பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, August 21, 2018

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள்

யார்மீது கடமை?

இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. சிலர் யாருக்கு ஸகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக ஒரு கடமையை செய்ய வலியுறுத்தப்பட்டால் அதை செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்றவேண்டும் என்று புரிந்து கொள்ளவேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்றவேண்டும்.

கடன் வாங்கி குர்பானி

கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் இதை நிறைவேற்றுவதற்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு சான்றாக கடன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறக்கூடிய பைஹகீயில் இடம் பெறும் செய்தி ஆதாரமற்றதாகும்.

எனவே வசதியற்றவர்கள் கடன்பட்டு குர்பானி கொடுக்கத் தேவையில்லை. வசதியில்லாததால் குர்பானி கொடுக்காதவரை அல்லாஹ் எந்த கேள்வியும் இது தொடர்பாக கேட்கமாட்டான் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. 

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூற்கள்: முஸ்லிம் (3999), நஸயீ (4285)

பிராணிகளின் தன்மைகள்

குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: திர்மிதீ (1417), அபூதாவூத் (2420), நஸயீ (4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில்  பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி), நூல் : நஸயீ (4301)

தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை.

பிராணியின் வயது

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதி யில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா (ரலி), நூற்கள் : புகாரி (5560), முஸ்லிம்

பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய இந்தசெய்தியை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.

முஸின்னாவைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் :  ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகள் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால்தான் வயது விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முஸின்னா என்பது ஆட்டிலும் மாட்டிலும்  இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலியமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதை கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.

கூட்டுக் குர்பானி

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம். ஆடு வாங்கி குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த வகையில் சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுத்து குர்பானி கொடுத்த நன்மையை அடையலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஒர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூற்கள்: முஸ்லிம் (2540)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) ,நூல்கள் : திர்மிதி (1421), நஸயீ (4316) இப்னு மாஜா (3122)

மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரமாக உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.

அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிராணியை அறுக்கும் முன் கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது.

எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷிதாத் இப்னு அவ்ஸ் (ரலி)

நூற்கள்: முஸ்லிம் (3955),  திர்மிதி (1329) நஸயீ (4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது (16490)

குர்பானி கொடுக்கும் போது கூற வேண்டியவை

அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரி (5565), முஸ்லிம் (3976)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” என்ற கூறியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅபு இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி (5504)

எத்தனை நாட்கள் கொடுக்கலாம்?

ஹஜ் பெருநாள் அன்றும், அதற்குப் பிறகுள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.

தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம் (ரலி), நூல் : தாரகுத்னீ (பாகம் : 4, பக்கம் : 284)

பங்கிடுதல்

குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், அடுத்தது ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.

“அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள். (அல்குர்ஆன் 22 : 36)

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஜ் பெருநாள் வரும் போது கிராமத்தில் உள்ள பலகுடும்பங்கள் (மாமிசத்தை எதிர்ப்பார்த்து எங்களிடம்) வருவார்கள். ஆகையால் நபி (ஸல்) அவர்கள் (அவர்களுக்காக மக்களிடம்) மூன்று நாட்களுக்கு சேமித்துவைத்துக் கொள்ளுங்கள். பிறகு மீதமுள்ளதை தர்மம் செய்துவிடுங்கள் என்று கூறினார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் (அன்று) வந்திருந்த பலகீனமான மக்களுக்காகத்தான் நான் தடுத்தேன். ஆகையால் நீங்கள் சாப்பிடுங்கள். (எவ்வளவு வேண்டுமானாலும்) சேமித்துக் கொள்ளுங்கள். தர்மமும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3986)

குர்பானி மாமிசத்தை காஃபிர்களுக்கு கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறுகிறான். ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் கஃபிரான ஏழைக்கும் வழங்குவதில் எந்த குற்றமும் இல்லை. எனினும் முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றும் சிரமப்படக்கூடாது என்ற நோக்கத்தில் குர்பானி வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாமிசத்தை வழங்குவதில் முஸ்லிம்களுக்குத் தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்குப் போக அதிகம் இருந்தால் காஃபிர்களுக்கும் வழங்கலாம்.

தோல்

குர்பானி பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த (கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2535)

தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாக கொடுப்பதை தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம். மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்கள் மொத்தமாக வாரிச் சென்று விடும் போது நம்மூரில் உள்ள ஏழைகள் பாதிக்கப்படுவதை நாம் உணர வேண்டும்.

இறந்துவிட்டவர்கள் சார்பாக குர்பானி

இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாகும். இதில் அபுல்ஹஸனா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். மேலும் இதில் ஷரீக் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். இத்துடன் ஆதாரப்பூர்மான பின்வரும் ஹதீஸுடன் இக்கருத்து மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற  எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பயன்தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (3358)

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி), நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138)

மேற்கண்ட ஹதீஸ் நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காக கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கும் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கட்டளையிடவும் இல்லை.

No comments:

Post a Comment