பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, August 15, 2025

திருச்சியில் நடந்த ஒரு ஷியா மாநாடு

*திருச்சியில் நடந்த ஒரு ஷியா மாநாடு*

கடந்த 14.7.2024 அன்று திருச்சி மாவட்ட, மாநகர, வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றது. 

அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் மாநாடு என்று தலைப்பிட்டிருந்தாலும் நாம் இந்த விமர்சனக் கட்டுரைக்கு திருச்சியில் நடந்த ஷியா மாநாடு என்று தலைப்பிட்டிருக்கின்றோம்.
இவ்வாறு தலைப்பிட்டதற்குக் காரணம் இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் பி.ஏ. காஜா முஹைதீன் பாகவி, சதீத்துத்தீன் பாகவி போன்றவர்கள் தமிழகத்தில் பக்கா ஷியா கொள்கையை பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யக் கூடிய பரேலவிகள். ஷியா கொள்கை பரப்புரையாளர்கள்.
இறந்து போன 12 இமாம்கள் உலகிற்குத் திரும்ப வருவார்கள் என்பது ஷியா மதத்தின் உறுதியான கொள்கையாகும். 

அந்தக் கொள்கையை எள்ளளவும் எள்முனையளவும் அடிபிறழாது பிசகாது அப்படியே பின்பற்றும் ஆலிம்கள் இவர்கள். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம். இவர்கள் ஓதுகின்ற மவ்லிதுகள் முதல் ஆதாரமாகும். மவ்லிதில் இடம்பெற்றிருக்கும் யாகுத்பா என்ற பாடல் வரிகளில் இடம் பெறும் சில கவிதை வரிகள் இதோ:

ومن ينادي اسمي ألفا بخلوته عزما بهمته صرما لغفوته أجبته مسرعا من أجل دعوته فليدع يا عبد القادر محي الدين

யார் தனிமையில் தனது உறக்கத்தைத் துறந்து உறுதியான நம்பிக்கையுடன் எனது பெயரை ஆயிரம் தடவைகள் அழைக்கின்றாரோ அவர் அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் பதிலளிக்கின்றேன். அதனால் அவர் யா அப்தல் காதிர் முஹ்யித்தீன் என்று அழைக்கட்டும்!
இவ்வாறு அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கவிதை வரிகள் தெரிவிக்கின்றன. இதன் படி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை ஆயிரம் முறைகள் அழைத்து திக்ர் செய்யும் சபைகள் நடைபெறுகின்றன. அதிலும் இந்த திக்ருகள் ஒரு காட்டுக் கூச்சலில் விளக்கை அணைத்துக் கொண்டு இருட்டில் தனித்துவமாக நடைபெறுகின்றன. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி வருகையளிக்கின்றார் என்று திக்ரில் கலந்துக் கொள்பவர்கள் மட்டுமல்ல! பி.ஏ.காஜா முஹ்யித்தீன் பாகவி போன்றோரும் அழுத்தம் திருத்தமாக நம்புகின்றார்கள். இதில் வேதனையும் வேடிக்கையும் என்ன தெரியுமா?

إن الأموات يرجعون إلى الدنيا

‘இறந்தவர்கள் உயிருடன் உலகத்திற்குத் திரும்புவார்கள் என்பது ராஃபிளிய்யா என்ற ஷியா பிரிவினரின் கொள்கையாகும்’ என்று, தான் கைப்பட எழுதிய குன்யத்துத் தாலிபீன் என்ற நூலில் தெரிவித்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களையே, அவர்கள் இறந்த பிறகு மீண்டும் உலகத்திற்கு, தங்கள் ஊருக்கு, தங்கள் வீட்டிற்கு வருகின்றார் என்று நம்பி இந்தப் பரேலவிச பாசறைகள் இரவில் இருட்டில் அன்னாரை ஆயிரம் முறை அழைத்து கூப்பிட்டு, கும்பிட்டு, கும்மாளம் போட்டு கூத்தடிப்பது தான்.
அதனால் தான் இவர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த மாநாட்டை நாங்கள் ஷியா மாநாடு என்று குறிப்பிடுகின்றோம்.
நானும் எனது தோழர்களும் எதில் இருக்கின்றோமோ அது தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இந்த மாநாட்டில் பேசியோர் விளக்கம் கொடுக்கின்றனர். உண்மையில் அவர்கள் அந்தக் கொள்கையில் தான் இருக்கின்றார்களா? என்றால் இல்லை என்பதை அவர்களின் செயல்பாடு தெளிவாக எடுத்துரைக்கின்றது.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி மட்டும் உலகிற்குத் திரும்பி வருவதாக இவர்கள் நம்பவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உலகத்திற்குத் திரும்பி வருகின்றார்கள் என்றும் இவர்கள் உறுதியாக நம்புகின்றார்கள். அதனால் பரேலவி ஆலிம்களில் சிலர் தங்களுடைய பயானை முடிக்கும் போது எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களை கனவிலும் நனவிலும் கண்டு களிப்போமாக என்று கூறுகின்றனர்.
முஹ்யீத்தீனே நனவில் அதாவது நேரில், இருட்டில் அவதாரமெடுத்து நேராக வரும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாக வருகையளிக்காமல் இருப்பார்களா? இதுதான் இவர்களது உறுதியான நம்பிக்கை.
இந்த அடிப்படையில் காஜா முஹ்யித்தீன் போன்ற ஆட்கள் பக்கா ஷியா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று அடித்துச் சொல்கின்றோம். அவர் கலந்து கொண்ட இந்த மாநாட்டை ஷியா மாநாடு என்று குறிப்பிடுகின்றோம்.

