பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, November 27, 2019

மனிதநேய மார்க்கம்

 மனிதநேய மார்க்கம்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும். மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.

இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:1

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 39:13

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

1445- حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ فَقَالُوا يَا نَبِيَّ اللهِ فَمَنْ لَمْ يَجِدْ قَالَ يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ وَلْيُمْسِكْ ، عَنِ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ
“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 1445

ஒருவரது பொருளை அவரது வாகனத்தில் ஏற்றி விடுவதும் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு சரியான வழியைக் காட்டுவதும் இஸ்லாம் இயம்பும் இனிய பண்புகளாகும்.

2891- حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ ، عَنْ هَمَّامٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
كُلُّ سُلاَمَى عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا ، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ وَدَلُّ الطَّرِيقِ صَدَقَة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2891

முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் தமது தேவை போக எஞ்சியதை, தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுமாறு நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள். இதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதோர் என்று வித்தியாசம் கிடையாது. தேவையுள்ளோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப் பக்கமும் இடப் பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.

 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: முஸ்லிம் 3562

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

6721 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَبِى رَافِعٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِى فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِى عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِى. قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِى يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِى
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.

அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (4661)

கடனாளிகளுக்கு உதவி

கடனில் தத்தளிப்பவர்களின் சிரமத்தைப் போக்கினால் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலை மறுமை நாளில் அவருக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளித்து மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யுமாறு போதிக்கின்றான்.

7704 – حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَتَقَارَبَا فِى لَفْظِ الْحَدِيثِ – وَالسِّيَاقُ لِهَارُونَ قَالاَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ أَبِى حَزْرَةَ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ
خَرَجْتُ أَنَا وَأَبِى نَطْلُبُ الْعِلْمَ فِى هَذَا الْحَىِّ مِنَ الأَنْصَارِ قَبْلَ أَنْ يَهْلِكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ صَاحِبَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهُ غُلاَمٌ لَهُ مَعَهُ ضِمَامَةٌ مِنْ صُحُفٍ وَعَلَى أَبِى الْيَسَرِ بُرْدَةٌ وَمَعَافِرِىٌّ وَعَلَى غُلاَمِهِ بُرْدَةٌ وَمَعَافِرِىٌّ فَقَالَ لَهُ أَبِى يَا عَمِّ إِنِّى أَرَى فِى وَجْهِكَ سَفْعَةً مِنْ غَضَبٍ. قَالَ أَجَلْ كَانَ لِى عَلَى فُلاَنِ بْنِ فُلاَنٍ الْحَرَامِىِّ مَالٌ فَأَتَيْتُ أَهْلَهُ فَسَلَّمْتُ فَقُلْتُ ثَمَّ هُوَ قَالُوا لاَ. فَخَرَجَ عَلَىَّ ابْنٌ لَهُ جَفْرٌ فَقُلْتُ لَهُ أَيْنَ أَبُوكَ قَالَ سَمِعَ صَوْتَكَ فَدَخَلَ أَرِيكَةَ أُمِّى. فَقُلْتُ اخْرُجْ إِلَىَّ فَقَدْ عَلِمْتُ أَيْنَ أَنْتَ.
فَخَرَجَ فَقُلْتُ مَا حَمَلَكَ عَلَى أَنِ اخْتَبَأْتَ مِنِّى قَالَ أَنَا وَاللَّهِ أُحَدِّثُكَ ثُمَّ لاَ أَكْذِبُكَ خَشِيتُ وَاللَّهِ أَنْ أُحَدِّثَكَ فَأَكْذِبَكَ وَأَنْ أَعِدَكَ فَأُخْلِفَكَ وَكُنْتَ صَاحِبَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَكُنْتُ وَاللَّهِ مُعْسِرًا. قَالَ قُلْتُ آللَّهِ.
قَالَ اللَّهِ. قُلْتُ آللَّهِ. قَالَ اللَّهِ . قُلْتُ آللَّهِ. قَالَ اللَّهِ. قَالَ فَأَتَى بِصَحِيفَتِهِ فَمَحَاهَا بِيَدِهِ فَقَالَ إِنْ وَجَدْتَ قَضَاءً فَاقْضِنِى وَإِلاَّ أَنْتَ فِى حِلٍّ فَأَشْهَدُ بَصَرُ عَيْنَىَّ هَاتَيْنِ – وَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى عَيْنَيْهِ – وَسَمْعُ أُذُنَىَّ هَاتَيْنِ وَوَعَاهُ قَلْبِى هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ أَظَلَّهُ اللَّهُ فِى ظِلِّهِ ». قَالَ فَقُلْتُ لَهُ أَنَا يَا عَمِّ لَوْ أَنَّكَ أَخَذْتَ بُرْدَةَ غُلاَمِكَ وَأَعْطَيْتَهُ مَعَافِرِيَّكَ وَأَخَذْتَ مَعَافِرِيَّهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ فَكَانَتْ عَلَيْكَ حُلَّةٌ وَعَلَيْهِ حُلَّةٌ . فَمَسَحَ رَأْسِى وَقَالَ اللَّهُمَّ بَارِكْ فِيهِ يَا ابْنَ أَخِى بَصَرُ عَيْنَىَّ هَاتَيْنِ وَسَمْعُ أُذُنَىَّ هَاتَيْنِ وَوَعَاهُ قَلْبِى هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ ». وَكَانَ أَنْ أَعْطَيْتُهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنَ عَلَىَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِى يَوْمَ الْقِيَامَةِ
யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் நிழல் தருகின்றான்.

