பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, December 15, 2014

முரண்பாடுகள் தோன்றியது எப்படி. ?

முரண்பாடுகள் தோன்றியது எப்படி. ?
ஆக்கம் . எம்.ஐ. சுலைமான்
1400 ஆண்டுகளுக்கு முன் இறுதித் தூதராக இவ்வுலகத்திற்கு வருகை தந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய அரபுலகத்தில் இருந்த அறியாமை இருளை நீக்கி, இஸ்லாம் என்ற ஒளியை ஏற்றி வைத்தார்கள்.
இவ்வுலகத்தில் வாழும் அனைவரும் இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும் தனது வழிமுறையின் அடிப்படையிலும் மட்டுமே வாழ வேண்டும் என்று கட்டளையிட்டு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சட்டங்களின் அடிப்படைகளையும் விளக்கிச் சென்றார்கள்.
அவர்களின் இருபத்து மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் இலட்சக்கணக்கான தொண்டர்களை, தோழர்களை உருவாக்கிச் சென்றார்கள். அந்த அன்புத் தோழர்களின் அறப் பணியால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பரவி உள்ளனர்.
இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே முறையில் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்டு பல புதிய பெயர்களில் செயல்படுகின்றனர்.
இவ்வாறு பல பிரிவாகி ஒவ்வொரு பிரிவினரும் புதிய புதிய வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்களா? அறவே இல்லையே! அப்படியானால் முஸ்-ம்களில் ஏராளமான பிரிவுகள் வந்ததன் காரணம் என்ன?
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 3:132)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன் 4:13,14)
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 24:51,52)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
(அல்குர்ஆன் 33:36)
"என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்தவர் ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (7280)
நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கக் கடமையெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் (3243)
"(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : நஸயீ (1560)
இவ்வாறு திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் குர்ஆன் ஹதீஸை மட்டும் அடிப்படையாக வைத்து வாழ வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கட்டளையிடுகின்றன. ஆனால் மக்கள் இஷ்டப்படி தங்கள் மார்க்கக் கடமைகளைப் பலவிதமாக அமைத்துக் கொண்டு இவ்வாறு பல பிரிவுகளாக மாறியதற்குக் காரணம் என்ன?
இக்கேள்விக்குப் பவலவிதமான பதில்களைக் கூறலாம். அதில் முக்கியமான காரணம்,முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் மார்க்கத்தின் அளவுகோலாக எடுத்துக் கொண்டது தான்.
இவ்வாறு முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதால் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உண்டாயின. ஆனால் சில பிரிவினர் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு நபிமொழிகளையும் திருக்குர்ஆன் வசனங்களையும் ஆதாரம் காட்டுகின்றர்.
முரண்பட்ட கொள்கைகளுக்கும் மாறுபட்ட சட்டங்களுக்கும் நபிமொழிகளில் ஆதாரம் இருக்குமா? என்ற நியாயமான கேள்வி எழலாம். இருக்காது என்று நாம் கூறினாலும் மாறுபட்ட சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் சில நபிமொழிகளை ஆதாரம் காட்டத் தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலை எதனால் ஏற்படுகின்றது? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ஒரு சட்டத்தைக் கூறியிருப்பார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களாலேயே அது மாற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் மாற்றப்பட்ட செய்தியை அறியாதவர் நபி (ஸல்) அவர்களின் முந்தைய காலச் சட்டத்தை அறிவிப்பார். சிலர் இதை மட்டும் வைத்து சட்டம் சொல்லி விடுவர்.
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன். அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி),
நூல் : புகாரி (293)
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.
"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் (526), திர்மிதீ (102)
இந்த இரண்டு செய்திகளையும் கவனத்தில் கொள்ளாதவர்கள் ஆரம்ப காலச் சட்டத்தைக் கூறி அதற்குரிய சான்றை மட்டும் கூறுவதால் மாறுபட்ட சட்டத்திற்கு நபிமொழியில் ஆதாரம் இருப்பதைப் போன்று தோற்றம் ஏற்படுகின்றது.
இதைப் போன்று நெருப்பால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவரின் உளூ முறியுமா? அல்லது முறியாதா? என்பதிலும் இரண்டு கருத்துக்கள் இரண்டு நபிமொழிகளை எடுத்துரைத்து ஆதாரம் காட்டுகின்றன.
