பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 24, 2017

தொழுகையைத் திருந்தத் தொழுவீர்

தொழுகையைத் திருந்தத் தொழுவீர்
சபீர் அலி. எம்.ஐ.எஸ்.சி
இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களும், தூய எண்ணத்துடன் செயல் ரீதியாக செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளும் உள்ளன.
இவ்வாறு செயல் வடிவில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகையாகும்.
தொழுகை என்பது இறைவனுக்காக ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு நாளைக்கு குறித்த நேரத்தில் குறிப்பிட்ட முறையில் ஐவேளை செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
தொழுகையைத் தவறவிடாமல் சரியான முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு இறைவனிடம் ஏராளமான நன்மைகள் உள்ளன.
“தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்”.
அல்குர்ஆன்(4:162).
மேலும், தொழுகையைப் பேணாமல் தவறவிட்டவர்களுக்கு தண்டனைகள் உள்ளது என்பதையும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன்(74: 40 - 44).
தொழுகையாளிகளுக்கு கூலிகளும், தொழாதவர்களுக்கு தண்டனைகளும் இருப்பதைப் போன்றே தொழுதும் அலட்சியத்தையும், சோம்பலையும் தவிர்க்காதவர்களுக்கு கடும் கண்டனத்தையும் திருக்குர்ஆன் பதிவு செய்கிறது.
“தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான்”.
அல்குர்ஆன் (107: 4, 5).
“நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்”.
அல்குர்ஆன் (4: 142).
இன்றைக்கு மக்கள் தங்களின் அலட்சியத்தால் தொழுகையில் செய்யும் தவறுகளைத்தான் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
1. நிதானமாக வாருங்கள்.
தொழுகைக்குத் தாமதமாக வரும் மக்கள் இமாம் நிலையில் இருக்கும் போது நிதானத்துடன் நடந்து வருகிறார்கள்.
அதே வேளையில் இமாம் ருகூஃவிற்குச் சென்று விட்டால், தொழும் இடமே அதிரும் அளவிற்கு தொழுபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக நிதானம் இழந்து வேகமாக ஓடி வருவதைப் பார்க்கின்றோம்.
அதிலும் இரு மாடி கட்டிட பள்ளிவாசல்களாக இருந்தால் மேல் கட்டிடத்தில் ருகூஃவில் இணைய ஓடி வருபவர்களின் சலசலப்பு கீழ் கட்டிடத்தில் நின்று தொழக்கூடியவர்களைத் திசைதிருப்பும் விதமாக அமைகிறது.
இந்த இடத்தில் இவர்கள் தொழுகை தவறிவிடும் என்கின்ற ஆர்வத்தில் ஓடி வருகின்றார்கள் என்று சொல்வதை விட தங்களையும் அறியாமல் பின்வரும் நபிமொழியை அலட்சியம் செய்கின்றனர் என்பதே சரியானது.
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடித்ததும், "உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)'' என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் - அபூ கதாதா(ரலி)
நூல் - புகாரி 635.
இவ்வாறு ருகூஃவில் இணைவதற்காக வேகம் எடுக்கும் சிலர், முதல் வரிசையைப் பூர்த்தி செய்யாமலே அடுத்த ஒரு வரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இதுவும் தவறான காரியமாகும்.
2. கிடைத்ததில் இணையுங்கள்.
ருகூஃவில் இணைய வேண்டும் என்று வேகம் எடுக்கும் மக்கள் இணைவதற்கு முன்பே ருகூஃவிலிருந்து இமாம் எழுந்துவிட்டால் அவர்களின் வேகம் எங்கு செல்கின்றது என்று தெரியவில்லை.
ஆம், இமாம் ஸஜ்தா செய்து எழுந்து, மற்றொரு ஸஜ்தா செய்து எழுந்து நிலைக்கு வரும் வரை ஸஃப்பில் தொழுகையில் இணையாமல் நின்று கொண்டிருக்கின்றனர்.
அதிலும் இரண்டாம் ரக்அத்தாக இருந்து இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து விட்டால் அத்தஹிய்யாத் முடித்து தக்பீர் கட்டுகின்றவரை தொழுகையில் இணைய மறுக்கின்றனர்.
இது தவறாகும். நாம் தொழுகையின் ஸஃப்பிற்கு வந்தவுடன் எது நமக்கு கிடைக்கிறதோ அதில் இணைந்து விட வேண்டும்.
அது ஒரு ரக்அத்தாகக் கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும் கிடைத்ததில் இணைந்து விட வேண்டும்.
