பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 24, 2017

ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?

ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?
ஏகத்துவக் கொள்கை தமிழகம் உட்பட பல நாடுகளில் உள்ளது. இதை உள்ளபடி தெளிவாகச் சொன்ன ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த ஜமாஅத்தின் தன்னலமற்ற மார்க்கச் சேவையினால் ஏராளமான மக்கள் இந்தக் கொள்கையின் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால் அசத்தியக் கொள்கையில் இருக்கும் அமைப்புகள் ஆட்டம் காண, இந்த நிலையை தொடரவிடக் கூடாது என்று ஏராளமான அவதூறுகளை அள்ளி நம் மீது வீசுகின்றன.
அவற்றில் ஒன்றுதான் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டம் என்று நம்மைக் குறிப்பிடுவது.
பரலேவிகள், சலபுகள், ஜாக் போன்ற இயக்கங்கள் இத்தகைய அவதூறுகளைச் சொல்லும் சில அமைப்புகளாகும்.
தமிழகத்தில் இணைவைப்புக் கொள்கை நிறைந்து, மார்க்கம் பற்றி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இன்று எண்ணற்ற மக்கள் திருக்குர்ஆன், நபிமொழிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றும் அந்தப் பணி தொய்வின்றி நடந்து வருகின்றது.
மறந்திருந்த, மறைக்கப்பட்ட ஏராளமான நபிவழியை உயிர்ப்பித்திருக்கின்றோம்.
ஆனால் நபிமொழிகளைப் பகிரங்கமாக புறக்கணிக்கும் கூட்டமும், நபிமொழிகளைக் கேலி செய்யும் கூட்டமும், நபிமொழிகளை அலட்சியப்படுத்தும் கூட்டமும் நம் மீது அவதூறு சொல்வது ஆச்சரியமாக உள்ளது.
ஹதீஸ்களை நாம் மறுத்தோமா?
நாம்  நபிமொழிகளை மறுக்கிறோம் என்று மக்களிடம் பேசிவரும் கும்பலைப் பார்த்துக் கேட்கிறோம். நாங்கள் ஹதீஸ்கள் என்று நம்பிய செய்திகளை மறுக்கிறோமா? அல்லது அது நபிமொழி அல்ல என்று கூறி மறுக்கிறோமா?
ஒருவன் நபிமொழி என்று தெரிந்து கொண்டு, அதை நம்பிக் கொண்டும் அதன்படி செயல்பட மாட்டேன், ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று கூறலாம்.
ஆனால் ஏராளமான ஆதாரப்பூர்மான நபிமொழிகளை நடைமுறைப் படுத்திவிட்டு, நபிமொழி என்று சொல்லப்படும் சில செய்திகள் நபிமொழியல்ல, இது நபிகளார் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று சொல்லி அதை மறுத்தால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று எப்படிச் சொல்ல முடியும்?
சில நபிமொழிகள் என்ற பட்டியலில் உள்ள செய்தி நபிகளார் சொன்ன செய்தி அல்ல. அதற்கு இன்னென்ன காரணங்கள் என்று விளக்குகிறோம்.
நபிமொழி என்று எதைச் சொல்ல வேண்டும்?
நபிகளார் ஒரு செய்தியைச் சொன்னார்கள் என்று கூறினால் அதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
ஒன்று அறிவிப்பாளர் தொடர்பானவை.
இரண்டு சொல்லப்படும் செய்தி தொடர்பானவை.
அதன் அறிவிப்பாளர்களும் அதன் அறிவிப்பாளர் வரிசையும், நம்பகமானவையாக இருக்க வேண்டும்.
அறிவிக்கப்படும் செய்தி குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுக்கும், திருக்குர்ஆனுக்கும் முரணாக இருக்கக்கூடாது. மேலும் எவ்விதத்திலும் அறிவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அந்த செய்தி அமைந்திருக்கக் கூடாது.
இந்த இரண்டு முக்கியமான காரணங்களில் ஒன்று சரியில்லையானால் அது நபிமொழிப் பட்டியலில் இடம்பெறாது.
இந்த நிபந்தனைகளை விதித்தது யார்?
நபிமொழிகள் அறிவிப்பாளர்கள் நம்பகமானவராக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது என்ற விதியை நாம்தான் முதலில் கொண்டு வந்தோம் என்று சிலர் கூறுவது தவறாகும். இது ஹதீஸ் கலை நூல்களில் தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.
திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது
இந்த விதி நபித்தோழர்கள் காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த விதியை வைத்தே சில நபிமொழிகளை நிராகரித்துள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அவர்கள் கூறியதாவது:
மக்காவில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய மகள் இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கு அருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ரு (ரலி) அவர்களிடம் நீ (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' எனக் கூறியுள்ளார்கள் என்றார்.
 உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்து வா!' என உமர் (ரலி) என்னை அனுப்பினார்கள்.
நாம் அங்கு சென்று பார்த்த போது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவரை என்னிடம் அழைத்து வா' என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் மூமினின்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்' எனக் கூறினேன்.
பின்னர் சிறிது காலம் கழித்து உமர் (ரலி) அவர்கள் குற்றுயிராய்க் கிடந்தபோது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களல்லவா?'  என்றார்கள். உமர் (ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறை நம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை.
மாறாக குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளருக்கு (காஃபிர்) வேதனை மிகுதியாக்கப்படும்' என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது' எனும் (6:164ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே என்றும் கூறினார்கள்.
இதைக் கூறி முடித்த பொழுது சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவனும் அவனே' (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய இச்சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை' என்று இப்னு அபீமுலைக்கா  அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 1286, 1287 & 1288)
குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான் என்று நபிகளார் சொன்னதாக உமர் (ரலி) சொன்ன செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுக்கும் போது, இது நபிகளாரின் சொல் அல்ல என்பதற்கு ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் என்ற குர்ஆன் வசனமே போதுமானது என்று கூறியுள்ளார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறியது நபிகளாரின் கூற்று அல்ல என்பதற்கு திருக்குர்ஆனின் கருத்துக்கு அது மாற்றமாக உள்ளது என்பதையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.
இதே விதியை ஹதீஸ் கலையின் வல்லுநர்களின் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அந்நுக்தா என்ற நூலில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும்போது பின் வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்.
النكت على كتاب ابن الصلاح ـ محقق - (2 / 846)
ومنها: أن يكون مناقضا لنص الكتاب
இறைவேதத்திற்கு முரணாக அமைந்திருக்கும்.
நூல் அந்நுக்தா, பாகம் 2, பக்கம் 846
இமாம் நவவீ அவர்களின் அத்தக்ரீப் வத்தைஸீர் லி மஃரிபத்தில் பஷீருன் நதீர் ஃபீ உசூலில் ஹதீஸ் (சுருக்கமாக தக்ரீப் என்று கூறுவர்) என்ற ஹதீஸ் கலை நூலுக்கு விரிவுரை நூலான இமாம் சுயூத்தி அவர்களின் தத்ரீபுர்ராவீ என்ற நூலிலும் இக்கருத்து சொல்லப்பட்டுள்ளது.
تدريب الراوي - (1 / 276)
أو يكون منافيا لدلالة الكتاب القطعية
உறுதியான வேதத்தின் ஆதாரங்களுக்கு எதிராக அமைந்திருக்கும்.
நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் 276
(இமாம் நவவீ அவர்கள் இறப்பு ஹிஜ்ரீ 676, சுயூத்தி பிறப்பு 849)
இமாம் பைஹகீ அவர்களின் கருத்து
الأسماء والصفات للبيهقي ـ موافق للمطبوع - (2 / 250)
812- أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ الدُّورِيُّ ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَافِعٍ ، مَوْلَى أُمِّ سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي ، فَقَالَ : خَلَقَ اللَّهُ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ ، وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ ، وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الإِثْنَيْنِ ، وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاثَاءِ ، وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ ، وَبَثَّ فِيهَا مِنَ الدَّوَابِّ يَوْمَ الْخَمِيسِ ، وَخَلَقَ آدَمَ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ آخِرَ الْخَلْقِ ، فِي آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு, " அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக் குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்'' என்று கூறினார்கள்.
(நூல் அஸ்மா வஸ்ஸிஃபாத், பாகம்: 2, பக்கம்: 250)
இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு இதன் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்கள்.
هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.
இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது (ஸஹீஹ் முஸ்லிம்) நூலில் (5379) பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.
முஸ்லிம் உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி ஏற்க முடியாது என்பதற்கு அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று குறிப்பிடவில்லை. மாறாக விரிவுரையாளர்களின் கருத்துக்கும் வரலாற்று ஆய்வாளரின் கருத்துக்கும் முரணாக உள்ளது என்கிறார்கள். விரிவுரையாளர்களின் கருத்துக்கு முரணாக இருந்தால் ஒரு ஹதீஸை நிராகரிக்கலாம் என்று பைஹகி கூறுவது போல் நாம் கூறவில்லை. குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் தான் நிராகரிக்கப்படும் எனக் கூறுகிறோம்.
