பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, June 27, 2017

பிறையை கண்ணால் பார்ப்பது...

பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்கு கண்ணால் பார்க்க வேண்டும் என்பது பொருளல்ல. சிந்திக்க வேண்டும் என்பதுதான் பொருள் என்று சிலர் வாதிடுவது சரியா?

பதில்

பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பார்க்க முடியாத அளவுக்கு மேகமாக இருந்தால் முந்தைய மாதத்தை 30 நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளனர்.

மார்க்க அறிவும் அரபு மொழி அறிவும் இல்லாத ஒரு கூட்டம் பிறையைப் பார்த்து நோன்பு நோற்கக்கூடாது. விஞ்ஞான முறையில் கணித்து நாட்களை முடிவு செய்ய வேண்டும் என வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

பிறையைப் பார்க்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்களில் ருஃயத் எனும் சொல்லோ அதில் இருந்து பிறந்த சொற்களோ பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பார்த்தல் என்று பொருள் செய்யக் கூடாது. சிந்தித்தல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் எனவும் கண்ணால் என்ற சொல் சேர்ந்தால்தான் இச்சொல்லுக்கு பார்த்தல் என்று பொருள் செய்ய வேண்டும் எனவும் இந்த அறிவீனர்கள் ஆதாரமின்றி உளரி வருகின்றனர்.

இது குறித்து முன்னரே நாம் விளக்கியுள்ளதை தற்போது எடுத்துக் காட்டுகிறோம்.

ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்கிற அர்த்தம் மட்டும் கிடையாது; அறிவால் அறிதல், புரிந்து கொள்ளுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன; அகராதிப்படியும் உள்ளன; குர்ஆனிலேயே கூட ஏராளமான வசனங்களில் அறிதல் என்கிற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி, பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றால் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, அறிவால் சிந்தித்து புரிந்து கொள்வதைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

இந்த வியாக்கியானம் புதிதல்ல. பல வருடங்களுக்கு முன்பும் இதே வறட்டு வாதத்தை இவர்கள் வைத்து, அதிலுள்ள அபத்தங்களுக்கு தெளிவான முறையில் நம்மால் விளக்கமும் கொடுக்கப்பட்டன.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் அன்று ருஃயத் என்கிற வார்த்தைக்கு சிந்தித்து அறிதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதை நிலைநாட்ட அவர்கள் வேறொரு வாதத்தை வைத்திருந்தார்கள்!

அதாவது பார்த்தல் என்கிற வார்த்தையுடன் (ருஃயத்) “கண்ணால்” என்கிற சொல் (ஐன்) என்பது சேர வேண்டும், அப்படிச் சேர்ந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் வரும். வெறுமனே ருஃயத் என்றால் சிந்தித்தல் என்றுதான் அர்த்தம் வைக்க வேண்டும் என்பது தான் அன்றைக்கு இவர்களது வாதமாக இருந்தது.

இந்த மடமைத் தனத்திற்கு அன்றைக்கே கீழ்க்கண்டவாறு மறுப்பு கொடுக்கப்பட்டது.

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால்தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம்தான். அதுபோல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம்தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்றுதான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும்தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால்தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்அன் 2:55)

கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா?

இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இந்தக் கேள்விக்கு விடை சொல்ல இயலாத இந்தக் கூட்டம், மீண்டும் அதே ருஃயத் என்பதை எடுத்துக் கொண்டு, வேறு என்ன வகையில் வியாக்கியானம் கொடுப்பது என்று இத்தனை வருடங்கள் தலையைப் பிய்த்து மேலே நாம் சுட்டிக்காட்டிய இந்த வாதத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து விளக்கமாகவே பார்ப்போம்.

لسان العرب – (ج 14 / ص 291) (رأي ) الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين يقال رأَى زيداً عالماً ورَأَى رَأْياً ورُؤْيَةً ورَاءَةً مثل راعَة وقال ابن سيده الرُّؤيَةُ النَّظَرُ بالعَيْن والقَلْب

ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) தான் வரும். ”அறிதல்” என்ற பொருளில் வரும்போது அதற்கு இரண்டு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) வரும். நூல் லிஸானுல் அரப் பாகம் 14 பக்கம் 291

உதாரணம்

رأيت محمدا

முகம்மதைப் பார்த்தேன்

رأيت محمدا عالما

முகம்மதை ஆலிமாகப் பார்த்தேன்

முதலாவது உதாரணத்தில் பார்த்தல் என்பதற்கு முகம்மத் என்ற ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது.