அறிவிப்பவர்: அபுல்யசர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5736

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

7376- حَدَّثَنَا مُحَمَّدٌ ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ وَأَبِي ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.

எதிர்விளைவைக் கவனிக்கும் இஸ்லாமிய மார்க்கம்

இறைவன் ஒரே ஒருவன் தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; வேறு எந்தச் சக்தியுமில்லை என்ற ஏகத்துவ, ஓரிறைக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட மார்க்கம் இஸ்லாமிய மார்க்கமாகும்.

ஒரு முஸ்லிம் இந்த ஏகத்துவக் கொள்கையை நம்பிக்கை கொள்வதுடன், மற்றவர்களையும் இந்தக் கொள்கையின்பால் கனிவோடும், கண்ணியத்தோடும் அழைக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. அவ்வாறு அழைக்கும் போது உண்மையான கடவுளான அல்லாஹ்வுக்கு மட்டும் தான் அனைத்து ஆற்றலும் உள்ளன; மற்ற தெய்வங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை, குர்ஆன் கூறக்கூடிய அழகிய, அறிவார்ந்த வாதங்களுடன் எடுத்து வைக்கச் சொல்கின்றது.

அப்படி உண்மையான கடவுள் கொள்கையை எடுத்து வைக்கும் போதும், இன்னபிற சமயங்களிலும் பிற மதத்தின் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று தெளிவான கட்டளையைப் பிறப்பித்துள்ளது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:108)

இவ்வாறு கட்டளையிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்துப் பேச வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகின்றது.

ஒவ்வொரு சாமானியனும் உலக விவகாரங்களில் எதிர்விளைவைத் தெரிந்தே வைத்திருக்கின்றான். ஒரு வியாபாரி, ஒரு பொருளுக்கு 100 ரூபாய் என்று விலை சொல்லும் போது, வாங்குபவர் அதை 50 ரூபாய்க்குத் தருவீர்களா? என்று கேட்கின்றார். அப்போது தான் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் 70 ரூபாய்க்கு வியாபாரி வருவார் என்று வாடிக்கையாளர் எதிர்பார்க்கின்றார்.

இப்படி, என்ன செய்தால் என்ன வரும் என்ற எதிர் விளைவை ஒவ்வொரு சாதாரண மனிதனும் விளங்கி வைத்திருக்கின்றான். இந்த விவரமும் விளக்கமும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

அந்த அடிப்படையில் தான் பிற மதக் கடவுள்களைத் திட்டக்கூடாது என்று கூறுகின்றது. ஒரு முஸ்லிமின் பார்வையில் பிற மதக் கடவுள்கள் போலியானவை, அவற்றுக்கு எந்தச் சக்தியும் இல்லை தான். அதனால் அவன் அந்தக் கடவுள்களைத் திட்டும் போது அந்த தெய்வங்களால் அவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

ஆனால் இவர் திட்டுவதால் பிற மதத்தவர் பாதிப்புக்குள்ளாகி, அவர் பதிலுக்கு இவர் வணங்குகின்ற உண்மையான கடவுளைத் திட்ட ஆரம்பித்துவிடுவார். அது இவரை உண்மையான கடவுளைத் திட்டிய பாவத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது.