"நெருப்பு தீண்டியவற்றில் உளூச் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : முஸ்லிம் (527, 529), இப்னுமாஜா (478), அஹ்மத் (23439)
நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்ட போது நானும் அவர்களுடன் சென்றேன். அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இல்லத்தில் அவர்கள் நுழைந்தார்கள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து விருந்து படைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். பேரீச்சம்பழங்கள் நிறைந்த தட்டு ஒன்றையும் அந்தப் பெண் வைத்தார். அதையும் சாப்பிட்டார்கள். பின்னர் லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதார்கள். பின்பு (மீதமிருந்த) இறைச்சியில் சிறிதளவை அந்தப் பெண் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்ட பின் உளூச் செய்யாமல் அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : திர்மிதீ (75), அபூதாவூத் 163), அஹ்மத் (13931)
இந்த இரண்டு செய்திகளில் ஒருவர் ஒரு செய்தியையும் மற்றொருவர் இன்னொரு செய்தியையும் வைத்து சட்டம் சொல்லியுள்ளனர். ஆனால் பின்வரும் செய்தியை கவனிக்கத் தவறி விட்டனர்.
"இரண்டு விஷயங்களில் நெருப்பு தீண்டியவைகளில் உளூச் செய்யாமல் இருப்பது தான் நபி (ஸல்) அவர்களின் கடைசியான செயலாகும்''
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : நஸயீ (185), இப்னு ஹுஸைமா (43), இப்னு ஹிப்பான் (1134)
ஒரே சட்டம் தொடர்பான சில ஹதீஸ்கள் ஆதாரப் பூர்வமானவையாகவும் சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் இடம் பெற்றிருக்கும். சிலர் தமது மத்ஹபை நிலைநாட்ட பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஸஹ்ல் பின் பைளா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் தான் (ஜனாஸா) தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் (1615)
"யார் பள்ளியில் மய்யித்திற்குத் தொழுவிப்பாரோ அவருக்கு எந்த ஒன்றும் கிடையாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (2776), இப்னுமாஜா (1506), அஹ்மத் (9353)
இந்த செய்தி பலவீனமானதாகும். இதில் இடம் பெற்றுள்ள ஸாலிஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர்.
ஆதாரப்பூர்வமான செய்தியை எடுத்துக் கொள்ளாமல் பலவீனமான செய்திகளை எடுப்பதால் சட்டத்தில் இரு வேறுபட்ட வடிவங்கள் தெரிகின்றன.
திருக்குர்ஆன் நபிமொழியின் அடிப்படையில் தான் சட்டங்களை வகுக்க வேண்டுமென்ற நிலையிலிருந்து இறங்கி, நபித்தோழர்களின் கூற்றுக்களையும் ஏற்றுக் கொள்வதால் முரண்பட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் (2689)
முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னர் சிலர், உமர் (ரலி) அவர்களின் சட்டத்தின் அடிப்படையில் முத்தலாக் என்று கூறினாலும் மூன்று தலாக்காகவே எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.
நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதைக் கவனித்து செயல்பட்டுள்ளனர்.
நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்,
நூல் : புகாரி (1563)
அன்றைய ஜனாதிபதியாக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள், தமத்துஉ என்ற ஹஜ் செய்யக் கூடாது என்று கூறிய போது, "நபி (ஸல்) அவர்கள் செய்த செயலை எந்த மனிதரின் சொல்லிற்காகவும் விட மாட்டேன்' என்று கூறி நபி (ஸல்) அவர்களின் கூற்றே முதன்மையானது, பின்பற்ற ஏற்றது என்பதை அலீ (ரலி) தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!''என்று கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்''என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்''என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : ஸாலிம்,
நூல் : திர்மிதீ (753)
அன்றைய ஜனாதிபதியும் தமது தந்தையுமான உமர் (ரலி) அவர்களின் கூற்றை இப்னு உமர் (ரலி) புறக்கணித்ததிலிருந்து நபித்தோழர்களின் கூற்று ஆதாரமாகாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இது போன்ற காரணத்துக்காகத் தான் இஸ்லாமிய சட்டங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் காண்கின்றோம். இந்நிலையில் உண்மையில் நாம் பின்பற்ற வேண்டிய நபிமொழிகள் எவை?என்பதைத் தெளிவாக அறிவதற்காகத் தான் இந்தப் பகுதி ஆரம்பம் செய்யப்படுகின்றது.
இத்தொடரில் நம்மிடம் மாறுபட்ட கருத்துள்ள சட்டங்களின் ஹதீஸ்களை எடுத்துரைத்து அதில் சரியான கருத்து என்னவென்பதை இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்துவோம்.
மேலும் அந்த ஹதீஸ்களின் அரபி மூலத்தையும் வெளியிட்டு தெளிவு படுத்துவோம். இதனால் சரியான சட்டங்களை அறிந்து நாம் செயல்படுத்த மிக உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

