பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 19, 2019

தாடி – ஓர் ஆய்வு

தாடி – ஓர் ஆய்வு

தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர),

நூல்: புகாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடியை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள். ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: அபூதாவுத் 3512

எனவே தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நமது முயற்சியில்லாமல் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது. அது மட்டுமின்றி தாடியைப் பொறுத்த வரை அது நமது உடலின் ஓர் அங்கமாக இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும். தாடியை மழிப்பதும் ஒட்ட நறுக்குவதும்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இணை வைப்பாளர்கள் அதாவது மஜூசிகள் (நெருப்பு வணங்கிகள்) தங்களது தாடிகளை மழித்து வந்தனர். இச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது, மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹு இப்னி ஹிப்பான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், அன்சாரி கூட்டத்தாரே! (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),

நூல்: அஹ்மது 21252

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 5892

இணை வைப்பாளர்கள் தங்களது மீசையை வளர விட்டு, தாடியை ஒட்ட நறுக்கி வந்தார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தாடிகளை வளர விட வேண்டும்; மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை. இவ்வாறு செய்தால் தான் நாம் இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்ய முடியும். எனவே, தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாடியை மழிப்பதற்கும் ஒட்ட வெட்டுவதற்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும் இவ்விரு செயல்களால் தாடி அகற்றப்பட்டு தாடி வைக்கவில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. எனவே மார்க்கம் இவ்விரு செயல்களையும் தடை செய்கிறது. தாடியை வெட்டுவதற்குத் தடையில்லை

நபி (ஸல்) அவர்கள் தாடியை மழிப்பதையும் அதை ஒட்ட வெட்டுவதையும் மட்டுமே தடை செய்துள்ளார்கள். தாடியை வெட்டவே கூடாது என்று தடை விதிக்கவில்லை. ஒருவர் தாடியை ஒட்ட வெட்டாமல் சிறிது நீளமாக விட்டு வெட்டினால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு இலங்கையைச் சார்ந்த சில அறிஞர்கள் தாடியை வெட்டவே கூடாது என்று கூறி வருகின்றனர். சில ஹதீஸ்களைத் தவறாகப் புரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புகாரி 5893

மேற்கண்ட ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் அஉஃபூ என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. சில அறிவிப்புகளில் அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ன. ஹதீஸில் கூறப்பட்டுள்ள அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகளுக்கு தாடியை வெட்டவே கூடாது என அகராதியில் பொருள் இருப்பதாக, தாடியை வெட்டக் கூடாது என்று கூறுவோர் வாதிடுகிறார்கள். மீசையைக் குறைப்பது போன்று தாடியை குறைக்கக் கூடாது

இவர்கள் கூறுவது போல் இச்சொற்களுக்கு இந்த அர்த்தம் இருப்பதாக எந்த அரபி அகராதி நூலும் கூறவில்லை. மாறாக, தாடியை அதிகமாக வைக்க வேண்டும். மீசையைக் குறைப்பது போன்று குறைத்து விடக் கூடாது என்றே லிஸானுல் அரப் எனும் அரபு அகராதியில் கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தாடியை இஃபா செய்யுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது. இஃபா என்றால் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல் இருப்பதாகும்.

நூல்: லிஸானுல் அரப், பாகம்: 15, பக்கம்: 72

மேற்கண்ட வார்த்தைக்கு, தாடியை வெட்டக் கூடாது என்ற பொருளை லிஸானுல் அரப் ஆசிரியர் கூறவில்லை. மீசையைக் குறைப்பது போன்று தாடியை குறைக்கக் கூடாது என்றே கூறியுள்ளார். இந்த விளக்கத்தையே நாமும் கூறுகிறோம். மீசையை ஒட்ட வெட்டுவதைப் போன்று தாடியை ஒட்ட வெட்டக் கூடாது. இதை விடவும் கூடுதலாக தாடியை வைக்க வேண்டும் என்றே நாம் கூறுகிறோம். மேலும் (வளர விடுங்கள் என்ற அர்த்தத்தில்) தாடி தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சொற்கள் வேறு சில ஹதீஸ்களில் வெட்டப்பட்ட தலை முடி விஷயத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது.