முஸ்லிமல்லாத அந்த நபர் உண்மையான கடவுளாகிய அல்லாஹ்வைத் திட்டுவதற்கு இந்த முஸ்லிம் காரணமாகின்றார். அதனால் அந்த முஸ்லிமுக்கு இது பாவமாகவும் பாதகமாகவும் ஆகி விடும். ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனிக்க வேண்டும் என்று இறைவனின் வேதம் கூறுகின்றது.

பிள்ளையின் திட்டு தான்; பிறர் திட்டல்ல!

கடவுள் விஷயத்தில் எதிர்விளைவைப் பார்க்கச் சொல்கின்ற மார்க்கம், பெற்றோர்கள் விஷயத்திலும் பிள்ளைகள் எதிர்விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

5973- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ، عَنْ أَبِيهِ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ قِيلَ يَا رَسُولَ اللهِ وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ وَيَسُبُّ أَمَّهُ
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.

நூல்: புகாரி 5973

இன்றைக்கு நமது நாட்டில் ஒருவர் மற்றொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது, தன்னுடன் சண்டை போடுபவரைத் திட்டுவதுடன் மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. அவருடைய ஏச்சு பேச்சுக்கள் அத்துடன் நிற்பதில்லை. அவருடைய பெற்றோரையும் சேர்த்தே திட்டுகின்றார். இவரும் பதிலுக்கு அவருடைய பெற்றோரைத் திட்டுகின்றார்.

இப்படி எதிர்விளைவை ஏற்படுத்தி, தன்னுடைய பெற்றோரை எதிரி திட்டினால் அது இவரே நேரடியாகத் தனது பெற்றோரைத் திட்டியதற்குச் சமம் என்று மார்க்கம் கூறுகின்றது. இது பெரும் பாவமாகும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்படிப் பிறர் மூலம் தன்னுடைய பெற்றோரைத் திட்டுகின்ற எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியவராக ஒரு முஸ்லிம் இருக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பிறர் நம்முடைய பெற்றோரைத் திட்டுவதற்குத் தூண்டுவதும் பெரும் பாவம் தான் என்று இஸ்லாம் சொல்கின்றது. அப்படியானால் பெற்றோரை நேரடியாகத் திட்டுவது மிகப் பெரும் பாவம் என்பதையும் பெற்றோரை அடிப்பது கொடிய பாவம் என்பதையும், அவர்களைக் கொலை செய்வது மிகக் கொடூரமான பாவம் என்பதையும் இந்தச் செய்தி உள்ளடக்கி அமைந்துள்ளது.

விளையாட்டு வினையாகும்

ஒருவர் தனது கையில் கத்தியை வைத்துக் கொண்டு, உன்னைக் குத்தி விடுவேன் என்று தனது நண்பரை நோக்கி கத்தியைக் காட்டிக் கேலி செய்வார். இஸ்லாம் இங்கும் பின்விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

7072- حَدَّثَنَا مُحَمَّدٌ ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ ، عَنْ هَمَّامٍ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لاََ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ ، فَإِنَّهُ لاَ يَدْرِي لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 7072

இந்தக் கேலிப்பேச்சு துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கும் இன்று மிகவும் பொருந்திப் போகின்றது. கத்தியாவது அதை வீசுவதற்குக் கொஞ்சம் முயற்சியைப் பிரயோகிக்க வேண்டும். துப்பாக்கிக்கு அதுகூடத் தேவையில்லை. ஆட்காட்டி விரலை அசைத்தால் போதும். அநாயசமாக எதிரில் நிற்கும் ஆள் காலியாகிப் போய்விடுவார்.

