்வதைப் பார்க்கிறோம்.

” *அல்லாஹ் கூறினான் என்று நபியவர்கள் கூறுவதை சந்தேகம் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளும் நாம், நபியவர்கள் ”நான் விலை கொடுத்து வாங்கி விட்டேன்” என்று கிராமவாசியிடம் கூறியதை ஏற்றுக் கொண்டு கிராமவாசியைப் பொய்யன் என்று கூறுவதுதான் உண்மையான ஈமான். அவ்வாறு கூறாதவர்களிடம் உண்மையான ஈமான் கிடையாது” என்று மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிக்கின்றனர்.*

அடிப்படையான ஒரு விசயத்தை இவர்கள் மறந்து வாதிடுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார்கள். இதில் கடுகளவும் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால் இங்கு நபிகளார் பொய் சொல்லவில்லை என்று குஸைமா (ரலி) வாதிட்டதாக இடம்பெறவில்லை. நபிகளார் விலைக்கு வாங்கிய போது நான் அங்கு இருந்தேன் என்று சாட்சி சொல்கிறார். அவர் அங்கு இல்லாமல் இருந்தாக சொல்வதுதான் பொய் சாட்சி. இதைத் தான் நாம் மறுக்கிறோம்.

*நபிகளார் எப்படி பொய் சாட்சி சொன்னவர்களை ஏற்றுக் கொள்ளவார்கள். அவருடைய சாட்சி இரண்டு சாட்சி என்று எப்படிச் சொல்லாவார்கள் என்பதுதான் நமது கேள்வி.*

நபியவர்கள் குதிரையைத் தனதாக்கிக் கொள்வதற்காக குஸைமாவின் சாட்சியை இரண்டு சாட்சியாக ஆக்கவில்லை. மாறாக தான் உண்மையாளர் என்று நிரூபிப்பதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்றும் வாதிக்கின்றனர்.

*கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் சாட்சி என்பதே ஒரு பொருள் யாருக்கு என்று தீர்மானிப்பதற்குத்தான்.*

எது எப்படி என்றாலும் கண்ணால் காணாத ஒன்றை சாட்சியாகக் கூறலாமா?

*கண்ணில் காணாத ஒன்றை கண்ணால் கண்டதாக சாட்சி கூறுவது அழித்தொழிக்கும் பெரும்பாவங்களில் ஒன்றாகும்.*

அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

*(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்) என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா? என்றேன்.*

*(பார்க்க புகாரி 5976)*

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்’ அல்லது அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது’. அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்) என்று கூறிவிட்டு, பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். பொய் பேசுவது’ அல்லது பொய் சாட்சியம்’ (மிகப் பெரும் பாவமாகும்) என்று சொன்னார்கள்*

*(பார்க்க புகாரி 5977)*

அபூஉமாமா அல்ஹாரிஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள்.

*அப்போது ஒரு மனிதர், “அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!” என்று பதிலளித்தார்கள்*

*(பார்க்க முஸ்லிம் (5977)*

பொய்சாட்சி மூலம் பிறர் பொருளைத் தனதாக்குவது மிகப் பெரும் பாவம் என்றுரைத்த இறைத்தூதர் பொய்சாட்சி கூறியவரின் சாட்சியத்தை இரண்டு சாட்சிகளுக்கு நிகராக ஆக்குவார்களா? இவ்வளவு பெரும் பாவத்தை ஒரு நபித்தோழர் செய்வாரா?

*இறைத்தூதர் காட்டிய இறைச்செய்திக்கு மாற்றமாக இறைத்தூதர் நடந்தார் என்று நபிமீது இட்டுக்கட்டி இந்தச் செய்தியை நியாயப்படுத்தப் போகிறீர்களா?*

அல்லது நபியையும், நபித்தோழரையும் இழிவுபடுத்தும் இந்தச் செய்தி இட்டுக்கப்பட்டது என்றுரைத்து ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறீர்களா?

