🌻திருமணங்களில் மலர வேண்டிய வெட்கம் 🌻
மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மத்யன் நாட்டில் ஒரு நல்ல மனிதரின் இரண்டு மகள்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் செய்வதற்காக அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்ற ஒப்புக்கொண்டார்கள்; பத்து ஆண்டுகள் நிறைவு செய்தால் அது அவர்களின் விருப்பம் என்று உடன்படிக்கை செய்தார்கள்.
திருமண உடன்படிக்கையின் ஒருபகுதியாக பத்தாண்டுகள் பணிசெய்வதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முன்வரும் அளவிற்கு அப்பெண்ணிடம் அப்படி என்னதான் இருந்தது?
இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி.
மத்யன் நகர முதியவரின் இரு மகள்களைப் பற்றியும் அவர்களிடம் இருந்த சிறப்புகளை குர்ஆன் நேரடியாக விரிவாகப் பட்டியலிடவில்லை.
ஆனால் இறைவசனங்களைப் படித்தால் அவ்விரு இளம் பெண்களிடமும் இருந்த உயர்ந்த குணத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
இரு சகோதரிகளில் ஒருவர் மூஸா எனும் அழகிய வாலிபனிடம் பேசவந்த அப்பொழுதை அல்குர்ஆன் பின்வருமாறு வர்ணிக்கிறது.
✍️“அவ்விருவரில் ஒரு பெண் அவரிடம் வெட்கத்துடன் நடந்து வந்து கூறினாள்.....“
(அல்குர்ஆன் 28:25)
கவனித்துப் பாருங்கள்!
இறைவன் அவளுடைய அழகையோ, செல்வத்தையோ, உடலமைப்பையோ குறிப்பிடவில்லை. மாறாக அவளுடைய வெட்கத்தையே குறிப்பிடுகிறான்.
ஒரு பெண்ணின் உயர்ந்த ஆபரணம் என்ன என்பதை இந்த ஒரு வசனமே நமக்கு உணர்த்துகிறது.
மற்றொரு சகோதரி தனது தந்தையிடம் மூஸா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறினாள்:
✍️✍️“என் தந்தையே! இவரைப் பணியமர்த்திக் கொள்வீராக! நீர் பணியமர்த்துபவரில் சிறந்தவர் யாரெனில் வலிமையானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பவர்தான்”
(அல்குர்ஆன் 28:26)
இது மூஸா (அலை) அவர்களின் பண்பை குறிப்பிட்டாலும்,
ஒரே ஒரு நிகழ்வில் மூஸா (அலை) அவர்களின் வலிமையையும் நம்பகத்தன்மையையும் புரிந்து கொள்ளும் மதிநுட்பம் அந்தப் பெண்ணிடம் இருந்தது. மேலும் நற்பண்புகளை மதிக்கும் குடும்பச் சூழலில் அவள் வளர்க்கப்பட்டிருந்தாள் என்பதையும் இந்த வசனம் உணர்த்துகிறது.
ஒருத்தியிடம் வெட்கம் இருந்தது.
மற்றொருத்தியிடம் நற்பண்பை அறியும் மதிநுட்பம் இருந்தது.
மூஸா (அலை) அவர்கள் வெட்கம் என்ற உயர் பண்பிற்காக, அல்லது ஒரு நிகழ்விலேயே தன்னை மதிப்பீடு செய்தவள் தன்னுடைய வாழ்வின் எல்லா நிலையிலும் தன் எண்ணமறிந்து நடந்து கொள்வாள் என்ற மதிநுட்பத்திற்காக இருவரில் ஒருவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கலாம்.
(இது இறைவசனங்களிலிருந்து அறிஞர்கள் எடுத்துரைப்பது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.)
எந்தப் பண்பை எடுத்துக் கொண்டாலும் இரண்டுமே உயர்ந்த பண்புகள்தான்.
ஒரு வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் செல்வம், அழகு, அந்தஸ்து போன்றவற்றை விட மார்க்கப்பற்று, நற்பண்பு, வெட்கம், நம்பகத்தன்மை, மதிநுட்பம், போன்ற குணங்களே முதன்மை பெற வேண்டும் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாறு, நமக்கு உணர்த்துகிறது.
ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் வெளிப்புற அழகோ அலங்காரமோ அல்ல; மாறாக வெட்கம், நம்பகத்தன்மை, நல்லொழுக்கம், மதிநுட்பம் போன்ற உயர்ந்த பண்புகள்தான்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது அழகு மட்டும் அல்ல; பொறுப்பேற்கும் திறன், நம்பகத் தன்மை , குணநலன்கள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டும் என்பதையும் மூஸா (அலை) அவர்களின் திருமண நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.
ஆனால் இன்று நமது திருமண நிகழ்வுகள் எந்தத் திசையில் பயணிக்கின்றன?
நபிமார்களின் வரலாற்றில் வெட்கம் உயர்வாகப் போற்றப்பட்ட நிலையில்,
இன்றைய நமது இஸ்லாமிய சமூகத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமகளை பொதுமக்களின் பார்வைக்கு முன்னிறுத்துவதும்,
மாப்பிள்ளை தனது பைக்கின் பின்னால் பெண்ணை வைத்து பவனி வர
மாப்பிள்ளைத் தோழர்கள் ஊர்வலமாகப் பின்தொடர்வதும்,
புகைப்படங்களையும் காணொளிகளையும் பரவலாகப் பகிர்வதும் இஸ்லாமியர்களின் திருமணங்களில் சாதாரணமாகிவிட்டன.
அல்லாஹ் கூறுகிறான் :
✍️✍️ “உங்கள் வீடுகளில் தங்கியிருங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் அலங்காரத்தை வெளிக்காட்டியது போல் வெளிக்காட்டித் திரியாதீர்கள்!“
(அல்குர்ஆன் 33 : 33)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
✍️✍️ “இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.“
(அல்குர்ஆன் 24 : 30)
இஸ்லாம் வலியுறுத்தும் வெட்கம், மறைவு, கண்ணியம் ஆகிய பண்புகளுடன் இந்த ஊர்வல நிகழ்வு எவ்வாறு பொருந்துகிறது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மார்க்க முரண் காரியங்களை செய்வதற்கு வெட்கப்படுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.
✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (9)
✍️✍️ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் ."
அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி), நூல் : புகாரி (3484)
இன்று திருமண ஏற்பாடுகளில் நாம் முதலில் விசாரிப்பது என்ன?
அழகையா?
வருமானத்தையா?
அல்லது வெட்கம், இறையச்சம், நற்பண்பு ஆகியவற்றையா?
மூஸா (அலை) அவர்களின் வரலாறு, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பது வெளிப்புற அலங்காரம் அல்ல; உயர்ந்த குணநலன்கள்தான் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அழகு காலத்தால் மாறலாம்.
செல்வம் வரலாம், போகலாம்.
ஆனால் வெட்கம், நற்பண்பு, இறையச்சம் ஆகியவை நிலையான செல்வங்களாகும்.
- Abdun Nasir M.I.Sc.,
No comments:
Post a Comment