திருக்குர்ஆன் கூறும் தூய கடவுள் கொள்கை
சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்கும் இவர்களின் செயல்பாடுகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அமைந்திருக்கின்றதா? என்றால் அறவே இல்லை என்பது நிதர்சனமாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை தூய கடவுள் கொள்கையாகும். அந்தக் கொள்கையை குர்ஆன் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களைப் பிரார்த்தியுங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!
அல்குர்ஆன் 7:194
அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல! எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:20,21
இந்த இறைவசனங்களில் “நீங்கள் அழைக்கும் அந்த நல்லடியார்கள் இறந்தவர்கள் ஆவார்கள்; அவர்கள் ஒருபோதும் செவியுறமாட்டார்கள்” என்று அல்லாஹ் தெளிவாகச் சொல்கின்றான்.
எந்த ஊரை நாம் அழித்து விட்டோமோ, அவர்கள் (இவ்வுலகிற்குத்) திரும்பி வர மாட்டார்கள் என அதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.
அல்குர்ஆன் 21:95
இறந்தவர்கள் திரும்ப வரவே மாட்டார்கள் என்று இந்த வசனம் ஆணித்தரமாக நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் அடித்துச் சொல்கின்றது.
இறுதியாக, அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது “என் இறைவனே! நான் விட்டு விட்டதில் நற்செயலைச் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறல்ல! இது அவன் கூறக் கூடிய (வெற்றுச்) சொற்களே! அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பு உள்ளது.
அல்குர் ஆன் 23:99,100
இறந்தவர்கள் செவியுறுகின்றார்கள் என்றோ, பதிலளிக்கின்றார்கள் என்றோ அல்லது அவர்கள் உலகுக்குத் திரும்புகின்றார்கள் என்றோ நம்புபவர்கள் குர்ஆனை மறுப்பவர்கள் ஆவர். குர்ஆன் கூறும் கடவுள் கொள்கையை மறுப்பவர்கள் ஆவர். அவர்கள் திருக்குர்ஆன் கூறும் இந்தக் கொள்கைக்கு நேர்மாற்றமான நம்பிக்கையைக் கொண்டவர்கள் ஆவார்கள். அந்தப் பட்டியலில் உள்ளவர் பி.ஏ. காஜா முஹைதீன் பாகவி. அதனால் தான் இவரை பக்கா பரேலவி, ஷியா கொள்கையாளர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றோம்.
இவர், இறந்தவர்களை அல்லாஹ்வுக்குச் சமமானவர்களாகக் கொண்டு வந்து நிறுத்தி இணைவைப்பு எனும் ஷிர்கைச் செய்கின்றார்.
அல்லாஹ், அவனைத் தவிர எந்தக் கடவுளுமில்லை. அவன் என்றென்றும் உயிரோடு இருப்பவன்; எப்போதும் நிலைத்திருப்பவன்.
அல்குர்ஆன் 2:255
தான் மட்டுமே என்றும் எப்போதும் நீடித்து நிலைத்திருப்பவன் என்று தன்னைப் பற்றி படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகின்றான். ஆனால் இவரது நம்பிக்கையோ அவ்லியாக்கள் என்றென்றும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று நம்புகின்றார். இந்த அடிப்படையில் இவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார். இது ஷியாக்களின் நம்பிக்கையாகும். அதன் அடிப்படையில் இவர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டை ஷியா மாநாடு என்று விமர்சிக்கின்றோம்.

தப்லீக் ஆலிம்களிடம் பப்ளிக்கான கேள்விகள்
இந்த மாநாட்டில் மத்ஹபுகளை நம்பிக்கை கொண்டிருக்கின்ற, அதே சமயம் இறைவனுக்கு இணைவைக்காத ஆலிம்கள் இன்றைய உலமா சபையில் இடம்பெற்றிருக்கின்றார்கள். கப்ரு வணக்கத்திற்கு எதிராக யஃகூப் ஹஜ்ரத் போன்றோரின் சிந்தனைப் பிரதிபலிப்புகளைக் கொண்டவர்கள் இதில் அடங்கியிருக்கின்றார்கள். எங்களை அவர்கள் வெறுத்தாலும் எங்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தாலும் கண்ணியமிக்க அந்த உலமாக்களை நாங்கள் மதிக்கின்றோம்.
இப்போது நாங்கள் அந்த கண்ணியமிக்க ஆலிம்களிடம் வைக்கும் கேள்வி இது தான்: இறந்து போன அவ்லியாக்கள் உயிருடன் இருக்கின்றார்களா? அவர்கள் செவியுறுகின்றார்களா? பக்தர்களின் அழைப்பை ஏற்று கப்ருகளிலிருந்து முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி எழுந்து ஓடோடி வந்து உடனே பதில் அளிப்பார்களா? முஹ்யீத்தீன் அப்துல் காதிர் ஜீலானியை 1000 தடவை அழைத்து திக்ரு செய்வது கூடுமா? அவ்வாறு அழைப்பது இணைவைப்பு இல்லையா? இத்தகைய இணைவைப்பு கவிதை வரிகளைப் பொதிந்திருக்கும் இந்தப் பாடல்களை பாடலாமா? இது தான் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையா? என்பது தான் நாம் அவர்கள் முன் வைக்கும் கேள்வியாகும்.
இவ்வாறெல்லாம் நம்புவது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை இல்லையென்றால் அதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். மவ்லிதுகள் கூடாது; இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது கூடாது என்று தெளிவாகப் போட்டு உடையுங்கள்; அதைத் தெளிவுப்படுத்துங்கள் என்று கனிவாய் கேட்டுக் கொள்கின்றோம். இல்லையென்றால் எங்களை எதிர்ப்பதற்காக ஏகத்துவத்திற்கு எதிராகச் செயல்படும் பி.ஏ. காஜா மைதீன் பரேலவி, சதீத்துன் பரேலவி போன்றோர்களிடம் கூட்டு வைத்திருக்கின்றீர்கள் என்று பொருளாகும். இந்தப் பிரகடனத்தை செய்யவில்லை என்றால் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை என்று போடுவதில் எந்த அர்த்தமில்லை. அது ஷியா கொள்கை பிரகடனமாகத் தான் அமையும்.