*நூஹ் நபிக்கு நாம் கூறும் சாட்சி*

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், (நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்து விட்டீர்களா? என்று இறைவன் கேட்பான். அவர்கள், ஆம் (எடுத்துரைத்து விட்டேன்) என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், உங்களுக்கு சாட்சியம் சொல்கின்றவர் யார்? என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், முஹம்மதும், அவருடைய சமுதாயத்தினரும் என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே இவ்வாறே, உங்களை நாம் நடு நிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக எனும் (2:143) இறைவசனம் இறங்கியது.*

*(பார்க்க புகாரி (4487)*

இந்த நபிமொழியில் நூஹ் (அலை) அவர்களின் பிரச்சாரத்தைக் கண்களால் காணாத முஹம்மது நபியின் உம்மத்தினர் அவர்களுக்காக சாட்சி கூறுகிறார்கள் அல்லவா? இதிலிருந்து கண்ணால் காணாத விசயங்களில் நபிமார்களுக்காக சாட்சி கூறலாம் என மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிக்கின்றனர்.

*இதுவும் அவர்களது மடமை வாதத்திற்கு தெளிவான சான்றாகும்.*

முகம்மது நபியின் உம்மத்தினராகிய நாம் கண்ணால் காணாத ஒன்றிற்கு சாட்சி கூறினாலும் அது இறைச் செய்தியின் அடிப்படையில் கூறப்பட்ட சாட்சியாகும்.

*இதே செய்தி இப்னுமாஜாவில் சற்று விளக்கமாக வந்துள்ளது.*

முஹம்மது நபியின் உம்மத்தினர் நூஹ் நபிக்காக சாட்சி கூறும் போது அல்லாஹ் நீங்கள் எப்படி இவருக்காக சாட்சி கூறுகிறீர்கள்? என்று கேட்பான்.

*அப்போது முகம்மது நபியின் உம்மத்தினர் பின்வருமாறு பதிலளிப்பார்கள்.*

”இறைத்தூதர்கள் (சத்தியக் கொள்கையை முழுமையாக) தங்கள் சமுதாயத்திற்கு எடுத்துதைத்து விட்டார்கள் என்று எங்களுடைய நபி முஹம்மது எங்களுக்கு அறிவித்தார். அவர் கூறுவதை (இறைவன் புறத்திலிருந்து வந்த செய்தி என்று) நாங்கள் உண்மைப்படுத்துகின்றோம்” (அதன் அடிப்படையில் சாட்சி கூறினோம் என்பார்கள்)

*(பார்க்க இப்னு மாஜா 4274)*

*முகம்மது நபி அவர்கள் இறைவன் புறத்திலிருந்து எடுத்துச் சொன்ன வஹியிலிருந்து அறிந்ததின் அடிப்படையில்தான் மறுமையில் நூஹ் நபி சமுதாயத்திற்கு முகம்மது நபியின் உம்மத்தினர் சாட்சி கூறுவார்கள்.*

வஹிச் செய்தியின் அடிப்படையில் சாட்சி கூறுவது கண்ணால் கண்டதை விடமிகப்பெரும் சாட்சியாகும்.

*ஆனால் கிராமவாசி தொடர்பான செய்தியில் எது உண்மை? என்பதை அறிவதற்கு எந்த வஹியும் ”குஸைமா” என்ற ஸஹாபிக்கு கிடைக்கவில்லை. மாறாக அவர் ”கண்ணால் காணாத விசயத்திற்கு” சாட்சி கூறுகிறார். இது நபிவழிக்கு எதிரான ஒரு காரியமாகும்.*

எனவே நூஹ் நபி அவர்களுக்காக முகம்மது நபியின் சமுதாயத்தினர் சாட்சி கூறுவதற்கும் குஸைமா தொடர்பான செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

*குஸைமாவின் சாட்சியம் இருவரின் சாட்சியத்துக்குச் சமம்*

*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 2*

No comments:

Post a Comment