ஒரு ஆப்ஜக்ட் வந்தால் கண்ணால் காண்பது என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

இரண்டாவது உதாரணத்தில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு 1. முகம்மத் 2. ஆலிம் என்ற இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

இவ்வாறு இரண்டு ஆப்ஜெக்ட் வந்தால்தான் அறிதல் என்ற பொருள் வரும். சில நேரங்களில் அரிதாக இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது கண்ணால் பார்த்தல் என்ற பொருளும் வரலாம்.

ஆனால் ”பார்த்தல்” என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்கும்.

பிறை பார்த்தல் என்பதில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு ஒரு ஆப்ஜெக்ட்தான் வந்துள்ளது. எனவே இதற்கு கண்ணால் காண்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

பிறையை பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பாதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

என்கிற ஹதீஸில் ”பார்த்தல்” என்பதற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது.

”பிறை என்பது, “சந்திரனில் தோன்றும் முதல் ஒளி வடிவம் ஆகும்”. எனவே இங்கே கண்ணால் காணுதல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்க முடியும். அறிதல் என்ற பொருளைக் கொடுப்பது மார்க்கத்தின் அடிப்படையிலும், அரபி மொழி அகராதி அடிப்படையிலும் தவறானதாகும்.

திருமறைக்குர்ஆனில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல் அதிகமாக இரண்டு ஆப்ஜெக்டுகளைக் கொண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆப்ஜக்டுகள் வரும் போது அறிதல் என்ற பொருள்தான் பெரும்பாலும் வரும்.

யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 105 : 1)

மேற்கண்ட வசனத்தில் யானையைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் அல்லாஹ் கூறியிருந்தால் அது கண்ணால் பார்ப்பதை மட்டும்தான் குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. யானைப்படையை (பார்த்தல்)

2. எப்படி அழித்தான் என்ற செயலைப் (பார்த்தல்).

எனவே இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு ருஃயத் என்பதின் பொருள் அறிதல் என்பதாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அல்குர்ஆன் 17 : 99

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் தரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. அல்லாஹ்வைப் (பார்த்தல்)

2. அவனுடைய படைப்பாற்றலைப் (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2 : 243)

மேற்கண்ட வசனத்தில் ஊர்களை விட்டு வெளியேறியோரை பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் கண்ணால் பார்த்தல் என்று பொருள் மட்டும்தான் வரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. ஊரை விட்டு வெளியோரைப் (பார்த்தல்)

2. மரணத்திற்கு அஞ்சுவதை (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் 89 : 6, 7

மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜக்டுகள் வந்துள்ளது.

1. ஆது, இரம் சமுதாயத்தைப் (பார்த்தல்)

2. அவர்களை எப்படி ஆக்கினான் என்பதை (பார்த்தல்)

எனவே இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

அதே சமயம், கீழ்க்காணும் வசனங்களைப் பாருங்கள்..

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.

அல்குர்ஆன் 102 : 5,6

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

மொத்தத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும்தான் வரும். வேறு பொருள் வராது.

இரண்டு ஆப்ஜெக்ட் வரும்போதுதான் அங்கே அறிதல் என்ற பொருள் வரும். திருமறைக்குர்ஆனில் அறிதல் என்ற பொருள் கொள்வதற்கு சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இரண்டு ஆப்ஜெக்ட்டாக வரக்கூடியவைதான்.

பிறைபார்த்தல் பற்றிய ஹதீஸ்களில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

குர்ஆனில் கண்ணால் காணுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சில இடங்கள்.

நட்சத்திரத்தைப் பார்த்தார் (6 : 76)

சந்திரனைப் பார்த்தார் (6 : 77)

சூரியனைப் பார்த்தார் (6 : 78)

ஆதாரத்தைப் பார்த்தார் (11 : 70)

சட்டையைப் பார்த்தார் (12 : 28)

இணைக் கடவுள்களைப் பார்த்தல் (16 : 86)

நரகத்தைப் பார்த்தல் (16 : 83, 20 : 10)

கூட்டுப் படையைப் பார்த்தல் (33 : 22)

இறை அத்தாட்சியில் மிகப் பெரியதைப் பார்த்தல் (53 : 18)

தெளிவான அடிவானத்தில் கண்டார் (81 : 23)

இப்படி பார்த்தல் என்ற ரீதியில் ஆய்வு செய்தால் கண்ணால் பார்த்தல் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை குர்ஆனில் காணமுடியும்

ஆக, இவர்களது இந்த வாதமும் தவிடு பொடியாகிப்போனது !

பிறையை பார்த்தல் – என்பது கண்ணால் பார்த்தலைத் தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி விட்ட நிலையில் பிறையைக் கணக்கிடலாம், விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்கலாம் என்பன போன்ற வாதங்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கி விட்டன.