குமரிமுனையிலிருந்த வந்த பரேலவிச ஏவுகணை
மாநாடு முடிந்ததும் குமரி முனையிலிருந்து ஓர் ஏவுகணை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாவை நோக்கி வீசப்பட்டது. அது பரேலவிச கோட்டையிலிருந்து, ஷியாவின் பட்டாளத்திருந்து அனுப்பப்பட்ட ஸ்கட் ஏவுகணையாகும்.
“திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் (14/07/2024) ஞாயிற்றுக்கிழமை நடந்த சுன்னத் வல் ஜமாத் கொள்கை விளக்க மாநாட்டில் ஜியாறத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, திருச்சி ஜங்ஷன் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷி. முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி அவர்கள் சுன்னத் வல் ஜமாத் கொள்கைக்கு முற்றிலும் எதிரான பதிலை அளித்ததும், அதை மாநில சபையின் பொறுப்பிலிருக்கும் திருச்சி இன்ஆமுல் ஹஸன் காஷிஃபி அவர்கள் ஆதரித்து தொகுத்து விளக்கியதும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
“ஒழுக்கங்களைப் பேணி பரக்கத்தை நாடி நபிமார்கள், இறைநேசர்கள் அடக்கஸ்தலங்களுக்கு பெண்களும் ஜியாரத்திற்குச் செல்லலாம் என்பதே ஷரீஅத்தின் தெளிவான விளக்கம். அல்லாஹ் கொடுத்த ஆற்றலின் அடிப்படையில் வலிமார்களிடம் உதவி தேடலாம் என்பதுதான் மார்க்கம் காட்டித்தரும் வழிமுறை”
இவைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை சுன்னத் வல் ஜமாத் கொள்கை விளக்க மாநாடு என்ற பெயரில் சுன்னத் வல் ஜமாத் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் கருத்தைப் பதிவு செய்த இருவரையும் அவர்களின் பதிலையும் “குமரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது”
இப்படிக்கு மௌலானா மௌலவி, க்ஷ். மாகின் அபூபக்கர் அன்வரி, செயலாளர் குமரி மாவட்ட ஜ.உ. சபை”
இது குமரி மாவட்ட ஜமாஅத்திலிருந்து கொப்பளிக்கும் பரேலவிசமாகும். மாநில ஜமாஅத் உலமாவின் தலைவர் இந்த ரகத்தைச் சார்ந்தவர் தான். 80களின் மத்திய ஆண்டுகளில் ஜமாஅத் உலமா சபையின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பயணித்தவன் என்ற அடிப்படையில் நான் கண்ட உண்மையை இங்கு பகிர்கின்றேன். ஜமாஅத்துல் உலமாவில் கப்ரு வணக்கத்திற்கு எதிராகப் போராடும் போராளிகள் ஒரு பக்கம்!
கப்ரு வணக்கத்திற்கு முட்டுக் கொடுத்து மக்களை முட்டாள்தனமாக நரகத்திற்கு இழுத்துச் செல்லும் ஒரு கூட்டம் இன்னொரு பக்கம். இப்படித் தான் ஜமாஅத்துல் உலமா இரு நேர் எதிர் எதிர் அணிகளைக் கொண்டு இரு செங்குத்து பிளவுகளைக் கொண்டு பயணிக்கின்றது.
அன்றைய கால கட்டத்தில் தஞ்சையில் நடந்த வலிமார்கள் மாநாடு அதை அப்படியே எதிரொலித்தது. அந்த மாநாடு முழுவதுமே அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்தனை கேட்க வேண்டும் என்று ஓர் அணி! அவ்லியாக்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று மற்றொர் அணி என்று இரு அணிகளாகத் தங்கள் பிரச்சாரத்தை அமைத்துக் கொண்டார்கள்.
அப்போது அந்த மாநாட்டில் உபைதுல்லாஹ் காரி அவர்கள், வலிமார்கள் யார்? என்று குர்ஆன் வசனங்களிலிருந்து அப்படியே பிட்டு பிட்டு வைத்தது அப்படியே நெஞ்சிலிருந்து அகல மறுக்கின்றது. அதே சமயம் மாநாட்டு ஏற்பாட்டார்களுக்கும் பரேலவிச உலமாக்களுக்கு அவர்கள் கொடுத்த வலீ பற்றிய விளக்கம் நெஞ்சு வலியை கொடுத்தது என்பது மறுக்க முடியாது. கொள்கை அடிப்படையில் வட துருவமாகவும் தென் துருவமாகவும் நேர் எதிர் முனையில் செயல்படுகின்ற இரு அணிகளையும் சந்திக்க வைப்பது, சிந்திக்க விடாமல் தடுப்பது தவ்ஹீது ஜமாஅத் எதிர்ப்பு என்ற மையப்புள்ளி தான் என்பதை இங்கு பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருச்சி மாவட்ட ஜமாஅத்தில் உலமாவினர் ஜியாரத் பற்றி அளித்த விளக்கம், குமரி ஜமாஅத்துல் உலமாவின் உள்ளத்தைக் கீறி, கிழித்திருக்கின்றது. அது தான் குமரிமுனையிலிருந்து புறப்பட்ட ஓர் ஏவுகணைக்குக் காரணமாக அமைகின்றது. குமரி மாவட்டத்தின் இந்தக் கொள்கையில் உள்ளவர் தான் மேலப்பாளையத்தைச் சார்ந்த பி.ஏ. காஜா முஹைதீன் பாகவி. அதற்கு ஆதாரம் அவர் பேசி வெளியான வீடியோ பதிவை எழுத்தாக்கமாக தருகின்றோம்.
“ஷிர்க்குனா என்னங்க? அல்லாஹுத்தஆலாவினுடைய இலாஹாக ஆண்டவனாக ஆகியிருப்பதற்கு தகுதியானவர் என்று ஒருவரை சொல்வது. அல்லது இபாதத்திற்கு, வணக்கத்திற்கு தகுதியுடையவர் என்று சொல்வதுதான் ஷிர்க்கு. அல்லாஹுத்தஆலா கொடுத்த ஆற்றலை கொண்டு மற்ற சாதாரணமான மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களை அல்லாஹ் கொடுத்த ஆற்றலைக் கொண்டு நம் மக்கள் செய்கிறார்கள் என்று நம்பினால் அது ஷிர்குனு எங்க இருக்குது. உலகத்தில் எந்தப் பொருளுக்கும் ஆற்றல் கிடையாது அல்லாஹ்வைக் கொண்டே தவிர. நன்மக்களான அந்த சாலிஹீன்கள் அல்லாஹ்வின் உடைய அடியார்கள். அல்லாஹ் கொடுத்த ஆற்றலைக் கொண்டு நல்ல காரியத்தைச் செய்கிறார்கள் என்று நம்பும் பொழுது அதில் என்ன ஷிர்க் இருக்குது. காரணப் பொருளை சொல்லலாம் என்று குர்ஆனில் இருக்கிறது,
உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காமல் உறக்கத்தில் இருக்கும்போதும் அவற்றை அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். (ஸுமர்:42)
இன்னொரு இடத்தில் சொல்கிறான்.
உங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் மரணத்தின் வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (ஸஜ்தா:11)
இப்போது யார் மவ்த்தாக்குகிறார்? அல்லாஹுவா? மலக்குல் மவ்த்தா? அசல் சக்திக்குரியவனாக அல்லாஹ் இருக்குறான். அதற்கு காரணப் பொருளை சுட்டிக்காட்டிச் சொல்வது என்பது மார்க்கத்தில் தவறில்லை என்பதை இந்த ஆயத்தை வைத்து பெருமக்கள் நமக்குச் சொல்லியுள்ளார்கள்.
இது பி.ஏ. காஜா முஹைதீன் பேசிய உரையாகும். இதில் அவர் சொல்ல வருகின்றார்?
இறந்த நல்லடியார்கள் அல்லாஹ்வின் ஆற்றலைப் பெற்று உதவி செய்கின்றார்கள் என்று இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்ற கருத்துக்கு, பக்காவாக வக்காலத்து வாங்குகின்றார்.
இப்படி நன்மக்களை ஏஜண்டுகளாக ஆக்கியிருக்கின்றேன், அவரிடம் போய் உதவி கேளுங்கள் என்று அல்லாஹ் எங்காவது சொல்லியிருக்கின்றானா? என்ற கேள்விக்கெல்லாம் இவரிடம் பதிலிருக்காது. இவரது இந்தப் பேச்சு இவர் ஒரு ஷியா என்பதற்குச் சிறந்த ஆதாரமாகும். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பலமுறை பதில் சொல்லியுள்ளது.
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன், தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். தான் நாடியோருக்கு ஆண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். அல்லது ஆண் (பிள்ளை)களையும், பெண் (பிள்ளை)களையும் சேர்த்தே கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்கி விடுகிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.
அல்குர்ஆன் 42:49, 50
குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பது தன்னுடைய தனி அதிகாரத்தில் உள்ளது என இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
“தூய்மையான ஒரு மகனை உமக்குப் பரிசளிப்பதற்காக (வந்துள்ள) நான், உமது இறைவனின் தூதர்தான்!” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 19:19
இந்த வசனத்தில் ஜிப்ரீல் தான் மரியம் (அலை) அவர்களுக்கு மகனைப் பரிசளித்ததாகக் கூறுகிறான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் இங்கு காரணமாக இருந்ததால் ஜிப்ரீலிடம் குழந்தையைக் கேட்டுப் பிரார்த்திக்கலாமா? மலக்குல் மவ்த் உயிரைக் கைப்பற்றுவார் என்பதால், துர்மரணத்தை விட்டு மலக்குல் மவ்த்திடம் பாதுகாப்பு தேட வேண்டும் என்றுதான் நபியவர்கள் கற்றுத் தந்தார்களா? அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு கூறினார்களா?
காரணம் என்ற பெயரில் அல்லாஹ்வை டம்மியாக்கி, அவ்லியாக்களை சக்தியுள்ளவர்களாகச் சித்தரிக்கும் இந்தச் சித்தாந்தம் இறைமறுப்பு என்பதைப் பலமுறை நிரூபித்துள்ளோம். அதற்குப் பிறகும் பழைய ரிக்கார்டையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரிடம் போய் பத்து ரூபாய் கடனாகக் கொடு என்று கேட்பதும் உதவி தேடுவதுதான். அல்லாஹ் தான் சக்திக்குரியவன், மனிதர்களில் உதவுபவன் காரணமாக இருக்கிறான். இதுபோன்று தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம், இது ஷிர்க்கா? என்ற இத்துப்போன வாதத்தை முன்வைக்கிறார் பி.ஏ. காஜா முஹைதீன்.
மருத்துவரிடம் போய் காய்ச்சலுக்கு நிவாரணம் கேட்கும்போது அவர் நேரடியாக மருந்து தருகிறார். அதேபோன்று அவ்லியாவும் நேரடியாக கப்ரிலிருந்து தந்து விட்டால்தான் பிரச்சனையே இல்லையே! அல்லாஹ் எப்படி எந்த மருந்தும் இல்லாமல் மறைமுகமாக நிவாரணம் தருவானோ அதேபோன்று அப்துல்காதர் ஜீலானியும் தருவார் என்று நம்புவதுதான் ஷிர்க் என்ற பதிலை களியக்காவிளை விவாதத்தின் போது முன்வைத்தோம். அதையேதான் இப்போதும் கூறுகிறோம்.

