பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 22, 2010

பித்அத் ஒரு ஆய்வு !!

பித்அத் ஒரு ஆய்வு !!

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்ககூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல் குர்ஆன் 42:21)


(நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 48:16)

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம் அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்கமாக்கப்பட்டதை. அதாவது புதியவை ஒன்றை ஏற்படுத்தி பித்அத்துக்களை எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறி செயல்படுகிறார்கள்.

நபி صلى الله عليه وسلم அவர் கூறுகிறார்கள்:- எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி صلى الله عليه وسلم அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி صلى الله عليه وسلم அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)

உங்களிடையே இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை. (மாலிக் இப்னு அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ முஅத்தா)

அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவித்துள்ளார்கள்:- "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்:- "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)

மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன்பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் "அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!" என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُமுஸ்லிம்,திர்மிதீ)

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள். (அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூது,நஸயீ.)

நபி صلى الله عليه وسلم அவர்கள், நபிதோழர் பராஉபின் ஆஜிப்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு, இரவில் படுக்கப் போகும் பொழுது ஒதும் துஆ ஒன்றை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள்,...........வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த.........என்று கற்றுக்கொடுத்ததை, நபித்தோழர் அதை.........வ ரசூலி கல்லதீ.......என்று ஓதிக்காண்பித்த போது, இதைக் கேட்டவுடன் நபி صلى الله عليه وسلم அவர்கள், இல்லை"வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த....." என்று ஒதுமாறு கூறினார்கள். (புகாரீ)

[வ நபிய்யி கல்லதீ என்பதை ரசூலி கல்லதீ என்று சொன்னதையே நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதிக்காமல், அதை கண்டித்து திருத்தி இருக்கும்போது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானதுஎன்று கூறிச்செய்ய முற்பட்டால் அவருடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்ககடமைப் பட்டுள்ளோம்.] மேற்காணும் குர்ஆன் வசனங்களும் நபிصلى الله عليه وسلم அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக ஒன்றை இணைக்க முடியாது, என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டுகிறோம்.

இனி பித்அத் விசயமாக நபித்தோழர்களுடைய அறிவுரைகளைப் பார்ப்போம்.

நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகின்றான், அல்லாஹ்வுடைய ரஸுல்صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன் நீங்களோ அபூபக்கர் சொன்னார், உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன். என இப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.

நான் பின்பற்றுகிறவனே அல்லாமல், புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.

ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக "திக்ரு" ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து இப்னு மஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், "நான் நபி صلى الله عليه وسلم அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன். நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு,ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித்தராத பித்அத்தைச் செய்கிறீர்கள்" என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுக்கொடுத்தபடி சொல்வதோடு" வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் "என்று இணைத்துக்கொண்டார். இதனை பித்அத் என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள்.

"பித்அத் அணைத்தும் வழி கேடுகள்தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது(ஹஸன்) என்று கருதினாலும் சரியே" என இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.

"பின்பற்றுபவனாக இரு.புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே" என இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.

"நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை" என ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்துள்ளார்கள். "அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபிصلى الله عليه وسلمஅவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்." என தாபியீன்களின் தலை சிறந்தவரும்,சீரிய கலீபஃபாவுமான இப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதற்கு மேலும் இது விசயத்தில் சந்தேகிப்பவர்கள் மறியாதைக்குறிய இமாம்கள் கூறுவதைப் பார்ப்போம்.

இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.

இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

"மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபிصلى الله عليه وسلم அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், "அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்......என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே உண்டாக்கி விட்டான்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல்صلى الله عليه وسلم அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும். நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

மேற்கூறிய நான்கு இமாம்களின் மணியான உபதேசங்களுக்கு நேர் முரணாக பித்அத்துக்களில் நம்மவர்கள் மூழ்கி கிடக்கிறார்கள்.மேலும் பித்அத்துக்களை வகை வகையாக தரம் பிரித்துக் கொண்டு தாங்களும் குழம்பி போய், மக்களையும் குழப்புகிறார்கள்.

கால மாறுதலினால், விஞ்ஞான வளர்ச்சியினால், ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை காரணமாகக் காட்டி, இவையெல்லாம் நபிصلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் இல்லாதவை தானே! புதுமைகள் தானே! பித்அத்து ஹஸனா தானே! என்று நியாயம் கற்பித்து மார்க்கத்திலும் புதுமைகளை நுழைக்க முற்படுகிறார்கள்.