Friday, October 17, 2014

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு
சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா நாளாகும். இந்த நாளில் அரஃபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் கூடுவார்கள்.
சுபுஹ் தொழுத பின் முஜ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவுக்கு வருவார்கள். அரபாவில் அன்றைய மக்ரிப் வரை தங்கிவிட்டு மக்ரிப் தொழாமல் புறப்பட்டு விடுவார்கள்.
இந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கக் கூடாது. ஹஜ்ஜுக்குச் செல்லாமல் ஊரில் இருப்போர் இந்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.
தலைப் பிறையைத் தீர்மானிக்க மிகத் தெளிவான வாசகங்களைக் கொண்ட பல ஹதீஸ்களை நாம் இது வரை வெளியிட்டுள்ளோம். அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் அவற்றை அணுகாமல் அரஃபா நோன்பிலிருந்து தலைப் பிறையைத் தீர்மானிப்பதைச் சிலர் புதிதாகக் கண்டு பிடித்துள்ளார்கள்.
சவூதியின் பிறைக் கணக்குப்படி 9ஆம் நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகின்றார்கள். அவர்கள் கூடியிருக்கின்ற காட்சியை நாம் தொலைக் காட்சியில் பார்க்கிறோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் பிற 9 ஆகவில்லை என்பதால் நோன்பு நோற்காமல் இருந்து விட்டு ஹாஜிகள் அரஃபாவிலிருந்து சென்ற பின்னர் நாம் நோன்பு வைக்கிறோம். இது எப்படி அரஃபா நோன்பாகும்?
எனவே சவூதியில் என்றைக்கு அரஃபா நாள் என்று முடிவு செய்கிறார்களோ அது தான் முழு உலகுக்கும் அரஃபா நாள்; சவூதியில் என்றைக்கு ஹஜ் பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று தான் முழு உலகுக்கும் ஹஜ் பெருநாள் என்பது இவர்களின் வாதம். நோன்பையும், நோன்புப் பெருநாளையும் கூட சவூதியை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர்.
அரஃபா நாள் நோன்பு என்பது ஹாஜிகளுக்கு இல்லை என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரஃபா நோன்பு சுன்னத்,இவர்களின் கருத்துப்படி உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடுகிறது. எப்படி என்று பார்ப்போம்.
ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள்.
அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.
அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?
இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும்.
அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள்.
அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.
நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களா? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது.
அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும்.
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.
மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை 9 அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப் பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது.
மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.
நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.
தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும்,அரஃபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?
எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை (2.286) இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (2.278) என்ற வசனங்களை எடுத்துக் காட்டி அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
மக்காவுக்கு ஆளனுப்புவது சக்திக்கு அதிகமான சிரமமான காரியமா?
ஒட்டகப் பயணம் சர்வ சாதாரணமாக இருந்த காலத்தில் மக்காவிற்கு ஆள் அனுப்பி விசாரிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. அதிகப்பட்சமாக நான்கு நாட்களில் மதீனாவில் இருந்து மக்காவிற்குப் போய் விட்டு வர முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளவு பார்ப்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காணப்படுகிறது. சக்திக்கு மீறிய காரியத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா?