நூல்: புகாரி 4191

மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து உருவானவை. கஅப் (ரலி) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப் (ரலி) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்க மாட்டோம். இதைப் போன்று தாடியை வளர விடுங்கள் என்றால் தாடியை வெட்டவே கூடாது என்று விளங்கி விடக் கூடாது. அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனை வரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

நூல்: முஸ்லிம் 533

மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது. வேதமுடையவர்கள் மீசையை வெட்டவில்லையா?

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மது 21252

மேற்கண்ட ஹதீஸில் வேதமுடையவர்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் யுவஃப்பிரூன என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேதமுடையவர்கள் தங்களது மீசையை வெட்டாமல் இருந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைத்திருந்தார்கள் என்றே புரிந்து கொள்வோம். நபி (ஸல்) அவர்கள் இதே சொல்லைப் பயன்படுத்தி, உங்களது தாடிகளை வளர விடுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள். அப்படியானால் தாடியை ஒட்ட நறுக்கி விடாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். தாடி தொடர்பான ஹதீஸில் வளர விடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபூ என்ற சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து புரியலாம். அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ர) அவர்கடம் குயல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாஉ தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ர) அவர்கள், உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.

அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்ற பொருள் இருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை வெட்டியதே இல்லை என்ற தவறான கருத்து ஏற்படும்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பதைச் சந்தேகமற உணரலாம்.

இப்னு உமரின் செயல் நபிமொழிக்கு எதிரானதா?

அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளர விடுங்கள் என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

இதை இப்னு உமர் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ர) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

நூல்: புகாரி 5892

இப்னு உமர் (ரலி) அவர்கள் தாடியை வெட்டிய தகவல் தனியான செய்தி அல்ல. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொல்லுடன் இதுவும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது. இப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதையெல்லாம் நாம் இங்கே எடுத்துக் காட்டாமல் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம் உள்ளது. இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை நாம் ஆதாரமாக இங்கே குறிப்பிடவில்லை. ஒருவரின் சொல்லையும் செயலையும் முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருக்கின்ற போது அவ்விரண்டிற்கும் இடையே முரண்பாடு கற்பிக்கக் கூடாது என்பதே நமது வாதம். தாடியை வெட்டவே கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது என வாதிடுபவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டிய செயல் இந்த ஹதீஸிற்கு எதிரானது என்றும், தவறானது என்றும் கூறுகிறார்கள். தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டியிருப்பது நமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது. குறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின் அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல. சிக்கல்களை உருவாக்கும் கருத்து

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு தாடி எல்லையில்லாமல் மிக நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றனது. இவர்கள் என்ன செய்வது? என்று கேட்டால் மாற்றுக் கருத்தில் இருப்பவர்களிடம் முறையான எந்தப் பதிலும் இல்லை. மேலும் தாடியைப் பொறுத்த வரை அது ஒரே அளவில் சீராக வளர்வதில்லை. ஓரிடத்தில் அதிகமாகவும் ஓரிடத்தில் குறைவாகவும் சில முடிகள் நீளமாகவும் சில முடிகள் நீளம் குறைவாகவும் வளரும். தாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அலங்கோலமாக இருக்கும் தாடியைச் சரி செய்ய முடியாது. நமது தோற்றத்தை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறையை மீறும் நிலை தான் இதனால் ஏற்படும். பொருத்தமற்ற ஆதாரங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை முகவை அப்பாஸ் என்பவரும் தற்போது பரப்பிக் கொண்டு வருகிறார். இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரையில் இவர் ஆதாரமாகக் கருதும் வசனத்தையும் சில ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தார். விபரம் உள்ளவர்கள் இவரது கட்டுரையைப் பார்த்தவுடனே இவரது கருத்துக்கும் இவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். தாடியை வெட்டவே கூடாது என்பது இவரது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிற்கு ஆதாரம் காட்டுவதாக இருந்தால் தாடியை வெட்டக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததாக ஒரு ஹதீஸையாவது இவர் கூறியிருக்க வேண்டும். இந்தக் கருத்துப்பட ஒரு ஆதாரத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை. மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத் தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி 7288