உதாரணமாக நவீன வாகனங்களை, கட்டிடங்களை, கடிகாரங்களையெல்லம் பயன்படுவதை பித்அத் என்கின்றனர். இவையெல்லாம் தவிர்க்க முடியாது என கூறி பித்அத்து ஹஸனா என்கின்றனர். ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இக்கூற்றில் உள்ள தவறை உணர்ந்து கொள்ள முடியும். நபிصلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ் விடமிருந்து வஹீ மூலமாகவும், அவனது அங்கீகாரத்தின் மூலமாகவும் போதித்த மார்க்கத்தில், மனித அபிப்பிராயத்தில் நல்லதாகத் தெரியும் விஷயங்களை புகுத்துவதையே பித்அத்து என்று கண்டித்துள்ளார்களே அல்லாமல், இவையல்லாத உலகக் காரியங்களில் உலகிலேயே நிதர்சனமாக இலாபத்தை பெறும், அதே சமயம் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லாத நவீன கண்டுபிடிப்புகளை பற்றி பித்அத் என்று கூறவில்லை. இதற்கு ஆதாரமான ஹதீஸ்களைப் அடுத்து பாருங்கள்.

நபிصلى الله عليه وسلم அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில்,அங்கு நடந்து வந்த ஒரு விவசாய முறையைத் தடுத்து விட்டார்கள். அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இது விசயம் நபிصلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரிந்ததும், நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களின் மார்க்கம் பற்றி கட்டளையிடுவேனாயின் அதை ஏற்று நடங்கள். அன்றி, நான் எனது ஆலோசனையைக் கொண்டு ஒன்றைக் கூறினால், உங்கள் நோக்கப்படி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர். (ராபிஃ இப்னு கதீஜ்رَضِيَ اللَّهُ عَنْهُமுஸ்லிம்)

இதே போல் விடுதலைப் பெற்ற பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ தனது அடிமைக் கணவர் முகீஸைرَضِيَ اللَّهُ عَنْهُ வேண்டாம் என்று அறிவித்தபோது, முகீஸின்رَضِيَ اللَّهُ عَنْهُ மண வேதனையைக்கேட்டு, நபி(சல்) அவர்கள் வருந்தி பரீராவைرَضِيَ اللَّهُ عَنْهُ முகீஸோடுرَضِيَ اللَّهُ عَنْهُ வாழும்படி சொன்னதற்கு, இது மார்க்க கட்டளையா? என்று பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ கேட்டனர். எனது சிபாரிசு என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். நபிصلى الله عليه وسلم அவர்களின் சிபாரிசை பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ ஏற்றுக் கொள்ளவில்லை. நபிصلى الله عليه وسلم அவர்களும் அதற்காக அவர்களை கண்டிக்கவில்லை. (இப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,அபூதாவூத்,நஸயீ,திர்மிதீ)

பத்ருப்போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த இடத்தில் அமைத்துக்கொள்வது என்ற விசயத்தில், நபிصلى الله عليه وسل அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ஹப்பாப் இப்னுல் முன்திர் என்ற நபித்தோழர் தேர்தெடுத்து, இது முகாம் அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று சொன்ன போது அதை நபிصلى الله عليه وسلم அவர்கள் ஏற்று தன் கருத்தை மாற்றிக்கொண்டார்கள். காரணம் நபிصلى الله عليه وسلم அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடத்தில் தான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக்கட்டளை அல்ல. இதை நபிصلى الله عليه وسلم அவர்கள் தன் கருத்தை மாற்றிக்கொண்டதன் மூலம் விளங்க முடிகிறது.

மேற்காணும் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து உலக காரியங்களிலிருந்து நிதர்சனமாக பலனைப்பெறும் விஷயங்களை செய்வது பித்அத்து ஆகாது. விபரம் அறியாதவர்களே இவற்றை பித்அத் என்று கூறுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.

பித்அத் போல் தோன்றும் காரியங்கள்:-

அபூபக்கர் சித்திக்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் காலத்தில் குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படது. உதுமான்رَضِيَ اللَّهُ عَنْهُ காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டது. குர்ஆனை எளிதாக ஓத அரபி லிபியில் அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது. உமர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மீண்டும் ஜமாத்தாக ஆக்கியது. இவற்றை ஆதாரமாக காட்டி, இவற்றிற்கு பிஅத் ஹஸ்னா என்று பெயரிட்டு பித்அத்தை நியாயப்படுத்த முயல்கின்றனர். அறிவாளிகளும் இவற்றில் தடுமாறவே செய்கின்றனர். எனவே இவற்றை நுட்பமாக அராய்ந்து விளங்குவோம்.

குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படுவது:-

நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்திலேயே குர்ஆனின் முதல் அத்தியாயத்திலிருந்து 114 ம் அத்தியாயம் வரை முறையாக நபிصلى الله عليه وسلم அவர்களாலேயே கோர்வை செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். புதிதாக சில வசனங்கள் இறங்கியவுடன் நபிصلى الله عليه وسلم அவர்கள் அவற்றை ஓதிக்காட்டி இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்திற்கும், இன்ன வசனத்திற்கும் இடையில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாகக் கூறி அவ்வாறே பதிவு செய்யப்பட்டன.

ஒவ்வொரு அத்தியாயத்தினுடைய பிஸ்மி முதற்கொண்டு நபிصلى الله عليه وسلم அவர்களின் கட்டளைப்படியே எழுதப்பட்டன. 9ம் அத்தியாயமான சூரத்துத் தவ்பாவிற்கு பிஸ்மி எழுதும்படி நபிصلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிடவில்லை.இன்று வரை பிஸ்மி எழுதப்படாமலே இருக்கிறது. இன்று யாரும் அதுவும் ஒரு அத்தியாயம் தானே பிஸ்மி தவறுதலாக விடப்பட்டு இருக்கின்றது என்று கூறி 9ம் அத்தியாயத்திற்கு பிஸ்மி எழுத முற்ப்பட்டால் அது பித்அத்தே ஆகும். ஆக மார்க்க அடிப்படையில் குர்ஆனில் எவ்வித கூடுதல்,குறைதல் ஏற்படவில்லை, என்பதே உண்மையாகும்.

நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் நிறைவு செய்யப்பட்டு, நபித் தோழர்கள் சிலர் சிலரிடம் இருந்த சில வசனங்கள் அனைத்தயும் அபூபக்கர் சித்திக்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சி காலத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டது. உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டன. இதனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களிலோ அவற்றின் கருத்துக்களிலோ புதிதாக ஒன்றும் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். முறையோடு சிந்த்திப்பவர்கள் இதனை மறுக்க மாட்டார்கள். இதே போல் அன்று தோலிலும்,எழும்புத் துண்டுகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இன்று அழகிய காகிதத்தில் எழுதப்படுகின்றன.

இதற்கு மேலும் முன்னேறி குர்ஆன் வசனங்கள் இனிமையான குரல்களில் பதிவு செய்யப்பட்டு இன்று இண்டர்நெட்டில் மிக எளிதாக பலமொழிகளில் அதன் விளக்கத்தையும், குறிப்பிட்ட் ஹதீஸ்களை விபரமாக தெளிவாக பெறலாம். எனவே அவற்றையெல்லாம் பித்அத் எனச்சொல்வது, நபிصلى الله عليه وسلم அவர்கள் எவற்றை பித்அத் என்று குறிப்பிட்டார்கள் என்பதை முறையாக விளங்கிக் கொள்ளாததேயாகும்.

உஸ்மான்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டதின் நோக்கம்,பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கு முறையாக கோர்வை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைத்து, அவற்றை அவர்கள் பார்வையிட்டு விளங்கிச் செயல் பட வேண்டும் என்பதேயாகும். அதல்லாமல், நபிصلى الله عليه وسلم அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, மறுமையில் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுத்தும் மார்க்க காரியங்களைப் போல் செய்யப்பட்டது அல்ல. பரகத் உண்டாகும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டதும் அல்ல.எனவே இச் செயலையும் பித்அத் என்று குறிப்பிடுவது அறியாமையாகும்.

