பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, February 1, 2018

மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்த இஸ்லாம்

சந்திர கிரகணம்:
-    மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்த இஸ்லாம்!

இந்தியாவில் சில பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படும் என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்; மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லாத வகையில் பற்பல அறிவிப்புகள் கலைகட்டின.
கோவிலில் நடை சாத்தப்படும்; கிரகணத்தை முன்னிட்டு யாரும் அந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது; எதையும் குடிக்கக்கூடாது என்று ஆளாளுக்கு மூடநம்பிக்கை அறிவிப்புகளை தங்கள் இஷ்டத்திற்கு செய்து கொண்டிருந்தனர்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் அறிவுப்பூர்வமான வகையில் தீர்வு சொல்லும் இஸ்லாம் இதற்கும் அழகிய வடிவில் தீர்வு சொல்லியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இதுபோன்று கிரகணம் ஏற்பட்டது.
அப்போது நடந்த நிகழ்வை காணுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1043, 1061, 1063

இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. 'அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா?' என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது இரக்க உணர்வாகும்' என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள். 'கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்' என்றும் கூறினார்கள்.
நூல் : புகாரி : 1303

இவ்வளவு துன்பான நிலையில் இருந்த போதும் கூட கிரகணம் குறித்து தெளிவான வழிகாட்டுதலை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழங்கியுள்ளது அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

தமது ஆண் குழந்தை இறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு கவலைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாளில் மதீனா நகரில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது.


சூரிய, சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்ததில்லை. உலகில் முக்கியமான யாரோ ஒருவர் மரணித்து விட்டார் என்பதைச் சொல்வதற்கே கிரகணம் ஏற்படுகிறது என்பது தான் கிரகணத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு.


யார் இறந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒரு முக்கியமானவர் மறைந்து விட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தவுடன் கிரகணம் ஏற்பட்டதால் இப்ராஹீமின் மரணத்திற்காகவே இது நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.


மக்கள் பேசிக் கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளிலும் விழுந்தது.


அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். இதனால் அவர்களது மதிப்பு உயரும். நபிகள் நாயகத்தின் மகனுக்கே சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றால் இவர் எவ்வளவு ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.


மக்கள் இது போல் பரவலாகப் பேசிக் கொண்டது தெரிய வந்தாலும் அதைக் கண்டிக்கின்ற மனநிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.


சாதாரண நேரத்தில் தவறுகளை உடனுக்குடன் தயவு தாட்சண்ய மின்றி கண்டிக்கின்ற எத்தனையோ பேர், சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தமது கண் முன்னே நடக்கின்ற தவறுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுவார்கள். தவறைக் கண்டிப்பதை விட முக்கியமான இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போன்ற கவலையில் தான் இருந்தார்கள்.


ஆனால், தமக்கு ஏற்பட்ட மாபெரும் துன்பத்தை விட மக்கள் அறியாமையில் விழுவது தான் அவர்களுக்கு மிகப் பெரிய துன்பமாகத் தெரிகின்றது. உடனே மக்களைக் கூட்டி அவர்களின் அறியாமையை அகற்றுகிறார்கள்.


இது போன்ற நிகழ்ச்சிகள் யாருடைய மரணத்திற்காகவும் ஏற்படாது. யாருடைய பிறப்பிற்காகவும் ஏற்படாது எனக் கூறி தமது மகனின் மரணத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.


ஒரு அரசியல் தலைவர் ஒரு ஊருக்கு வந்தவுடன் மழை பெய்தது என்றால் மகராசன், அல்லது மகராசி வந்தவுடன் மழை பொழிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தத் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றனர்.


இதைக் கேட்கின்ற அவர் முகத்தில் தான் எத்தனை பிரகாசம்! பகுத்தறிவு பேசும் தலைவரும், அதை எதிர்க்கும் தலைவரும் இதில் சமமானவர்களாகவே உள்ளனர். தெய்வீக அம்சம் அற்றவர்கள் எனக் கருதப்படும் அரசியல் தலைவருக்கே இந்த வார்த்தை இனிக்கிறது என்றால் ஆன்மீகத் தலைமையை என்ன வென்பது?

ஆனால், இந்த ஆன்மீகத் தலைவரோ இதைக் கேட்டு அருவருப்படைகிறார். நானே நாளை மறையும் போது இத்தகைய நிகழ்வு ஏற்பட்டாலும் அதற்கு என் மரணம் காரணம் அல்ல என்ற கருத்தையும் உள்ளடக்கி அறிவுரை கூறுகிறார். அதுவும் தமது சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மக்களுக்கு ஏற்பட்ட அறியாமைத் துன்பத்தை அகற்றிட முன்னுரிமை தருகிறார்.

உலக வரலாற்றில் இத்தகைய அற்புத மனிதரை யாரேனும் கண்டதுண்டா? எந்த அளவிற்கு இஸ்லாம் மூடநம்பிக்கையை தகர்த்துள்ளது என்பதை பார்த்தீர்களா?

தேடித் தேடிப் பார்த்தாலும் எள்ளின் முனையளவு கூட மக்களை ஏமாற்றாதவராக இவர் மட்டும் தான் தென்படுகிறார். ஏமாற்றுவதற்கு எல்லா விதமான வாய்ப்புகள் இருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறார்.


அன்பு மேட்டு அல்லது அறியாமையின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் வரம்பு மீறிப் புகழும் விதமாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுவதுண்டு. அல்லது வரம்பு மீறி நடந்து கொள்வதுண்டு. இது போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம் மக்களை எச்சரிக்காது இருந்ததில்லை. தம்மை மனித நிலைக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று அறிவுரை கூறி அவர்களின் அறிவை மேம்படுத்தாமல் இருந்ததில்லை.


திருக்குறளில் வள்ளுவரின் மூடநம்பிக்கை:

இஸ்லாம் கிரகணம் குறித்து அற்புதமான முறையில் வழிகாட்டியிருக்கும் இந்நிலையில் உலகப்பொதுமறை என்று சொல்லப்படுகின்ற திருக்குறளில் வள்ளுவர் கிரகணம் குறித்து சொல்வதை பாருங்கள்:
திருக்குறள்:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
- எண்: 1146

கலைஞர் எழுதிய விளக்கம்:

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கூறப்படும் "கிரகணம்" எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.


அதாவது சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பு அவரது தலையில் இருக்கும் நிலாவை விழுங்குவதுதான் கிரகணம் என்று அனைவரும் தவறாக விளங்கி வைத்திருந்தனர்.

அந்த மூடநம்பிக்கையை உண்மைப்படுத்தும் முகமாக வள்ளுவரும் காதலனும் காதலியும் சந்தித்துக் கொண்ட செய்தி நிலாவை பாம்பு விழுங்கும் செய்தி எப்படி ஊரெல்லாம்பரவுமோ அதுபோல பரவி விட்டது என்று சொல்கின்றார். இது உலகப்பொதுமறையா என சிந்திக்க வேண்டும்.


ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே கிரகணத்தைப் பற்றி தெளிவுபடுத்தி அதைக்கண்டால் தொழுகையில் ஈடுபடுங்கள்; அது இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்று என்று சொல்லி மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்கள்.


அதனால் தான் மூடநம்பிக்கையை தகர்த்தெறிந்த மார்க்கம் இஸ்லாம்.

No comments:

Post a Comment