ஒரு விஷயத்தை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதை நபி (ஸல்) தடுத்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே தாடியை வெட்டுவதை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை. நபி (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடுக்காமல் இருக்கும் போது முகவை அப்பாஸ் அதைத் தடை செய்தால் ஈமான் உள்ள யாரும் இத்தடையை ஏற்க மாட்டார்கள்; ஏற்க முடியாது. மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியைச் சுட்டிக்காட்டி, பின்வருமாறு தன் வாதத்தை வைக்கிறார்.

இந்தப் பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விடச் சொல்கிறார்கள். எனில் தாடியில் கை வைக்கக் கூடாது என்பது தெளிவு. ஹதீஸில் உள்ளவாறு விளங்காமல் தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளங்கியதால் இவர், தானும் குழம்பி மற்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறார்.

ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் இவர் ஹதீஸிற்குக் கூறிய தவறான விளக்கத்தையும் நன்கு கவனித்தால் இவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை அறியலாம். நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள் எனக் கூறி ஹதீஸில் இல்லாத கருத்தை செருகப் பார்க்கிறார். மீசையை நறுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. மீசையை நன்கு ஒட்ட நறுக்க வேண்டும் என்றே உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவுடன் தாடியை வளரவிடுங்கள் என்ற உத்தரவும் இணைத்து கூறப்படுகிறது. அப்படியானால் மீசையை ஒட்ட நறுக்குவதைப் போன்று தாடியை ஒட்ட நறுக்கி விடாதீர்கள் என்ற தடையைத் தான் ஹதீஸ் கூறுகிறதே தவிர இவர் கூறுவது போல் தாடியை வெட்டவே கூடாது என்ற தடையை ஹதீஸ் பிறப்பிக்கவே இல்லை. எனவே தாடியில் கை வைக்கக் கூடாது என்று இவர் தன் மனோ இச்சையின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அடுத்து இவர் தனது வாதத்திற்குச் சில விஷயங்களை ஆதாரமாக முன்வைக்கிறார். ஹாரூன் (அலை) அவர்களின் தாடி, பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது; நபி (ஸல்) அவர்களின் தாடி பிடிக்கும் அளவிற்கும் பெரிதாக இருந்தது; மழை நீர் அத்தாடியில் வழிந்தோடும் அளவிற்கு அது அமைந்திருந்தது; ஓதும் போது அசையும் அளவிற்குப் பெரிதாக இருந்தது; நபித்தோழர்களின் தாடியும் பெரிதாக இருந்தது. இவ்வாறு கூறி தாடியை வெட்டக் கூடாது என்று வாதிடுகிறார். தாடியில் கை வைக்கக் கூடாது என்பது இவரது வாதம். இவர் சுட்டிக் காட்டிய ஆதாரங்களில் ஏதாவது ஒன்றிலாவது தாடியை வெட்டக்கூடாது என்ற கருத்து அடங்கியிருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் குறிப்பிட்ட நபர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருப்பதால் இவர்கள் யாரும் தாடியை வெட்டவே இல்லை என்று எப்படி கூற முடியும்? இவர்கள் தாடியை வெட்டியும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆதாரங்களை வைத்து தாடியை வெட்டக் கூடாது என்று இவர் கூறுவது ஏற்புடையதல்ல. ஒரு பேச்சிற்கு இவர்கள் குறிப்பிட்ட ஹாரூன் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள், நபித்தோழர்கள், இஸ்லாத்தின் எதிரி அபூஜஹ்ல் ஆகியோர் தாடியை வெட்டியதே இல்லை என்று வைத்துக் கொண்டாலும் அப்போதாவது தாடியை வெட்டக் கூடாது என்று இதிலிருந்து சட்டம் எடுக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது. தாடியை வெட்டித் தான் ஆக வேண்டும்; பெரிதாக வைக்கக் கூடாது; தாடியை பிடிக்கும் அளவிற்கு வைக்கக் கூடாது’ என்று நாம் கூறவில்லை. இப்படிக் கூறினால் தான் மேற்கண்ட ஆதாரங்களைக் காட்டி நமது நிலைபாடு தவறு என்று கூற முடியும். ஒருவர் தாடியை வெட்டாமல் இருப்பதும் அதைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ப்பதும் அவரவர் விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே நாம் கூறுகிறோம். எனவே இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் எதுவும் நமது நிலைப்பாட்டிற்கு எதிரானைவை அல்ல. மாறாக, தாடியை இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்ற நமது நிலைபாட்டிற்கு இவை சான்றுகளாக உள்ளன. ஹதீஸ்களிலிருந்து எவ்வாறு சட்டம் எடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை இவர் அறியாத காரணத்தினால் தன் வாதத்திற்குச் சம்பந்தமில்லாத செய்திகளை எல்லாம் கூறியுள்ளார். நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை மட்டும் தடை செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட பல விஷயங்களில் அவர்கள் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். இப்போது ஒரு அறிவாளியின் முடிவு எப்படி இருக்க வேண்டுமென்றால் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததைத் தவிர்த்து மற்ற அனைத்தும் அனுமதியாகும். நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்றைத் தனது விருப்பப்படி தேர்வு செய்துள்ளார்கள் என்றே இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தது மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. மற்றனைத்தும் தடுக்கப்பட்டது என்று கூறினால் அவரது நிலைப்பாடு தவறு என்று கூறுவோம்.