உண்மையிலேயே மக்காவில் என்றைக்கு ஹாஜிகள் கூடுகிறார்களோ அன்றைக்குத் தான் அரஃபா நாள் என்று இருந்திருக்குமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அறிவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். நன்மைகளைப் பெறுவதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல.
அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக கீழ்க்கண்ட செய்தி அமைந்துள்ளது.
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். (நான் நோன்பு வைக்கவில்லை என்பதை அறிந்த ஆயிஷா (ரலி) அவர்கள்) இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்'' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே''என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள்'' என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: பைஹகீ
மக்காவில் என்றைக்கு அரஃபா நாள் என அறிந்து கொண்டு மதீனாவிலுள்ள மக்கள் நோன்பிருக்கவில்லை. தாங்களாகவே பிறை பார்த்துத் தான் தீர்மானித்திருந்தார்கள் என்பதையும் அரஃபா நாளை நபித்தோழர்கள் எப்படிப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே எந்த அடிப்படையில் பார்த்தாலும் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாள் உலகம் முழுவதும் அரஃபா நாள் என்று கூற முடியாது.
மற்றொரு கோணத்தில் சிந்தித்தால் அரஃபா நாளை இவர்கள் புரிந்து கொண்ட விதம் தவறானது என்பது சந்தேகத்துக்கிடமின்றி விளங்கும்.
ஒரு நாட்டில் துல்ஹஜ் மாதம் முதல் பிறையை ஜனவரி முதல் தேதியில் பார்க்கிறார்கள். அந்த நாளில் சவூதியில் முதல் பிறை தென்படவில்லை. எனவே ஜனவரி 2ஆம் தேதி தான் அவர்களுக்கு முதல் பிறை. இதன் அடிப்படையில் ஜனவரி10 அன்று சவூதியில் அரஃபா நாள்.
ஆனால் ஜனவரி முதல் தேதி பிறை பார்த்தவர்களுக்கு ஜனவரி 10 அன்று பெருநாள். அதாவது நோன்பு நோற்பது ஹராமான நாள்.
இப்போது ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில் நோன்பு நோற்காமல் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு நோற்கும் நிலை ஏற்படும்.
நாமே கண்ணால் பிறை பார்த்து நாட்களை எண்ணி, இது பத்தாவது நாள் - அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை அறிந்திருக்கும் போது, கண்ணால் கண்ட உண்மையை ஏற்பதா? அல்லது ஹாஜிகள் அரஃபாவில் கூடி விட்டதால் நாம் கண்ட உண்மையை நாமே மறுத்து, பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு வைக்க வேண்டுமா?
இதைச் சிந்தித்தால் இவர்கள் அரஃபா நோன்பை முடிவு செய்யும் விதம் அபத்தமானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதே சமயம் மக்காவைச் சாராதவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள் என்றால் மக்காவில் செய்துள்ள முடிவின் படியே அவர் செயல்பட வேண்டும்.
தனது சொந்த ஊரில் 9ஆம் நாள் வந்து விட்டதா என்று விசாரித்து அதனடிப்படையில் செயல்படக் கூடாது.
நாம் ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்கிறோம். அங்கே சூரியன் மறைவதை நாம் பார்க்கிறோம். உடனே நமது ஊருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது ஊரிலும் சூரியன் மறைந்து விட்டதா என்று கேட்டு மக்ரிப் தொழ மாட்டோம். நமது ஊரில் அது நண்பகலாக இருந்தால் கூட நாம் சென்ற ஊரில் மக்ரிப் நேரம் என்றால் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்
அதே நாட்டில் காலையில் உன்னைச் சந்திக்க வருவேன் என்று ஒருவரிடம் கூறிவிட்டு நள்ளிரவில் கதவைத் தட்டி எங்கள் ஊரில் இது தான் காலை நேரம்;அதனால் சந்திக்க வந்துள்ளேன் என்று கூற மாட்டோம்.
சவூதிக்கு நாம் சென்றால் மட்டுமல்ல. சவூதிக்காரர்கள் இங்கே வந்தாலும் அவர்களும் இங்குள்ள நிலையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சவூதி மன்னர் இந்தியா வந்தால் இந்தியாவில் சூரியன் மறையும் போது தான் அவர் மக்ரிப் தொழ வேண்டுமே தவிர அவரது நாட்டில் சூரியன் மறையும் போது மக்ரிப் தொழ முடியாது.
எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எந்த நாளாக எந்த நேரமாக உள்ளதோ அது தான் நம்மைக் கடடுப்படுத்தும் இதற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.
எனவே நாம் ஹஜ்ஜுக்குச் சென்றால் அங்கே எப்போது அரஃபாவில் கூடுகிறார்களோ அப்போது தான் கூட வேண்டும். அங்கே எப்போது சுப்ஹ் தொழுகிறார்களோ அப்போது தான் சுபுஹ் தொழ வேண்டும்.