ஜமாஅத்துல் உலமா தலைவரின் ஷியா ஆதரவுப் பேச்சு
சுன்னத்வல் ஜமாஅத் பெயரில் திருச்சி தென்னூரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திலேயே ஷியா கருத்தை தெளிவாக எடுத்து வைத்தார். தனது பேச்சை ஆரம்பிக்கும் போது ‘இப்போது இந்தக் கொள்கை மாநாட்டுக்கு என்ன அவசியம்?’ என்று புலம்பியவாறு அங்கலாய்த்துக் கொண்டே தன்னுடைய ஷியா கொள்கை உரையைத் துவக்கினார். அவர் தனது உரையில் வைத்த ஒரு சில ஆதாரபூர்வமான ஹதீஸ்களைத் தவிர மீதி அனைத்தும் பலவீனமான பொய்யான ஹதீஸ்களாகும்.
சஹாபாக்களை பின் பற்ற வேண்டும் என்பதற்குச் சான்றாக, ‘என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் அவர்களில் நீங்கள் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்’ என்று ஒரு ஹதீஸை அவிழ்த்து விட்டார். இந்த ஹதீஸ் பல்வேறு நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூபக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹஸ்மு கூறுகிறார்.
இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு கூட நிரூபணமாகவில்லை என்று இப்னுல் கையும், இப்னு ஹஜர் ஆகியோர் கூறுகின்றனர்.