குர்ஆன் நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில், குறிகள் இல்லாமல் எழுதப்பட்டு நடை முறையில் இருந்து வந்தது.நபிصلى الله عليه وسلم அவர்களது காலத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி,அஜமி (அரபி அல்லாதவர்கள்)களும் குர்ஆனை ஓதும் நிலை ஏற்பட்டது.எனவே அவர்கள் எளிதாகவும், முறையாகவும் ஓதி விளங்கி, செயல்படும் நோக்கத்தோடு குர்ஆனுக்கு அகர, இகர,உகர குறிகள் இடப்பட்டன. உண்மையில்இது அரபி லிபியில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றமே யல்லாமல் மார்க்கத்தில் ஏற்பட்ட அல்லது குர்ஆனில் ஏற்பட்ட ஒரு புதுமை (பித்அத்) அல்ல.அரபி தெரிந்தவர்,ஓர் அரபி குர்ஆனை எப்படி ஓதுகின்றாரோ,அதை எப்படி விளங்கி செயல்படுகிறாரோ,அதே போல் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஓர் அஜமி (அரபி அல்லாதவர்) அந்த குறிகள் இடப்பட்ட குர்ஆனை ஓதவும், விளங்கிச் செயல்படவும் செய்கிறார்.எனவே, நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இதனால் ஏற்படவில்லை. ஆகவே இதனையும் பித்அத் என்று கூறுவது தவறேயாகும்.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பின் கலீபாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்ப்பட்ட இந்த நடை முறைகளை ஆதாரமாகக் காட்டிபித்அத் ஹஸனாவை நியாயப்படுத்த யாரும் முற்பட்டால் அவர்களுக்கு நாம் கூறும் இன்னொரு விளக்கம். நபி صلى الله عليه وسلم அவர்கள் எனது ஸுன்னத்தையும், நேர்வழி நடந்த எனது கலீபாஃக்களின் சுன்னத்தையும், பற்றிப் பிடித்துகொள்ளுங்கள் என்று கருத்துப்பட வரும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று காணப்படுகின்றது.இதில் நபி صلى الله عليه وسلم அவர்கள் எனது ஸுன்னத்து என்று குறிப்பிட்டது வஹீயின் தொடர்போடு இருந்த நபி صلى الله عليه وسلم அவர்களுடைய சொல், செயல்,அங்கீகாரம் ஆகும்.

நேர்வழி நடந்த கலீபாக்களின் ஸுன்னத்து என்று குறிப்பிட்டது, நபி صلى الله عليه وسلمஅவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு மாற்றமில்லாத கலீபாக்களின் நடைமுறையாகும்.இந்த அடிப்படையில், கலிபாக்களுடைய இச்செயல்களுக்கு நபிصلى الله عليه وسلم அவர்களின் ஒப்புதல் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. மேலும், அந்த நடவடிக்கைகள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சொல்,செயல், அங்கீகாரத்திற்கு முரணாக இல்லை என்பதும் தெளிவான விஷயமாகும்.

இந்த நிலையில், பின்னால் வந்தவர்கள், கலீபாக்களின் இந்த நடவடிக்கைகளை "பித்அத் ஹஸனாவிற்கு ஆதாரமாக காட்டி, இவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்க (பித்அத்) இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? கலீபாக்களின் நடைமுறைகளுக்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போல் இவர்களின் நடைமுறைகளுக்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை என்பதே உண்மையாகும்.

மேலே நாம் பார்த்த விளக்கங்கள் எந்த வகையிலும் மார்க்கத்தில் பித்அத் ஒன்றை உண்டாக்க முடியாது! உண்டாக்கக் கூடாது! இதற்கு மேலும், புதிய புதிய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு வகை வகையாக பிரித்திக்கொண்டு, பித்அத்தை நியாயப்படுத்த முற்படுவது மார்க்க முரணான செயலே என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. ஆதத்தினுடைய சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்க ஷைத்தான் பயன்படுத்தும் இரண்டு மிக முக்கியமான பயங்கர ஆயுதங்கள் ஷிர்க்கும், (இணைவைத்தல்) பித்அத்து (மார்க்கதில் புதுமுமை)களேயாகும். எனவே முஸ்லிம்கள் இவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்,"செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)

எனவே, பித்அத்தான (புதுமையான) செயல்களை இவை அழகானவை தானே! என்று இவர்களே, தம்மைதாமே திருப்தி செய்துகொண்டு பித்அத்துக்களில், இவர்கள் மூழ்குவது ஷைத்தானின் சூழ்ச்சியேயாகும்.அல்லாஹ் எச்சரிப்பது போல் நரகம் புக நேரிடும்.

உண்மையான உள்ளச்சத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் அறிந்த விஷயங்களில் அல்லாஹ்வை அஞ்சி முறையாக மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருபவர்கள் மட்டுமே ஷைத்தானின் இந்த மாய வலைகளிலிருந்து, அல்லாஹ்வின் அருள் கொண்டு தப்பமுடியும். அந்த பாக்கியம் பெற்ற கூட்டதில் அல்லாஹ், அந்த பாக்கியம் பெற்ற கூட்டத்தில் அல்லாஹ், நம் அனைவரையும் இணைத்தருள்வானாக! ஆமின்!


http://www.readislam.net/bid.html

No comments:

Post a Comment