பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, April 14, 2021

வெள்ளி கிழமை சிறப்பு

வெள்ளி கிழமை சிறப்பு 💞



💟 நாட்களில் சிறந்த நாள் :-


”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.

( முஸ்லிம் 1548 )


💟 வெள்ளி கிழமை வியாபாரம் செய்யலாமா? 


வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் குா்ஆன் மூலம் எச்சரிக்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அறியலாம்.

ஈமான் கொண்டவர்களே! 

ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

( அல் குர்ஆன்  62:9 )

பின்னர், (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 

 ( அல் குர்ஆன் 62:10 )

அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 

( அல் குர்ஆன் 62:11 )

ஜும்ஆ நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது அவைகளை நிறுத்தி விட்டு நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு புரிந்து கொள்ளலாம் !


💟 ஜூம்ஆ முபாரக் என்று கூறலாமா?


வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள்.

பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள்.

உண்மையில் வெள்ளிக்கிழமையில் " ஜும்மா முபாரக்” என்ற வாசகத்தை சொல்வதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது.

மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னாஹ்n)  இருக்க வேண்டும்.

அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :👇

இம்மார்க்கத்தில்  இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது ரத்துசெய்யப்படும்.

( புகாரி : 2697 )


செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்!

நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்!

காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் புதிதாக உருவானவைகள் ஆகும்!

புதிதாக உருவானவைகள் அனைத்தும் " பித்அத்கள் " ஆகும்!


ஒவ்வொரு " பித்அத் "தும் வழிகேடாகும்!*

ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்!

( நஸயீ :- 1560 )


ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு  செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!

*"ஜும்மா முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளி கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "பித்அத்" ஆகும்.

இதற்கு நன்மையையும், கிடைக்காது, மாறாக "பித்அத்" ஐ உருவாக்கிய குற்றம் கிடைத்து விடும் .


💟 ஜூம்ஆ தொழுகைக்கு பள்ளிக்கு முன்பாகவே செல்ல வேண்டும் :-


”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.


( முஸ்லிம் 1554 )


💟 துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் ⏳️:-


வெள்ளிக் கிழமை நாள் ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் ஓர் அடியான் தொழுது விட்டு அல்லாஹ்விடம் து ஆ கேட்டால், அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதாக நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

”அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில்

 “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- 

அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” 

( முஸ்லிம் 1543 )

அது எந்த நேரம் என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கு அறிந்தவன் ☝️


📚 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய அமல்கள் :-


💟 அதிகமாக ஸலவாத்து சொல்லுதல் :-

வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள்.

ஏனேனில், பூமியில் யாரேனும் ஒரு முஸ்லிம் தங்கள் மீது ஒருமுறை ஸலவாத் சொன்னால் நான் அவர்மீது பத்து ரஹ்மத்களைப் பொழிவேன். மேலும் என்னுடைய மலக்குகள் அவருக்காகப் பத்து முறை பாவமன்னிப்புத் தேடுகின்றனர்” 

( நூல் : தபரானீ )


💟 வெள்ளிக்கிழமை குளிப்பது :-🚿

'ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரீ 895 ) 


💟 பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது 💞


'ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரீ 880 )


💟 ஜூம்ஆ தொழுகைக்காக நடந்து வருவது 🚶🏻‍♂️:-


நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :-

எவர் ஜும்ஆ நாளன்று மிக நல்ல முறையில் குளித்து காலை நேரத்தில் வாகனத்தில் செல்லாமல் நடந்து பள்ளிக்கு சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து,

குத்பாவைக் கவனத்துடன் கேட்டு, அச்சமயம் எந்த விதப் பேச்சும் பேசாமல் இருக்கிறாரோ, 

அவர் ஜும்ஆத் தொழுகைக்கு எத்தனை எட்டுக்கள் எடுத்துவைத்து வந்தாரோ, அந்த ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பு வைத்த நன்மையும், ஒரு வருடம் இரவு நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கிறது” 


( நூல் : அபூதாவூத் )


💟 பாவங்கள் மன்னிக்கப்படுகிறது :-


நபி (ஸல்) அவர்கள் 
கூறினார்கள்:-

ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; 

பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார்.

 இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.


( ஸஹீஹ் முஸ்லிம் : 1556 )


💟 குத்பா ஓதும் நேரத்தில் பேசக்கூடாது 🗣️🚫


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 

“மௌனமாக இரு” 

என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 1541 )


💟 ஜும்ஆ தினத்தில் தொழுகைக்கு வராதவர்களுக்கான எச்சரிக்கை ⚠️


‘ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான் அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள்.

( நூல்: முஸ்லிம் :1432 )


💟 வெள்ளி கிழமை மட்டும் நோன்பு நேர்க்க கூடாது🚫

உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்கவேண்டாம்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 2102 )


💟 ஜும்ஆ தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள் :-

ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள்:-

 1. பருவ வயதை அடையாதவர்கள்

2.பெண்கள் 

3. நோயாளி 

4. பயணி


'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

( நூல்: அபூதாவூத் 901 ))


*❣️STRAIGHT PATH*❣️

No comments:

Post a Comment