அடிப்படையைத் தகர்க்கும் ஆபத்து நிறைந்த ஹதீஸ்
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் பொய்யர்களும், யாரென அறியப்படாதவர்களும் உள்ளதால் இது பலவீனமாக அமைவதுடன் இதன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
எத்தனையோ விஷயங்களில் நபித்தோழர்கள் நேர்முரணான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அது அறவே சாத்தியமற்றதாகும். மது பானம் விற்பனை செய்வது ஹலால் என்று ஸமுரா பின் ஜுன்துப் என்ற நபித்தோழர் கூறியிருக்கிறார். நபித்தோழரில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி அடையலாம் என்ற இந்தச் செய்தியின் அடிப்படையில் மதுபானம் விற்றால் அது சரியாகுமா? நோன்பு வைத்துக் கொண்டு ஐஸ் கட்டியைச் சாப்பிட்டால் நோன்பு முறியாது என்று அபூ தல்ஹா என்ற நபித்தோழர் கூறியுள்ளாரே! இதைப் பின்பற்ற முடியுமா? மனைவியுடன் கூடிய பின் விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது அவசியம் இல்லை என்று அலி, உஸ்மான், தல்ஹா, அபூ அய்யூப், உபை பின் கஅப் ஆகியோர் கூறியுள்ளனரே! அதைப் பின்பற்ற முடியுமா? என்று அறிஞர் இப்னு ஹஸ்ம் அவர்கள் கேள்வி எழுப்புகிறார். மேலும் நபித்தோழர்களிடம் ஏற்பட்ட பல தவறான முடிவுகளையும் பட்டியலிடுகிறார்.
இட்டுக் கட்டப்ட்ட இலா ஹீன் ஹதீஸ்
இத்துடன் ஏதோ வித்தியாசமாக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் ஒரு பொய்யான ஹதீஸை அடித்து விட்டார். இழுத்து இராகம் போட்டு இலாஹீன் என்ற ஹதீஸ் எடுத்து வைத்தார். அது என்ன இலா ஹீன் ஹதீஸ்?
நபித் தோழர் தனது மனைவியைப் பார்த்து உன்னை நான் ஒரு ‘ஹீன்’ அதாவது (குறிப்பிட்ட கால) அளவுக்கு தலாக் விட்டேன் என்று சொன்னாராம். இது அவருக்குக் கவலையை கொடுத்து விடுகின்றது. அவரது கவலையைப் பார்த்த சித்திக்குல் அக்பர் அபூபக்ர் (ரலி) அவர்கள், ஏன் கவலையாக இருக்கின்றீர்கள்? என்று வினவுகின்றார்கள். அதற்கு ‘எனது மனைவியை இலா ஹீன் என்று குறிப்பிட்டு விவாகரத்து செய்து விட்டேன். மனைவியை எப்போது திரும்ப மீட்டுவது என்ற கவலை என்னைக் கவலையில் ஆழ்த்துகின்றது’ என்று சொன்னாராம்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இலா ஹீன் என்ற வார்த்தையை அல்லாஹ் இறுதி நாள் வரை என்ற அர்த்தத்தில் குர்ஆனில் பயன்படுத்துகின்றான். அதனால் இறுதி நாள் வரை மீட்ட முடியாது என்று விளக்கம் சொல்லி விட்டார்கள். அவருக்குக் கவலை கூடி விட்டது.
அடுத்து உமர் (ரலி)க்கும் அவருக்கும் அது மாதிரி சந்திப்பு, அதே கேள்வி. இப்போது உமர் (ரலி)

وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ

குறிப்பிட்ட காலம்வரை (அதாவது மரணம்) அவர்களைச் சுகம் அனுபவிக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 10:98) என்ற வசனத்தை கூறி நீ இறக்கும் வரை உன் மனைவியை மீட்ட முடியாது என்று கூறி விட்டார்கள்.
அடுத்து உஸ்மான் (ரலி)க்கும் அவருக்கு அது மாதிரி சந்திப்பு, அது மாதிரி கேள்வி. இப்போது உஸ்மான் (ரலி)

تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا

அது, (நல்ல மரம்) தன் இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு காலத்திலும் (ஆறு மாதம் அல்லது ஒரு வருடம்) தனது கனியைத் தருகிறது (அல்குர்ஆன் 14:25) என்ற வசனத்தைக் காட்டி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்து நீ மீட்டிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள்.
அடுத்து அலீ (ரலி) அவர்களிடம் சென்று இதே கேள்வியைக் கேட்கிறார். அதற்கு அலீ (ரலி),

فَسُبْحَانَ اللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ

நீங்கள் மாலை நேரத்தை அடையும்போதும், காலை நேரத்தை அடையும்போதும் அல்லாஹ்வைப் போற்றுங்கள்! (அல்குர்ஆன் 30:17) என்ற வசனத்தைச் சொல்லி, அதாவது காலை அல்லது மாலை நேரத்திற்குள் நீங்கள் உங்கள் மனைவியை மீட்டிக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்கள்.
இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதே சந்திப்பு . அப்போது அவர் நபி (ஸல்) நான்கு நபித் தோழர்கள் சொன்னதை தெரிவித்து நான் யார் சொல்வதை எடுப்பது? என்று கேட்கின்றார். அதற்கு அவர் நீ அலீ (ரலி)யின் கருத்தை எடுத்துக் கொள் என்று சொன்னதாக குறிப்பிடுகின்றார்.
இது இவர் அடித்து விட்ட ஹதீஸ் பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். திராஸு தஹப் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது ஒரு நூலை குறிப்பிடுகின்றார். இதற்கு எந்த அறிவிப்பாளர் வரிசையையும் அவர் கூறவில்லை. கூற முடியாது. இந்த இடத்தில் அவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இதற்கு அறிவிப்பாளர் தொடரை கூற முடியுமா? என்று ஒரு பகிரங்க அறைகூவல் விடுகின்றோம். இல்லையேல், மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு பகிரங்கப் பொய்யை இட்டுக் கட்டி சொல்லியிருக்கின்றார் என்றே அர்த்தம் என்று மக்கள் மன்றத்தில் முன் வைக்கின்றோம்.
“என் மீது வேண்டுமென்று இட்டுக் கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி 110)
என்ற ஹதீஸின் எச்சரிக்கையை அவருக்கு சமர்பிக்கின்றோம்.
மேற்கண்ட ‘இலா ஹீன் ஹதீஸ்’ அறிவிப்பாளர் தொடர் இல்லாத மொட்டை ஹதீஸ்! முழுக்க இட்டுக்கட்டப்பட்ட, ஏற்றுக்கொள்ள முடியாத செய்தியாகி விடுகின்றது. கருத்து ரீதியிலும் இது ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக உள்ளது.
அலீ (ரலி)யைத் தூக்கி நிறுத்தி, அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற நபித்தோழர்களை மட்டம் தட்டினாலே அது ஷியாக்களின் பின்னல் வேலைப்பாடு; அது, அவர்களின் குள்ளநரி தந்திர வேலை என்று யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில், இவர் நாசூக்காக சுன்னத்வல் ஜமாஅத் கொள்கை விளக்கக் கூட்டத்திலேயே தந்திரமாக ஷியா சரக்கை அழகாக விற்று விட்டுப் போய் விட்டார். அதனால் இந்த மாநாட்டை பகிரங்கமாக ஒரு ஷியா மாநாடு என்று கூறுகிறோம். இவ்வாறு கூறுவதற்காக, கப்ரு வணக்கத்திற்கு எதிராகப் போராடும் ஆலிம்களிடம் நாங்கள் எங்கள் மனவருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறோம்.