ஏனென்றால் எது தடை செய்யப்பட்டது என்பதை நபி (ஸல்) அவர்கள் இடும் தடையின் மூலமே அறிய முடியும். எது அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்களின் உத்தரவின் மூலமும் அவர்களின் செயலின் மூலமாகவும் அறிய முடியும். நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருப்பதை மட்டும் வைத்து மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டது என்று முடிவு செய்யக் கூடாது. உதாரணமாக வேட்டியை தரையில் இழுபடாமல் கரண்டைக் கால் வரை உடுத்திக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன் கெண்டைக்கால் தெரியும் அளவிற்குக் கீழாடையை உயர்த்தி அணிந்ததாக திர்மிதியில் இடம்பெற்ற 181வது ஹதீஸ் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு ஆடை உடுத்தியிருப்பதால் இவ்வாறு தான் ஆடை உடுத்த வேண்டும் என்று நாம் கூற மாட்டோம். கரண்டை வரை ஆடை உடுத்திக் கொள்வதை ஹதீஸ்கள் அனுமதிப்பதால் கரண்டை வரை உடுத்தலாம். நபி (ஸல்) அவர்கள் உடுத்தியது போல் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு உயர்த்தியும் உடுத்தலாம் என்றே கூறுவோம். மேலும் காவி நிற ஆடையை ஆண்கள் உடுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே மற்ற நிற ஆடைகள் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்வோம்.

நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இப்போது நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணியாத காரணத்தால் அந்த நிற ஆடையை நாமும் அணியக் கூடாது என்று கூற மாட்டோம். இதே போன்று தான் தாடி விஷயத்திலும் நாம் கூறுகிறோம். அதாவது தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்றே நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். வெட்டுவதை அவர்கள் தடுக்கவில்லை. எனவே ஒட்ட நறுக்காமல் கூடுதலாக தாடியை வைத்து வெட்டினால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. அது அனுமதிக்கப்பட்டது தான்.