எனவே தான் ஒரு முஸ்லிம் விளைவைக் கவனித்து வினையாற்ற வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றது. ஒரு விளையாட்டு வினையாகிப் போய்விடக்கூடாது என்ற விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

எலி ஏற்படுத்தும் எதிர்விளைவு

6295- حَدَّثَنَا قُتَيْبَةُ ، حَدَّثَنَا حَمَّادٌ عَنْ كَثِيرٍ ، عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
خَمِّرُوا الآنِيَةَ وَأَجِيفُوا الأَبْوَابَ وَأَطْفِئُوا الْمَصَابِيحَ فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6295

இரவில் தூங்கும் போது எலி ஏற்படுத்தும் எதிர்விளைவைக் கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இந்த உத்தரவைப் போடுகின்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும் என்ற சட்டத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கேஸ் சிலிண்டர் வெடித்து எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. ஒருவர் இரவில் தூங்கச் செல்லும் போது கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் பின்விளைவைக் கவனிக்க வேண்டும்.

ஆலய உடைப்பு அறவே கூடாது

ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டு பிற மத வழிபாட்டுத் தலங்களை உடைத்துவிடக் கூடாது. ஒரு முஸ்லிம் இந்தப் பாவத்தைச் செய்தான் என்றால் அதன் எதிர்விளைவு, பள்ளிவாசல் தகர்ப்புக்கு அது வழிவகுத்து விடும். இதன் மூலம் பள்ளிவாசலை இடித்ததற்கு அந்த முஸ்லிமே காரணமாகி விடுகின்றார். இதைத் திருக்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:40

ஒரு மதத்தவர், அடுத்த மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தைத் தாக்காமல் காப்பது தான் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு வளையமாகும். அந்தப் பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட்டுவிட்டால் எந்த வழிபாட்டுத் தலத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிடும். இதிலும் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

பிற மதத்தவரைக் கொலை செய்தல்

பல்வேறு மதத்தினர் சேர்ந்து வாழ்கின்ற நாடு இந்தியா! இதுபோன்ற நாடுகளில் பிற மதத்தவரை ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதன் விளைவு விபரீதமாக அமைந்துவிடும்.

பிற மதத்தினரில் யாரையேனும் ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால் பதிலுக்கு அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள். இதைக் கவனித்தே ஒரு முஸ்லிம் செயல்பட வேண்டும்.

அப்படியானால் பிற மதத்தினர் எதிர்த்துத் தாக்க மாட்டார்கள் என்றால் அப்போது அவர்களைக் கொலை செய்யலாம் என்று இதை விளங்கிக் கொள்ளக்கூடாது. பொதுவாகக் கொலை செய்வது கொடிய பாவம் என்பதை இதே இதழில், “கொலை கொடியது’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்து செயல்படவேண்டும். அப்படிக் கவனிக்கத் தவறினால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை மேற்கண்ட சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அவர்கள் தாம் (ஏக இறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம். (அல்குர்ஆன் 48:25)

மக்காவில் தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தாமல் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலையைக் கவனித்துச் செயல்படுமாறு வல்ல இறைவன் தனது தூதருக்குக் கட்டளையிடுகின்றான்.

முஸ்லிம்களே முஸ்லிம்களை நேரடியாகத் தாக்கிவிடும் அபாயத்தை இங்கு அல்லாஹ் குறிப்பிட்டாலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் பகுதிகளில் பிற மதத்தவர்களால் அழிவுக்குள்ளாகி விடுகின்ற எதிர்விளைவையும் சேர்த்துத் தான் இந்த வசனம் குறிக்கின்றது.

இன்று இந்த எதிர்விளைவுகளை, இந்தியாவுக்கு எதிராக அறிக்கை விடுகின்ற அய்மான் ஜவாஹிரிகள் பார்ப்பதில்லை. இதனால் எத்தனை முஸ்லிம்கள் அழிந்தாலும் அதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. இப்படி எதிர்விளைவைப் பார்க்காதவர் முஸ்லிம்கள் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மொத்தத்தில் ஒரு முஸ்லிம் இந்த உலகம், மறுமை ஆகிய அனைத்து விஷயங்களிலும் எதிர்விளைவுகளைக் கவனித்தே செயல்பட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இதைப் புரிந்து செயல்பட்டால் தான் இம்மை, மறுமையில் வெற்றி பெற முடியும்.

No comments:

Post a Comment