© TAMIL NADU THOWHEED JAMAATH

ஓரிறைக்கொள்கை! கடைப்பிடிப்பதற்கு மிக எளிதானது

ஓரிறைக்கொள்கை! கடைப்பிடிப்பதற்கு மிக எளிதானது

தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு உடல் உழைப்பு தேவைப்படும். ஆனால் அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் அவனை நம்புவதற்கு எந்தக் கஷ்டமும் இல்லை.

பல பொருட்களை வழிபடுவது சிரமமாகும். சகல ஆற்றலுடன் கொண்ட ஒரே ஒரு இறைவனை வழிபடுவது இலகுவானதாகும். இணை வைக்கக்கூடாது என்பதைத் தான் அல்லாஹ் நம்மிடத்தில் முதலில் எதிர்பார்க்கிறான்.

عَنْ أَنَسٍ، يَرْفَعُهُ
إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا: لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ، أَنْ لاَ تُشْرِكَ بِي، فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்’ என்று பதிலளிப்பான்.

அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை’ என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

நூல் : புகாரி-3334

தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஓரிறைக் கொள்கையே முதன்மையானது

ஓரிறைக் கொள்கையே முதன்மையானது

ஒவ்வொரு மனிதனும் முதலில் ஓரிறைக் கொள்கையைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். ஏகத்துவத்தை ஏற்ற பிறகு தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் கடமையாகும். ஏகத்துவம் இஸ்லாத்தின் முதல் முக்கியக் தூணாக இருக்குறது.

يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ
لَمَّا بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ أَهْلِ اليَمَنِ قَالَ لَهُ: «إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الكِتَابِ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى، فَإِذَا عَرَفُوا ذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا صَلَّوْا، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ، فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ، وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ»
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி-7372

தொடரும் இன்ஷா அல்லாஹ்

மறைவான விஷயங்களை நம்ப வேண்டும்

மறைவான விஷயங்களை நம்ப வேண்டும் 

ஒரு முஸ்லிம் அவசியம் நம்ப வேண்டிய விஷயங்களை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இவற்றை நம்பினால் தான் ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக நாம் இருக்க முடியும். இவற்றை மறுத்து விட்டால் இறை மறுப்பாளர்களாக மரணிக்கும் நிலை ஏற்படும்.

அல்லாஹ்வையும், தூதர்களையும், வானவர்களையும், வேதங்களையும், சொர்க்கம் நரகத்தையும், மறுமையையும், மண்ணறை வாழ்க்கையையும் விதியையும் நாம் நம்ப வேண்டும்.

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ .
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ‘ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-50

கலிமாவை எப்படி மொழிய வேண்டும்?

லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை சொர்க்கத்தின் திறவுகோல் என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இந்தக் கலிமா சொர்க்கத்தின் சாவியாக இருக்கிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

சாவியை வைத்துத் திறக்க வேண்டுமானால் அந்த சாவிக்குப் பற்கள் இருக்க வேண்டும். பல் இல்லாத சாவியை வைத்து எதையும் திறக்க முடியாது. லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை சொர்க்கத்தின் திறவுகோல் தான். இந்த வார்த்தையின் பொருளை விளங்காமல் இதன் கருத்துக்கு மாற்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் இந்த வார்த்தையை வாயால் மொழிவதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்படாது

லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையின் பொருளை விளங்கி செயல்படாத காரணத்தினால் தான் சமுதாய மக்கள் இணை வைப்பில் இலகுவாக ஈடுபட்டு விடுகிறார்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கிடையாது என்று வாயால் மொழிவதோடு அதைப் புரிந்து செயல்பட வேண்டும் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கட்டளையிடுகிறது.

فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ
(முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

அல்குர்ஆன் 47:19

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்தவராக எவர் மரணிக்கிறாரோ அவர் சொர்க்கம் புகுந்துவிட்டார்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: அஹ்மத்-434

இந்தக் கலிமா கூறும் கருத்தை மனதில் ஆழப்பதித்து அதில் தடம் புரளாமல் உறுதியாக வாழ்ந்து வந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதி கூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி-128

“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-52

தொடரும் இன்ஷா அல்லாஹ்

வெற்றியை பெற்றுத் தரும் வார்த்தை

வெற்றியை பெற்றுத் தரும் வார்த்தை

லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையை முறையாகப் புரிந்து அதன் கருத்திற்கு முரணில்லாத வகையில் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் இந்த வார்த்தை மறுமையில் நமக்கு மிகப் பலனாக இருக்கும் நன்மை தீமைகள் எடை போடப்படும் தராசில் மிகுந்த எடை கொண்ட நன்மையாக இந்த வார்த்தை விளங்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் படைப்பினங்கள் கூடியிருக்கும் போது எனது சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அழைக்கப்படுவார். அவரிடம் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரித்துக் காட்டப்படும். ஒவ்வொரு (பாவ)ஏடும் பார்வை எட்டுகின்ற அளவிற்கு (பெரிதாக) இருக்கும்.

“இவற்றில் எதையாவது நீ மறுக்கிறாயா? காவலர்களான எனது எழுத்தர்கள் (வானவர்கள்) உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா?” என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். “எனது இறைவா! இல்லை” என்று அவர் கூறுவார். “(பாவங்கள் செய்ததற்கான) காரணம் ஏதும் உள்ளிடத்தில் உண்டா?” என்று இறைவன் கேட்டான். “எனது இறைவா! இல்லை” என்று அவர் கூறுவார். “உனக்கு நம்மிடத்தில் நல்ல வாழ்வே உள்ளது.

இன்றைய தினம் நீ அநீதியிழைக்கப்பட மாட்டாய்” என்று இறைவன் அப்போது ஒரு சிறிய அட்டை வெளிவரும். அதில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையாகவும் தூதராகவும் உள்ளார் என்று நான் நம்புகிறேன்) என்று இருக்கும்.

“உன்னுடைய (நன்மை தீமையின்) எடையை நிறுத்துப்பார்” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அவர் “எனது இறைவா!. இந்தப் பெரும் (பாவ) ஏடுகள் இருக்கும் போது இந்தச் சிறிய அட்டை என்னவாகும்?” என்று கேட்பார். அதற்கு இறைவன் “உனக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது” என்று கூறுவான். பெரும் (பாவ) ஏடுகள் (தராசின்) ஒரு தட்டிலும் அந்தச் சிறிய அட்டை மறு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பெரும் ஏடுகள் எடை குறைந்து விடும். சிறிய அட்டை கனத்து விடும். அல்லாஹ்வின் பெயர் இருக்கும் போது எதுவும் கனக்காது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல்: திர்மிதி-2563

எனவே எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு போதும் அல்லாஹ்விற்கு இணை வைத்து விடாமல் லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை கூறும் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்து ஈருலகில் வெற்றியடையும் பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

தொடரும்
இன்ஷா அல்லாஹ்

ஓரிறைக் கொள்கை ஒரு மாபெரும் பாக்கியம்

ஓரிறைக் கொள்கை ஒரு மாபெரும் பாக்கியம் 

செல்வமும், சொத்துக்களும் தான் பாக்கியம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈடு இணையில்லாத ஒரு பாக்கியமாக ஏகத்துவம் இருக்கின்றது. எத்தனையோ கோடீஸ்வரர்களுக்கும், அரசர்களுக்கும், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கும் வழங்காத ஏகத்துவ பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கி அவர்களை விட நம்மை மேம்படுத்தியுள்ளான்.

ஒரு மனிதன் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறுமையிலும் பல நன்மைகளை அடைகிறான். எனவே இதைப் பெரும் பாக்கியமாக உணர்ந்து, மரணிக்கும் வரை ஏகத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள நாம் அரும்பாடுபட வேண்டும்.

12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِىْۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَىْءٍ‌ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ‏
என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.

அல்குர்ஆன் 12:38

தொடரும் இன்ஷா அல்லாஹ்...

சமாதிகளையும் சிலைகளையும் வணங்குவது


முஸ்லிம்களில் பலர் சமாதிகளையும் சிலைகளையும் வணங்குவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்:

இன்றைய முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்விற்கு இணை வைத்துக் கொண்டு அவனை நம்புகிறார்கள். நம் சமுதாயத்தில் பெரும்பாலோரின் நிலை இப்படித் தான் இருக்கிறது.

 وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏
அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்குர்ஆன் 12-106

நபி (ஸல்) அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியும் போது, இணை வைக்காமல் ஒரிறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாபெரும் சமுதாயத்தை உருவாக்கிச் சென்றார்கள்.

இதன் பிறகு வரக்கூடிய சமூகத்தாரில் பலர் இணை வைப்பில் விழுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவர்கள் கூறியது போன்றே, தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு இணை வைத்துக் கொண்டிருக்கின்ற மக்களைத் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமூகத்தில் சில கூட்டத்தார்கள் இணை வைப்பாளர்களுடன் இணையும் வரை மறுமை நாள் வராது. என் சமூகத்தாரில் சில கூட்டத்தினர் சிலைகளை வணங்கும் வரை மறுமை நாள் வராது.

அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)

நூல்: அபூதாவூத்-3710

மருத்துவம்

என்னவென்பதைத் தெளிவாக எடுத்துரைத்தால் தான் அவரால் மருத்துவம்.  செய்ய முடியும். ஆனால் அல்லாஹ் நம்மிடம் எந்த விசாரணையும். செய்யாமல் நோயை அகற்றுகிறான்.
ஒரு மருத்துவர். மருத்துவம் செய்வதற்கு இதயத் துடிப்பை அறியும் கருவி, உள்ளுறுப்புகளைப் படம்பிடிக்கும் கருவி போன்றவை தேவைப்படுகிறது. வயிற்றில் கட்டிகள் இருந்தால் அதை வெட்டி எடுக்க கத்தி தேவைப்படுகிறது. இன்னும் பல சாதனங்கள் இருந்தால் தான் அவரால் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அல்லாஹ்விற்கு கத்தியோ, புகைப்படக் கருவியோ, இதயத்துடிப்பை அறியும் கருவியோ எதுவும் தேவையில்லை. அறுவை சிகிச்சையோ வேறு எந்த சிகிச்சையுமே இல்லாமல் குணப்படுத்தும் சக்தி அவனுக்கு உள்ளது.
நோய்க்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து அவற்றைச் சரியாக உண்டு வருமாறு மருத்துவர் கூறுவார். அவர் கூறியதைப் போன்று மருந்தைச் சாப்பிட்டால் தான் நோய் குணமாகும். ஆனால் அல்லாஹ்விற்கோ நோயைக் குணப்படுத்த எந்த மருந்தும், மாத்திரையும் தேவையில்லை.
மருத்துவர் உடனடியாக நோயைக் குணப்படுத்திவிட மாட்டார். நீண்ட கால அவகாசம் அவருக்குத் தேவைப்படும். ஆனால் அல்லாஹ்விற்கோ எந்த அவகாசமும் வேண்டியதில்லை.
மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் நோயாளி இறப்பதுண்டு. மருத்துவரின் சிகிச்சை தோற்பதுண்டு. ஆனால் அல்லாஹ்வின் சிகிச்சை வெற்றியடைவது நிச்சயம்.
உதாரணத்திற்காகத் தான் கேட்கும் திறன், பார்வைத் திறன், குணப்படுத்தும் ஆற்றல் ஆகிய மூன்று விஷயங்களை இங்கு கூறியுள்ளோம். இது போன்று பல விஷயங்களில் அல்லாஹ்விற்கும், அடியார்களுக்கும் மத்தியில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ்வுடைய தனித் தன்மைகளில் பிறரைக் கூட்டுச் சேர்த்து விட்டால் இணைவைப்பு ஏற்பட்டு விடுகிறது.