நபி (ஸல்) அவர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள் என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூற மாட்டோம். இதை முகவை அப்பாஸ் விளங்காத காரணத்தினால் தாடியை பிடிக்கும் அளவுக்குப் பெரிதாகத் தான் வைக்க வேண்டும் என்று, ஹதீஸில் கூறப்படாத உத்தரவை சுயமாகக் கூறிவருகிறார். தலை முடி சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகுமா?

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். “(சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள் அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: நஸயீ 4962

தாடி தொடர்பான சட்டத்தை மக்களுக்கு நாம் விளக்கும் போது மேற்கண்ட ஹதீஸை நாம் குறிப்பிடுவதுண்டு. மேற்கண்ட ஹதீஸில் தலை முடி தொடர்பாகத் தானே பேசப்படுகிறது. இதில் தாடியைப் பற்றிப் பேசப்படவில்லையே? எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும்? என்று முகவை அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது இக்கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருக்கிறது. மேற்கண்ட ஹதீஸை நாம் எதற்கு சுட்டிக் காட்டினோம் என்பதை இவர் விளங்காத காரணத்தால் இக்கேள்வியைக் கேட்டுள்ளார். மேற்கண்ட ஹதீஸை மட்டும் வைத்து தாடியை வெட்டலாம் என்று நாம் கூறவில்லை. அவ்வாறு யாராலும் கூற முடியாது. மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள் என்பதே தாடி தொடர்பான ஹதீஸாகும். இந்த ஹதீஸிலிருந்தே தாடியை வெட்டலாம் என்று நாம் சட்டம் கூறுகிறோம். இவர் கூறுவது போல் தலை முடி தொடர்பான ஹதீஸிலிருந்து அல்ல. தாடியை வளர விடுங்கள் என்றால் அதை வெட்டாமல் இருப்பது என்று சிலர் தவறாக விளக்கம் தருகிறார்கள். எனவே அக்கட்டளையின் உண்மையான பொருள் என்ன? அதை எவ்வாறு விளங்கிக் கொள்வது? என்பதை விளக்குவதற்காகவே தலைமுடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம். ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை ஒரு காரணத்தை முன்னிட்டு கூறப்பட்டுள்ளது. அதாவது இணை வைப்பாளர்கள் தாடியை மழிப்பதாலும் வேதமுடையவர்கள் தாடியை ஒட்ட நறுக்குவதாலும் அவர்களுக்கு மாறு செய்யும் விதத்தில் வளர விட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை, அதை மழிக்கக் கூடாது, ஒட்ட நறுக்கிவிடக் கூடாது என்ற கருத்தில் தான் கூறப்பட்டுள்ளது என்பதைச் சந்தேகமற உணரலாம். இந்த ஹதீஸ் தாடியை வெட்டுவதைப் பற்றி பேசவே இல்லை. அதை மழிப்பதைப் பற்றியும் ஒட்ட வெட்டுவதைப் பற்றியுமே பேசுகிறது. எனவே இந்த ஹதீஸ் எதைப் பற்றி பேசவில்லையோ அந்த விஷயத்திற்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது. இந்த அடிப்படையை விளக்குவதற்காகவே தலை முடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் தலைமுடியை முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற கட்டளையை மட்டும் கவனத்தில் கொண்டு தலைமுடியை வெட்டவே கூடாது என்று நாம் கூற மாட்டோம். ஏனென்றால் தலைமுடியை வெட்டுவதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.

இக்கட்டளை எந்தக் காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டது, எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்று பார்க்கிறோம். மழித்தால் முழுமையாக மழிக்க வேண்டும். வைத்தால் முழுமையாக வைக்க வேண்டும் என்ற கருத்திலே முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது. இதை புரிந்து கொள்வதைப் போன்றே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் பொருள். தடுமாற்றங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்ற நிலைப்பாட்டின் காரணத்தால் இவரிடம் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தடுமாற்றங்கள் இவரது நிலைப்பாடு தவறு என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. தாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அதன் நீளத்தைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஆனால் இவரோ கைப்பிடி அளவுக்குத் தாடி, தரையைத் தொடும் வரை தாடி என்று அளவு பார்க்கின்றார். அதிலும் இவரால் எந்த அளவையும் முறைப்படி இவரால் கூற முடியவில்லை. எனவே இவ்விஷயத்தில் இவரிடம் பல முரண்பாடுகள் வந்துள்ளன. இவர் கூறிய பின்வரும் வாசகத்தைக் கவனியுங்கள்.

எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம். மேற்கண்ட இவரது கூற்றுப்படி தரையைத் தொடும் அளவுக்கு தாடி வளர்ந்தாலே நிர்பந்தம். அப்போது மட்டுமே தாடியை வெட்டுவதற்கு அனுமதி உண்டு. நெஞ்சு வரை தாடி வளர்ந்தாலோ, இடுப்பு வரை தாடி வளர்ந்தாலோ, முட்டி வரை தாடி வளர்ந்தாலோ, ஏன் கரண்டைக்கால் வரை தாடி வளர்ந்தாலோ அது நிர்பந்தம் இல்லை. அதை வெட்டவும் கூடாது என்று இவர் கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைக் கவனியுங்கள்.

தாடி என்றால் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என அபூஜஹ்ல் விளங்கியது கூட குர்ஆன் ஹதீஸ் பேசும் இந்த மேதைக்கு விளங்கவில்லை. அயோக்கியன் அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு இவர் சென்றிருப்பது மிகவும் கேவலமான செயல். தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கி இருந்தானாம்? அபூ ஜஹ்ல் இவ்வாறு விளங்கித் தான் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்தான் என்பதை இவர் எப்படி அறிந்து கொண்டார்? அவன் வடிகட்டிய காஃபிராகவும் நரகவாதியாகவும் இருக்கும் போது அவனுடன் தூய நபிவழியை இவர் இணைத்துப் பேசுவதும் நபி (ஸல்) அவர்களை, அயோக்கியன் சங்கராச்சாரியாருடன் இணைத்து மதுரை ஆதீனம் பேசியதும் ஒன்றே!

இவர் தனது வாதத்தை நிலைநாட்ட கேடுகெட்டவனையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக்காட்டத் தயங்க மாட்டார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் இங்கே தாடி என்றால் அது பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று தாடிக்கு ஒரு அளவைக் கூறுகிறார்.

நபித்தோழர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்குத் தாடி வைக்கவில்லை என்பது தெளிவாகிறது. மேற்கண்ட இவரது கூற்றைப் பாருங்கள். முகத்தில் தாடி இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் அளவுக்குக் தாடி இருக்க வேண்டும் என வாதிடுகிறார். இவரது இக்கூற்று நமது நிலைபாட்டிற்கு எதிரானதல்ல. தாடி தெரியாத அளவிற்கு ஒருவர் ஒட்ட நறுக்கினாலேயே இந்த நிலை ஏற்படும். இவ்வாறு செய்வது கூடாது என்றே நாம் கூறுகிறோம்.

தரையில் படும் வரை தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் ஒரு பிடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில், பார்த்தால் தாடி தெரியும் அளவிற்கு வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அரைகுறை மதியுடன் ஆய்வு செய்யப் புறப்பட்டவரின் நிலை இப்படித் தான் இருக்கும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக ஆகிவிட்டார்.

ஆய்வின் சுருக்கம்

தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்துக்காகவே தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாடியை ஒட்ட வெட்டாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் கருத்து. எனவே தாடியை வெட்டுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

தாடி இவ்வளவு அளவு கூடுதலாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எந்த எல்லையும் இடவில்லை. அவர்கள் இதற்கு எந்த அளவையும் கூறாமல் விட்டிருப்பதால் நாமும் இதற்கு எந்த அளவையும் கூறக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி 7288

தனது தாடியை எவ்வளவு நீளமாக வைக்கலாம் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் தாடியை ஒட்ட நறுக்கி அதை அகற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்!

No comments:

Post a Comment