(இமாம் பைஹகீ அவர்கள் ஹிஜ்ரி 384 ல் பிறந்தவர்கள்)
முஸ்லிமில் உள்ள ஹதீஸ் தொடர்பாக இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
النكت على مقدمة ابن الصلاح - (2 / 269)
وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به
இதைப் போன்று பைஹகீ மற்றும் அவரல்லாத ஹதீஸ் கலை நிபுணர்களும் இதை (ஏற்றுக் கொள்ள முடியாத) பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். (அதற்குக் காரணமாக) அல்லாஹ் வானங்கள், பூமியை ஆறுநாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
நூல் : அந்நுக்தா, பாகம்: 2, பக்கம்: 269
இதைப் போன்று புகாரியின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுள்ள செய்தியை திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று இஸ்மாயீலீ அவர்கள் மறுத்துள்ளதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3350)
புகாரியில் உள்ள இந்தச் செய்திக்கு விரிவுரை வழங்கும்போது பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்கள் கருத்தை எடுத்துரைக்கிறார்கள்.
. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى
இது அடிப்படையில் சிக்கல் உள்ளதாகும் என்று இஸ்மாயீலீ அவர்கள் கூறிவிட்டு இதன் நம்பகத்தன்மையில் குறையுள்ளது என்று சொல்லியுள்ளார்கள்.
பின்னர் அவர் இந்தச் செய்தியை பதிவு செய்து விட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் உறுதியாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும்போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கேட்கிறார்கள். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாத மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500
இப்ராஹீம் நபியவர்களின் தந்தை தொடர்பான இந்தச் செய்தி சரியானது அல்ல என்று குறிப்பிடும் இஸ்மாயீலீ மற்றும் பல அறிஞர்கள் இது அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர் இருக்கிறார் என்று கூறாமல் திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று கூறியே இந்தச் செய்தியை மறுத்துள்ளார்கள்.
இதைப் போன்று இமாம் மாலிக் அவர்களும் திருக்குர்ஆனுக்கு முரண் என்றால் அதை ஏற்கக் கூடாது என்ற கருத்தில் இருந்துள்ளார்கள்.
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (1854)
இந்தச் செய்தியின் விரிவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு மாலிக் இமாம் அவர்களின் கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணியின் ஹதீஸின் வெளிப்படையான கருத்து. திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக உள்ளது என்று மாலிக் இமாம் அவர்கள் கூறி, திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள் என்று குர்துபீ அவர்கள் கூறினார்கள்.
நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3 :97)  என்ற வசனம் சக்தியில்லாதவர்களுக்குக் கடமையில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் புகாரியின் ஹதீஸ் செய்ய வேண்டுமென கூறுகிறது.
இது திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும், இந்தச் செய்தி புகாரியில் இருந்தாலும் திருக்குர்ஆன் கருத்துக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் இமாம் மாலிக் அவர்கள்.
(இமாம் மாலிக் அவர்கள் ஹிஜ்ரி 93-ல் பிறந்து 179 ல் இறந்தார்கள்)
அன்னை ஆயிஷா (ரலி), இமாம் மாலிக், இஸ்மாயீலீ, பைஹகீ போன்ற அறிஞர்களையும் ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்வார்களா?
நம்பகமான அறிவிப்பாளர்கள் தவறிழைப்பார்களா?
இறைவனைத் தவிர மற்ற எல்லா மனிதர்களும் தவறிழைப்பவர்கள் என்று நம்புவதுதான் இறைநம்பிக்கை. அந்த அடிப்படையில் நபித்தோழர்கள் உட்பட அனைவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இதே கருத்தை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
உயிருள்ளவர்கள் அழுவதால் மய்யித்திற்கு வேதனை செய்யப்படுகிறது என்ற உமர் (ரலி) அவர்களின் கருத்தை மறுத்த பின்னர் பின்வருமாறு கூறுகிறார்கள்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 43)
لَمَّا بَلَغَ عَائِشَةَ قَوْلُ عُمَرَ وَابْنِ عُمَرَ قَالَتْ إِنَّكُمْ لَتُحَدِّثُونِّى عَنْ غَيْرِ كَاذِبَيْنِ وَلاَ مُكَذَّبَيْنِ وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ.
உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது "நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது'' என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 1693)
நம்பகத் தன்மையில் முதலிடம் இருக்கும் நபித்தோழர்களுக்கே தவறு வரும் என்றால் புகாரி இமாமுக்கோ அல்லது அவர்கள் நூலில் உள்ள அறிவிப்பாளர்களுக்கோ தவறு வராதா?
நம்பகமான அறிவிப்பாளர்களிடமும் தவறு வர வாய்ப்புள்ளது என்பதை மிகத் தெளிவாக ஹதீஸ்கலை நூல்களில் ஒன்றான தத்ரீபுர் ராவீ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
تدريب الراوي - (1 / 75)
( وإذا قيل ) هذا حديث ( صحيح فهذا معناه ) أي ما اتصل سنده مع الأوصاف المذكورة فقبلناه عملا بظاهر الاسناد ( لا أنه مقطوع به ) في نفس الأمر لجواز الخطأ والنسيان على الثقة
ஒரு செய்தியை இது ஆதாரப்பூர்வமானது என்று சொல்லப்பட்டால் அதன் பொருள், அறிவிப்பாளர் வரிசை இணைந்து நாம் கூறிய நிபந்தனைகள் அதில் உள்ளன என்பதாகும். எனவே வெளிப்படையான அறிவிப்பாளர் வரிசையைக் கவனத்தில் கொண்டு நம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அது முழுக்க முழுக்க சரியான செய்தி என்பது பொருள் அல்ல. ஏனெனில் நம்பகமானவருக்கும் தவறும் மறதியும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்.
(நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம்: 1, பக்கம்: 75)
நம்பகமான அறிவிப்பாளர் இடம்பெற்ற செய்தியும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கலாம் என்று தெளிவாக இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.
الموضوعات لابن الجوزي - (1 / 106)
واعلم أنه قد يجئ في كتابنا هذا من الاحاديث ما لا يشك في وضعه، غير أنه لا يتعين لنا الواضع من الرواة، وقد يتفق رجال الحديث كلهم ثقاة والحديث موضوع أو مقلوب أو مدلس،
அறிந்து கொள்:  இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லாத செய்திகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும். ஆனால் அறிவிப்பாளரில் இட்டுக்கட்டியவர் யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் சிலவேளை எதார்த்தமாக அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவராக அமைந்து விடுவர். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாக அல்லது புரட்டப்பட்டதாக அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டதாக இருக்கும்.
நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106
அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தாலும் பல செய்திகள் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கலாம். யார் இட்டுக்கட்டியவர் என்று கண்டுபிடிக்க முடியாது என்று இந்தத் துறையில் நிபுணரான இப்னுல் ஜவ்ஸி அவர்கள் விளக்கம் மிகத் தெளிவானது.
அறிவு ஏற்கவில்லை என்றால் நிராகரிக்க வேண்டுமா?
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் இறைவன் வழியாக வருபவைதான். அந்தச் செய்தி முற்றிலும் உண்மையானதாகவே இருக்கும். பொய்யான செய்தி வராது.
ஒரு செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி அறிவுக்குப் பொருத்தமில்லாமல் அமைந்திருந்தால் அதைப் படிக்கும்போது நபிகளார் பொய் சொல்லி விட்டார்கள் என்ற மிகப்பெரிய அவதூறு சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டி வரும். இதனால்தான் ஹதீஸ்கலை வல்லுநர்கள் அறிவுக்குப் பொருந்தாத செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என்று அடையாளம் காட்டியுள்ளார்கள்.
நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை இனம் காட்டியவர்களில் முதன்மையானவரான இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
الموضوعات لابن الجوزي - (1 / 106)
فكل حديث رأيته يخالف المعقول، أو يناقض الاصول، فاعلم أنه موضوع فلا تتكلف اعتباره.
நீர் பார்க்கும் ஒவ்வொரு ஹதீஸும் அறிவுக்கு முரணாக அமைந்திருந்தால் அல்லது (இஸ்லாத்தின்) அடிப்படைகளுக்கு முரணாக அமைந்திருந்தால், விளங்கிக் கொள், அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.எனவே அந்தச் செய்தி தகுதியானதா (என்று ஆய்வு செய்து) சிரமப்படாதே. (நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106)
இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ஹிஜ்ரி 510 ல் பிறந்தவர்கள். அவர்கள் காலத்திலேயே இந்தக் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
இந்தக் கருத்தை பல ஹதீஸ் கலை நூல்களிலும் எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் இதே கருத்தை வேறு வார்த்தைகளில் எழுதியுள்ளார்கள்.
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளும் முறைபற்றி குறிப்பிடும்போது
تدريب الراوي - (1 / 276)
عن الخطيب عن أبي بكر بن الطيب أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة
அறிவுக்குப் பொருந்தாமல் இருப்பதும், ஏற்றுக் கொள்ளும் வகைளில் விளக்கம் கொடுக்க முடியாமல் இருப்பதும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கண்டறிவதற்கான சான்றுகளில் ஒன்றாகும். ஐம்புலன்களும், நேரடி காட்சிகளும் எதை மறுக்குமோ அதுவும் இட்டுக்கட்டப்பட்டதில் சேரும்.
(தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் (276)
அறிவிப்பாளர் சரியாக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக, அறிவுக்கு பொருத்தமில்லாமல் இருந்தால் அந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படை விதி நாம் உருவாக்கியது கிடையாது. ஹதீஸ்கலை மேதைகள் உருவாக்கியதுதான் என்பதை மறுக்க முடியாது.

No comments:

Post a Comment