இங்கே வந்து விட்டால் அதை ஏற்கத் தேவையில்லை. ஏற்றால் பெருநாள் தினத்தில் அரஃபா நோன்பு பிடிக்கும் நிலை. அரை நோன்பு கால் நோன்பு வைக்கும் நிலை எல்லாம் ஏற்படும்

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை
தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: புகாரி 1042

பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி,அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும். இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.
இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.
கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா?சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.
விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.
1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.
லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.
இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம். கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?
இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தக் கோள்விகளை நாம் எழுப்பும் போது சிலர் வீம்புக்காக கிரகணம் ஏற்பட்ட தகவலைக் கேட்டும் கிரகணத் தொழுகை தொழலாம் என்று வாதிடுகின்றார்கள். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்பது போல் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போது சூரிய கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
ஒரு வாதத்திற்கு அவ்வாறு கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும் எந்த நேரத்தில் தொழ வேண்டும்?
லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி,ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள்.
கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்?லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?
இந்தக் கேள்விகளுக்கு அவர்களது மனோ இச்சைப் படி என்ன தான் பதில் கூறினாலும் கிரகணம் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதை அவர்களால் மறுக்க முடியாது.
இதற்கு இவர்கள் அளிக்கும் மறுப்பு வேடிக்கையாக உள்ளது.
கிரகணத்தைப் பிறையோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில் கிரகணம் ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் பிறை உள்ளே இருக்கிறது என்று தான் விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே கிரகணத்தை ஆதாரமாகக் காட்டி பிறையையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளக் கூடாது. என்று இவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு கூறுவது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது. கிரகணம் ஏற்படும் போது தான் தலைப்பிறை என்று நாம் கூறவில்லை. மாறாக ஒரு பகுதியில் தெரிந்த சந்திர கிரகணம் மற்ற பகுதியில் ஏன் தாமதமாக ஏற்படுகிறது என்ற காரணத்தையே சிந்திக்கச் சொல்கிறோம். இந்தக் காரணம் தலைப் பிறைக்கும் பொருந்தும் என்பது தான் நமது வாதம்.


Sunday, September 14, 2014

உடலில் வலி ஏற்படும்போது



உடலில் வலி ஏற்படும்போது
எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த பகுதியின் மீது உங்கள் கையை வைத்து பிஸ்மில்லாஹ் என்று மூன்று முறை சொல்லிய பின் கீழ் கண்ட துஆவை நம்பிக்கையுடன் அல்லாஹ் விடம் ஏழு முறை கேட்க வேண்டும்
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
அஊது பில்லாஹி வகுத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு.
பொருள் : அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலை கொண்டு நான் உணர்கின்ற அஞ்சுகின்ற (இந்த வலியின்) தீமையை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

Thursday, July 24, 2014