அல்லாஹ் பார்ப்பது போன்றும், கேட்பது போன்றும், உதவி செய்வது போன்றும், நோயை நீக்குவது போன்றும் படைப்பினங்களில் யாராவது காண்பார் என்றோ, கேட்பார் என்றோ, உதவி செய்வார் என்றோ. நோயை நீக்குவார் என்றோ ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாக ஆகிவிடுவான்.

மேலும் அல்லாஹ் மட்டுமே செய்கின்ற காரியங்களை மற்றவர்களும் செய்வார்கள் என்று நம்புவதும் இணை வைப்பாகும். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்குச் செய்வதும் இணை வைப்பாகும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

நபிமார்களானாலும் அல்லாஹ்விற்கு நிகராக முடியாது

நபிமார்களானாலும் அல்லாஹ்விற்கு நிகராக முடியாது

நபிமார்கள் அனைவரும் இறை நேசர்கள் என்பது உறுதியான விஷயமாகும். அப்படிப்பட்ட இறைத் தூதர்களை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்கிவிடக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் இறைத் தகுதியை எட்டாத மனிதர்களை அல்லாஹ்விற்கு இணையாக்குவது எவ்வளவு மோசமான செயல்?

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்!” என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை, மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக்  கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகிவிடுங்கள்” (என்றே கூறினர்)

‘வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்” என்று அவர் உங்களுக்கு ஏவமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக ஆன பின் (ஏக இறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா?

அல்குர்ஆன் 3:79, 80

நபிமார்கள் உட்பட எவரும் அடிமை என்ற தகுதியைத் தாண்டி இறைவனின் தன்மைகளை ஒரு போதும் அடைய முடியாது.

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

அல்குர்ஆன் 19 – 93

மக்கத்துக் காஃபிர்கள் ஏன் வழிகெட்டார்கள்?


மக்கத்துக் காஃபிர்கள் ஏன் வழிகெட்டார்கள்?

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை கடவுள் இல்லை என்று மறுக்கவில்லை. இந்த வானம் பூமி அனைத்தையும் படைத்ததும், மழையை இறக்குவதும். போழிவுகள் வரும் போது காப்பாற்றுவதும் அல்லாஹ் தான் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அல்லாஹ்விற்கு மேலாக அவர்கள் யாரையும் நினைக்கவில்லை.

இவர்கள் இவ்வாறு அல்லாஹ் விஷயத்தில் நம்பினாலும் அல்லாஹ்விற்கு இணை கற்பித்த ஒரே காரணத்தினால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள் முஸ்லிம்களாக இருக்கவில்லை.

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக எவற்றை நம்பினார்களோ அந்த அதிகாரங்கள் அப்துல்காதர் ஜீலானிக்கும். ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் உள்ளது என்று இன்றைக்கு நம்புபவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களாக இருக்க முடியாது. 

பெரும் துன்பங்கள் வரும் போது ‘முஹ்யித்தினே” என்று அழைப்பவர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். ஆனால் மக்கத்துக் காஃபிர்கள் பெரும் துன்பங்கள் வரும் போது அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள். மற்ற கடவுள்களை மறந்து விடுவார்கள். இந்த வகையில் மக்கத்துக் காஃபிர்களை விட மோசமான நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.

“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

அல்குர்ஆன் 29-61

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக்கொள்வதில்லை.

அல்குர்ஆன் 29:63

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 31:25

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 31:32

சிறந்த மகானும் இறைத் தூதருமான இப்ராஹீம் (அலை) அவர்களையே அல்லாஹ்விற்கு நிகராக மக்கத்துக் காஃபிர்கள் கருதினார்கள். இஸ்மாயில் (அலை) அவர்களையும் அல்லாஹ்விற்கு இணையாகக் கருதினார்கள். இதனால் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள்.

அப்படியானால் முகவரியில்லாதவர்களையெல்லாம் அல்லாஹ்விற்கு நிகராக ஆக்குபவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்கள் இருந்தன.

அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக..! அல்லாஹ்வின் மீது ஆணையாக…! இவ்விருவரும் இரு நபிமார்களும்) அம்புகள் மூலமாக குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்” என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள். அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி

நூல்: புகாரீ -1601

கிறீத்தவர்கள் ஏன் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள்?

கிறீத்தவர்கள் ஏன் இறை மறுப்பாளர்களாக ஆனார்கள்?

கிறித்தவர்கள், இறைநேசர் என்று நிரூபிக்கப்படாத சாதாரண மனிதரை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்கவில்லை. மாறாக இறை நேசர் என்று அல்லாஹ்வால் நிரூபிக்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களிடமே பிரார்த்தித்தார்கள்.

தந்தையில்லாமல் அற்புதமாகப் பிறந்த சிறப்பு ஈஸா நபிக்கு உண்டு. குருடர்களுக்குப் பார்வைகளை வரவழைப்பது, இறந்தவர்களுக்கு உயிரூட்டுவது. குஷ்ட நோயாளிகளைக் குணப்படுத்துவது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட பொருட்களை அறிவிப்பது, களிமண்ணால் செய்யப்பட்ட பறவைகளுக்கு உயிர் கொடுப்பது எண்ணற்ற அற்புதங்களை அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்.

இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்). “நான் உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் ஒரு பறவையின் வடிவத்தைப் போன்று உருவாக்கி அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் ஆணைப்படி பறவையாக ஆகும். அல்லாஹ்வின் ஆணைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன்; பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேமிப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்று ஈஸா கூறினார்.)

அல்குர்ஆன் 3 : 49

அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான். அவரது தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்றே மஸீஹ் கூறினார்.

அல்குர்ஆன் 5-72

ஈஸா (அலை) அவர்களிடம் பிரார்த்தனை செய்தால் மறுமையில் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கிறித்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனுடைய தகுதிக்கு உயர்த்தியுள்ளார்கள்.

இவர்களைப் போன்றே நம் சமுதாயத்தினரும், மகான்கள் மறுமையில் நமக்கு உதவி செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தம்மிடம் பிரார்த்தித்தவர்களுக்கு ஈஸா (அலை) அவர்களால் மறுமையில் எந்த உதவியும் செய்ய முடியாது. அவ்வாறிருக்க முகவரி இல்லாமல் மகான்கள் என்று யூகிக்கப்படுபவர்களால் மறுமையில் மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

““மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.

அல்குர்ஆன் 5:116