இதற்கு மேலே நாம் சொன்ன ஹதீஸிலேயே ஆதாரம் இருக்கிறது.
“(இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
3. இரு கைகளையும் சரியாக உயர்த்துங்கள்
தொழுகையில் குறிப்பிட்ட இடங்களில் கைகைளை தோல் புஜங்களுக்கு நேராகவோ, அல்லது காதுகளின் நுணி பகுதிக்கு நேராகவோ உயர்த்த வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும்போதும்) இவ்வாறு செய்யமாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).
அறிவிப்பாளர் - அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
நூல் - புகாரி 735.
“நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி (தொழுகையை ஆரம்பித்தாலும்), ருகூஃவு செய்தாலும் தனது இரு கைகளையும் தனது இரு காதின் (கீழ் பகுதி)க்கு நேராக உயர்த்துவார்கள். மேலும், ருகூஃவிலிருந்து தனது தலையை உயர்த்தும்பொழுது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறி அவ்வாறே இரு கைகளையும் உயர்த்துவார்கள்”.
அறிவிப்பாளர் - மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி).
நூல் - முஸ்லிம் 589.
தொழுகையில் கைகளை உயர்த்தும்பொழுது ஒன்று தோல் புஜங்களுக்கு நேராக அல்லது காதுகளின் கீழ் பகுதிக்கு நேராக உயர்த்த வேண்டும்.
ஆனால், இன்று அதிகமானவர்கள் அலட்சியமாக நெஞ்சோடு தங்கள் கைகளை உயர்த்தி இறக்கி விடுகிறார்கள்.
கைகளை உயர்த்துவதில் கூட கஞ்சத்தனத்தை மேற்கொள்ளக்கூடிய காட்சியைப் பார்க்கின்றோம்.
அதிலும் சிலர் கைகளை உயர்த்தும்பொழுது கைகளை நீட்டாமல் மூடிக் கொள்கின்றனர்.
“நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தனது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்”.
அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா (ரலி).
நூல் - திர்மிதீ 223.
இதுவும் நமது தொழுகையில் நாம் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.
4. நன்றாகத் திரும்புங்கள்
தொழுகையை இடது புறமும், வலது புறமும் ஸலாம் சொல்லி நிறைவு செய்ய வேண்டும்.
அவ்வாறு ஸலாம் கொடுக்கும்போது நமது கழுத்தை நன்றாகத் திருப்ப வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு அவரகள் தமது இடபுறமும் வலதுபுறமும் (திரும்பி) ஸலாம் கொடுத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் - ஸஅது (ரலி).
நூல் - 1021.
ஆனால் இன்றைக்கு சிலர் ஸலாம் கொடுக்கும்போது தங்களது கழுத்தை நன்றாகத் திருப்புவதற்குக் கூட யோசிக்கின்றார்கள்.
5. ஸஜ்தாவைச் சரி செய்யுங்கள்
ஸஜ்தா செய்வதற்கென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட முறையை கற்றுத் தந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கின் மீது தமது கையால் (மூக்கு உட்பட என்பதுபோல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர் - இப்னு அப்பாஸ் (ரலி).
நூல் - புகாரி 812.
இவ்வாறு ஸஜ்தா செய்கின்றபொழுது முழங்கைகளை தரையில் சிலர் விரித்து வைக்கின்றனர். இதுவும் தவறாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது”.
அறிவிப்பவர் - அனஸ்(ரலி)
நூல் - புகாரி 532(சுருக்கம்)
மேலே நாம் சுட்டிக்காட்டிய தவறுகளும், இது அல்லாமல் உளு செய்யும் போது தலைமுடி களையாமல் மஸஹ் செய்தல், குதிகால்களைக் கழுவுவதில் அலட்சியம் செய்தல், தொழுகை வரிசையில் நெருங்கி நிற்பதில் அலட்சியம், இவை போன்ற இன்னும் ஏராளமான தவறுகளும் பல தடவைகள் மக்களுக்கு சுட்டிக்காட்டபட்டிருந்தாலும், அதில் போதிய கவனம் மக்களுக்கு இன்னும் வரவில்லை என்பதினாலே மீண்டும் மீண்டும் இவைகளை எடுத்துச் சொல்கிறோம்.
இந்தத் தவறுகள் அனைத்துமே விதிவிலக்கல்லாமல் எல்லா ஊர்களிலும் சிலரால் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கும் பலன் தவறிவிடாமல் இருப்பதற்காக அதிக கவனம் செலுத்துகின்ற நாம், நாளை மறுமையில் நமக்கு அதிக நன்மையை வழங்கக் கூடிய இந்தத் தொழுகையிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment