"பார்வையைப் பாதுகாப்போம்"
இன்றைய பொழுதுபோக்கு உலகில் திரைப்படங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன.
ஆனால் பெரும்பாலான திரைப்படங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கவர்ச்சியையும், உடல் அழகையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
குறிப்பாக, அழகுபடுத்தப்பட்ட அந்நியப் பெண்களின் தோற்றங்களும் காட்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து காட்டப்படுகின்றன.
ஒரு முஸ்லிம் இத்தகைய காட்சிகளைப் பார்ப்பது மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள, பார்வையைப் பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் முதலில் வழங்கும் கட்டளை பார்வையைக் கட்டுப்படுத்துவது பற்றியதாகும்.
✍️✍️ இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 24 : 30)
✍️✍️ இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24 : 31)
இந்த இரண்டு வசனங்களும் கற்பைப் பாதுகாப்பதற்கான முதல் படியாக பார்வையைக் கட்டுப்படுத்துவதை முன்வைக்கின்றன.
கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய, அதற்கு வழிவகுக்கும் பார்வைகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இவ்வசனங்களின் தெளிவான போதனையாகும்.
நபியவர்கள் (ஸல்) அவர்கள் பொதுவழிகளில் அமர்ந்திருப்பவர்களுக்குக் கூட பார்வையைத் தாழ்த்துவது ஒரு கடமையாகும் என்று போதித்துள்ளார்கள்.
✍️✍️ “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் உரையாடுகின்ற எங்கள் அவை” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் அந்த அவைக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள்: புகாரி(2465), முஸ்லிம்(4305)
பொதுவழிகளில் இயல்பாக மக்களைக் காணும் சூழ்நிலையில்கூட பார்வையைக் கட்டுப்படுத்துமாறு கட்டளையிடப்பட்டிருக்கும்போது, திரையில் தொடர்ந்து அந்நியப் பெண்களின் உருவங்களை ரசித்து பார்ப்பது இந்தக் கட்டளையின் நோக்கத்திற்கு எதிரானதாகும்.
சில நேரங்களில் எதிர்பாராத விதமாக பார்வை விழுந்துவிடலாம். அதற்கும் நபியவர்கள் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
✍️✍️ நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இயல்பாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென எனக்கு ஆணையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்கள்: முஸ்லிம் (4363), திர்மிதீ (2700), அபூதாவுத் (1836), அஹ்மத் (18369)
எதிர்பாராமல் ஒரு முறை பார்வை விழுந்தாலும் அதைத் தொடராமல் உடனடியாகத் திருப்பிக் கொள்ள வேண்டும் என்பதே நபிவழியாக இருக்கும்போது, திரைப்படங்களில் திட்டமிட்டு பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் அந்நியப் பெண்களைப் பார்ப்பது இந்த வழிகாட்டுதலுக்கு முற்றிலும் முரணானதாகும்.
அடுத்தவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் அளவுக்கு இஸ்லாம் பார்வை விஷயத்தில் கடுமையான ஒழுங்குகளை வகுத்துள்ளது.
✍️✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப் பார்க்கும் போது, அவர் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை''
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 6902
✍️✍️ ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்த போது "என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே "அனுமதி கேட்க வேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6901
இந்த ஹதீஸ்கள் பார்வை என்பது சாதாரண விஷயமல்ல என்பதையும், அது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதோடு நேரடியாக தொடர்புடையது என்பதையும் உணர்த்துகின்றன.
மேலும், ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் ஏற்படக்கூடிய சோதனையை நபியவர்கள் (ﷺ) நேரடியாகக் கவனத்தில் கொண்டுள்ளனர்.
✍️. கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் நபி (ﷺ) அவர்களிடம் ஒரு மார்க்கத் தீர்ப்பைக் கேட்டு வந்தார். அப்பெண் "என் தந்தை மிகவும் வயோதிகரானவர். அல்லாஹ் விதித்த ஹஜ் கடமை அவரை அடைந்துள்ளது. ஆனால் அவரால் ஹஜ் செய்ய இயலாது. அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்தால் அது அவருக்குப் போதுமானதா?" அதற்கு நபியவர்கள் "உன் தந்தைக்காக நீ ஹஜ் செய்." என்று கூறினார்கள். அப்போது நபியவர்களின் பின்னால் அமர்ந்திருந்த ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் கழுத்தை நபி (ﷺ) அவர்கள் திருப்பிவிட்டார்கள். இதைக் கண்ட அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தந்தையின் சகோதரரின் மகனின் (ஃபழ்லின்) கழுத்தைத் ஏன் திருப்பினீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ﷺ) அவர்கள் "ஒரு இளைஞனையும் ஒரு இளம்பெண்ணையும் நான் கண்டேன். அவர்கள் இருவரின் மீது ஷைத்தானின் சோதனை ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்." என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (885), அஹ்மத் (562)
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அந்தப் பெண் ஒரு மார்க்கக் கேள்வியைக் கேட்க வந்திருந்தார். அதாவது முற்றிலும் அனுமதிக்கப்பட்ட மற்றும் நன்மையான ஒரு சூழ்நிலை. இருந்தபோதும், ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது ஷைத்தானின் சோதனைக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தில் நபியவர்கள் (ﷺ) உடனடியாகத் தலையிட்டு பார்வையை மாற்றினார்கள்.
எனவே, அந்நிய ஆண்களும் பெண்களும் கவர்ச்சிகரமாகக் காட்டப்படும் திரைப்படங்களை ரசித்து பார்ப்பது, குர்ஆன் வலியுறுத்தும் பார்வைத் தாழ்த்தல் என்ற கட்டளைக்கும், நபிவழி போதனைகளின் நோக்கத்திற்கும் முரணானதாகும்.
பார்வையைப் பாதுகாப்பது கற்பைப் பாதுகாப்பதற்கான வாசலாகவும், இதயத்தின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழியாகவும் இஸ்லாம் கற்பிக்கிறது.
அதனால் ஒரு முஸ்லிம் தனது கண்களையும், இதயத்தையும், சிந்தனைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய காட்சிகளிலிருந்து விலகி இருப்பதே இறையச்சத்தின் அடையாளமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான்.
கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும்.
நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும்.
மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
நூல் : புகாரி (6612)
- Abdun Nasir M.I.Sc.,
No comments:
Post a Comment